Friday, December 07, 2007

என் உயிர்த் தோழி

vodafone விளம்பரத்தில் அந்தச்சிறுவனுடனேயே செல்லும் நாய்க்குட்டிப்
போல நான் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் என்னுடன் தான்
இருப்பாள்,

நான் வீட்டில் இல்லையென்றால் அவள் இருக்கும் இடம் தெரியாது,

அவளிடம் நான் மயங்கிக்கிடந்தேன் (கிடக்கிறேன்)

அவள் இல்லாமல் நான் இல்லை. இதனால் நான் வாங்காத திட்டு இல்லை.

போதும் பீடிகை என்கிரீர்களா? சரி சரி சொல்லி விடுகிறேன்.

அவள் தான் எனதருமை வானொலி பெட்டி.

என் பொழுது போக்கே வானொலியும், புத்தகங்களும் தான்.
பாடம் படிக்கும் போது கூட வானொலி அருகில் பாடிக் கொண்டிருக்கும்.

பாடல் கேட்கும் நேரம் தியானம் செய்வது போல் இருக்கும்.

வீட்டில் மற்றவர்கள் தொலைக்காட்சி பார்த்தாலும் நான் வானொலியுடன் தான் இருப்பேன்.

காலை பக்தி மாலையில் (திருச்சி வானொலி) ஆரம்பிக்கும்.

(வங்கக் கடலில் ஒரு முத்தெடுதையும், ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரையும் மறக்க முடியுமா?)

பள்ளிவிட்டு நேராக வீட்டுக்கு ஓடி (சரி சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டு) வருவேன். வழியில் தன் கம்பீரக் குரலில் டீக்கடைகளில் கூட ஒலிக்கும் சரோஜ் நாராயண சுவாமியின் குரலைக் கேட்டபடியே வருவேன்.

ek fankar ( hindi programme) கேட்ட படிதான் சாப்பாடு. பிறகு விவித பாரதியில் தமிழ் பாட்டு கேட்டுக் கொண்டு இருப்பேன்.
3 .30 க்கு திரைப்படப் பாடலோடு திருச்சி வானொலி முடியும்.

அதன் பிறகு பாட்டு, ஹிந்தி வகுப்புக்களுக்கு போய் வந்து பாடங்கள் படித்து
தேன் கிண்ணம் கேட்க ரெடியாகி விடுவேன்.

அப்பா 9 மணிக்கு தூங்கிவிடுவார். சத்தம் கேட்ககூடாது என்பதர்காக
மெல்லிய ஒலியில், காதுக்கு அருகில் வைத்துக் கொண்டு போர்வைக்குள்
வைத்து மூடிக்கொண்டு பாட்டு கேட்பேன்.

கடப்பாவில் தெலுங்கு பாட்டு, திருச்சி, மதுரை, சென்னை வானொலி நிலையங்கள், விவிதபாரதி, இலங்கை ரூபவாஹினி ஆகிய நிலையங்கள்
எனக்காகத் தான் இருப்பது போல் ஒரு பாடல் விடமாட்டேன்.

மறக்கமுடியவில்லை அவளை. இன்றும் என் அடுக்களையில் ஒருத்தி, ஹாலில் ஒருத்தி, கையில் ஒருத்தி(மொபைலில் ரேடியோ) என்று என்னோடு இருக்கிறார்கள்.

காலம் மாறினாலும் சில மாறாது. அதில் நானும் என் தோழியும் ஒன்று.

24 comments:

  1. வானொலி, எனக்கும் இப்போவும் பிடிக்கும். நல்லா எழுதி இருக்கீங்க, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //
    இன்றும் என் அடுக்களையில் ஒருத்தி, ஹாலில் ஒருத்தி, கையில் ஒருத்தி(மொபைலில் ரேடியோ) என்று என்னோடு இருக்கிறார்கள்.

    காலம் மாறினாலும் சில மாறாது. அதில் நானும் என் தோழியும் ஒன்று.
    //
    ஆனால் இப்போது ஆயிரத்தெட்டு சானல்களாக தோழியின் உளறல்கள் தொல்லை தாங்கமுடியாத அளவுக்கு போய் கொண்டிருக்கிறதே.

    அதுவும் லவ் அட்வைஸ் அது இது என்று. FM கேட்டுபாருங்கள்!!!!

