நம்ம
கோவை2தில்லி ஒரு தோசை தர்றதா சொல்லிருந்தாங்க.
இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகணும்னு இந்தப் பதிவு.
இரண்டாவது பிரசவத்திற்காக அம்மா அம்மம்மா வீட்டுக்கு(லோக்கல்தான்)
போயிருந்தாங்க. நானும் சின்ன மாமாவும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்.
அம்மம்மா மாமாகிட்ட எனக்கு மதிய உணவு கொடுத்தனுப்புவாங்க.
ஒரு நாள் சப்பாத்தி கொண்டு வந்திருந்தார் மாமா. நான் சாப்பிடமாட்டேன்னு
ஒரே அடம் பிடிச்சேன். அன்னைக்கு சோறும் கொடுக்கலை. என்ன
செய்யன்னு தெரியாம என் சின்ன மாமா,” ஏன் சப்பாத்தி வேணாம்?”
அப்படின்னு கேக்க,” கெட்டியா இருக்கும் மாமா, வெட வெடன்னு
அதை எப்படி சாப்பிடன்னு கேட்டேன்” சப்பாத்திங்கற பேர்ல எங்க் அவ்வா
செஞ்சு கொடுத்த ஒரு வஸ்துவால வந்த பயம் அது. சின்ன மாமா,
இந்தச் சப்பாத்தியை சாப்பிட்டு பாரு! சாஃப்டா எப்படி இருக்குன்னு
சொல்லு, பாத்தியா பை பையா இருக்கும்னு பிச்சு காட்டி ஒரு கடி
ஊட்டி விட்டாரு!!” ம்ம்ம் செம சாஃப்டா அம்மம்மா சப்பாத்தி செஞ்சு
அனுப்பிருந்தாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சுச்சு எனக்கும் சப்பாத்திக்கான
பந்தம்!!
ஆனா அம்மம்மா, சித்தியைத் தவிர சப்பாத்தி அருமையா யாரும்
செஞ்சதில்லை. அம்மாவும் சரி அவ்வாவும் சரி அப்படித்தான். இதுல
சப்பாத்தி நிறைய்ய செய்ய வேண்டியிருக்குன்னும், அதனால தனது
கைகள் வலிக்குதுன்னு இரண்டு பேரும் புலம்பி(இதுல மட்டும் மாமியாரும்
மருமகளும் எப்படி ஒத்து போனாங்க??!!) சப்பாத்தி எப்பவாவது ஒரு
முறை செய்யும் பலகாரம் ஆச்சு. சில சமயம் அம்மா அதுக்கு தோதா
குருமா செய்வாங்க.
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனதாலும், அவ்வாவால அடுப்படியில்
எல்லா நேரமும் நிக்க முடியாது என்பதாலும் எங்க வீட்டுல அதிகாலையிலேயே சோறு வடிச்சு வெச்சுடுவாங்க. மதியம் ஸ்கூல் முடிஞ்சு வந்து ஆறிப்போய் கிடக்கும்(திரும சூடு செய்வதா? சான்சே இல்லை) அந்த சோத்தைதான் சாப்பிடவேணும்!! :(( காலையும் இரவும் டிபன் எனும் பெயரில் அரிசிக்கட்டி!!!சோறு சாப்பிடவேண்டும் என்றால் எப்படி இருக்கணும்? ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம, உதிர் உதிரா சுடச்சுட இருந்தால் ருசிக்கும்!!! நம்ம தென்னிந்திய குடும்பங்களில் அரிசிச்சோறுதான் பிரதான உணவு.
மும்பை போனதும் அம்மம்மாகிட்ட சப்பாத்தி போட கத்துகிட்டேன்.
சப்பாத்தி போடுவதை விட அந்த மாவை பிசையும் கலையில்தான்
இருக்கு சூட்சுமம். சரியாக பிசைந்து அழகாக உருட்டி வட்டவட்டமாக
இட்டால்...... அம்மம்மாவீட்டுக்கு எதிரில் ஒரு குஜராத்தி குடும்பம்.
அவங்க வீட்டுப் பெண் தீப்தி என் ஃப்ரெண்ட். வேலைக்கெல்லாம் போகலை.
