“மனம்போல் வாழ்க்கை” அல்லது “வாழ்க வளமுடன்”தான்.
இந்த முறை பிறந்தநாளுக்கு அப்பா சொன்ன வாழ்த்து,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டி!நல்லா இரு”!!!
”அப்பா! தாலியை சோக்கர் டைப்ல போடலைப்பா,
தொங்கத்தான் கட்டியிருக்கேன்” இது நான். :)
மறுமுனையில் ஒரே ஹா..ஹா..ஹா.தான்.
”என்னப்பா காலங்காத்தால காமெடி பண்ணிகிட்டு
இருக்கீங்க!” இதைக்கேட்டதும் அப்பா சொன்னது,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டின்னா அர்த்தம்
கூன் விழுந்து உன் தாலி இன்னும் தொங்கும்
அளவுக்கு நீண்ட் ஆயுளும், தீர்க்க சுமங்கலியாகவும்
இருக்கணும்னு ஆசிர்வாதம் செஞ்சேன்னு” சொன்னாரு.
அப்பாவோட பாசம் ஜாஸ்தியா போச்சு.......
கடந்த 14ஆம் தேதி அம்மம்மா தாத்தாவின் 60ஆவது
திருமண நாள். போனைப்போட்டு அம்மம்மாகிட்ட
பேசினா “என்னைப்போல நீயும் 60ஆவது திருமணநாள்,
80ஆவது திருமணநாள் எல்லாம் கொண்டாடம்னு
ஆசிர்வதிச்சாங்க”

அப்பா சொன்ன வாழ்த்து பத்தி சொன்னதும் அம்மம்மா
இன்னும் சில ஏடாகூட ஆசிர்வாதங்கள் இருக்குன்னு
சொன்னாங்க.( ஏடாகூடம்னா ஏடாகூடமான பொருள்
வரும் வாழ்த்து இல்ல. வாழ்த்துற விதம் கொஞ்சம்
ஏடாகூடமா இருக்கும்.) ”ஆஹா சொல்லுங்கம்மா!”ன்னு
அம்மம்மாகிட்ட கேட்டதை இங்கே சொல்றேன்.
(இதை எதிர்க்கறவங்க தயவு செஞ்சு படிக்கவேண்டாம். ப்ளீஸ்)
உறவினர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிப் பெண்ணிற்கு
அந்த வீட்டில் இருக்கும் மாமியார் தனது புதுமருமகளை
அறிமுகப்படுத்தறாங்க. ”கால்ல விழுந்து கும்பிட்டுக்கம்மா”
என்றதும் விழுந்து கும்பிட்ட மருமகளுக்கு விருந்தாளி
அம்மா செஞ்ச ஆசிர்வாதம்,”உம்பொட்டழிய!! உன் தாலியறுக்க!!!
உன் வீட்டுகோலம் கலைய!!!” வந்தது கோபம் மருமகளுக்கு
“என்ன ஜென்மமோ, ஆசிர்வாதத்தைப்பாருன்னு!!!” மாமிக்கும்
முறைப்புக்காட்டிட்டு கோபத்தோட உள்ள போயி புருஷன் கிட்ட
“உங்க உறவுக்காரங்க எல்லோருமே உங்க அம்மா மாதிரி தான்
ஏடாகூடமா இருப்பாங்களா”ன்னு சண்டை போட ஆரம்பிச்சா..
உள்ள கேக்குற சத்தத்தை பாத்து விருந்தாளி அம்மாவே
உள்ள வந்து புருஷன் பொண்டட்டியைக்கூப்பிட்டு தான்
சொன்னதுக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பிச்சாங்களாம்.
”நான் வாழ்த்தினதுக்கு அர்த்தம் இதான் சீக்கிரமே
ஒரு குழந்தைக்கு தாயாகனும்னு சொன்னேன்.
குழந்தையுடன் விளையாடும்பொழுது அழியாத
பொட்டே இல்லை!! அம்மாகிட்ட பால் குடிக்கும்பொழுது
குழந்தையின் கை தானாக தாலிக்கொடியை பிடிச்சுக்கும்.
அதனால சில சமயம் அறுந்து போகும்!! தாலியறுக்கன்னு
இதைத்தான் சொன்னேன்.

எந்த வீட்டுலயும் போடப்படும் கோலத்தை குழந்தை
வந்து அழிக்கும். குழந்தைக்கு அது ஒரு விளையாட்டு
மாதிரி.” நான் சொன்னது இதைத்தான். அர்த்தம் புரியாம
தப்பா எடுத்துக்கிட்டு கோபப்படுறியே தாயின்னு!!”
சொன்னாங்களாம். எப்படி இருக்கு ஏடாகூட ஆசிர்வாதம்!!!
இதைச் சொல்லிட்டு அம்மம்மா சொன்னதுதான் ஹைலைட்டு.
“ச்ராவணகுமாரனின் அப்பா, அம்மா தசரதனுக்கு “நீ புத்ரசோகத்தால்
இறப்பாய்னு” சாபம் கொடுத்தாலும் வம்சம் தழைக்க குழந்தை
பிறக்க மறைமுகமா ஆசிர்வதிச்சிருக்காங்கன்னு” சொன்னாங்க.
நாகரிகமாக மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப்தி டே சொல்றோம்.
படிக்காத பாமரமக்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதமாக
இருக்கு.