Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, April 17, 2012

பெத்தகடன்??!!!! - இறுதிப்பகுதி

முன்கதைக்கு இங்கே

அவங்க மகன் தன் மனைவி, குழந்தையுடன் வந்ததும்
நேரா அப்பா இருக்கும் ரூமுக்கு போய் பார்த்தாரு.
டிரிப்ஸ் ஏத்தி இருந்தாங்க. முகம் கொஞ்சமா வாட்டமா
இருந்தது மகனைக்கண்டதும் ஜொலிக்க ஆரம்பிச்சது.
மகனைக்கட்டிகிட்டு அம்மா அழ, ஆதரவா அப்பா கைய
தடவிக்கொடுத்திட்டு மருத்துவரைப் பார்க்க நகரும் முன்
மனநல மருத்துவரே அங்கே வந்திட்டாரு.

“ஓ நீங்கதான் ராமசாமி சாரோட மகனா?” எல்லாம் கேட்டுட்டு
உங்க அப்பாவுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல.
வயதான காலத்துல பெத்தவங்களுக்கு அன்பு அனுசரனையும்
தேவை. அவங்களை கவனிச்சுக்கறது ரொம்ப முக்கியம்”
அப்படின்னு சொல்ல....

கவனிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன் டாக்டர்” அப்படின்னு மகன்
சொல்ல....”என்ன மனுஷன் இவருன்னு?” எனக்கு கோவம்
வந்தது. அந்நியரான நம்மளை அங்கே இருக்கச் சொன்னதே
பெரிய மனசுன்னு நினைச்சு பேசாம இருந்தேன்.

”பெத்தவங்க தேவைகளை பக்கத்தில் இருந்து கவனிக்கணும்
மிஸ்டர் பாஸ்கர்!” அதுதான் அவங்களுக்கு முக்கியம்”

“என்னைப்பெத்தவங்களுக்கு மாசாமாசம் பணம் அனுப்பிகிட்டுத்தான்
இருக்கேன் டாக்டர்”னு சொன்னவரைப் பார்த்து அழறதா சிரிக்கிறதான்னு
புரியலை. டாக்டரும் இவர் புரிஞ்சுதான் பேசறாரா? புரியாமத்தான்
பேசறாருன்னு குழம்ப ஆரம்பிக்க,

“பணத்தை மட்டும் அனுப்பினா போதுமான்னு தானே கேக்கறீங்க?!!”
என்னைப் பெத்தவங்களுக்கு பணம் போதும். சின்ன வயசுலேர்ந்து
எங்களுக்கு அவங்க சொல்லிக்கொடுத்தது அதுதான். நானும்
அக்காவும் சாதாரண பள்ளியிலதான் படிச்சோம். ஒரு கட்டத்துல
அக்கா படிப்பை நிப்பாட்டி வேலைக்கு போகச்சொன்னாரு. பெரிய
படிப்பு படிக்கணுங்கற கனவுல இருந்த காலேஜ் அக்காவுக்கு
காலேஜ் கூட முடிக்காம அவசர அவசரமா
கல்யாணம் முடிச்சாங்க. நான் படிக்கும் போதுகூட “நீ நல்லா படிச்சு
நல்ல வேலைக்குப் போனாத்தான், நல்ல சம்பளம் கிடைக்கும். என்னையும்
அம்மாவையும் உக்கார வெச்சு சோறு போடலாம்னு” சொல்லியே
வளர்த்தாரு. அம்மாவும் பக்கத்துல இருந்த பள்ளிக்கூடத்துல
டீச்சர் வேலைப் பார்த்தாங்க!!!” என கோவமா சொன்னாரு.


“பெத்தவங்க கஷ்டப்பட்டு உழைக்கிறது பிள்ளைகளை நல்ல
நிலையில் வளர்க்கணும் என்பதற்காகத்தான் மிஸ்டர்.பாஸ்கர்.
தன் வாழ்க்கையையே தியாகம் செய்யறாங்க” என்றார் டாக்டர்.

”இரண்டு பேரும் வேலைக்கு போனாங்களே! எங்க வீட்டுல டீவி
கூட இருந்தது இல்ல. வெளியூர் எங்கயும் கூட்டிப்போனது
கிடையாது. அநாவசியமான செலவுகள் ஏதும் செஞ்சதே இல்லை.
இப்படி வயத்தக்கட்டி வாயக்கட்டி சேத்து வெச்ச பணத்தை
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு குடுத்து ஏமாந்தாங்க. அக்கா
சேத்து வெச்ச பணத்துலதான் அவங்க கல்யாணம் நடந்தது.
என் படிப்பு கூட ஸ்காலர்ஷிப்லதான்.” என்று முகம் சிவக்க
சொல்ல ராமசாமி அப்பா, கோகிலாம்மா கண்ணுலேர்ந்து
தாரை தாரையா கண்ணீரு.

“ பெத்தவங்களைத் தவிக்க விடணும்னு எந்த பிள்ளையும்
நினைக்கறதில்லை. பெத்தவங்களூக்கு கூடிய மட்டும்
உதவியாய் இருக்கத்தான் பாக்கறோம். ஆனா அப்பாக்கு தான்
சின்ன வயசுல பணம் இல்லாம கஷ்டப்பட்டதால, தன்னை
யாரும் பெருசா மதிக்காம போயிட்டதால பணம் சம்பாதிக்கணும்
எனும் வெறியே உருவாகிடிச்சு. அம்மாவும் வேலைக்குப்போக
பக்கத்து வீட்டுல சாவி வாங்கிகிட்டுத்தான் நானும் அக்காவும்
வீட்டுக்கு வந்து காலையில் ஆக்கி வெச்சிருந்த சோத்தை
திம்போம்.

அப்பா ராத்திரி 11 மணிக்குத்தான் வருவாரு. நாங்க அவரோடு
சேர்ந்து விளையாடியது, கதை பேசியதுன்னு எதுவும் இல்லை.
அம்மா, அப்பா அரக்க பரக்க ஓடிக்கிட்டு இருந்தாங்க. நானும்
அக்காவும் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்காக எவ்வளவு ஏங்கி
இருப்போம் தெரியுமா? அன்னைக்குத்தான் ம்தியச் சோறு
எல்லோரும் சேர்ந்து திம்போம். பணம் சம்பாதிச்சாங்க.
ஆனா அதை அனுபவிக்கவும் இல்லை, எங்களையும்
அனுபவிக்கவும் விடலை. பணத்தை விடுங்க டாக்டர்.
என்னை ஒரு 6 வயசு பையனா மாத்த முடியுமா?
எங்க அப்பா,அம்மா கைய பிடிச்சுகிட்டு நான் நடக்க, எங்க
அக்காவும் கூட வர ஒரு கோவிலுக்கு கூட போனதில்லை!
நாங்க எங்கயும் சேர்ந்து போனதில்லை. அவங்க வேலைக்கும்,
நாங்க படிப்புக்கும் தான் ஓடிக்கிட்டு இருந்தோம்” அப்படின்னு
கண்ணுல தண்ணியோட சொல்லிக்கிட்டு இருக்க டாக்டருக்கு
என்ன பேசன்னு தெரியலை....

பாஸ்கர் அண்ணாவோட மகன் ஓடிவந்து அவரைக்கட்டிகிட
அவனை இழுத்து அணைச்சுகிட்டே,” இப்படி கூட எங்கப்பா
கிட்ட நான் நின்னதே இல்ல டாக்டர். எல்லா பிள்ளைகளுக்கும்
அவங்க பெத்தவங்கதான் ரோல் மாடல். எனக்கும் என்
பெற்றோர்தான் ரோல்மாடல். எதுக்குத் தெரியுமா? பிள்ளைகளிடம்
எப்படி நடந்துக்க கூடாது என்பதற்கு. அவரை மாதிரி
நானும் ஆகிடக்கூடாதுன்னுதான் என் குழந்தையின் பருவத்தை
அவனுடன் சேர்ந்து அனுபவிக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன்.
என் மகனின் பள்ளிப்ராயத்தில் நான் இழந்த சந்தோஷங்களை அவனுக்குத்
தரணும்.

என்னைப் பெத்தவங்களுக்கு பணம் இருந்தா போதும்.
அதனால அதை மட்டும் அனுப்பிகிட்டே இருப்பேன்.

வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலயும்
அன்பும் அனுசரணையும், அருகாமையும் ரொம்ப முக்கியம்.
எங்களுக்கு அதுகிடைக்கல. இப்ப என்னை குத்தவாளி
ஆக்கறாங்க. தன் பெற்றோரை சரியா கவனிக்காத மகன்
மீது பெத்தவங்க வழக்குத் தொடரலாம்னு சட்டம் சொல்லுது.
ஆனா குழந்தைதானேன்னு கண்டுக்காம விட்டு எங்க
மனசுல அன்புக்கான ஏக்கத்தை உருவாக்கின பெத்தவங்களை
என்ன செய்யலாம்??!!!! இதுக்கு ஏதும் சட்டம் இருக்கா?”
அப்படின்னு பாஸ்கர் அண்ணா கேட்ட கேள்விக்கு அங்க
இருந்த யாருக்குமே விடைத் தெரியலை!!!

உங்களுக்கு விடை தெரியுமா???

பெத்தகடன்??!!!!

இந்த அப்பார்மெண்டுக்கு குடி வந்து 3 மாசமாச்சு. எதிர்வீட்டுல
வயதான தம்பதிங்க இரண்டு பேர் மட்டும் இருக்காங்க. எனக்கும்
பேச்சுத்துணைக்கு ஆள் இருக்காங்க. சிரிச்ச முகமா இரண்டு
பேரும் பேசுறதை கேட்க அவ்வளவு நல்லா இருக்கும்.

வயசானவங்க தனியா இருக்கறதால சில சமயம் நான் செஞ்ச
குழம்பு, கூட்டுன்னு கொண்டு போய் கொடுப்பேன். அவங்களும்
மருந்துக்குழம்பு, பூண்டு சூப்ன்னு செஞ்சு அனுப்புவாங்க.

அன்னைக்கும் அப்படித்தான் கத்திரிக்காய் கெட்டிக்குழம்பு செஞ்சு
எடுத்துகிட்டு வந்து கொடுத்தவங்க முகம் வாட்டமா இருந்துச்சு.

“ஏன்? என்னாச்சு? உடம்பு ஏதும் சரியில்லையாம்மா உங்களுக்கு”ன்னு
கேட்டேன். “அதெல்லாம் இல்லம்மான்னு” சொன்னவங்க ஏதோ
சொல்ல தயங்கற மாதிரி இருந்துச்சு... தயக்கமா உக்காந்திருந்தாங்க.

“என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க. என்னால ஆன உதவியைச்
செய்யறேன்னு” சொல்லவும், “அவர் சாப்பிட்டு 3 நாளாச்சு. விதமா
செஞ்சாலாவது சாப்பிடறாருன்னு நானும் செஞ்சு பாத்தேன். மனுஷன்
சாப்பிடலை!! அவர் சாப்பிடாம எனக்கும் சோறு உள்ள இறங்க
மாட்டேங்குது”. மனசுக்குள்ள வருத்தமா இருக்கு அவருக்கு அப்படின்னு
நிப்பாட்டினாங்க. நானும் விருந்தாளிக வந்திருந்ததால் பிசியா இருந்தேன்.
அதனால அவங்க கூட போய் பேச முடியலை. நேத்து ராத்திரிதான்
விருந்தாளிக கிளம்பினாங்க.

“எனக்கும் வேலை முடிஞ்சிடிச்சு! வாங்க வீட்டுக்கு போய் பேசலாம்”
அப்படின்னு சொல்லிட்டு அவங்க கை பிடிச்சு வீட்டுக்கு கூட்டி போனேன்.

ஹாலில் டீவி முன்னாடியே எப்பவும் உக்காந்திருப்பவர். அங்கயும்
காணம். “அப்பா எங்க இருக்காங்க?” அப்படின்னு கேட்டேன். எனக்கு
அவங்க இரண்டு பேரும் என் பெத்தவங்க மாதிரி இருந்ததால அப்படியே
கூப்பிட பழகிட்டேன். “ரூம்ல படுத்திருக்காரு!!” அப்படின்னு சொல்ல
அங்கே போனேன்.

ஜன்னல் எல்லாம் மூடி வெச்சிருந்தாங்க. சத்தமே இல்லாம எதையோ
வெறிச்சு பாத்துகிட்டு இருந்தாங்க. “அப்பா! எப்படி இருக்கீங்கன்னு?”
கேட்டதும்,” வாம்மா, மாலா.” அப்படின்னு வாய்தான் கூப்பிட்டது.
முகம் வாடிப்போய் உக்காந்திருந்தாரு.

“என்னப்பா! 3 நாளா சரியா சாப்பிடலைன்னு அம்மா வருத்தப்படறாங்க!
ஏன் என்ன பிரச்சனை? உடம்பு ஏதும் சரியில்லையா? ரவிகிட்ட சொல்லி
டாக்டரைக்கூப்பிடவா!”ன்னு கேட்க,

அதெல்லாம் இல்லம்மா. உடம்புக்கு என்ன? கல்லு மாதிரி நல்லாத்தான்
இருக்கு. மனசும் அதே மாதிரி கல்லா இருந்தா நல்லா இருக்கும்னு”
சொன்னார். வயதானவங்களுக்கு தனிமை ஒரு சாபம்.

அப்பா, அம்மான்னு நான் கூப்பிடற இந்த எதிர் வீட்டுக்கார தம்பதிகள்
பேரு ராமசாமி, கோகிலா. இவங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.
மகளுக்கு திருமணமாகி குழந்தைங்க இருக்கு. 3 வருஷம் முன்னாடி
மகனுக்கும் திருமணமாகி அழகான ஆண்குழந்தைன்னு சந்தோஷமா
சொல்வாங்க. மருமகனுக்கு வேலை வெளிநாட்டில். மகனும் கூட
அமெரிக்காவில் இருப்பதா சொல்வாங்க. தன் கடமைகளை முடிச்சிட்ட
ஆனந்தமான தம்பதிகள்னு இவங்களை பாக்கும் போதெல்லாம்
சந்தோஷப்படுவேன்.

“ஏம்ப்பா, என்னாச்சு? என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.
உங்க பாரத்தை இறக்கி வெச்ச மாதிரி இருக்கும்”னு சொன்னேன்.

“சொல்றேன்! எனக்கும் மன பாரம் குறைஞ்சா மாதிரி இருக்கும்”
என் பிள்ளைகளை படிக்க வெச்சு, நல்ல இடத்தில் செட்டில்
செஞ்சு கொடுக்கணும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னே
ஒரு சராசரி தகப்பனா என் வாழ்க்கையை ஓட்டினேன்.
ரிட்டயர்மெண்ட்டுக்குள்ளேயே மகளுக்கு கல்யாணம், பிள்ளைபேறுன்னு
கடமை முடிச்சு, நான் ரிட்டயர்மெண்ட் ஆவதற்கு 4 மாசம் முன்னாடி
மகனுக்கு நல்ல வேலை கிடைச்சது. ஆறே மாசத்துல துபாய்
போகணும், போஸ்டிங் அங்கேன்னு வந்து நின்னான்!! தடுக்க
முடியலை.1 வருஷத்துல அவனுக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சு,
பேரப்பிள்ளையையும் பாத்திட்டோம். ரிட்டயர்மெண்ட்டுக்கு
அப்புறம் எனக்கும் பென்ஷன்
கிடையாது. அதனால அவன் அனுப்பி வைக்கும் பணத்துலதான்
நானும் என் பொண்டாட்டியும் குடும்பம் நடத்தறோம்.

எங்களால முடிஞ்சதை சேமிச்சும் வைக்கறோம். பணத்தட்டுப்பாடு
ஏதுமில்லை!” அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே
கோகிலாம்மா எலுமிச்சம் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து
“இதையாவது குடிக்க வைன்னு” கண்ணாலேயே கெஞ்சினாங்க.
அவருக்கும் கொடுத்து வற்புறுத்தி குடிக்க வெச்சு, நானும்
கோகிலாம்மாவும் ஜூஸ் குடிச்சோம்.

எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு? என்ன பிரச்சனைன்னு
கேட்க கோகிலாம்மா சொன்னாங்க,” மாசா மாசம் பணம்
கரெக்டா வந்திடுதும்மா, ஆனா மகன் பேசுறது குறைஞ்சு போச்சு.
ஆரம்பத்துல ஈமெயில் சாட்டிங், போனில் பேசுறதுன்னு இருந்தான்.
இப்ப 4 மாசமா போனும் செய்யறதில்லை, மெயிலும் அனுப்பறதில்லை.
அனுப்பின மெயிலுக்கு கூட,” பிசியா இருக்கேன்” முடியறபோது
சாட் செய்யலாம்னு! பதில் அனுப்பினான். மகளும் கூட பேசறதில்லை.
மனசுக்கு வருத்தமா இருக்கு!! தாங்க முடியலை! எந்தப் பசங்களே
என் வாழ்க்கைன்னு அவங்களுக்காக உழைச்சேனோ அவங்க
இப்படி முகம் காட்ட மறுக்கற அளவுக்கு இருக்காங்களேன்னு”தாங்க
முடியலைம்மான்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.

