Tuesday, December 20, 2011

நடந்தது இதுதான்.

அம்மா, அப்பா ஊரில் தனியாக இருப்பதால தினமும் ஒரு வாட்டி
போன் போட்டு நலம் விசாரிச்சிடறது பழக்கம். அவங்க தனிமைய
விரட்ட முடியாட்டி போனாலும், ஏதோ என் பங்களிப்பா இந்த வேலைய
செஞ்சுகிட்டு இருக்கேன். அன்னைக்கும் அப்படித்தான் அம்மாவுக்கு போன்
செஞ்சா ”அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை.நேத்து மூச்சு விட முடியாம
போயிடிச்சு. காலைல டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனேன். ஜுரம் இருக்கு
மருந்து சாப்பிட்டு அப்பா படுத்திருக்காருன்னு சொன்னாங்க.” புதுகையில்
மழை அதிகமா பெஞ்சுகிட்டு இருந்துச்சுன்னு அம்மா சொன்னாங்க. மழை,
குளிர் காலங்களில் அப்பாவுக்கு மூச்சுத்திணறல் இருக்கும். ஆனாலும்
இங்க வந்தா நல்ல டாக்டர்கிட்ட செக்கப் செய்யலாமேன்னு சொன்னேன்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவங்களால தனியா டாக்டர்கிட்ட
ஓடி, வீட்டுக்கு வந்து செய்வதுன்னு முடியாதுன்னு ஹைதைக்கு கிளம்பி
வரச்சொன்னேன். பிள்ளைகளை விட்டு போகமுடியாத சூழல் இப்ப.

”அதெல்லாம் வேண்டாம். நான் நல்லாத்தான் இருக்கேன்” அப்படின்னு
அப்பா சொன்னாரு. இவரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பாருன்னு
தம்பியாருக்கு போனைப்போட்டு மேட்டரைச் சொன்னேன். என் கிட்ட
சொல்லவே இல்லையேன்னு சொல்லிப்புட்டு சிங்கையிலிருந்து போன்
போட்டு அப்பாவை நல்லா திட்டி ட்ரையினில் டிக்கெட் ஏதும் கிடைக்காததால
அம்மா, அப்பா ரெண்டு பேரையும் ஃபிளைட்ல டிக்கெட் புக் செஞ்சு அனுப்பி வெச்சாப்ல.

வந்த மறுநாளே என்னுடைய எண்ட் டாக்டர் (அதான் ENT ) கிட்ட போனோம். :))
அவர் இது மூச்சு திணறல் இல்ல. பீபி அதிகமா இருக்கு. அப்படின்னு சொல்ல
அப்பாவுக்கு மூச்சு விட முடியாம இருந்ததற்கு அடுத்த நாள் அம்மா ஈசிஜி
எடுத்திருந்ததைக்காட்ட அதுல மேட்டர் தெரிஞ்சது. இது ஹார்ட் சம்பந்தப்பட்டது.
முதல் அலார்ம் அடிச்சிருக்கு. அதுதான் அன்னைக்கு ராத்திரி உங்களுக்கு
மூச்சு விட முடியாம போயிருக்குன்னு சொல்லி உடனடியா இருதய மருத்துவரை
பாக்கச் சொல்ல அங்கேயே இருந்த டாக்டர்கிட்ட காட்டி பீபி குறையனும் அப்படின்னு
சொல்லி அதுக்கு மருந்து கொடுத்தார். எக்கோ டெஸ்டில் ஏதும் பிரச்சனை இல்லாததால
நல்லதா போச்சு.

