Friday, July 29, 2011

புளி மஹாத்மியம்!!!!

புளிப்புச்சுவை - அறுசுவையில் ஒன்று. எலுமிச்சையிலும்
புளிப்பு இருக்கு என்றாலும் புளியில் கிடைக்கும் அந்த சுவையே தனிதான்.
புளி அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனையாகும் என பலர் நினைப்பதுண்டு.
வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடல் அதிகமாக சூடாகும்.
ஆனால் அதுவே மழைக்காலம், குளிர்காலங்களில் புளியை உணவில்
சேர்த்துக்கொண்டால் இதமான சூடு உடலுக்கு கிடைக்கும்.

ஜுரம் இருக்கும் பொழுது அல்லது ஜுரம் விட்ட 4 நாட்களுக்கு
புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. ”போன காய்ச்சலை புளியிட்டு
அழைச்ச மாதிரி” என்பார்கள் பெரியவர்கள். ஜுரம் திரும்ப வாய்ப்பு
அதிகம் என்பதால்தான் புளியை தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால்
அந்த சமயத்தில் புளிப்பாக சாப்பிட விரும்பினால் எலுமிச்சம்பழம்
சேர்க்கலாம்.

புளிக்கும் மருத்துவ குணம் இருக்கு. காலில் சுளுக்கு ஏற்பட்டால்
புளியை ஊறவைத்து நன்கு திக்காக கரைத்துக்கொண்டு மஞ்சள்
தூள் சேர்த்து வாணலியில் கொதிக்க விட்டு இளம் சூடாக பத்து
போல போட்டு வந்தால் வலி, வீக்கம் குறைந்து சுளுக்கும் குறையும்.
இது என் அம்மம்மா கைமருத்துவம். என் அனுபவம். :))

விக்கிப்பீடியாவில் இதன் மருத்துவ குணங்களாக சொல்லப்பட்டிருப்பதை
தருகிறேன். தமிழாக்கம் செய்ய நேரமில்லை.
Anthelminthic (expels worms), antimicrobial, antiseptic, antiviral, asthma, astringent, bacterial skin infections (erysipelas), boils, chest pain, cholesterol metabolism disorders, colds, colic, conjunctivitis (pink eye), constipation (chronic or acute), diabetes, diarrhea (chronic), dry eyes, dysentery (severe diarrhea), eye inflammation, fever, food preservative, food uses (coloring), gallbladder disorders, gastrointestinal disorders, gingivitis, hemorrhoids, indigestion, insecticide, jaundice, keratitis (inflammation of the cornea), leprosy, liver disorders, nausea and vomiting (pregnancy-related), paralysis, poisoning (Datura plant), rash, rheumatism, saliva production, skin disinfectant/sterilization, sore throat, sores, sprains, sunscreen, sunstroke, swelling (joints), urinary stones, wound healing (corneal epithelium).
ஸ்ஸ்ஸ்ஸ் எம்மாம் பெரிய்ய்ய லிஸ்ட் இல்ல.

சரி புளியை வெச்சு எம்புட்டோ சமைப்போம். நான் ஆந்திரா ஸ்டைல்
புளியோதரையும், ரசவாங்கிக்கான ரெசிப்பி சொல்றேன்.

புளியோதரை:
ஆந்திரா ஸ்டைல் புளியோதரை நல்லா சூப்பர் டேஸ்டா இருக்கும்னு
முன்பே சொல்லியிருக்கேன்.
முதலில் காய்கறிகளுக்கு போடும் பொடி செஞ்சு வெச்சுக்கோங்க.
(இதை கத்திரிக்காய, வாழக்காய், உருளை, வெண்டக்காய் ஆகிய
கறிகள் செய்யும் பொழுது போட்டால் சூப்பரா இருக்கும்)