கூட்டில் இருந்து பிரிந்து போன பறவைக்குஞ்சுகளை நினைத்து
வருந்தும் தாய்ப்பறவைகளாக இருவரும் தெரிஞ்சாங்க. இறக்கை
முளைச்ச பறவைகள்!!! வயசானவங்களை இப்படியே விட்டுட
முடியுமா?? சோறு தண்ணி இல்லாம எத்தனை நாள் இப்படி?
இருப்பாங்க. மனசுல வலி இருந்தா சோறு இறங்காது. அவங்க
மகனுடைய மெயில் ஐடி என் கிட்ட இருக்கு. அவங்க அப்பா
உடல் நிலை சரியில்லாமல், இருப்பதை சொல்லி மெயில்
அனுப்பினேன்.

உடனே தன் நண்பரை அனுப்பி மருத்துவரிடம் அழைத்துப்போகச்
சொன்னாங்க. உடல்நலம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்லி
மன நல மருத்துவரை ஆலோசிக்க சொல்லி எழுதி கொடுத்தாரு.
நானும் அவங்க கூடத்தான் இருந்தேன். இதமா பேச ஆரம்பிச்சாரு
மருத்துவர். அவர் பேச ஆரம்பிச்சதும் இரண்டு பேரும் அழவே
ஆரம்பிச்சிட்டாங்க. இருவருக்கும் பீபி வேற!! அதிலும் அப்பாவுக்கு
பீபி அதிகமாகி உடனடியா அதே ஆஸ்பத்திரில சேர்க்க வேண்டியதா
போச்சு. என் கணவர் ரவிக்கு போன் செஞ்சு வரச் சொன்னேன்.
அவர் வந்து அந்த வயதான தம்பதியரின் மகனுக்கு போன் போட்டு
மருத்துவமனையில் சேர்த்திருப்பதைச் சொல்லவும் உடனடியா
கிளம்பி வருவதா சொன்னார்.


அன்னைக்கு சாயந்திரமே கிடைச்ச ஃப்ளைட்ட பிடிச்சு மகன்,
மருமகள், பேரன் 3 பேரும் வந்திருந்தாங்க.

அப்புறம் என்ன நடந்தது?
தொடரும்..................

Tuesday, November 08, 2011

கத்துக்கோ!! கத்துக்கோ!!!

”மணி 7.45 ஆயிடிச்சு!! இன்னும் அப்பா வர்லை. அவங்க ஃப்ரெண்ட்
வரும் நேரம் ஆகிடிச்சே! அப்பாவுக்கு போன் போடுங்க” என்றால் ரம்யா.

சொன்ன நேரம் வாசலில் காலிங் பெல் அடித்தது. அம்மா கிச்சனில்
பிசியாக இருக்க பிள்ளைகள் ஓடினர் கதவு திறக்க, நின்றது மனோஜ்.
ரம்யாவின் கணவன். “அப்பா வந்தாச்சும்மா!!” என்றனர் பிள்ளைகள்.
ரம்யா- மனோஜ் ஜோடிக்கு ஒரு மகனும் மகளும்.

அடுக்களையிலிருந்து ஒரு நொடி வெளியில் வந்தவள்
“காபியா? டீயா? என்ன குடிக்கறீங்க?” என கேட்க,

“தண்ணி போதும், ரகு வரும் நேரம் ஆயிடிச்சு. சமையல்
ரெடியா?!” என கேட்டான்.

எல்லாம் ரெடி!! என்று சொன்னவள் அடுக்களையில் ஒரு ரவுண்ட்
பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்.

மனோஜ் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறான். வெகு நாள்
கழித்து சந்தித்த அவன் நண்பன் ரகுவையும் அவன் குடும்பத்தினரையும்
டின்னருக்கு அழைத்திருந்தான். அப்பாவின் பால்யகால நண்பனைப்
பார்க்க பிள்ளைகளும் ஆவலுடன் இருந்தனர்.

8.15 இருக்கும். ரகு குடும்பத்தினருடன் ஆஜர்.ரகு-உஷா தம்பதியருக்கும்
ஒரு மகன் மகள். மனோஜ் ரம்யா பிள்ளைகள் வயதுதான். பரஸ்பரம் அறிமுகத்துக்குப்
பின்னர் மனோஜ் புதிதாக வீடு வாங்கி குடி போயிருப்பதால் வீட்டைச்
சுற்றிக்காட்டினர்.

பளிச் பளிச்சுன்னு ஒரே சுத்தமாக இருந்தது வீடு. புழங்கவே மாட்டார்களோ!
என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது. அந்த வீட்டிலும் இரண்டு
குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த ரகு தன் மனைவியிடம்,
“நல்லா பாரு உஷா! எவ்வளவு சுத்தமா வெச்சிருக்காங்க வீட்டைன்னு!
நீயும் கத்துக்க!!”.என்றவன் ரம்யாவிடம் திரும்பி,”
உங்க டெக்னிக்கை கொஞ்சம் உஷாவுக்கு சொல்லிக்கொடுங்க!” என்றான்.
இதையே குறைந்தது 4 தடவையாவது சொல்லியிருப்பான் ரகு.

மனோஜும் ரம்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட வேளையில்,
முகம் சுருங்கிப்போன உஷாவையும் பார்க்கத் தவரவில்லை.

”டேபிள் செட் செய்யறேங்க!” என்று அங்கிருந்து நகர்ந்த ரம்யா
பிள்ளைகளை அழைத்து உதவி செய்யச் சொன்னாள். ரம்யா சமையல்
கலையிலும் கில்லாடி. நார்த் இண்டியன், சொளத் இண்டியன் எல்லாம்
அருமையாக செய்வாள். அன்று ரகுவின் குழந்தைகளும் விரும்பும்
வகையில் சைனீஸ் நூடில்ஸும், பாஸ்தாவும் கூட செய்து வைத்திருந்தாள்.
எல்லாம் பேசி மகிழ்ந்து ஆனந்தமாக உண்டார்கள்.

நண்பர்கள் சேர்ந்தால் பேசி மகிழ்வது பற்றி சொல்லவா வேண்டும்.
டின்னர் முடிந்தது. மனோஜும் ரகுவும் பால்கனியில் போய் உட்கார்ந்தார்கள்.
ப்ளேட்டுக்களை எடுத்துப்போட்டு மிஞ்சிய சாப்பாட்டை டப்பாவில்
எடுத்துப்போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்த ரம்யாவுடன் அவளின்
குழந்தைகளும் உதவிக்கொண்டிருந்தனர்.
“நான் ஏதும் ஹெல்ப் செய்யவா? ”என வந்தாள் உஷா. வேணாம்!
நீங்க வாங்க, நாம டெசர்ட் சாப்பிடலாம். பசங்க பாத்துப்பாங்க என்ற
ரம்யா, “ கண்ணுங்களா, டேபிள் மேட் எடுத்து கழுவி விட்டு
நல்லா துடைச்சிட்டு, கை கழுவி விட்டு வாங்க டெசர்ட் சாப்பிடலாம்!”
என்றாள். ட்ரேயில் அழகான கண்ணாடி கிண்ணத்தில் சுடச்சுட
குலாப்ஜாமுன் பார்க்கவே அழகாக இருந்தது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரகு,” என்னடா இது சின்னப்பசங்களை
வேலை வாங்கறாங்க உன் மனைவி?” என்று சொல்ல.
அவங்க ரொம்ப சின்ன பசங்க இல்லப்பா, மகனுக்கு 12 வயசு, மகளுக்கும்
10 வயசு ஆகுது!” என்று சொல்லிக்கொண்டு இருக்க ரம்யா குலாப் ஜாமுனை
நீட்டினாள். அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

அதற்குள் குழந்தைகளும் வர, டெசர்ட் கிண்ணத்துடன் பிள்ளைகள் நால்வரும்
டீவி முன் போய் அமர்ந்தனர்.

உஷாவின் முகம் வாட்டத்துடனே இருந்தது ரம்யாவிற்கு என்னவோ செய்தது.
ஏதாவது செய்யுங்களேன்! என்ற அவளது பார்வைக்கு சிரிப்பை பதிலாக
தந்த மனோஜ் மெல்ல ஆரம்பித்தான்.

