Sunday, January 15, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் - 12

ஒரு விஷயத்தை நாம நினைக்க கூடாதுன்னு நினைச்சிருப்போம். ஆனா அந்த டாபிக்கை பத்தியே அதிகம் நினைப்போம். தீய எண்ணங்களை களைவதுன்னு நாம ஆரம்பத்துல பார்த்தோம். அது என்ன தீய எண்ணம். நன்மை செய்யாத எதுவும் தீய எண்ணம். அடுத்தவங்களுக்கு தீமை தருவது மட்டுமில்ல. நமக்கு தீமை தருவதும் தீய எண்ணம் தான்.

கோபம், இயலாமை, பயம்,அதிக ஆசை, நன்றியுணர்ச்சி இல்லாமல் இருப்பது, கழிவிரக்கம், அவநம்பிக்கை, குற்ற உணர்ச்சின்னு லிஸ்ட் நீளும். ரொம்ப கவனமா இந்த எண்ணங்களை நாம வெளியேத்தனும். தீய எண்ணங்களை களைதல் அப்படிங்கற அந்த ஆடியோ சீடி போட்டு மெடிட்டேஷன் செஞ்சுகிட்டு இருந்தாலும் அதெல்லாம் பத்தலை. நாம வாங்கியிருக்கும் அடி அப்படி.  ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முக்கியமா தெரிஞ்சுகிட்டது மனசை பல படுத்தியே ஆகணும். என்னென்ன வழின்னு தேடும்போதுதான் Lovt and & forgiveness workshop கிடைச்சது.  என்னை மீட்டெடுக்கணும்னு முழு மனசோட நினைச்சதற்கு ப்ரபஞ்ச சக்தி எனக்கு உடனுக்குடன் உதவியதை மறக்கவே முடியாது. அதுவும் அதிக செலவில்லாமல், அங்கே இங்கே இல்லாமல் வீட்டில் உட்கார்ந்தே நான் கத்துக்க வாய்ப்பு கிடைச்சது.

அந்த workshop whatsappலயே நடத்தப்பட்டது. Loveல என்ன சொல்லிக்கொடுக்கப்போறாங்கன்னு நினைச்சப்பதான் self love கத்துக்கிட்டது. அடுத்து Forgiveness மன்னிப்பது இது ரொம்ப கஷ்டமா இருந்தது. எல்லாத்தையும் விட்டுத்தள்ளனும்னு நினைச்சாலும் எல்லார் மனசுல ஒரு விஷயம் தான் ஓடும். மன்னிக்கறேன் அப்படின்னா அடுத்தவங்க செஞ்சதை நியாயப்படுத்தறாப்ல ஆயிடுமே. நான் தப்பு செய்யலையே? நான் ஏன் மன்னிக்கணும்.

மன்னிப்பது அவங்க  செஞ்சதை செயலை நியாயப்படுத்த அப்படின்னு நினைக்காதன்னு சொன்னாங்க. மன்னிப்பது உன் நன்மைக்காகன்னு சொல்ல அதனால எனக்கு என்ன பலன்??!!! தேவையில்லாம அந்த நினைவுகளில் மூழ்கி கிடக்கறோம். அதைப்பத்தி நினைக்க நினைக்க ஒரு சோகம், வருத்தம், வேதனை எல்லாம் திரும்ப திரும்ப நமக்கு வருது. அது உடலை பாதிக்குது. எல்லாத்தையும் வெளிய தள்ளணும்னா முதல் முயற்சியா இருக்கணும் அப்படின்னு சொன்னாங்க.

why i am the victim always? இதான் மனசுல அடிக்கடி ஓடும். அன்பா இருந்தது தப்பா. என் கடமையை முடிஞ்சாலும் முடியாட்டாலும் இழுத்து போட்டு செஞ்சது தப்பா. நானே ஏன் பாதிக்கப்படறேன். உண்மையாக, நிஜமாக எம்மேல எந்த தப்பும் இல்லாதப்ப நான் ஏன் பாதிக்கப்படறேன். ரோட்ல ஆக்சிடண்ட் ஆகுது. அடிச்சுப்போட்டுட்டு போகும் வண்டிக்காரங்க ஓடிடறாங்க. அடிபட்டு கிடக்கும் ஆளுக்கு ஏற்படும் பாதிப்பு??!!! அந்த நிலைக்கு அவனா காரணம்? இப்படித்தான வாழ்க்கையிலும் நிகழ்வுகள் நடக்குது. அடுத்தவங்களுடைய தவறான பேச்சு, செயல், நடவடிக்கைகளால மனசு பாதிக்கப்பட்டு அதனால ஆரோக்கியத்தை தொலைக்கிறோம். ஆனா எதிராளி நான் எந்த தப்பும் செய்யலைன்னு அவங்க வேலையைப்பாத்துக்கிட்டு ஆக்சிடண்ட் செஞ்சிட்டு போயிட்ட வாகன ஓட்டி மாதிரி இருந்திடறாங்க. இவங்களை எல்லாம் எப்படி மன்னிப்பது? ஏன் மன்னிக்கணும்?