அம்மாவுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால அதுக்கு காட்டினோம். எல்லா
டெஸ்டும் எடுத்ததுல அம்மாவும் டேஞ்சர் ஜோன்ல இருப்பது தெரிஞ்சது.
அம்மாவுக்கும் பீபி ஹை, சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் ஜூப்பரா ஜிவ்வுன்னு
ஏறிக்கிடந்தது தெரிய வந்து முன்னாடியே எடுத்துகிட்டு இருக்கும் மருந்துகளின்
அளவைக்கூட்டி தொடர்ந்து எடுக்கணும்னு சொன்னாங்க.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலை பாத்துகிட்டு இருந்து ரிடையர் ஆனவுங்க.
அப்பாவோட வேலை செம டென்ஷன் + பிசி + ட்ராவல்னு எந்த நேரமும்
இருந்தவர். அம்மா பள்ளியில எழுத்தாளரா இருந்தாலும் அவங்களும் அங்க
செம டென்ஷன்தான். உடலை கவனிக்காம ஓடிக்கிட்டே இருந்தவங்க இப்ப
வீட்டுல இருக்கும்பொழுது அவ்வளவு ஆக்டிவா இல்லாம இருப்பதும் ஒரு
காரணம். இப்ப அவங்களுக்கு உடலில் சக்தி இல்லாம இருப்பதால நமக்கு
வயசாகிடிச்சுன்னு ஒரு மனப்பான்மை வந்து உடல் உழைப்பு கம்மி ஆகிடிச்சு.

டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டு போய், டாக்டர், டெஸ்டிங்னு ஒரே
அலைச்சல். பசங்களுக்கும் டெஸ்ட் நடந்துகிட்டு இருந்த நேரம். எதையும்
விட முடியாம ஓடி செஞ்சே ஆகவேண்டிய கட்டாயம். நாம நல்ல நாளிலேயே
நாழிப்பால். இப்ப கேக்கணுமா. லோ லோ பீபி அப்படி இப்படின்னு ஒரு மாதிரி
ஆகிடிச்சு உடம்பு. ஆனாலும் மனசுல ஒரு நிம்மதி. அம்மா அப்பாவுக்கு சரியான
நேரத்துல ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வெச்சிட்ட திருப்தி. இரண்டு மாசத்துக்கு ஒருமுறை
வந்து டெஸ்ட் செஞ்சுக்க சொல்லி இருக்காங்க. அப்பாவுக்கு பீபி கண்ட்ரோலில்
வந்திட்டா போதும். அம்மாவுக்கு தான் சுகர், கொலஸ்ட்ரால், பீபி எல்லாம் நார்மலுக்கு
கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். காரணம் பெண். ஆமாம் ஆணுக்கு
முடியவில்லை என்றால் ஓய்வெடுக்கலாம். மனைவி செய்வார். ஆனால் மனைவிக்கு!!
அப்பா உதவி செய்யும் ரகம் தான் என்றாலும் அவருக்கே உடல்நிலை சரியில்லாத
பொழுது அம்மாவுக்கு அது இன்னும் கொஞ்சம் டென்ஷனைக்கொடுக்கும்.


இந்த வருடத்தில் என்னுடைய மிகப்பெரிய சாதனைன்னு நான் ரொம்ப
சந்தோஷப்பட்டுக்ககூடிய விஷயம் நடந்திருக்கு. எம்புட்டு சொன்னாலும் கேக்க
மாட்டாரு மனுஷன். காலைச்சாப்பாட்டை அறவே தவிர்த்து டீயும் பிஸ்கட்டும்
மட்டும்தான் அப்பா சாப்பிடுவாரு. இப்ப இந்த மருத்துவம் நடப்பதால
காலையில் மருந்து சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்க டீ பிஸ்கட்
சாப்பிட்டே மருந்து சாப்பிடறென்னு சொல்லிகிட்டு இருந்தவரை திட்டி,
ஒரு வழியா காலையில் ரெண்டி இட்லி அல்லது ரெண்டு தோசை,
அல்லது கொஞ்சம் ஓட்ஸ் உப்புமா சாப்பிட வெச்சிட்டேன். :))))))))))))
வெச்சிட்டேன்னு சொல்லி ஸ்மைலி போட்டாலும் அதுக்கு நான் பட்ட
கஷ்டம்,ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பபாஆஆஆஆஆஆஆஆ ரகம்தான்.
இதுல பேத்தியின் பங்கும் இருக்கு. :)


