Monday, June 21, 2010

அம்பலமாகும் அந்தரங்கங்கள்!!!

எங்க ஊர்ல ”தாரகை சில்க்” அப்படின்னு ஒரு கடை ஆரம்பிச்சாங்க.
அதுக்கு முன்னாடி வரை வாழைமரத்துச் ஜவுளிக்கடை தான் ஃபேமஸ்.
தாரகை சில்க் துவக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும்
வரவேற்பு அட்டை அனுப்பியிருந்தாங்க. அட வித்தியாசமா இருக்கே!ன்னு
நினைச்ச அதே நேரம் ஊரில் இருக்கும் அத்தனை பேரின் விலாசங்களும்
எப்படி இவங்களுக்கு கிடைச்சிருக்கும்?? அப்படிங்கற யோசனையும்
கூடவே வந்துச்சு.


ஆனா இப்பவும் அதே நிலமைதான். நம்ம டெலிபோன், மொபைல், இமெயில்,
வீட்டு விலாசம் எதுவும் ரகசியமாக இல்லாம வேண்டப்படாத
இடங்களிலிருந்து விளம்பரங்கள் வருது. தேவையோ தேவையில்லையோ
லோன் கொடுக்கறேன்னு போன், மொபைல்களில் எஸ் எம் எஸ்களாக
வரும் விளம்பரங்கள், செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு
ஓடிவந்து போனை எடுத்தால் அது விளம்பரக் காலாக இருக்கும்!!

இமெயில் நமக்கென வைத்து அதன் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டாலும்
அதையும் உடைத்து காட்டுகின்றன சில வெப் சைட்டுக்கள். ஹேக்கிங்
இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

நம் கையில் இருக்கும் செல்லை வைத்து நாம் எங்கே செல்கிறோம்
என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியுமாம். படித்த போது பகீர் என்றாகிவிட்டது.
விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது என்று நாம் ஆனந்தப்பட்டுக்
கொண்டிருக்கிறோம், ஆனால் அதே விஞ்ஞானம் நமக்கு அந்தரங்கமே
இல்லாமல் எல்லாவற்றையும் அம்பலம் செய்துவிடுகிறது எனும்
பொழுது நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதையும்
கற்க வேண்டியது அவசியமாகிறது.

இவர்களுக்கு நம் எண்களை யார் தருகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி?
பிரபலமானவர்கள் தான் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்
என்றல்ல சராசரி மனிதனுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது.

நாம் சாதரணமாக பார்க்கும் டீவி சீரியல் நாம் எத்தனையாவது
நபராக பார்க்கிறோம் என்று செய்தியை தந்து டீ ஆர் பீ ரேட்டிங்
ஏற்ற வைக்கிறது.

ஆன்லைனில் நாம் ஏதும் விற்று வாங்கி, அல்லது சில சைட்டுக்களை
ப்ரவுஸ் செய்து பார்க்கும் பொழுது நமது ஐடிக்கள் விற்பனைக்காக
ட்ராக் செய்யப்படுகிறது.

ஹாஸ்பிடல், இன்ஸுயூரன்ஸ் பாலிசி, பேங்க லோன்,
போன்ற இடங்களில் நாம் கொடுக்கும் விபரங்கள் செல்போன் ஆப்பரேட்டர்கள்,
கிரெடிட் கார்டு கம்பெனிகள், ஆகியவற்றிற்கு விற்கப்படுகின்றனவாம்.

social sightகளான பேஸ்புக், ஆர்குட் போன்ற தளங்களில் நாம்
வைத்திருக்கும் போட்டோக்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தும்
நபர்கள் வலைத்தளங்களில் அதிகம்.