“ரம்யாவும் படிச்சிருக்கா, நல்ல வேலையில் அமரும் சாத்தியம் இருந்தும்,
பிள்ளைகள் வளர்ப்புக்காக ஹோம் மேக்கரா மட்டும் இருக்க சம்மதம்
தெரிவிச்சா. ஹோம் மேக்கர்னா வீட்டுல அவங்களுக்கு வேலை இல்லாம
இருக்குமா! அதனால எங்க வீட்டுல எழுதப்படாத சட்டம் ஒண்ணு இருக்கு!
அதாவது அவங்க ரூமை அவங்க அவங்க சுத்தம் செஞ்சிடணும். இது பசங்களுக்கும்
பொருந்தும். சமையற்கட்டையும்,ஹாலையும் மனைவி பாத்துப்பாங்க.
இப்படி நாங்க வேலையைப் பிரிச்சு பாத்துக்கறதால எங்க வீட்டை சுத்தமா
வெச்சிருக்க முடியுது. எல்லா வேலைகளையும் நாங்க 4 பேரும் பிரிச்சு
செய்வதால ரம்யாவுக்கும் அதிக சுமை இருக்காது, பசங்களுக்கும்
கத்துக்க முடியும்,” என்றான்.

பிள்ளைகளிடம் உதவி கேட்டாலே “ பிள்ளைகளை வேலை
சொல்லாம இருக்க முடியாதா உன்னால,
நீயே செய் என்று” கத்துவான் ரகு.

உஷா இப்பொழுது கணவனைப்பார்த்த பார்வையில்,” கத்துக்க வேண்டியது,
நீங்களும் தான்!” என்றது போல இருந்தது.


Wednesday, November 26, 2008

இப்படியும் சிலர்!!!??!!

எழுந்ததும் கணிணியை ஆன்செய்து பார்க்கிறான்
சங்கர்.அப்பா ஆன்லைனில் இருக்கிறார். சந்தோஷமானான்.
“வில் கம் இன் 10 மினிட்ஸ்” என்று டைப்
அடித்து வைத்துவிட்டு போய் பல்துலக்கி
வருகையில் மனைவி மது காபி கொடுக்க
வாங்கிக்கொண்டு கணிணி முன் அமர்கிறான்.


அமெரிக்காவில் இருக்கும் தங்கையின் வீட்டிற்கு
சென்றிருக்கிறார்கள் சங்கரின் பெற்றோர்.
“நல்லாயிருக்கீங்களா! சொல்லுங்கப்பா!”

நல்லா இருக்கேன். இங்க குளிர் கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கு”

”மது எப்படி இருக்கான்னு கேளுங்க”இது அவனின்
அம்மா.

சரி அப்பாவும் அம்மாவும் சொல்வார்கள்
என்று ஆவலுடன் காத்திருக்கிறான்.


மது காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு தயார்
செய்துகொண்டிருந்தாள். நடுவில்
போன் வர பேசிவிட்டு கணவனிடம்
கொடுத்தாள்.

சங்கர் அப்பா, அம்மாவுடன் சாட்டிக்
கொண்டிருந்தான்.

சங்கரின் அப்பா,” அந்த எல்.ஐ.சி பணம்
ட்யூ டேட் வந்திடுச்சு. அதை கட்டிடு”

”சரி! உங்க டெலிபோன் பில் வந்திருக்கு
அதையும் கட்டிடறேன்”

இப்பவாவது அப்பா சொல்வார் என்று
எதிர் பார்த்தான்.

வேற ஏதேதோ பேசினார்கள். ஆனால்
சொல்லவில்லை.

ஊரில் இருக்கும் சித்தி வீட்டு கல்யாணப்
பத்திரிகை வந்ததா?

”குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?”

எல்லாம் கேட்டு் முடித்து
சரி சங்கர்! மது காலையில் பிசியா
இருப்பா! விசாரிச்சதா சொல்லு. சாயந்திரம்
அவளோட சாட்டிக்கறோம்!!”

”டேக் கேர் பை!” சாட்டிங் முடிந்துவிட்டது.





சங்கருக்கு ஏமாற்றம். அப்பா, அம்மா இருவரும்
சொல்லாமலே இருந்துவிட்டார்களே!

கணிணியை ஆஃப் செய்துவிட்டு
அலுவலகத்திற்கு தயாரிக்கொண்டிருந்த போது
போன் அடித்தது!!!

”சங்கர் நான் தான் அப்பா பேசறேன்”

முகம் மலர்ந்தது சங்கருக்கு.
“ம் சொல்லுங்கப்பா!”

“ஒண்ணுமில்லை! ஸ்டேட் பேங்க்
அக்கவுண்டிலிருந்து கொஞ்சம் பணம்
சிட்டி பேங்க் அக்கவுண்டுக்கு மாத்திடு.
வேணுங்கற போது எடுத்துக்க முடியும்!”

சங்கருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு
வந்தது. தன்னை அடக்கிக்கொண்டான்.

“என்னடா! பதிலே இல்லை?”

“எல்லாம் செய்யறேன். போனை வைங்க
என்று சொல்லிவிட்டு டொக்கென வைத்துவிட்டான்.

ஏமாற்றத்தினால் வந்த எரிச்சல் அது.





சங்கரின் ஏமாற்றத்திற்கு காரணம் என்ன?
சங்கர் தன் அப்பா,அம்மா என்ன சொல்வார்கள்
என்று எதிர் பார்த்திருந்தான்?

என்ன தொடரும் போட்டு அடுத்த பதிவில் சொல்வேன்னு
நினைச்சீங்களா? இல்லை :)

விடையைச் சொல்லப் போவது நீங்கள்தான்.

விடையை பின்னூட்டமா தட்டிவிடுங்க.

(இது ஒரு உண்மைச் சம்பவம்)

Thursday, November 20, 2008

புரிந்து கொண்டாள் ஒரு மாது...

”நான் போறேன் எங்கம்மா வீட்டுக்கு”! என்று திருமணமாகி
6 மாதத்துக்குள் 20ஆவது தடவையாக பொட்டியைத் தூக்கிக்கொண்டு
போறவளை பாத்துகிட்டே இருந்தான் மதன்.

ச்சே!ன்னு எரிச்சலும் கோபமும் மண்டிச்சு. சின்னச்சின்ன
சண்டைக்கும் பொட்டியை தூக்கிக்கிட்டு போறதே
பொழப்பா போச்சு இவளுக்குன்னு நினைச்சுகிட்டு
மாமியாருக்கு போனப் போட்டான்.

மொபைலில் நம்பரைப் பாத்த்து மாமியார்
மல்லிகா,” சொல்லுங்க மாப்பிள்ளை! நல்லாயிருக்கீங்களா!” கேட்டாங்க.

“என்னத்த சொல்றது? உங்க பொண்ணு அடிக்கடி
பொட்டியைத் தூக்கிகிட்டு கிளம்பி வந்திடறா.
அப்புறம் நான் எங்க நல்லாயிருக்கறது? இப்பவும்
உங்க பொண்ணு அங்கதான் வந்துகிட்டிருக்கா!”

“என்ன ஆச்சு மாப்பிள்ளை?”
“உங்க பொண்ணுகிட்டையே கேட்டுக்கோங்க” போனை
படக்குன்னு வெச்சிட்டான் மதன்.

மல்லிகாவும் பெருமூச்சு விட்டுகிட்டாங்க.
மகளை கண்டிச்சு சொல்லவும் முடியாது. ”அவங்க
அப்பா செல்லம் கொடுத்து கெடுத்து குட்டிச்சுவராக்கி
வெச்சிருக்காரு. இவ கண்ணை கசக்கினா
என்னிய வதக்கி எடுத்திடுவாரு. அதனாலயே
நான் வாயக் கட்டிகிட்டு உக்காந்திருக்கேன்.

இப்ப அவரு ஊர்ல இல்ல. இந்த முறை
மக கிட்ட பேசி புரிய வைக்கணும்னு!”
நினைச்சு கிட்டே மகளுக்கு பிடிச்சதை சமைக்கப்
போனாங்க.

ஆட்டோ சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து பாத்தா,
மக இறங்கி வந்துகிட்டிருந்தா.
“வாம்மா”
“நான் வர்றதை உன் மாப்பிள்ளை போன் செஞ்சு
போட்டுகொடுத்திட்டாரான்னு? அப்பா எங்கன்னு?” கேட்டா.

“அப்பா ஊருக்கு போயிருக்காரு. நாளைன்னுக்கு
வந்திடுவாங்க”
அம்மா சொல்வதை அறைகுறையாவே
காதில் கேட்டுகிட்டு அப்பாவுக்கு போனை போட்டாள்.

போனை எடுத்த அப்பா,” என்னடா கண்ணா?
மீட்டிங்கல் இருக்கேன்மா!

உங்க மாப்பிள்ளை கூட சண்டை. நம்ம
வீட்டுக்கு வந்திருக்கேன்!”