ஆனா ஒரு விஷயம் என்னுடைய எண்ட் டாக்டர் கரெக்டா தான் சொன்னாரு.
அம்மாவுக்கு 180 இருந்தது பீபி. ஆனா தலை சுற்றல், மயக்கம் ஏதுமில்லை.
அப்பாவுக்கு அதே அளவுதான் ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாகிடிச்சு.

அப்ப டாக்டர் சொன்னது இதுதான்.”லேடிஸ் சும்மா இருக்க மாட்டாங்க. வீட்டு
வேலை ஏதும் செஞ்சுகிட்டே இருப்பாங்க. உடல் உழைப்பு அவங்களுக்கு அதிகம்.
ஆனா நாம் ஆண்கள் அப்படி இல்ல. வேலையில் மெண்டல் டென்ஷன் இருப்பதால்
நாம அதிகமா வேலை செய்வது போல நினைக்கிறோம். உண்மையில் நம்ம உடம்பு
உழைப்பே இல்லாமத்தான் இருக்கு. ரிடையர் ஆனவுங்க டீவி சீரியல்னு இருக்க
ஆரம்பிச்சிட உடம்பு மக்கர் செய்யுது.” உண்மை. உடல் உழைப்பு ரொம்ப அவசியம்.
ஏதாவது ஒரு உடற்பயிற்சி கண்டிப்பா அவசியம். வீட்டு வேலைதான் செய்றோமேன்னு
பெண்களும் அலட்சியமா இருந்திடக்கூடாது.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ அதை செய்து முடிக்கணும்னு எனும்
ஒரு பரபரப்பு, டென்ஷனோடவே வேலை செய்வோம். உடற்பயிற்சி அந்த ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடு படும் ஒரு மார்க்கம். யோகா, நடைப்பயிற்சி உடம்புக்கு,
மனதிற்கு மெடிட்டேஷன். இது ரெண்டும் கண்டிப்பா தேவை.

இம்புட்டு நாள் இப்படித்தான் பிசியா ஓடிக்கிட்டு இருந்தேன். போன வாரமே
அம்மா அப்பா ஊருக்கு போயிட்டாலும் நம்ம லோ பீபி என்னை படுக்க
வெச்சிருச்சு. :) நல்லா ரெஸ்ட் எடுத்து வந்திருக்கேன். நீங்களும் உங்க
உடம்பு சொல்வதை கவனிச்சு கேளுங்க. அதற்கு தேவையானத செய்யுங்க.

உயிர் இருக்கும் வரை நம்ம உடம்பும் நல்லா இருக்கணும்ல!!!


28 comments:

ராமலக்ஷ்மி said...

அவசியமான பகிர்வு.

துளசி கோபால் said...

//அம்மாவுக்கு தான் சுகர், கொலஸ்ட்ரால், பீபி எல்லாம் நார்மலுக்கு
கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். காரணம் பெண். ஆமாம் ஆணுக்கு
முடியவில்லை என்றால் ஓய்வெடுக்கலாம். மனைவி செய்வார். ஆனால் மனைவிக்கு!!//

அட்சர லட்சம் பெறும்.

உண்மை உண்மை உண்மை.

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

நலமா.

அட்சர லட்சம் பெறும்.

உண்மை உண்மை உண்மை.//

மிக்க நன்றி. உடம்பை கண்டிப்பா நல்லா கவனிச்சுக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி

CS. Mohan Kumar said...

Take care.

ஷர்புதீன் said...

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

i agreed!!

ஹுஸைனம்மா said...

பெற்றோரை உடன் அழைத்துவைத்து தகுந்த சிகிச்சை எடுக்க வைத்து அனுப்பியதில், உங்களோடு சேர்த்து எங்களுக்கும் நிம்மதியாக இருக்கு.

