Monday, February 22, 2010

உடல்வளமும், மனவளமும் பதின்மவயதில் முக்கியம்.

ஆறு, குளங்கள் ஆகியவற்றுக்கு இருபுறமும் கரை இருக்கும்.
அந்தக் கரைக்குள் அடங்கி ஆறு போவது அழகாக இருக்கும்.
கரையைக் கடந்தால் ஊருக்குள் வெள்ளம் தான். அந்தத் தண்ணீரையே
அப்போது திட்டுவோம்.

பதின்மவயதில் உடல்வளமும்,மனவளமும் கரைகள் போன்றது.
பல பிள்ளைகள் இந்த வயதில் கட்டுமஸ்தான உடம்பு வளர்க்க
ஆசைப்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
ஆனால் 18 வயதற்கு பிறகு தான் அத்தகைய கூடங்களுக்கு
செல்ல வேண்டுமாம். பலருக்கு அந்த பயிற்சி நிலையத்தில்
வாங்கப்படும் தொகை கட்ட முடியாது.

உடலுக்கு யோகக்கலை தரும் பலன் போல வேறொன்றும்
தர முடியாது. இதை யோகைக்கலை கற்றவர்கள் நன்கு அறிவார்கள்.
யோகா அதுவும் பதின்மவயதுப்பிள்ளைகளுக்கு மிகவும் உதவுகிறது.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலர் அதிக
பருமனாகவோ, உடல் இளைத்தோ காணப்படுவார்கள். இதில்
ஆண்/பெண் என்ற பேதமில்லை. யோகா பயிற்சி தேவையில்லாத
சதையை குறைப்பது மட்டுமில்லாமல் உடல்பலம், ஒருங்கிணைந்த
கவனம்,தன்னம்பிக்கை, மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
உதவுகிறது.

சூர்ய நமஸ்காரம் எனப்படும் யோகப்பயிற்சி சந்தியாவந்தனத்துக்கு
ஈடானது என்றும் சொல்லலாம். வெறும் சூரிய நமஸ்காரம்
மட்டும் செய்வதை POWER YOGA என்பர். இதை இரட்டைப்படை
எண்ணிக்கையில் செய்வதுதான் சிறந்தது. இரண்டுகால்களாலும்
வந்தனம் செய்வது போல கணக்காகும்.




சூரியன் தரும் சக்தி யாரும் வேண்டாமென்று சொல்லமாட்டார்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதைச் செய்யலாம்.
வேறெந்த யோகப்பயிற்சியும் செய்ய நேரமில்லாதவர்கள் கூட
இந்த சூரிய நமஸ்காரத்தை மட்டுமே செய்து சக்தி பெறலாம்.

மிக முக்கியமான விடயம் யோகப்பயிற்சி செய்துவிட்டு உடன் குளிக்கக்
கூடாது. உடலுக்கு தேவையான சக்திகள் சேரும் பொழுது குளித்தால்
சக்தி உடலில் ஒட்டாமல் போய்விடும். குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்
கழித்து குளிக்கலாம். வெறும் வயிற்றில் அல்லது உண்டு உண்டு முடித்து
1 அல்லது 2மணி நேரம் இடைவெளியில் செய்ய வேண்டும். அதிகாலையில்
சுபவேளையில் செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. பலன் அதிகம்.

சிறந்த குருவின் துணை மிக மிக அவசியம்.

பதின்மவயதில் யோகாவின் பலன் பற்றிய இந்தச் சுட்டி.

yoga poses for teens
இந்த தளத்தில் பதின்ம வயதுக்காரர்கள் யோகா செய்வதன்
பலன்கள் விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

யோகா பற்றி மேலும்

உடலுக்கு யோகா. மனத்துக்கு?????

மனத்தை கட்டுப்படுத்த தியானம் அவசியம். சிறந்த ஆசிரியரைக் கொண்டுதான் தியானப் பயிற்சி
பெற்று அன்றாடம் செய்ய வேண்டும்.



இந்த வீடியோவில் தியானத்தைப் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.


ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குருவைத் தேடி நாம் அலைய தேவையில்லை.
தற்போது எல்லா ஊரிலும் Art of living, ISHA, மனவளக்கலை பயிற்சி
மன்றங்கள் இருக்கின்றன. அங்கே ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்த மாதிரி
பயிற்சி வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் பிள்ளைகளைச் சேர்த்து
(நாமும் சேர்ந்து பயன் பெறலாம்) பலன் பெற உதவலாம்.