”அப்படியா! சரி நான் வந்து பார்க்கறேன்.
நான் வர்றவரைக்கும் நம்ம வீட்டிலேயே இரு.”
அப்படின்னு சொல்லிட்டு வெச்சிட்டாரு.

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் மகளின்
முகத்தைப் பார்த்து மல்லிகாவுக்கு சிரிப்பு
வந்துச்சு.

புயலடிக்கும் கடலில் படகை செலுத்தினா
ஆபத்து. மக கிட்ட அப்புறம் பேசலாம்னு
“குளிச்சிட்டு சாப்பிடவாம்மா”ன்னாங்க.

எதைப் பத்தியும் கேக்காம மகளை
கூப்டுகிட்டு கோவிலுக்கு போயிட்டுவந்தாங்க
மல்லிகா. மகளுக்கு பிடிச்ச பூரியும், கிழங்கும்
செஞ்சு கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டு தூங்கிட்டா
மக.

அம்மாவுக்கு மட்டும் மனசுல வருத்தம் இருந்ததால
தூக்கம் வர்ல. யோசிச்சுகிட்டே இருந்தவங்க
எப்ப தூங்கினாங்கன்னு அவங்களுக்கே தெரியலை.

காலேல எந்திரிச்சு காபி போட்டு மகளுக்கு கொடுத்த
போது மக கேட்டா,” அம்மா! உங்களுக்கு அடுத்த
வாரம் பிறந்த நாள் வருதுல்ல. என்ன புடவை
வாங்கப் போறீங்க”

“போன மாசம் அப்பா விசாகப்பட்டினம் போனபோது
மங்களகிரி புடவை வாங்கிட்டு வந்தாரு.அதையே
கட்டிக்கலாம்னு இருக்கேன். இந்தாருக்கு பாரு”

கைல வாங்கின புடவையைப் பாத்து மக,”
ஐயே என்னமா காம்பினேஷன் இது. கிளிப்பச்சை
கலருக்கு ஆரஞ்ச் கலர் பார்டர். இதையா
கட்டிக்கபோறீங்க. இந்த ஆம்பிளைங்க செலக்‌ஷனே
இப்படித்தான்!” இந்தக் கலர் உங்களுக்கு
நல்லா இருக்காது. வேற வாங்குங்க,” அப்படின்னு
சொன்னவளைப் பாத்து சிரிச்சுகிட்டே

மல்லிகா சொன்னாங்க,” கலர்ல என்ன இருக்கு?
கலரோ! விலையோ! இங்கே முக்கியமில்லை
அவர் ஆசையா வாங்கிகிட்டு வந்திருக்கிறார்.
அது போதும்”.

”அதெப்படி அம்மா முடியும்? அவங்களா
ஒரு கலர் வாங்கிக்கொடுத்தா அதை நம்ம
கட்டணும்னு சட்டம் ஒண்ணும் இல்ல.
உன் மாப்பிள்ளையும் அப்படி்த்தான்.
ஜிங்குச்சா கலர்ல புடவை வாங்கிகிட்டு
வந்து சர்ப்பரைஸ்னு கொடுப்பாரு.
நேத்தும் அப்படித்தான் ஒரு புடவை
வாங்கிகிட்டு வந்தாரு. இந்தக் கலர்
எனக்கு பிடிக்கலைன்னு சொன்னதுக்குத்தான்
சண்டை! அதான் இங்க வந்திருக்கேன்.”

எப்பவுமே மாப்பிள்ளை தனக்கு பிடிச்ச
கலர்லதான் புடவை வாங்கி கொடுப்பாரா?
இல்லை உனக்கு பிடிச்சதும் வாங்குவாரா?

“புடவை வாங்கிக் கொடுக்கறேன்னு என்னிய
கடைக்கு கூட்டிகிட்டு போய் அந்தக் கலர்,
இந்தக் கலர்னு நாங்க சண்டை போட்டுகிட்டு
வருவோம். அவரு கூட இருந்தாலே எனக்கு
எந்தக் கலரும் பிடிக்காகம் போயிடுது. ச்சே!
ஏன் தான் இப்படி படுத்தறாங்களோ”

நம்ம பேசவேண்டிய நேரம் இதுதான்னு
மல்லிகா பேச ஆரம்பிச்சாங்க.
“சுதா! ஒரு உண்மையை பல பெண்கள்
புரிஞ்சுக்காம இருக்காங்க. அந்த அடிப்படை
ரகசியத்தை மட்டும் புரிஞ்சுகிட்டா புருஷன்
எதை வாங்கிக் கொடுத்தாலும் அவர்
இஷ்டப்படி அவர் வீட்டுல இருக்கற போது
மட்டுமாவது அந்த உடையை உடுத்துவாங்க
பெண்கள்.”

”என்ன பெரிய சிதம்பர ரகசியம் அது”ன்னு
முறைச்சுகிட்டே கேட்டவளைப் பார்த்து
சிரிப்பு வந்தாலும் அடக்கிகிட்டு சொன்னாங்க,
“அம்மாடி! ஆண்கள் உலகத்துல வர்ணங்கள்
குறைவு. ஆம்பிளைங்க ஆரஞ்சு கலர் பேண்ட்
சிகப்பு கலர் சட்டை போடறதெல்லாம் சினிமாவுல
தான்!. நிஜத்துல கலர் கலரா ட்ரெஸ் செய்யறது
அவங்களால முடியாத ஒண்ணு. அது அவங்க
மனசுல ஒரு ஏக்கமாவே இருக்கும்.

தனக்கு பிடிச்ச கலர்ல புடவை வாங்கி
பொண்டாட்டி கட்டிகிட்டு வந்தா அவங்களுக்கு
சந்தோஷம். பக்கத்து விட்டுக்காரங்க,
எதித்த வீட்டுக்காரங்களுக்கு பிடிக்காத
அந்தக் கலர் அவருக்கு பிடிச்சிருக்கலாம்.
அதனால் அதை வாங்கிக் கிட்டு வந்திருக்கலாம்.

அடுத்தவங்க கமெண்ட் அடிக்கறதை பார்க்காம
வீட்டுக்காரருக்கு பிடிச்ச புடவையை எப்பவாவது
கட்டிக்கறது தப்பில்லை. அந்தப் புடவையை
ஏன் வாங்கினீங்கன்னு சண்டை போடறது
தப்பில்லையாம்மா? உனக்கு பிடிச்ச புடவையும்
வாங்கிக் கொடுக்கறாருல்ல? அவருக்கு பிடிச்சு
வாங்கிக் கொடுக்கறதையும் சந்தோஷத்தோட
ஏத்துக்கடா! சின்னச் சின்ன சந்தோஷங்கள்
வாழ்க்கையில கொட்டிக் கிடக்கு. அதை
அனுபவிக்கறத விட்டுட்டு இப்படி
சும்மா சண்டை போட்டுகிட்டு கிளம்பி
வந்திடற.

நீ இங்க வர்றது தப்பில்லை. இது உன்
வீடு. வரும் உரிமை இருக்கு. புருஷனோட
வந்து சந்தோஷமா இரு. அவரு ஊருக்கு
போயிருந்தா வா. ஆனா இப்படி சண்டை
போட்டுகிட்டு வர்றாது நல்லா இல்லடா.
பொண்ணை எப்படி வளர்த்திருக்கா பாருன்னு
என்னியத்தான் குத்தம் சொல்வாங்க”னு
சொன்னதை பொறுமையா கேட்டுகிட்டு
இருந்தா. முகத்தில் மாற்றுதல் தெரிஞ்சது.

”நீங்க சொல்வது இப்பத்தான் புரிஞ்சதும்மா!
அவரு ஆபீச்லேர்ந்து வர்றதுக்குள்ள
வீட்டுக்கு போயிட்டு அவர் வாங்கிகிட்டு
வந்த புடவையை கட்டிகிட்டு அவருக்கு
பிடிச்ச முந்திரி பக்கோடோ செஞ்சு அவர
அசத்த போறேன்! நான் குளிச்சு ரெடியாகுறேன்”ன்னு
போனவள் திரும்ப வந்து
அம்மாவின் கண்ணத்தில் பச்செக்கென்று
முத்தத்தைப் பதித்து விட்டு “தேங்க்ஸ்ம்மா”
என்றாள்.

கண்கள் பனிக்க மருமகனுக்கு
போன் செய்யப் போனாள்.

Wednesday, November 05, 2008

தலைப்பு என்ன வைக்கலாம்?

”சுகுணா மேடம் வந்துட்டாங்களா?”

”இன்னும் வர்ல சார்!”

”அவங்க வந்ததும் முதல்ல என்ன வந்து
பார்க்கச்சொல்லணும் புரியுதா,” என்று
கோபமாக சொல்லிவிட்டு சென்றார் மேனேஜர்.