ஆமா, அம்மாவுக்கும் ஹை பிபி, அப்பாவுக்கும் ஹை பிபி. ஆனா, உங்களுக்கு லோ பிபி-யா? ஆச்சர்யம்.

//அம்மாவுக்கு 180 இருந்தது பீபி. ஆனா தலை சுற்றல், மயக்கம் ஏதுமில்லை//

ஆ... அப்படியா... எங்கம்மாகிட்டயும் இதத்தான் அடிக்கடி சொல்வேன்... ஏன்னா, தலைசுத்தல் இல்லைனா மாத்திரை ஏஞ் சாப்பிடணுன்னு ஆர்க்யூ பண்ணுவாங்க.. ஸ்ஸ்ஸப்ப்ப்பா... நம்ம பிள்ளைகளக் கூட ரெண்டு போடுபோட்டு சமாளிச்சிடலாம்... ;-))))))

pudugaithendral said...

வருகைக்கும் அன்புக்கும் நன்றி மோகன்குமார்

pudugaithendral said...

அன்புக்கு நன்றி ஷர்புதீன்

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூட ஆரம்பத்தில் லோ பீபிதான் இருந்துச்சு. :((

நம்ம பிள்ளைகளக் கூட ரெண்டு போடுபோட்டு சமாளிச்சிடலாம்... //

ஐயோ, ஆமாம்பா ஆமாம். சேம் ப்ளட்

வருகைக்கு நன்றி

AKM said...

சரியான நேரத்தில் அதிரடியாய் சிகிச்சை தந்திருக்கிறீர்கள் ரமணி சாருக்கு.. அணைவரும் நலமுடன் வாழ என் பிரார்த்தனைகள்..
தங்களுக்கு தெரிந்திருக்கலாம் காமராஜபுரத்தில் அருன் ஸ்கூல் என நடத்திக்கொண்டிருக்கும் என் நண்பர் சுகுமார் என்று பெயர்.. என் வயதுதான்..இன்று அதிகாலை நெஞ்சுவலி என்றிருக்கிறார்.. சிறிது நேரத்தில் பிரிந்து வி்ட்டார்.. இத்தனைக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.. இந்த பதிவுடன் இவ்விஷயத்தை பகிர்ந்து கொண்டதில் தவறிருந்தால் சாரி.. அதேசமயம் அவர் மாடல் ஸ்கூல் டயட்டில் வாத்தியார்..அவர் அம்மாவும் டீச்சர்.. தங்கையும் டீச்சர்.. டீச்சர் குடும்பம் என்றால் ஸ்டெரஸ் வருமோ

பாச மலர் / Paasa Malar said...

அவசியமான அறிவுறுத்தல் கலா....

pudugaithendral said...

வாங்க ஏகேஎம்,

ஆமாம் அதிரடி அதிர்ச்சி வைத்தியம்தான் ரமணிசாருக்கு. :))

எல்லாம் முருகனருள்.

ஆசிரியர்வேலை என்பது மிகுந்த ஸ்ட்ரெஸ் தரும் வேலை. இப்பொழுது பெற்றோர்கள் அதான் பணம் கட்டி ஸ்கூல்ல சேத்திடறோம்ல. அவங்க என்னதான் சொல்லித்தர்றாங்க” என அதீத எதிர் பார்ப்போட இருக்காங்க. முன்பும் ஆசிரியரின் பங்கு அதிகம்தான் என்றாலும் அன்று இப்போது இருப்பது போல ஊடக வளர்ச்சி இல்லை. பெற்றோரும் கண்டிப்போடயும் அன்போடயும் இருந்தாங்க. ஆனா இப்ப பெற்றோர் கேட்டதையும், கேக்காததையும் வாங்கிக்கொடுத்திட்டா அன்பு காட்டுவதா நினைச்சுக்கறாங்க.