ஆனா என் கிட்ட,”நான் செய்யும் ஒரு சப்பாத்தியும் உப்பி வரும் தெரியுமான்னு!!” பெருமை பீத்தக்காரியா சொல்ல சொல்ல எனக்கும் ரோஷம். “நாங்களும் செய்வோம் சப்பாத்தின்னு!!” வெரைட்டி வெரைட்டியா செய்யக் கத்துகிட்டேன்.
எண்ணெய் போடாம புல்கா, அதை தவாவில் கொஞ்ச நேரம், அடுப்பில் நேரடியா என போட்டு நெய் தடவியோ, தடவாமலோ செஞ்சா சும்மா சாஃப்டா இருக்கும். கொஞ்சமா எண்ணெய் விட்டு பிசைஞ்சு, சின்னதா செஞ்சு அதை மடித்து போட்டு செய்வது சப்பாத்தி. நான் செய்யும் போது அந்தச் சப்பாத்தி சந்தோஷத்துல அப்படியே உப்பி வரும்(பூரி போல). ஆச்சு கல்யாணம் முடிச்சு ஹைதை வந்தாச்சு. அவங்க வீட்டுலயும் சப்பாத்திங்கற பேர்ல தோசைக்கல்லு சைஸுக்கு ரொட்டி மாதிரி கெட்டியா ஒரு வஸ்துதான் செய்வாங்களாம். நான் செஞ்சு கொடுத்த சப்பாத்தி சாப்பிட்டு அயித்தான் மயங்கினார்னு சொல்லவும் வேணுமா?? !!:) (பலருக்கு சப்பாத்தி பிடிக்காம போகக்காரணம் பெருசு பெருசா வரட்டி மாதிரி செய்வதுதான். சிலருக்கு சேமியா உப்புமான்னா ஆகாது. காரணம் கொச கொசன்னு எண்ணெய் ஊத்தி, பாயசமா? உப்புமான்னு குழம்பும் ஸ்டேஜுல அது இருக்கும். ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம சேவை மாதிரி செஞ்சு தொட்டுக்க ஊறுகாய் இருந்தா சேமியா உப்புமா கூட அமிர்தம் தான்)
கல்யாணம் ஆன அதே மாதம் பெங்களூரில் அயித்தான் கம்பெனி ஃபேமலி
கெட்டுகதர் நடந்துச்சு.” உங்க வொய்ஃப் சமையல்ல எது பிடிக்கும்னு?”
எல்லோரும் கேட்க அயித்தான் சொன்னது,” பூரியைவிட கொஞ்சம் பெருசா,
மெத்து மெத்துன்னு சப்பாத்தி செய்வா பாருங்க!!” அப்படின்னு புகழ்ந்தாரு.
(எனக்கு வெக்கம் வெக்கமா வருது!) சென்னையிலிருந்து இவங்க ஆபீஸ்காரங்க எல்லோரும் புறப்பட்டு மும்பைக்கு மீட்டிங்கிற்காக போனாங்க. ஆளுக்கொண்ணு செஞ்சு எடுத்துகிட்டு போனாங்க. நான் அயித்தானுக்கு ஒரு கிலோ சப்பாத்திமாவில் சின்ன சின்னதா சப்பாத்தி செஞ்சு, தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலா செஞ்சு அனுப்பினேன். அதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சுக்க சொல்லியிருந்தேன். காலை 7 மணிக்கு கிளம்பின ட்ரையினில் 8 மணிக்குள் அந்தச் சப்பாத்தி, உருளை மசால் காலி!!! அந்தச் சப்பாத்தி செஞ்சுகிட்டு இருக்கும்பொழுது கிச்சனில் வந்து பார்த்த அயித்தானின் அண்ணன் மகள்,”சப்பாத்தி இப்படி கூடச் செய்யலாம்? வாயில் போட்டதுமே கரையுதே!! நீங்க சப்பாத்தி ஷ்பெஷலிஷ்ட் சித்தின்னு”” பாராட்டு.
சப்பாத்தி புராணம் பாடுவதால எனக்கு சோறே சமைக்க வராதுன்னு இல்லை.
அதுவும் கலக்குவோம். ஆனா எனக்கு சோறு சமைப்பதை விட சப்பாத்தி
ரொம்ப ஈசி. நின்னுகிட்டு போடனும் அது இதுன்னு சொல்றவங்க நான்
சொல்வதை கொஞ்சம் யோசிங்க. சோறு + காய்கறி மட்டும் செஞ்சா
போதாது. கூட்டா, பொரியலான்னு பாத்து அது தக்க குழம்பு/சாம்பார்/ரசம்
இல்லாட்டி ருசிக்காது. இம்புட்டு செய்வதற்கு பதில் மாவை பிசஞ்சோமா!
