பிள்ளையார் சதுர்த்திக்கு அப்பா எந்த சைஸ்ல பிள்ளையார்
வாங்குவாங்கன்னு ஆசையா இருக்கும். அம்மா வேலை
பார்த்த ஸ்கூல்ல வெளியே ஒரு பகுதியை பிள்ளையார்
செய்யறவங்க தங்கி பிள்ளையார் செய்ய கொடுத்திடுவாங்க.
மார்கெட்டுக்கு பக்கம் என்பதால் இந்த ஏற்பாடு.
களிமண்ண வெச்சு அச்சுல வார்த்து விதம் விதமா
சின்னதும் பெரிதுமா பிள்ளையார் செய்வாங்க. ஸ்கூல்ல
தான் செய்வாங்க என்பதால் அம்மா சொல்லிவெச்சு
மொதோ நாளே கொண்டு வந்திடுவாங்க. சில பேர்
வீட்டுல அன்னைக்கு காலேலதான் காஞ்சும் காயம
இருக்கும் பிள்ளையாரை பலகைல வெச்சு எடுத்துகிட்டு
வருவாங்க. நானும் அப்பா கூட போய் எருக்கன் பூ மாலை,
அருகம்புல், கெஞ்சி கூத்தாடி நான் என் உண்டியல்லேர்ந்து
தர்றேன்னு சொல்லி பிள்ளையாருக்கு குடை எல்லாம்
வாங்கி வருவோம்.
அன்னைக்கு சாயங்காலமே புனர் பூஜை செஞ்சு குளத்துல
கரைச்சிடுவோம். கொழுக்கட்டை வகையராக்களுடன்
பிள்ளையர் சதுர்த்தி முடிஞ்சிடும். 14 வயசு இருக்கும் போது
ஒரு வாட்டி ஹைதையில் இருந்த உறவினர் வீட்டுக்கு
வந்தபோது கலர் கலரா பெயிண்டடிச்சு பெரிய்ய்ய்ய்ய
சைஸ்ல பிள்ளையார் எடுத்துகிட்டு போறதை பாத்ததும்
நம்ம ஊர்ல என்ன பூஜை செய்யறோம்னு நினைச்சேன்.
10 நாள் வெச்சிருந்து 11ஆம் நாள் தான் கரைப்பாங்கன்னு
கேள்விப்பட்டதும் செம ஆச்சரியம். ஆனா இப்ப பூமியைக்
காப்பாத்த அதே களிமண் பிள்ளையார்கள் இக்கோ ஃப்ரெண்ட்லி
விநாயகான்னு விக்கப்படுது. இதுதான் காலத்தின் சுழற்சியோ!!
மும்பையில் இருந்த பொழுது அங்கே நடந்த பூஜைகள்,
கொண்டாட்டங்கள் நல்லதொரு அனுபவம். விசர்ஜனத்துக்காக
லீவு விடும் அளவுக்கு இருக்கும். இப்போ ஹைதையில்
அதே போலத்தான். நேற்று விசர்ஜன். (இங்கே கணேசா
நிமர்ஜனம்னு சொல்வாங்க). எங்க அப்பார்ட்மெண்டிலும்
இந்த வருடமும் கணேச சதுர்த்தி நல்லா நடந்துச்சு.
எல்லோரும் பணம் போட்டு பெரிய்ய கணேசா வாங்கி
வந்து பூஜை. அம்மா அப்பா இங்கே இருந்ததால முதல்
நாள் பூஜை அவங்களை செய்யச் சொன்னோம். யார்
வீட்டு பூஜையோ அவங்க பிரசாதம் செஞ்சு கொண்டு
வரணும். சும்மா கொஞ்சமில்லை கிட்டத்தட்ட 65 பேருக்கு
காணும் அளவுக்கு. :)))
நானும் அம்மாவும் வெண்பொங்கல், கொத்சு, வடை, சட்னி,
கடலைப்பருப்பு பாயசம், தயிர்சாதம் எல்லாம் செஞ்சிருந்தோம்.
என்னுடைய கொத்சு இங்கே ரொம்ப ஃபேமஸ். ( அதுக்கு
அப்பார்ட்மெண்ட் தோழிகள் வெச்சிருக்கும் பேரு பருப்பில்லாத
சாம்பார். :)) ரோசய்யாவை கூப்பிட்டு இப்படி எல்லாம் சாம்பார்
வெச்சு சமையலறை பட்ஜட்டை கட்டுப்பாட்டில் வெச்சிருப்பதாக
சொல்லி பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செஞ்சு அதை லைவ்
டெலிகாஸ்ட் செய்ய டீவி 9 வேற கூப்பிடறதா சொல்லிக்கிட்டு
இருந்தாங்க.)
 |
| ஃப்ரண்ட் வீட்டு கணேசா |
மொத்தம் 7 நாள் கணேசா வெச்சிருந்தோம். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டு பிரசாதம். பலவீட்டு சோற்று ருசியில்
கட்டுண்டு கிடந்தோம். போன வருஷம் பூஜை முடிந்ததும்
ஆஷிஷும், அம்ருதாவும்தான் கணேசா ஸ்லோகம்
சொன்னாங்க. இந்த முறை அதே ஸ்லோகத்தை
எல்லோரும் சொல்லும் வண்ணம் ப்ரிண்ட் எடுத்து
ஜெராக்ஸ் போட்டு எல்லோர் கையிலயும் கொடுத்து
சொல்ல சொல்லிட்டேன். ( அடுத்த வருஷம் நான் இந்த
அப்பார்ட்மெண்ட்ல இல்லாட்டியும் என் ஞாபகம் கொஞ்சமாவது!!!