தங்களை கேமிரா மூலம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என
சொல்லாமல் சொல்கின்றன ஏர்போர்டுகள், மால்கள், தியேட்டர்கள்,
ஏன் திருப்பதி கோவிலிலும் கூட இருக்கிறது இத்தகைய கேமிராக்கள்.

wi-fi இருக்கும் இடங்களில் நிம்மதியாக லேப்டாப்பை வைத்துக்கொண்டு
வேலை பார்ப்பார்கள் சிலர். ஆனால் தனது மடிக்கணிணிக்குள் கள்ளன்
புகுந்து சில முக்கியமான டாக்குமண்டுகளை திருடி விடக்கூடும் என்பது
பலருக்கு தெரியாது.

ப்ளூடூத் வசதி கொண்ட போன்களை பொது இடத்தில் ப்ளூடூத்
வசதியை ஆன் செய்யாமல் இருப்பது நலம்.

மால்கள், சூப்பர் மார்க்கெட் வாசல்களில் லக்கி ட்ரா, உங்க
டீடெயிலை எழுதி போட்டீங்கன்னா பரிசு காத்திருக்குன்னு சொன்னா
பேசாம நகந்து வந்துடுங்க. Restaurantகளில் கூட நமது
டீட்டெய்ல்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.

நமது கைப்பேசி எண்ணை யாருக்கும்
கொடுக்கும் முன் யோசித்து கொடுங்க. விசிட்டிங் கார்டுகளில்
நம்பரை பிரிண்ட் செய்வதையும் தடுக்கலாம். லேண்ட் லைன்
நம்பரை சில சமயம் கொடுக்கலாம்.

DEBIT CARD, CREDIT CARD உபயோகப்படுத்தும்பொழுது
கவனம் தேவை. தனது கணிணியில் கார்டை ஸ்வைப் செய்து
நமது தொடர்பு முகவரி, நம்பரை அவர்கள் எடுக்கும்
வசதி இருக்கிறது.

do not call என ரிஜஸ்டர் செய்திருந்தாலும் www.donotcall.gov.
எனும் வலைத்தளத்திலும் ஒரு முறை பதிவு செய்வது
நல்லது.

ப்ரவுசிங் செண்டர்களில் கணினி உபயோகித்த பின்னர் குக்கீஸ்களை,
ப்ரவுஸிங் ஹிஸ்டரிக்களை அழித்துவிடுவது நல்லது.

வீட்டுக்கு வரும் கடிதங்களை முகவரி தெரியாமல் நன்றாகக்
கிழித்து போடும்படி சின்ன வயதில் அப்பா சொல்வார். தவறானவர்கள்
கையில் நம் முகவரி சிக்கி ஏதும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது
என்பதனால் எந்த ஒரு காகிதத்தையும் நன்றாக கிழித்துப்போடுவதை
பழக்கமாக்கிக்கொள்வது கூட நம் அந்தரங்கத்தைக் காக்கும்.


24 comments:

  1. உபயோகமான பதிவு! நன்றி அக்கா!

    ReplyDelete
  2. முக்கியமானவைன்னதும் பதறியடிச்சு வந்தேன்.

    சொன்னதெல்லாம் ரொம்பச்சரி.

    ப்ரைவஸி ஆக்ட்ன்னு எங்கூர்லே பாடாப் படுத்துவாங்க. கணவன் பேரில் ரெஜிஸ்தர் செஞ்சுருக்கும் சேவைகளில் (எடுத்துக்காட்டா மின்சார பில்லுன்னு வச்சுக்குங்களேன்)ஆள் ஊரில் இல்லையே நாமாவது காசைக் கட்டிடலாமுன்னா ஒரு விவரமும் தரமாட்டாங்க. அதுக்குத்தான் எல்லாத்துக்கும் ரெண்டு பேர் பெயரிலும் பதிஞ்சுக்குவோம்.

    இங்கே இந்தியாவில் .........? உங்கள் தலைப்புதான்.