1 பங்கு கடலைப்பருப்பு, 1 பங்கு உளுத்தம்பருப்பு, 3/4 பங்கு தனியா,
15 மிளகாய் வற்றல், கொஞ்சம் வெந்தயம். இதை வெறும் வாணலியில்
அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆறியதும் பொடிசெய்து
வைத்துக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்து நன்கு பிசைந்து மிக்சியில் ஒரு சுத்து எடுத்தால்
நல்ல புளி பேஸ்ட் கிடைக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
வேர்க்கடலை, பெருங்காயம் மி.வற்றல் 2 எல்லாம் போட்டு தாளிக்கவும்.
தாளிதம் கொஞ்சம் கூடவே வேண்டும். அதில் முக்கால் பங்கு தனியாக
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மீதி இருக்கும் தாளிதத்தில் அரைத்து வைத்திருக்கும் புளி, மஞ்சள்தூள்,
கறிவேப்பிலை, உப்பு, நீளவாக்கில் இரண்டாக அரிந்துவைத்திருக்கும்
பச்சைமிளகாய்3 எல்லாம் போட்டு கொதிக்க விடவும். எண்ணெய்
பிரிந்து வரும்பொழுது 4 ஸ்பூன் காய்கறிப்பொடி சேர்த்து மேலும்
கொதிக்கவிடவும். நன்கு கெட்டியாகி எண்ணெய் மிதக்கும். அம்புட்டுதான்
புளி மிக்ஸ் ரெடி.



சாதம் கலக்கும் பொழுது உதிர் உதிராக வடித்த சாதத்தில் சூடாக
இருக்கும்பொழுதே பச்சை கறிவேப்பிலை போட்டு கலந்தால் கறிவேப்பிலையின்
ஜூஸ் அதில் இறங்கும். சாதம் சூடு ஆறியதும் தேவையான அளவு
புளி மிக்ஸ், உப்பு கலந்து தனியாக எடுத்து வைத்திருக்கும் தாளித்த
பொருட்களைச் சேர்த்தால் சூப்பர் புளியோதரை ரெடி. சாப்பிடும் பொழுது
அந்த பருப்புக்கள் கடுக் முடுக் என கடிபடும் ருசியே தனி. :))

அடுத்து ரசவாங்கி பாப்போம்:

ரொம்ப சிம்பிள் இது. கால்கிலோ கத்திரிக்காய். அதுவும்
எண்ணெய் கத்திரிக்காய் சைசில் இருந்தால் எண்ணெய் கத்திரிக்காய்க்கு
கீறுவது போல 4 ஆக கீறிக்கொள்ளவும்.
பெரிய கத்திரிக்காய் என்றால் குழம்புக்கு போடுவது போல பெரிதாக
வெட்டிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து
நன்கு நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும்.

மசாலாவுக்கு: அரைத்துவிட்ட குழம்புக்கு அரைப்பது போல
கடலைப்பருப்பு, தனியா, மிளகாய்வற்றல் வறுத்து தேங்காய் சேர்த்து
அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து கத்திரிக்காயைப் போட்டு
நன்கு வதக்கவும். புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து
நன்கு கொதிக்க விடவும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து
வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டால்
ரசவாங்கி ரெடி.



(கத்திர்க்காய், வெண்டக்காய், சொளசொள ஆகிய காய்களிலும்
செய்யலாம்.)

சப்பாத்தி, தோசை, இட்லிக்கு நல்ல சைட் டிஷ். சோற்றில்
போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

எப்பொழுது புளியோதரை செய்ய ரெடிமேட் மிக்ஸை எடுக்கும்
நான் இன்றைக்கு மேலே சொன்ன ஆந்திரா புளியோதரை செய்தேன்.
செம ருசி. :)) கூடவே ரசவாங்கி செய்தேன். இட்லியோடு
செம காம்பினேஷனாக இருக்கு.