தட்டி ஹாட் பேக்ல போட்டோமா! சப்ஜி செஞ்சோமான்னு ஹாயா
சீக்கிரமா வேலை முடிச்சிடலாம்.
சப்பாத்தியிலயும் வெரைட்டி செய்யலாம். புல்கா, சப்பாத்தி, பரோட்டா,
பராத்தா. இதுல ஸ்டப்டு பராத்தா செய்யும் பொழுது தொட்டுக்க தனியா
சப்ஜி செய்யத்தேவையில்லை. தொட்டுக்க தயிரில் ரெய்தா செஞ்சுகிட்டா
போதும். தேப்லான்னு ஒரு வகை. குஜராத்தி ஐட்டம். கோதுமை மாவில்
கசூரி மேத்தி, காரப்பொடி, உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காம தயிரில்
பிசைந்து சப்பாத்தி செஞ்சு எண்ணெய்/ நெய் விட்டு சுட்டு எடுத்தால்
தொட்டுக்கொள்ள கூட எதுவும் தேவை இருக்காது. இது நீண்ட தூரம்/
நீண்ட பயணங்களுக்கு ஏற்றது. 3 நாள் ஆனாலும் கெடாது!! புளி சோறும்
3 நாள் ஆனாலும் ருசியா இருக்கும்தான். ஆனா தேப்லா லைட் வெயிட்டா
இருக்கும்!!! பாவ்பாஜி பராத்தான்னு ஒண்ணு செய்வேன். சூப்பரா
இருக்கும். (ரெசிப்பி பேரண்ட்ஸ் கிளப்புல இருக்கு)
சப்ஜி ஆஹா அதுலதான் எம்புட்டு வெரைட்டி. தால் தடுக்கா, தால் மக்கனி,
சன்னா மசாலா, பாலக் பனீர், ஹரியாலி பனீர், பனீர் மசாலா, மிக்ஸட் வெஜிடபிள், குருமா, மலாய் கோஃப்தா, வெஜிடபில் கோஃதா, தம் ஆலூ, ஆலு மட்டர், மட்டர் பனீர், இன்னும் நெறைய்ய்.....ய்ய அலுக்காம வெரைட்டி
வெரைட்டியா செஞ்சு கொடுத்துகிட்டே இருக்கலாம்.
அரிச்சோறோட ருசியில நாம ஃபுல்லா வளைச்சுகட்டி தொப்பையை
கூட்டும் வேலை நடக்கலாம்! ஆனா அதுவே சப்பாத்தின்னா அளவோட
எடுத்துக்க முடியும். இரண்டுலயும் அதே கார்போஹைடரேட்தான் இருக்குன்னாலும் சப்பாத்தியோட ஷ்பெஷாலிட்டி இது.
ஆஷிஷ் பிறந்ததும் இரவில் சப்பாத்தி என்பது எழுதப்படாத விதியாகிடிச்சு.
ஐயா தன்னோட நெஸ்டத்தை விட்டுட்டு சப்பாத்தி சாப்பிடத்தான் விரும்புவாரு. இப்பவும் தொடர்ந்து 3 நாளைக்கு கூட சோற்றைக் கண்ணில் காட்டாம, சப்பாத்தி செஞ்சு போட்டாலும் என் மகனுக்கு குஷிதான். அயித்தானுக்கும் அம்ருதாவுக்கும் எதுன்னாலும் ஓகேதான். என் மகன் என்னைப்போல!! :))
அயித்தான் ஊருக்கு போயிட்டா ஸ்கூலுக்கு பசங்களுக்கு வெரைட்டி
சப்பாத்தி செஞ்சு அனுப்பிடுவேன். வேலை சீக்கிரம் முடிஞ்சிடும்.
இப்பவும் தினமும் இரவு சப்பாத்திதான். இன்னைக்கு மூளிபராத்தா,
(முள்ளங்கி ஸ்டஃப்டு பராத்தா) வெள்ளரிக்காய் ரெய்தா!!
சுடச்சுட சாப்பிட வாங்க!!!