அப்பதான் அந்த மேடம் சொன்னாங்க. அவங்க உனக்கு ஏதோ ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்க உன் வாழ்க்கையில வந்திருக்காங்க. கத்துக்கிட்ட பாடத்தை மனசுல வெச்சுக்க. நடந்த நிகழ்வுகளையும், அதை சார்ந்த மனிதர்களையும் மன்னிச்சு வெளியேத்து. அவங்க தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காத சூழலிலும் மன்னிக்கும் பக்குவம் வேணும். அதுக்கு தான் மனோபலம் அதிகமா தேவைப்படும். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சா நடந்ததை மறந்திடும். மனதார மன்னிச்சு அவங்களை உன் சிஸ்டத்துலேர்ந்து தள்ளி வை. அவங்களைப் பத்தி, நடந்த நிகழ்வுகளைப் பத்தி நினைக்க நினைக்க உன் உடம்புல இருக்கும் எனர்ஜி தேவையில்லாத விஷயத்துக்கு போகுது. அந்த துயரமே திரும்ப கிடைக்குது. விட்டுத்தள்ளித்தான் பாரேன்னு சொன்னாங்க. என்னன்னேவோ செஞ்சு பாத்தோம், உடம்பும் மனசும் குணமாகலை. இதை செஞ்சுதான் பாப்போமேன்னு மனசுல நினைச்சதுதான் என் ஆரோக்கியத்தின் முதல் படி. :)

இதுக்கு அவங்க கொடுத்த ஆடியோ மெடிட்டேஷனோட அதே சமயத்துல எனக்கு இன்னொரு வாட்சப் வொர்க்‌ஷாப்பும் கிடைச்சது. இது பயங்கர மாயம் செஞ்சது.  இது ரெண்டும் செஞ்சதன் பலன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காதவர்களையும் சேர்த்து மனசார மன்னிக்கும் சக்தி கிடைச்சது. இது எனக்குள் நல்ல மாற்றத்தை கொடுத்தது. முதல்ல அடிக்கடி வரும் ஞாபகமறதி குறைஞ்சது. (ஃப்ரிட்ஜை திறந்து வெச்சுட்டு என்ன எடுக்க நினைச்சேன்னு யோசிப்பேன், சமைக்கும்போது உப்பு போட மறந்திருப்பேன், இப்படி நிறைய்ய இதெல்லாம் மாறியது) இந்த மெடிட்டேஷன்களோடு சேர்த்து தீய எண்ணங்களை களைதலும் செய்ய செய்ய நல்ல முன்னேற்றம். இப்ப என்னால இயல்பா வேலைகளை செய்ய முடியுது.

மன்னிக்கணும். மனசார மன்னிக்கணும். எதுவும் மனசார செஞ்சாதான் பலனளிக்கும். மனிதர்களின் தேவையில்லாத செயல்களை அது தரும் பாதிப்பை விட்டொழிக்கிறேன் (LETGO) இதுதான் நாம எடுத்துக்க வேண்டிய சங்கல்பம். யார் நமக்கு என்ன பாதிப்பு செஞ்சிருந்தாலும் அந்த பாதிப்பிலிருந்து நமக்கு கிடைத்த பாடத்தை மறக்க கூடாது. நெருப்பு சுடும்னு தெரியும். பல முறை கைய சுட்டுகிட்டு இருப்போம். அடுத்த தடவை ஜாக்கிரதை உணர்வோடு செய்வோம். அதே மாதிரி பாடத்தை கத்துகிட்டாச்சு. அடுத்த தடவை பாதிப்பு நிகழாம கவனமா இருக்கணும். அதை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு நம் மனசு ஒடிய காரணமா இருந்தவங்களை மன்னிச்சிருங்க. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்காதவங்களையும் மன்னிச்சிட்டு அந்த நினைப்புகளை தூக்கி போடுங்க. மொத்தமா நடந்ததையே மறந்திட்டு மன்னிச்சுட்டு நிம்மதியா இருக்கும் வேலையை மட்டும் நாம பாத்துக்கலாம். சொல்வது ரொம்ப ஈசி. ஆனா செயல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அந்த ஆடியோக்களை என்னால பகிர முடியாது. காரணம் அந்த வொர்க்‌ஷாப்ல அவங்க கொடுத்தது. முகநூலில் meditators & healers அப்படின்னு ஒரு குருப் இருக்கு அதுல சேர்ந்துகிட்டா ஏதும் வொர்க்‌ஷாப் இருக்கான்னு தெரியும். நான் கலந்துகிட்ட கோர்ஸ் நடத்துறது Leaf comunity Nikitha patel, Kanchan sharma of Aurora Group. Fees nominal தான். 1000ரூபாய்க்குள் இருந்தது.