    ReplyDelete
  3. வாங்க கீதாக்கா,
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. மங்களூர் சிவா.
    //ஆனால் இப்போது ஆயிரத்தெட்டு சானல்களாக தோழியின் உளறல்கள் தொல்லை தாங்கமுடியாத அளவுக்கு போய் கொண்டிருக்கிறதே.//

    நான் இருப்பது இலங்கையில். இங்கே FM அவ்வளவு தொல்லையில்லை.
    எனது விருப்பமான ரூபவாஹிணி இருக்கிறது.

    இங்கே இடைக்காலப் பாடல்கள் என்று
    பழையப் பாடல்களும் கேட்கும் வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  5. வானொலி,
    எனக்கும் இப்பவும் பிடிக்கும்.
    எனக்கு இப்பவும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்!
    :)

    ReplyDelete
  6. //அதுவும் லவ் அட்வைஸ் அது இது என்று. FM கேட்டுபாருங்கள்!!!!//
    சிவாண்ணா!

    உங்களுக்கு காதல் அட்வைஸ் உளறலா தெரியுதா :)))))))

    ReplyDelete
  7. //நான் இருப்பது இலங்கையில். இங்கே FM அவ்வளவு தொல்லையில்லை.
    //


    ஒரே கொயப்பமா இருக்குதுக்கா...! :(

    ஆமாம்..! நீங்க எங்க பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையிலிருந்துதானே தென்றலாய் தவழ்ந்து வர்றீங்க்..?

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்குங்க..!

    வண்ணச்சுடர்
    இளைய பாரதம்
    தேன் கிண்ணம்
    பாட்டுக்குப்பாட்டு
    இரவின் மடியில்...

    என்று இதயம் வென்ற நிகழ்ச்சிகளை
    அசைபோட வைத்துவிட்டீர்கள்..

    நன்றி..

    ReplyDelete
  9. //காலம் மாறினாலும் சில மாறாது. அதில் நானும் என் தோழியும் ஒன்று.//

    கொடுத்து வைத்த ஆண்ட்டி.. இங்கே இந்த FM இம்சைகள் அழிச்சாட்டியம் தாங்கல.. :(

    ReplyDelete
  10. ஆயில்யன் said
    //ஆமாம்..! நீங்க எங்க பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையிலிருந்துதானே தென்றலாய் தவழ்ந்து வர்றீங்க்..?//

    இல்லீங்க நான் இருப்பது இலங்கையில்.
    இன்றோடு 5 வருடங்கள் ஆகிறது இலங்கைக்கு வந்து.

    ReplyDelete
  11. சுரேகா said

    //வண்ணச்சுடர்
    இளைய பாரதம்
    தேன் கிண்ணம்
    பாட்டுக்குப்பாட்டு
    இரவின் மடியில்...

    என்று இதயம் வென்ற நிகழ்ச்சிகளை
    அசைபோட வைத்துவிட்டீர்கள்//

    ஆமாம் சுரேகா மனதில் பதிந்த நிகழ்ச்சிகள், நினைவுகள் ஏராளம்.

    ஞாயிற்றுக்கிழமை மதிய நாடகங்கள், வருடத்திற்கு ஒருமுறை வரும் நாடக விழா இப்படி எத்தனையோ.

    ReplyDelete
  12. பொடியன் said,
    //இங்கே இந்த FM இம்சைகள் அழிச்சாட்டியம் தாங்கல.. :(//

    ஆமாங்க நானும் கேட்டிருக்கிறேன்.
    ஆனாலும் நீங்க இம்சையைவிட இருக்காதுன்னு நினைக்கிறேன். பொடியன்னு பேரும், போட்டோவும் வச்சுகிட்டா எல்லோரும் ஆண்டி ஆகிட மாட்டங்க அங்கிள். :))))

    ReplyDelete
  13. @ஆயில்யன்
    //
    //அதுவும் லவ் அட்வைஸ் அது இது என்று. FM கேட்டுபாருங்கள்!!!!//
    சிவாண்ணா!

    உங்களுக்கு காதல் அட்வைஸ் உளறலா தெரியுதா :)))))))
    //
    இவங்க நல்லா போய்கிட்டிருக்கிற காதல்ல அட்வைஸ்னு குடுத்து வேட்டு வைக்காம இருந்தா பத்தாதா??

    ReplyDelete
  14. சிவா,

    அனுபவம் பேசுதோ?

    ReplyDelete
  15. //
    புதுகைத் தென்றல் said...
    சிவா,
    அனுபவம் பேசுதோ?
    //
    ஆப்பு எல்லாம் இவங்க வைக்க வேணாம் தேடித் தேடி நானே வெச்சுக்குவேன்.