Art of living இணைய தளத்திற்கு
ISHA இணைய தளத்திற்கு.

artoflivingல் YES என்ற பயிற்சி பதின்மவயதுக்காரர்களுக்காகவே
இருக்கிறது.

ஒரு வாரக்காலம் போதும் பயிற்சிக்கு. எதிர் வரும் விடுமுறையில் இந்தப்
பயிற்சி பெறவைத்து அதை அன்றாடம் வீட்டில் செய்யப் பழக்கினால் போதும்.

மூச்சுப் பயிற்சி செய்யப் பழகினால் எந்த பிரச்சனையுமே இல்லை.
நம் உடலையும், மனதையும் மூச்சுப்பயிற்சியினால் கட்டுப்படுத்தி
முறையாக, ஆரோக்கியமாக வாழலாம்.

பிள்ளைகளுக்கு இவைகளின் அவசியத்தை போதிப்போம்.
மகிழ்வான வாழ்வு அவர்கள் வாழ வழிவகுப்போம்.

21 comments:

  1. அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் தென்றல். வீடியோவையும் இப்போதே பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. பதிவு போட்ட உடனே உங்க பின்னூட்டம் பார்த்து சந்தோஷம் ராமலக்‌ஷ்மி. மிக்க நன்றி

    ReplyDelete
  3. அது எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்க தென்றல் அக்கா? நீங்க சொன்னாப்புல தான் மணி அண்ணா பையன் ஜிம்முக்கு போறேன்னு ஒரே அடம். ஒரு வருஷம் போனான் போல இருக்கு. இதெல்லாம் சொல்லித்தர அப்போ நீங்க இல்லெ.. இனி வரும் குழந்தைகளுக்காவது சொல்லணும்.

    ReplyDelete
  4. வீடியோ நல்ல தேர்வு. நான் வீட்டிலேயே செய்து கொள்ளும் சுலபமான யோகாபயிற்சிகள் இப்படி டிவிடி போட்டபடி செய்பவயே:)!

    ReplyDelete
  5. அது எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்க //

    ஹா ஹா,

    இப்ப எனக்கு ரெண்டு பேக் இருக்கு!!!

    நிறைய்ய எக்ஸர்ஸைஸ் செஞ்சு சிக்ஸ் பேக் வைக்கணும்.

    அப்படி இப்படின்னு டயலாக் அடிக்க எங்க வீட்டுலயே ஆள் இருக்கே.அந்த அனுபவம் தான்.

    வருகைக்கு நன்றி அநன்யா

    ReplyDelete
  6. நான் வீட்டிலேயே செய்து கொள்ளும் சுலபமான யோகாபயிற்சிகள் இப்படி டிவிடி போட்டபடி செய்பவயே//

    ஆனந்தம் ராமல்க்‌ஷ்மி

    ReplyDelete
  7. மிகவும் அருமையாகவும் நிறைய விளக்கமான லிக்கும் தந்து அழகாக சொல்லியிருக்கிங்க.. எனக்கும் நிறைய ஆசை யோக கற்றுக்கொள்ள வேண்டும் என்று..ஆனால் ஆசை நிறைவேறவில்லை.. ஆனால் சில மணி நேரங்கள் நான் தியாம் எனக்கு தெரிந்த வரை செய்கிறேன்.. மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது..

    ReplyDelete
  8. நல்லதொரு பகிர்வு.

    (நான் யோகா செய்த அழகு பற்றி முன்னர் ஒரு இடுகையில் சொல்லியிருந்தேன். நியாபகமிருக்கிறதா ஃபிரெண்ட்? ஹிஹி)

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு அக்கா.

    ReplyDelete
  10. மிக நல்ல பதிவு. ஒரு முக்கிய விஷயம் இங்கே குறிப்பிட வேண்டும்


    யோகப்பயிற்சிகள் மற்றும் தியானம் இவை ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் தான் செய்யப்பட வேண்டும். இதில் தீட்ச்சை வாங்குவது மிகவும் முக்கியம்.
    யோகப்பயிற்சிகள் மற்றும் தியானம் செய்யச்செய்ய உடலளவிலும் மனதளவிலும் சூட்சமமாகவும் சில மாறுதல்கள் ஏற்படும். குருவின் துணை இல்லாமல் இம்மாறுதல்களை நாம் புரிந்து கொள்ள முடியாது.