ஸ்ட்ரெஸ் எப்படி வருதோ. ஆனா அதுவந்தா அம்புட்டுதான். :((

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

உங்க கருத்துக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

low bp is worst than high bp,

[[உடற்பயிற்சி அந்த ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடு படும் ஒரு மார்க்கம்]]


exactly ...

pudugaithendral said...

வாங்க ஜமால்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பால கணேஷ் said...

சுவர வெச்சுத்தான் சித்திரம்னு சொல்லுவாங்க. நாம உடம்பு கேக்கறதக் குடுக்கணும்னு சொன்னது ரொம்பச் சரி. அவசியமான அருமையான பகிர்வுக்கு நன்றி.

kaialavuman said...

//உயிர் இருக்கும் வரை நம்ம உடம்பும் நல்லா இருக்கணும்ல!!//

இதையே மாற்றி உயிர் இருக்க உடம்பு நல்லா இருக்க வேண்டும் என்றும் சொல்லலாம்.

அனைவருக்கும் தேவையான படிப்பினையைத் தரும் அனுபவ பகிர்விற்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

//அம்மாவுக்கு தான் சுகர், கொலஸ்ட்ரால், பீபி எல்லாம் நார்மலுக்கு கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். காரணம் பெண். ஆமாம் ஆணுக்கு முடியவில்லை என்றால் ஓய்வெடுக்கலாம். மனைவி செய்வார். ஆனால் மனைவிக்கு!!//

உதவி செய்யற கணவர்கள் அமைஞ்சவங்க பாக்கியவான்கள் :-)

அவசியமான பகிர்வு.. உங்க உடம்பையும் பார்த்துக்கோங்க.

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்.

//இதையே மாற்றி உயிர் இருக்க உடம்பு நல்லா இருக்க வேண்டும் என்றும் சொல்லலாம்.

தங்கமாச் சொல்லலாம். வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்

//உதவி செய்யற கணவர்கள் அமைஞ்சவங்க பாக்கியவான்கள் :-)//

சத்தியமா. ஆனா கணவருக்கும் உடல்நிலை சரியில்லாம போனா??? அதனால அவங்க ஒழுங்கா தன்னை கவனிச்சுகிட்டா தங்க்ஸுக்கு டென்ஷன் இல்லை. சரிதானே.

வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

ரொம்ப நாளாச்சே...உங்க சைடுல பதிவு எதுவும் வரலையே... பரீட்சை நேரம் அதனால பிசியா இருப்பீங்களோ என்று நினைத்தேன்.

அப்பா, அம்மாவை சரியான சமயத்துல மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றது மனதுக்கு நிம்மதி.

உங்க உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

pudugaithendral said...

வாங்க கோவ2தில்லி,

பரிட்சை கூட பெருசா இல்ல. மன்த்லி டெஸ்ட் மாதிரி வெச்சிட்டாங்க.

நல்லா கவனிச்சுக்கறேன்

வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உடம்பைப்பார்த்துக்குங்க..

வெங்கட் நாகராஜ் said...

சரியான நேரத்தில் சரியான சிகிச்சை...

நல்லது. உங்களின் லோ பி.பி. பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கட்டும்....

pudugaithendral said...

கண்டிப்பா கவனிச்சுக்கறேன். நன்றி கயல்

pudugaithendral said...

லோ பீபிக்கும் தீர்வு ஒருவழியா கிடைச்சிருக்கு சகோ. உடலில் சத்து இல்லாம இருக்குன்னு இப்ப ந்யுரோபியான் ஊசி போட்டுக்கச் சொல்லிருக்காரு டாக்டர். அது போட ஆரம்பிச்சிதிலிருந்து பராவாயில்லை. ஓரளவுக்கு படுக்காம வேலை செய்ய முடியுது இப்ப. :))

வருகைக்கு நன்றி சகோ