ஒரு சின்ன பயிற்சி செய்வோமா!

தேவையானவை: வெள்ளை மெழுகுவர்த்தி 1, பேப்பர், பேனா, நெருப்பெட்டி.

ஒரு அமைதியான இடத்துல உட்கார்ந்துக்கோங்க. மெழுகுவர்த்தியை ஏத்திக்கோங்க. அந்த தீப ஒளியை பார்த்து உங்க மனதுக்கு பிடிச்ச பிரார்த்தனையை செய்யலாம். இல்லையா அந்த தீப ஒளியைப் பார்த்துக்கிட்டே என் மனசில இருக்கும் வேதனையை வெளியே தள்ளும் எண்ணத்தில் இதை செய்யறேன். ப்ரபஞ்ச சக்தியே எனக்கு இதை செய்யும் வலிமையை தான்னு சொல்லலாம். நேர்மறை உறுதிக்கூற்றுதான்.

பேப்பரில் உங்க மனசுல இருக்கும் வேதனையை எழுதுங்க. நீங்க சொல்ல நினைச்சீங்களோ அது, அந்த நிகழ்வு சம்பந்தமா என்னென்ன எண்ணங்கள் தோணுதோ அதை எழுதுங்க. முடிச்சதும். நாலா மடிச்சு அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில் அந்த காகிதத்தை காட்டி எரிச்சிடுங்க. அதோடு அந்த நபரைப்பற்றிய தீய எண்ணங்களையும் எரிச்சிட்டேன், அந்த நிகழ்வின் பாதிப்பு எல்லாம் என்னை விட்டு போகுது. மனதார மன்னிக்கிறேன். எனக்காக என் நலனுக்காக இந்த மன்னிப்பை நான் வழங்குகிறேன்னு 3 தடவை சொல்லுங்க. அந்த சாம்பலை தண்ணீர் ஊற்றி கரைச்சிடுங்க. இல்லை பூமியில் புதைக்கலாம்.

இது ஒரு ஈசியான ஸ்டெப். எத்தனை நாள் செய்யணும்னு உங்க மனசுல தோணுதோ அத்தனை நாள். (இதைப்பத்தி இன்னும் கொஞ்சம் விரிவா ஒரு பதிவு போடறேன்) 21 நாள் சொல்வாங்க. மனசு ரிலாக்ஸாகியிருக்கும் பாருங்க. உங்க எண்ணத்துல மாற்றம் வந்தாச்சு. விட்டுத்தள்ளுவதில இவ்வளவு ஆனந்தம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா இதை முன்னாலயே செஞ்சிருக்கலாமே, இதுதான் என் மனசுல தோணிய எண்ணம்.

போகி நெருப்புல நாம போட்டு பொசுக்க வேண்டியது இந்த மாதிரி எண்ணங்கள் தான். விட்டுத்தள்ளுங்க சந்தோஷமா இருங்க. “மன்னிப்பு” எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை என்பது சினிமா டயலாக்கா நல்லா இருக்கும். நிஜத்துல நாம மன்னிக்க கத்துக்கிட்டு, தேவையில்லாததை மறந்து மன்னிச்சாதான் நிம்மதி கிடைக்கும். இது என் அனுபவ உண்மை.

மறப்போம்! மன்னிப்போம்! ஆனந்தமாய் வாழ்வோம்




5 comments:

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

Your post is an eye opener

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன பயிற்சி - சிறப்பான பயிற்சி...

நன்றி...

Thenammai Lakshmanan said...

Super

pudugaithendral said...

thanks mr.govindaraju arunachalam :)

நன்றி தனபாலன்

நன்றி தேனக்கா

அபயாஅருணா said...

நல்ல பதிவு . செய்து பார்க்கிறேன் நன்றி