    உணவு உட்கொண்ட பிறகு ( பால், காபி டீ போன்ற பானங்கள் கூட) சில மணி நேரம் இடைவெளி விட்டுத்தான் யோகப்பயிற்சிகள் செய்யப்பட வேண்டும். இது கற்றுத் தரும் குருவின் அறிவுரைப்படி கடைப்பிடிக்கவேண்டும். இதைக் கவனிக்காவிடில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடும் கவனம்.



    மற்றபடி இந்த உடம்பை சுகமாக வைத்துக்கொண்டு இந்த மனிதப் பிறவியை எளிதாக கடந்து செல்ல உதவும் நமது யோகிகள் அருளிய யோகப்பயிற்சிகள் மற்றும் தியானத்தை அனைத்து வயதினரும் தங்கள் வசதிக்கேற்ப கடைபிடிக்கலாம்.

    ஓம் நமச் சிவாய

    ReplyDelete
  11. வாங்க ஃபாயிஷா,

    நல்லா சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆளைத் தேடுங்க. குரு இல்லாம இதெல்லாம் முறையா செய்ய முடியாது.

    ReplyDelete
  12. (நான் யோகா செய்த அழகு பற்றி முன்னர் ஒரு இடுகையில் சொல்லியிருந்தேன். நியாபகமிருக்கிறதா ஃபிரெண்ட்? ஹிஹி)//

    ஐயோ இது எப்ப போட்டீங்க??? படிக்காம வட போச்சே. லிங்குங்களேன் ஃப்ரெண்ட்

    ReplyDelete
  13. விளக்கமான பின்னூட்டத்துக்கும், முதல் வருகைக்கும் நன்றி குணா

    ReplyDelete
  14. ஆஃபீஸ் என்பதால் லிங்கை எடுக்கமுடியவில்லை. தலைப்பு 'நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்', சிரமம் பார்க்காமல் தேடிக்கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  15. முறையாக ஒரு குருவிடம் பயில்கிற யோகாப்பியாசமும், உணவுப்பழக்க வழக்கங்களில் ஒருசில மாற்றங்களும் மேற்கொண்டாலே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். மிகவும் அருமையான பதிவு; விளக்கப்படங்களும் காணொளியும் அற்புதம்!

    ReplyDelete
  16. சந்தோஷமா இருக்கு சேட்டைத் தம்பி,

    விடாம தொடருங்க. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. த்யான வீடியோ ரொம்ப நல்லா இருக்கு தென்றல்.வயதாகி என்னை மாதிரி கீழே உட்கார முடியாதவர்களையும் இந்தத் தியானமும் யோகமும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.
    பதின்ம வயதின் பலம் அளவிட முடியாதது.அதே போல மனமும் பல இடங்களில் பாயும். நாம் அடக்காவிட்டாலும் அவர்களாக அடங்குவதற்கு யோகம் மிக உதவி செய்யும்.பகிர்தல் அற்புதம்.

    ReplyDelete
  18. வயதாகி என்னை மாதிரி கீழே உட்கார முடியாதவர்களையும் இந்தத் தியானமும் யோகமும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.//
    ஆமாம் வல்லிம்மா,

    3 வருஷத்துக்கு முன்னே அப்பாவை ஸ்ரீஸ்ரீயோகா கிளாஸ் கூட்டிகிட்டு போனேன். அப்பா சொன்னது,”ரிலாக்ஸ்டா இருக்கு, தலகாணி வெக்காமலும் படுக்கலாம்னு இப்பத் தெரிஞ்சிச்சுன்னு”

    பதின்ம வயதின் பலம் அளவிட முடியாதது.அதே போல மனமும் பல இடங்களில் பாயும். நாம் அடக்காவிட்டாலும் அவர்களாக அடங்குவதற்கு யோகம் மிக உதவி செய்யும்.//

    ஆமாம்மா, வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. //யோகா பயிற்சி தேவையில்லாத
    சதையை குறைப்பது மட்டுமில்லாமல் உடல்பலம், ஒருங்கிணைந்த
    கவனம்,தன்னம்பிக்கை, மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
    உதவுகிறது.//

    முழுக்க முழுக்க சரி தென்றல்.தகுந்த குருவும் கிடைச்சிட்டா வேறென்ன வேணும்.

    ReplyDelete
  20. தகுந்த குருவும் கிடைச்சிட்டா வேறென்ன வேணும்.//

    ஆமாம் அமைதிச்சாரல் வருகைக்கு நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று