அனைவருக்கும் வீக் எண்ட் வாழ்த்துக்கள்

19 comments:

  1. "புளி மஹாத்மியம்!!!!"//

    மஹத்த்மியமான அருமையான சுவையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. புளியம்பூ, புளியங்காய், புளியங்கொழுந்து புளியம்பழங்களால் (எல்லாம் நான் விரும்ம்பிச் சாப்பிட்டவை)மாலை அணிவித்துப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. புளியோதரையே ருசி.. அதுவும் ஆந்திரா புளியோதரைக்கு கேக்கணுமா :-))

    ReplyDelete
  4. ஆஹா சூப்பர் மாலையா இருக்கே இராஜராஜேஸ்வரி. :))

    நன்றி மாலைக்கும், வருகைக்கும்

    ReplyDelete
  5. வருகைக்கு மிக்க நன்றி

    அமைதிச்சாரல்

    ReplyDelete
  6. என்னங்க, ஆந்திரா ஸ்பெஷல் கொங்குரா சட்டினியை விட்டுட்டீங்களே? அதுலேயும் புளி சேர்ப்பாங்களே..? my favourite Andhra recipe…! :- )

    ReplyDelete
  7. வாங்க சேட்டைத்தம்பி,

    உங்களுக்கு கோங்குரா பிடிக்குமா?? ஹைதை வாங்க செஞ்சு தர்றேன். கோங்குரா பச்சடி செஞ்சு வேணுங்கும் பொழுது அதுல வெங்காயத்தை அரிஞ்சுபோட்டு கலந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இயல்பாவே அந்த இலை புளிப்பு என்பதால அதுக்கு புளி எல்லாம் சேக்க மாட்டாங்க.

    ஃபுல்லா இரும்புச் சத்து மிக்க கீரை அது.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. புளி பற்றிய பகிர்வு நன்று. சுளுக்கிற்கு மட்டுமல்ல இரத்த கட்டிற்கும் நீங்கள் சொன்னதை செய்யலாம்.

    ReplyDelete
  9. ரொம்ப அருமையான சமையல்...கண்டிப்பாக ரசவாங்கி செய்ய வேண்டும்..

    புளியில் இவ்வளவு இருக்கின்றது...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  10. இரண்டு நாள் முன்பு தான் கேரளாவின் கொடம் புளி பற்றியும் அது கொழுப்பை கரைக்கும் என்றும் படித்து அசந்தால் இன்று நம் புளி பற்றி நியூஸ்..இன்று தான் புளியோதரை வித் பக்கோடா செய்தோம். ரசவாங்கி செய்தது இல்லை.

    ReplyDelete
  11. புளிக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்குங்கிறது ஆச்சர்யமா இருக்கு. ஏனா, அதை அவ்வளவு நல்லவிதமா சொல்லிக் கேட்டதில்லை. வாதம் தரும்னும் கேள்விப்பட்டிருக்கேன்.

    ஏன், நானே, அதனால் புளியை முடிந்த வரை தவிர்த்து, தக்காளி சேர்த்துப்பேன்.

    ReplyDelete
  12. தகவலுக்கும் வருகைக்கும் நன்றி சாகம்பரி

    ReplyDelete
  13. ரசவாங்கி செஞ்சு பாருங்க கீதா,

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க அமுதா,

    நானும் அதிகமா செஞ்சதில்லை. ஆனா இட்லியோடு செம காம்பினேஷனா இருந்துச்சு. :))

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. ஆமாம் ஹுசைனம்மா,

    புளியைப் பத்தி வயித்துல புளிகரைச்சா மாதிரிதான் சொல்லி வெச்சிருக்காங்க. அளவோட இருந்தா எதுவுமே நல்லதுதான். தக்காளி அதிகமா சேர்த்தாலும் பிரச்சனைன்னு சொல்வாங்க.

    ReplyDelete
  16. சூப்பர்!!!!

    ஆமாம்.... அது என்ன சொளசொள ?

    யூ மீன் சௌ சௌ!

    ReplyDelete
  17. வாங்க துளசியக்கா,
    யூ மீன் சௌ சௌ!

    யெஸ்ஸு. அதே தான். ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா போச்சு. சுட்டியதற்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  18. பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...

    ReplyDelete
  19. ஆந்திர புளியோதரை, ரசவாங்கி ஆஹா! சூப்பர்ங்க.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று