    ReplyDelete
  3. நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க. ஏர்டெல் போன்ற பெரிய நிறுவனங்களே இது போல செய்கிறார்கள். DND செய்யும் வாடிக்கைக்காரர்களை ஏதாவது விதத்தில் தொந்தரவும் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாமே : )

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அநன்யா

    ReplyDelete
  5. வாங்க டீச்சர்,

    இந்தியாவின் இந்த நிலை மாற ஏதாவது யாராவது செஞ்சாத்தான் உண்டு.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி டீச்சர்

    ReplyDelete
  7. ஆமாம் வெங்கட் நாகராஜ்,

    பல வித தொந்தரவுகள். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. தலைப்பைப் பாத்திட்டு ஒரு செகண்ட் திகைச்சுத்தான் போயிட்டேன்!! ;-))

    ரொம்பச் சரி நீங்க சொன்னது!! நம்ம தனிமை ரொம்பப் பாதிக்கப்படுது இதனால். பத்தாதுக்கு, சிலர் தெரியாதவங்ககிட்ட சாட்டிங் செய்யும்போது மிச்சசொச்ச விவரங்களைத் தானே சொல்லிடுறாங்க!! :-(

    செல்ஃபோன் சிக்னல்களை வைத்து எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று கணிப்பது காவல்துறையினரால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன்!! இல்லையா? :-((

    ReplyDelete
  9. ஆமாம் ஹுசைனம்மா,

    ரொம்ப சூதனமாத்தான் இருந்துக்க வேண்டியதா இருக்கு. அறிவியல் முன்னேற்றம் எவ்வளவு நன்மையோ அம்புட்டு தீமையையும் தருது. :( என்னத்த செய்ய?

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  11. எனக்கு இந்த நெட் பாங்கிங் இதனால் தான் ப்யமாக் இருக்கிறது. ஒரு லீக் இருந்தால் போதும் அத்தனை டீடெயில்ஸும் அவுட்.
    போதாதற்கு இப்ப ஃபேஸ்புக்,டிவிட்டர்...
    நல்லதொரு பதிவு. நன்றி தென்றல்.

    ReplyDelete
  12. விஞ்ஞான வளர்ச்சியில் தனிமனித அந்தரங்கம் பலி கொடுக்கப்பட்டு விட்டது. நம் வீட்டு பாத்ரூமிலேயே கூட நமக்குத் தெரியாமல் கேமரா பொருத்தப்பட்டு இருக்கலாம்?

    ReplyDelete
  13. உபயோகமான பதிவு... privacy சுத்தமா இல்லாம தான் போச்சு இந்த விஞ்யான வளர்சியால... நாம தான் கவனமா இருக்கணும்....

    ReplyDelete
  14. இண்டெர்நெட் கண்டுபிடிக்கப்பட்டதே ராணுவ தொடர்புகளுக்குதான் என்பது எத்தனி பேருக்கு தெரியும்..!!

    ட்ராய் என்கிற தொலைதொடர்பு துறையிலிருந்தே நம்முடைய நம்பர்களை விளம்பரதாரர்கள் 1000 பேருக்கு இவ்வளவு என்று பணம் கட்டி பெறுகிறார்கள் என்பது எனக்கு தெரிந்த சங்கதி.

    DND சேவைகளும் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்று நெட்வர்கிங் துறை நண்பர் ஒருவர் சொன்னார்..!!

    எங்க போய் முடியுமோ இதெல்லாம்..!!

    நல்ல பகிர்வு..நன்றி புதுகைத் தென்றல்!!

    ReplyDelete
  15. Naan thangal(ezhuth)in rasigai.Neengal than naan padivu poduvadarku inspiration.Ungal ovvoru padhivum super..........

    ReplyDelete
  16. உண்மை தான் அக்கா. நல்லா பதிவு

    ReplyDelete
  17. ஆமாம் வல்லிம்மா,

    கொஞ்சம் கவனம் பிசகினாலும் தப்பாகிடுமோன்னு பயம்தான்.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. ஆமாம் ஐயா,

    அப்படி பயந்து பயந்து தான் வாழ வேண்டி இருக்கிறது.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. ஆமாம் புவனா,

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க ரங்கன்,

    பல அறிய தகவல்களை சொல்லியிருக்கீங்க. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. ஆஹா இன்னொரு தென்றலா,

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி சுதர்ஷினி,
    என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று