வரும்ல) :))
 |
| ganesha 2010 |
6ஆவது நாள் அப்பார்ட்மெண்டில் இருந்த ஆண்குழந்தைகள்
அனைவரையும் உட்கார வைத்து பூஜை செய்யச் சொன்னோம்.
7ஆவது நாள் அன்று நாங்கள் விசர்ஜனம் செய்ய திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருக்க பெண்குழந்தைகள்
அனைவரையும் உட்கார வைத்து பூஜை செய்ய சொன்னோம்.
அனைவரும் மாடர்ன் ட்ரெஸ் இல்லாமல் ட்ரெடிஷனல்
ட்ரெஸ்ஸில் வரவேண்டும் என்று சொன்னதும் முறைத்தார்கள்.
”நான் அடுத்த வருடம் இங்கே இருக்க மாட்டேன்ல!!” எனக்காக
கண்ணுங்களா!!” என்ற கெஞ்சலுக்கு மதிப்பு இருந்தது.
அழகாக பாவடை தாவணி, குட்டி பெண்கள் பாவடை, சட்டையில்
வந்து கலக்கினார்கள். ஆரத்தி முடிஞ்ச அடுத்த கணம் எல்லாம்
அப்ஸ்காண்ட். :)) எல்லாம் ட்ரெஸ் சேஞ்சுக்குத்தான்.
உட்டி அடிக்க வேண்டுமே!!! மேள வாத்தியம் முழங்க
எங்கள் தெருவே அதிர ஆனந்த நடனமாடி தண்ணீர் அடித்து
விளையாடி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாம்
ஆட்டம் போட்டோம்.
எல்லாம் முடித்து உடை மாற்றி அப்பார்ட்மெண்ட் நண்பர்
ஒருவர் ஏற்பாடு செய்திருந்த சாப்பாடு சாப்பிட்டு கணேசனை
லாரியில் ஏற்றிக்கொண்டு ஹுசைன் சாகர் நோக்கி பயணம்.
இந்த முறை மிக அதிசயமாக அயித்தான் ஊருக்கு ஏதும்
போகாமல் 7நாளும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நாமளும் விசர்ஜனுக்கு போவோமான்னு கேக்க!! சரின்னு
சொல்ல எல்லாம் லாரியில் ஏறிக்கிளம்பினோம். அந்தாக்ஷரி
பாடிக்கொண்டு செம ஆட்டத்துடன் நடு நடுவில் பேண்ட்
வாத்யத்துடன் வரும் கணேசாவுக்கு “கண்பதி பப்பா மோரியா”
என கத்திக்கொண்டு போனோம்.
7ஆம் நாள் என்பதால் ரொம்ப நேரம் எடுக்காமல் சீக்கிரம்
ஹுசைன்சாகரை அடைந்தோம். க்ரேன்கள் ஏறபாடு
செய்து வைத்திருக்கிறார்கள். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
கணேசர் தண்ணீரில் மூழ்குவதுபோல இருக்கு. விக்ன
விநாயகனை அனுப்பி வைக்க மனசுதான் இல்லை.
அப்பார்ட்மெண்ட் வந்ததும் எல்லோரு மனதிலும் ஒரு சோகம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வருத்தம்.
”நாளேயிலேர்ந்து நம்ம வீட்டுலதாம்பா டின்னர். மறந்த
வாக்குல யாரும் கீழேன்னு நினைச்சு சமைக்காம இருந்திடாதீங்க!!!”
என்று ஒரு ஃப்ரெண்ட் ஜோக் அடிக்க, நிஜமாகவே இந்த 7 நாட்களும்
அனைவரும் வசுதேவ குடும்பகமாக ஒன்றாக சேர்ந்து
பூஜித்து, மகிழ்ந்து இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.
இதற்காகத்தான் பெரியவர்கள் பண்டிகைகளை கண்டுபிடித்தார்களோ
என்னவோ!!! நாங்களும், இன்னொரு குடும்படும் எங்க சொந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு இங்கேயே இருந்து விட வேண்டுமாம்.
அனுப்ப மாட்டோம் என சில தோழிகள். பிறந்த வீட்டுக்கு
வருவது போல நாங்கள் இரண்டு குடும்பமும் வந்து விடுகிறோம்
கவலையே படாதீர்கள்!! என்று சொல்லி பிரிய மனமில்லாமல்
அவரவர் வீட்டுக்கு சென்று படுத்த போது அதிகாலை 1 மணி.