    என் நிலைமை இந்த விசயத்துல!!!!!

    ReplyDelete
  16. mangalore siva said
    //ஆப்பு எல்லாம் இவங்க வைக்க வேணாம் தேடித் தேடி நானே வெச்சுக்குவேன்.//

    கைவசம் இப்படிப்பட்ட பாலிஸிகள் நிறையா இருக்குப்போல....

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. எத்தனை சாதனங்கள் வந்தலும் வானீலிக்கு நிகர் வானொலிதான்..மிக நல்ல தோழிதான்
    நீங்கள் சொல்வது போல்..

    ReplyDelete
  18. பாசமலர் said,
    //எத்தனை சாதனங்கள் வந்தலும் வானீலிக்கு நிகர் வானொலிதான்..மிக நல்ல தோழிதான்
    நீங்கள் சொல்வது போல்..//

    நீங்கள் சொல்வது உண்மை பாசமலர்,

    நாங்கள் இங்கே வந்த புதிதில் உடன் விளையாட நண்பர்கள் இல்லாமல் என் மகன் அதிகம் டீவி பார்க்க ஆரம்பித்தான். அதனால் கவனம் சிதைந்து மதிப்பெண்கள் குறைய ஆரம்பித்தது, சில மாறுதல்களும் தெரிந்தன.

    அப்போது குழந்தைகள் நல நிபுணர் சொன்னது இது.

    டீவியை குறைத்து, வானொலி கேட்க வைக்கச் சொன்னார். வானொலி கேட்பதால் கேட்கும் திறன் அதிகமாவதுடன், ஒரே இடத்தில் அமரத் தேவையில்லை. ஆகையால் வானொலி கேட்கும் போது நம் வேலையும் தடை இல்லாமல் இருக்கும் என்று.

    எனக்கு பிடித்த வானொலி மகனுக்கும் அறிமுகம் செய்தேன். நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

    ReplyDelete
  19. பிரசண்ட் மிஸ்

    ReplyDelete
  20. <==
    நான் வானொலியுடன் தான் இருப்பேன்.
    ===>
    ஆமாங்க.அதனாலதான் நான் இப்போ தொலைக்காட்சிப்பெட்டி வாங்காம Worldspace ரேடியா வாங்கினேன்.

    ReplyDelete
  21. ஆமாம் சாமான்யன். என்னோட அடுத்த திட்டம் அது தான்.

    ReplyDelete
  22. அன்பின் தென்றல்,
    நான் சொல்ல வந்த கருத்தை சுரேகா சொல்லிட்டாரு.

    டிவிக்குப் பிறகு கிட்டத்தட்ட கோமா நிலையில் இருந்த ரேடியோவின் இன்றைய நிலை.... வ்வ்வாவ்!!!! வர்த்தக ஒலிபரப்பு பண்பலையாக மாறி சக்கை போடு போடுகிறது. ஆனால் பண்பற்ற பேச்சுக்கள் அதிகம் புழங்கும் இடமாகவும் அது திகழ்ந்தாலும், AIR இன்னும் அந்த அளவிற்குக் கெட்டுப் போகவில்லை. தனியார் சேனல் எனக்கு அலர்ஜி

    நாடகவிழா என்பது அன்றைய நாளில் ஒரு திருவிழா மாதிரி. அனைத்து வானொலி நிலையங்களும் வரிந்து கட்டிக்கொண்டு இதில் இறங்குவார்கள். முதல் அலைவரிசை கேட்பது சுத்தமாக நின்று போய்விட்ட படியால் இன்னமும் இது போன்ற நிகழ்ச்சிகள் வருகிறதா என்று தெரியவில்லை.

    சமீபத்தில் கோவையில் பண்பலையின் பிறந்தநாள் கொண்டாடினார்கள். என்ன கூட்டம்கிறீங்க! அது இல்லாம ஒவ்வொரு பண்டிகைக்கும் மைக்க எடுத்துக்கிட்டு இறங்கிடுறாங்க. பேரு வீடு தேடி வரும் வானொலியாம்..

    மகிழ்வித்து மகிழ்கிறாள் உங்க தோழி.

    ReplyDelete
  23. வாங்க ஃபண்டூ,

    நீங்க சொல்லியிருக்கற மாதிரி பண்பற்ற பேச்சுக்கள் புழங்குவதாலேயே எனக்கு பண்பலை வரிசைகள் பிடிக்கவில்லை.

    டீவியை விட ரேடியோ மிக மிக நல்லது என்பதால் பரவாயில்லை.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று