அரக்கப்பரக்க ஓடிவந்தார் சுகுணா.

உடன் ப்யூன் வந்து,” மேடம்! உங்களை
மேனேஜர் சார் வரச்சொன்னாரு,” என்று
சொல்லிவிட்டு சென்றான்.

”இதோ போய் பாக்கிறேன்” என்றவாறே
மேனேஜர் அறைக்கதவை தட்டி
“உள்ளே வரலாமா?” என்றாள் சுகுணா.

“ம்ம் வாங்க” என்ற குரலுக்கு கதவை
தள்ளி உள்ளே சென்றவளை பார்த்து
கத்தத்துவங்கினார் மேனேஜர்.

“என்ன சுகுணா மேடம்! பண்டிகைக்கு
ஆபிஸ் கொடுத்த லீவைத் தவிர
நீங்க வேற ரெண்டுநாள் லீவு எடுத்திருக்கீங்க.
அடிக்கடி பெர்மிசன் போட்டுட்டு போறீங்க!
வாங்கற சம்பளத்துக்கு ஆபிஸுக்கு
ஒழுங்கா வந்து வேலை செய்யணும்னு
இல்லாட்டி பேசாம வீட்டுலயே இருக்கலாமே!”
என்றார்.

“சார்! தீபாவளி அன்னையிலேர்ந்து
குழந்தைக்கு ஜுரம். அதனாலத்தான்
லீவு எடுக்க வேண்டியதாச்சு” என்றவளைப்
பார்த்து.

"என் பையனுக்கும் தான் உடம்பு சரியில்லை!
நான் ஆபிஸுக்கு வரலை?
நான் லீவு எடுத்துக்கிட்டு
வீட்டிலயா உட்கார்ந்திருக்கேன். "

”உடம்பு சரியில்லாத குழந்தையை
தனியா விட்டுட்டா சார் வந்தீங்க?”

“இல்ல. வீட்டுல என் மனைவி
இருந்து குழந்தையை பாத்துகிட்டாங்க”
என்று சொல்ல,
"எங்க வீட்டுல நாந்தான் மனைவி.
அதனால நான் தான் லீவெடுத்து
பாத்துக்கணும் சார்," என்று சுகுணா சொல்ல
மேனேஜருக்கு வார்த்தையே வரவில்லை

***********************************

என்ன தலைப்பு வைக்கலாம்னு சொல்லிட்டு
போங்க. மிக்க நன்றி.

வாக்கினிலே இனிமை வேண்டும்

”நீதான் பேய்!,” என்று கத்திக்கொண்டே

ஓடி வந்து என்னிடம் ஒளிந்துக்கொண்ட
தம்பி் நவீனை துரத்திக்கொண்டே ஓடிவந்தாள்
என் பெரிய மகள் நீலிமா.

பொழுது விடிந்து பொழுது போவதற்குள்
வீட்டில் ஒரே களேபரம்தான். இவர்கள்
இருவரும் பள்ளிக்கு சென்றிருக்கு நேரம்தான்
வீடு நிசப்தமாக இருக்கும்.

”இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.

”அக்கா! என்னைத் திட்டறாங்க. தலையில
கூட கொட்டிட்டாங்க பாருங்கம்மா வலிக்குது!”என்றான்
மகன் நவீன்.

“திட்டனதையும், கொட்டினதையும் மட்டும் சொல்லு!”
நீ செஞ்சதைச் சொல்லாத, என்ற பெரி்ய மகள்
நீலிமாவிடம்,”என்ன நடந்தது? ப்ரச்சன்னை என்னன்னு?
நீதான் சொல்லு” என்றேன்.

”பாத்துட்டு தர்றேன்னு சொல்லி என் ஃபரெண்டு
கொடுத்த கீ செயினை உடைச்சிட்டான்! என்
பெஸ்ட் ப்ரெண்ட் என் பர்த்டேக்காக கொடுதது
அது”, என்று வருத்தத்தோடு சொன்னாள்.

”அதுக்கு அக்கா என்னை கோட்டான், நாய்
அப்படின்னு திட்டி்னாங்கம்மா!” என்றான்.

”எதுக்கு தலையில கொட்டின?,” என்றதும்
”வெவ்வேன்னு அழகு காட்டினான் தம்பி”,
என்றாள்.

அலுப்பாக வந்தது எனக்கு. எப்போதும் இதே
நிலைதான். அடிதடி சண்டை நடக்கும்.
இவள் முடியைப்பிடித்து் இழுப்பான், அவள்
அடிக்க என்று பெரிய யுத்தமே நடக்கும்.

தாளமுடியாமால் இருவருக்கும் 2 போட்டு
விட்டு வருவேன். ஆளுக்கொரு மூலையில்
உட்கார்ந்து அழுவார்கள். இதுதான் இவர்களின்
சண்டையின் முடிவாக இருக்கும்.
பிள்ளைகளை அடித்துவிட்டு அந்த
வருத்தத்தில் சாப்பிடமால் இருப்பேன்.
இந்த நிலமை தொடரக்கூடாது.
புரிய வைக்கவேண்டும்
என்று முடிவு செய்தேன்.

”என் கூட வாங்க ரெண்டு பேரும்”, என்றேன்.
அடிக்காமல் அழைத்த அம்மாவை ஆச்சரியமாக
பார்த்தனர் பிள்ளைகள்.
” இப்படி உட்காருங்க” என்று டைனிங் டேபிளு்ருகில்
அமர்த்தி விட்டு உள்ளே சென்றேன்.








தலையைத் தடவிக்கொண்டே மகனும்,
முனுமுனுத்துக்கொண்டே மகளும் உட்கார்ந்திருந்தனர்.

“ம்ம். ரெண்டு பேரும் இதை சாப்பிடுங்க”, என்று
அவர்களிடம் நீட்டிய தட்டை பார்த்து முகம்
சுளித்தனர்.

“என்னம்மா! வாழைக்காயைக் கொடுக்கறீங்க.
காயை பச்சையா சாப்பிட்டா பல் கறுப்பாயிடும்னு
சொல்வீங்களே!” என்று கேட்டாள் மகள்.

”பரவாயில்லை சாப்பிடுங்க” என்றேன்.
“காயைச் சாப்பிட்டா நல்லா இருக்காதும்மா.
பழம் தான் சுவையா இருக்கும், இருங்க
நான் போய் வாழப்பழத்தை எடுத்துகிட்டு
வர்றேன்”! என்று எழுந்த மகனை
உட்கார வைத்தேன்.

”வாழைக்காய், வாழைப்பழம் ரெண்டும்
ஒரே மரத்திலேர்ந்துதானே வருது.
அப்ப ஏன் வாழைப்பழத்தை மட்டும்
விரும்பி சாப்பிடற? என்றதும் மகள்
அதான் தம்பி சொன்னானே அம்மா,
“ பழம் சுவையா இருக்கும்னு. அதான்!”
என்றாள் மகள்.

”சரியா சொன்ன! சுவையான பழம் இருக்க
காயைச் சாப்பிட யாருக்குத்தான்
விருப்பம் இருக்கும்?” அதே போல
அன்பான கனிவான வார்த்தைகள்
இருக்க ரெண்டுபேரும் கடுமையான
வார்த்தைகளை உபயோகிக்கலாமா??”
என்றேன்.


என்னை ஏறிட்ட மகளிடம்,”தம்பி
கீழே போட்டு உடைச்சது தப்பு. என்னிடம்
வந்து சொல்லியிருக்கணும். இல்ல
இப்படி செய்யலாமான்னு மென்மையா
கண்டிக்கணும். அதைவிட்டு
கோட்டான், நாய்னு சொல்லலாமா,”என்றேன்.

”தப்புதாம்மா!” என்றாள் மகள்.

“அக்காவோட சாமானை பாக்க எடுத்த சரி.
அதை பத்திரமாக கையாள வேண்டாமா?
அது உடஞ்சதுல அக்கா எவ்வளவு
வேதனைப்படறாங்க, வயசுல பெரியவங்களை
பேய்னு வேற சொல்வது சரியா நவீன்?
என்றதும் தலையைக் குனிந்து கொண்டு
”சாரி” என்றான்.

”சாரி, சொல்லவேண்டியது எனக்கில்லை”
என்றதும் அக்கா எழுந்து போய் தம்பிக்கு
முத்தம் கொடுத்து,”சாரிடா தம்பி! வலிக்குதா?
வா! ஐஸ் க்ப்யூஸ் வைக்கிறேன்,” என்றழைத்தாள்.

அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்து
“இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன்
அக்கா!”என்றபடி அக்காவுடன் சென்றான்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்வர்ந்தற்று


என்ற திருக்குறளை படித்து அதன்
பொருள் அறிந்திருந்தாலும் பொறுமை
இன்மையால் பிள்ளைகளிடம் கடுமையாக
நடந்து கொண்டிருந்தேன். இன்று பிள்ளைகளை
அடிக்காமல் இதமாக புரியவைத்ததன் பலன்
அனைவருக்கும் மகிழ்ச்சி.

என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைதான்
ஞாபகம் வந்தது.”படித்தால் மட்டும் போதாது!”

*****************************************************

தொடர் பதிவாக வந்து கொண்டிருக்கும்
திருக்குறள் பதிவிற்காக இன்னொரு கதை இது.

Tuesday, October 14, 2008

அவள் (ஒரு தொடர்கதை)-நிறைவுப் பகுதி

முன் கதை சுருக்கத்திற்கு இங்கே.

"யெஸ் உள்ளே வாங்க மிஸ்டர் திவாகர்.”

”குட் மார்னிங் டாக்டர்!”
என்றான் திவாகர்.

”குட் மார்னிங்! ஆமாம் உள்ளே வராம ஏன்
வெளியேவே உட்கார்ந்துட்டீங்க? நந்தினி உங்க
மனைவித்தானே! அப்புறம் உள்ளே வர என்ன தயக்கம்?
போனைவிட மனைவியும் முக்கியம் மிஸ்டர். திவாகர்!”

என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தான் திவாகர்.

கடந்த சில மாதங்களாகவே அலுவலகத்தில்
வேலைப்பளு அதிகம். நந்தினியிடமும் நிறைய
மாற்றம். அதிகம் சிடுசிடுக்கிறாள். அவளும்
வேலைக்கு போவதால் அதிகம் பேசிக்கொள்ளக்
கூட நேரமில்லாமல் போனது மனதில் ஒரு
வெறுமையை ஏற்படுத்தி இருந்தது.
டாக்டர் என்ன சொல்ல அழைத்தார்? என்று
புரியாமல்,”எதுக்கு வரச்சொன்னீங்க மேடம்!?”என்றான்.

”நந்தினிக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா?”

பிரச்சனை என்ன மேடம்? எல்லா பெண்களுக்கும்
இருக்கும் மாதாந்திர தொந்திரவு தான்! அதனால்
இருக்கும் வயிற்றுவலி. அவ்ளோதான்.”

கோபம் வந்தாலும் முகத்தில் ஒரு புன்னகையோடு
“ஓ! நந்தினி கிட்ட ஏதும் மாற்றங்கள் தெரியுதா?”
என்றார்.

”மாற்றம்னா!!?? ஆமாம் டாக்டர் கடந்த சில மாதங்களா
ரொம்ப கோபப்படரா? எடுத்துததுக்கெல்லாம் சண்டை,
கத்தல், பிள்ளைகள் கிட்ட கூட பொறுமை இலலாம
பேசுறா! வீட்டுல அவளால நிம்மதி இல்லாம போகுது”
என்றவனை பார்த்து,”நந்தினி இஸ் சஃபரிங் ஃப்ரம்
பி.எம்.எஸ்(P.M.S). டூ யூ நோ தட்? அதைச் சொல்லத்தான்
உங்களை உள்ளே அழைத்தேன்”, என்றார்.


”பி.எம்.எஸ்(P.M.S)அப்படின்னா என்ன மேடம்?” என்றவனுக்கு
பதில் சொல்லத்துவங்கினார் டாக்டர்,
”PRE MENSTURAL SYNDROME- என்பதை சுருக்கமா பி.எம்.எஸ்(P.M.S)
என்போம். எல்லா பெண்களுக்கும் வரும் என்பது இல்லை.
ஆனால் பல பெண்கள் தங்களுக்கு இது இருப்பது தெரியாமாலேயே
இருக்கிறார்கள். 25யைத் தாண்டிய பலபெண்கள் இந்த
அவஸ்தைகளுடன் தான் தனது பீரியட்ஸை எதிர் கொள்கிறார்கள்.

பீரியட்ஸ் வரக்கூடிய தேதியிலிருந்து 1 வாரம் அல்லது
10 நாள் முன்பிருந்தே அவஸ்தைகள் துவங்கும். சில
பெண்களுக்கு பீரியட்ஸ் முடிந்த பிறகு 1 வாரக் காலத்திற்கு
அவதிப்படுவார்கள்.

இது வியாதியல்ல. உடலில் ஒரு மாற்றம். பீரியட்ஸிற்கு
முன்னாடி அவங்க உடலில் ஏற்படும் மாற்றம் சிலருக்கு
அதிக அளவில் இருக்கும். (கிராஃப் மேலே ஏறி இறங்குவது
போல்) கிராஃப் மேலே ஏறும் போது சில பெண்களின்
உடல் அந்த மாற்றத்தை தாங்கும். அதிக வேலைப்பளு,
குறைந்த ரத்த அழுத்தம், மனச்சுமை, நிம்மதி இல்லாத
வாழ்க்கை கொண்ட பெண்களுக்கு கிராஃப் மேலே ஏறும்
போது ஏற்படும் மாற்றத்தை தாங்க முடியாமல் இருக்கும்.

அந்த நேரத்தில் அடிவயிற்றில் அதிகமான வலி,மார்பு கனத்து போதல்,
ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை(சிலருக்கு அதிகமான தூக்கம்)
ஜாயிண்ட்களில் அதீதமான வலி, மைக்ரேன் தலைவலி,
ஜலதோஷம்(அந்த நேரத்தில் மட்டும்), மூடு மாறுதல்,
அலர்ஜி, கண் எரிச்சல், பசியின்மை
இவை எல்லாமோ, ஏதோ ஒன்றோ
ஏற்படும்.

இதுதான் அறிகுறி. இந்த கஷ்டங்கள் படறதனாலத்தான்
நந்தினிகிட்ட நீங்க சொன்ன மாறுதல்கள். கோபம்,படபடப்பு எல்லாம்.
கோபத்தில உங்களை அடிச்சாலும் சொல்வதற்கு இல்லை!”
என்ற டாக்டரை ஆச்சரியமாக பார்த்தான் திவாகர்.

”இதுக்கு மருந்து என்ன டாக்டர்?” என்றவனைப் பார்த்து
சிரித்துக்கொண்டே, ”நீங்கதான் மருந்து!,” என்றார்.
புரியாமல் குழம்பினான். மிஸ்டர்.திவாகர், உங்க மனைவியிடம்
ஏற்படும் மாறுதல்களை புரிந்துக்கொண்டு அன்பாக நடந்து
கொண்டு, அணுசரனையாக பார்த்துக்கொள்வதுதான் மிகச்
சிறந்த மருந்து. உங்க வீட்டில் வேறு யாரும் இருந்தாலும்
அவங்களுக்கும் இதைப் பத்தி எடுத்துச் சொல்லி நந்தினிக்கு
சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுதீங்கன்னாவே
ப்ராப்ளம் சால்வ்ட்.

சத்தான உணவு, ஆரோக்கியமான மனநிலை, அன்பான
கவனிப்பு இவை போதும் நந்தினிக்கு. வாக்கிங் போகச்சொல்லுங்க,
இசை கேட்க சொல்லுங்க, காபி, சர்க்கரை கொஞ்சம் அந்த
நேரத்தில் குறைவா எடுத்துக்கணும்.

இதைத்தவிர நான் கொடுக்கிற மல்டி விட்டமின் மாத்திரைகளை
தினமும் எடுத்துக்கச்சொல்லுங்க. நான் கொடுக்கற மாத்திரைகள்
முக்கியமில்லை. அதுக்குமுன்ன நான் சொன்ன உங்கள்
அன்பும் அரவணைப்பும் தான் மிக முக்கியம். டேக் கேர்,”
என்று சொல்லி மருந்து எழுதிக்கொடுத்தார் டாக்டர்.


பிரிஸ்கிரிஷனை வாங்கிக்கொண்டு கன்சல்டேஷன்
ஃபீஸ் கட்டிவிட்டு திரும்பினால் நந்தினி வந்து
கொண்டிருந்தாள். இப்போது அவளைப் பார்க்கும்போது
கண்ணில் அன்பு தெரிந்தது. கைத்தாங்கலாக
வீட்டிற்கு அழைத்து சென்று,”ஹார்லிக்ஸ் குடிக்கிறியாம்மா?”
என்றவன் தலையாட்டிய நந்தினிக்கு சூடாக ஹார்லிக்ஸ்
கலந்துகொடுத்துவிட்டு அறையில் இருந்த டேப்ரிக்கார்டரில்
மெல்லிசையை தவழவிட்டான்.

புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே! இனி நந்தினியின்
வாழ்வு அன்பு நிறைந்ததாக இருக்கும்.

அவள் (ஒரு தொடர்கதை)

அம்மாவின் குரல் கேட்டு கண்விழித்தான் திவாகர். மணி 7.30.
பல் தேய்த்து வந்தவனுக்கு முனுமுனுப்புடன்
காபி தந்தாள் அம்மா.”என்னம்மா! காலங்காத்தால
ஆரம்பிச்சிருக்க? என்ன பிரச்சனை? நந்தினி எங்க?

“ ஏண்டா சொல்லமாட்ட! அந்த ரூம்ல படுத்திருக்கா
உம்பொண்டாட்டி.”

ஏன்? என்னாச்சு அவளுக்கு?”

”ஆமாம் எல்லா பொம்பளைகளுக்கும் மாசாமாசம்
வர்ற்துதான்!ஆனா இவதான் மாய்மாலம்
செஞ்சுகிட்டு படுத்திருக்கா! வயசான காலத்துல
ஓடியாடி என்னால செய்ய முடியலை” என்று
சொல்லிக்கொண்டே போனாள் அம்மா.


நந்தினி முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம்
எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கிறாள், கோபபபடுகிறாள்,
சண்டைதான். அதிலும் “அந்த” நாட்களில் ரொம்பவே
பிரச்சனையாக இருக்கிறது.

காபியை குடித்து முடித்துவிட்டு நந்தினி
படுத்திருக்கும் அறைக்குப் போனான்,
“என்னாச்சு! ஏன் இப்படி படுத்திருக்க?
என்று சலிப்புடன் கேட்டான் திவாகர்.

சிவந்த கண்களுடன் தலை நிமிர்த்தி பார்த்தவள்
பேசமுடியாமல் சொன்னாள்,”ரொம்ப பெயினா
இருக்குங்க! டாக்டர்கிட்ட போகணும், கொஞ்சம்
கூட துணைக்கு வர்றீங்களா?” என்றாள்

சாதரணாமாக இருந்தாள் மறுத்திருப்பான். அவளின்
நிலை என்னவோ செய்ய,” ரெடியாகு. நான் குளிச்சிட்டு
வர்றேன்” என்றான்.

“என்னாடிம்மா. அதிசயமால்ல இருக்கு!
இதுக்கெல்லாமா டாக்டர் கிட்ட போவாங்க!”
அனாவசிய செலவு செய்யாத திவாகர், வயித்துவலிக்கு
சீரக கசாயம் குடிச்சிட்டு படுக்கச் சொல்லு. வேலைக்கு
லீவு போட்டிருக்காதானே” என்று அம்மா சொல்வதில்
நியாயம் இருப்பதாக பட்டது திவாகருக்கு. ஆனாலும்
ஏதோ அவனை டாக்டரிடம் அழைத்து போக வைத்தது.



“உள்ளே போங்க! என்று ரிசப்சனிஷ்ட் சொல்ல
எழுந்த போது திவாகரின் மொபைலில் மணி
அடித்தது.”நீ போய் டாக்டரைப் பாரு! நான்
போன் பேசிட்டு வர்றேன். நான் வந்து பேச
வேண்டியது ஒண்ணுமில்லை.” என்றான்.

வலியுடன் பேசமுடியாமல் உள்ளே சென்ற
நந்தினியை டாக்டர் பரிசோதனை செய்தார்.
அதிக ரத்தப்போக்கும், வயிற்றுவலியும்
நந்தினியை துன்புறுத்துவதை அறிந்தார்.

“நீங்க மட்டுமா வந்திருக்கீங்க, நந்தினி?”
”இல்ல, ஹஸ்பண்டும் கூட வந்திருக்காரு.
வெளியில போன் பேசிகிட்டு இருக்காரு, என்றாள்.

”நர்ஸ்” என்று அழைத்தார் டாக்டர்.

உள்ளே வந்த நர்ஸிடம்,”இவங்களை
உள்ளே அழைச்சுகிட்டு போய் பெயின் கில்லர்
இஞ்சக்‌ஷன் கொடுத்து 10 நிமிசம் படுக்க
வைங்க. அப்படியே வெளியே இவங்க
ஹஸ்பண்ட் மிஸ்டர்.திவாகர் போன்
பேசிகிட்டு இருப்பாரு! அவரை கொஞ்சம்
உள்ளே வரச்சொல்லிட்டு போங்க,” என்றார்.

அந்த நர்ஸ் நந்தினியை உள்ளே படுக்க வைத்துவிட்டு
திவாகரிடம் வந்து,”சார்!உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமாம்!
டாக்டரம்மா உள்ளே வரச்சொன்னாங்க!” என்று கூறிவிட்டு
சென்றார்.

நந்தினிக்கும் திவாகருக்கும் திருமணமாகி 8
வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகளுக்கு
பிறகு குடும்ப கட்டுப்பாடும் செய்தாயிற்று
நந்தினிக்கு. இந்த நிலையில் தன்னிடம்
”டாக்டர் என்ன சொல்லப்போகிறார்”!!??!!
என்று யோசித்துக்கொண்டே டாக்டரின்
அறைக்கதவைத்தட்டி
“மே ஐ கமின் மேடம்!” என்றான் திவாகர்.


திவாகரிடம் டாக்டர் என்ன பேசினார்?????

(மதியம் 2 மணிக்கு தொடரும் இந்தக் கதை)

Monday, October 13, 2008

அப்பா

அம்மா ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தாள். அம்மா அழுகிறாள்
என்றால் அன்று அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே
சண்டை என்று அர்த்தம்.

அப்பா உள்ளே அறையில் மொளனமாக
உட்கார்ந்தபடி விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

அம்மாவை தேற்றி தேற்றி ஓய்ந்து விட்டேன்.
இந்த முறை அப்பாவை சும்மா விடக் கூடாது.
இவர் பாட்டுக்கு வாயில் வரும் வார்த்தைகளால்
அம்மாவை காயப்படுத்தி விடுகிறார்.

கோபத்தில் அவர் சொல்லும் அந்த ஒரு
வார்த்தை அம்மாவை அப்படியே
உலுக்கி விடும்.

அதனால் அப்பாவிடம் சென்றேன்.
“என்னப்பா! திரும்ப அம்மா கூட சண்டையா?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி”?

என்னை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்ப
விட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்.

”அப்படி கேளுடா மனோகர்!
இந்த மனுஷனுக்காக மாடா உழைச்சு,
ஓடா தேயுறேன். ஆனாலும் வாயில்
விஷத்தை வெச்சுகிட்டு தேள் மாதிரி
கொட்டிகிட்டே இருக்காரு. இவருக்கு
முன்னாடி நான் போகணும்,
அப்பத் தெரியும் என்னோட அருமை".
என்று சொல்லிவிட்டு திரும்ப அழத்தொடங்கினாள்
அம்மா.

எந்தப் பெண்ணும் தான் சுமங்கலியாக
சாவைதைத் தான் இறைவனிடம்
பிரார்த்திப்பாள். அம்மா மட்டும்
இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால்
அப்பா கோபத்தில் சொல்லும் வார்த்தை
அமங்கலமானது. அது அம்மாவுக்கு
இன்னும் கோபத்தை உண்டாக்கி 4 நாளானாலும்
அம்மா சாப்பிட மாட்டார். அப்பாவும்
வெறும் காபி மட்டும் தான் சாப்பிடுவார்.

“ஏன் அப்பா? அம்மா உங்க மேல எம்புட்டு பாசம்
வெச்சிருக்காங்க! சும்மா அம்மாவுக்கு பிடிக்காதுன்னு
தெரிஞ்சும் அந்த வார்த்தையைச் சொல்லி
திட்டறீங்க” என்று கேட்டதுதான் தாமதம்,

”ஆமாம்! என் மேல பாசம் பொங்கி வழியுது.
உண்மையா பாசமிருந்தா தான் முன்னாடி
போகணும்னு சொல்வாளாடா?” என்றவறை
புரியாமல் பார்த்தேன்.

“எனக்கு எது வேணுமோ அதை பாத்து பாத்து
செய்யறது உங்கம்மா தானே! ஒரு நாள் உங்கம்மா
ஊருக்கு போனாளோ நான் அம்புட்டுதான்.
பச்ச புள்ளை மாதிரி எனக்கு எல்லாம் பார்த்து
பார்த்து செஞ்சு என்னைய சுத்தமான சோம்பேறியா
ஆக்கிட்டா. அவ இல்லாட்டி எனக்கு என்ன
செய்யணும்னு கூடத்தெரியாது. ஒரு அம்மா
மாதிரி என்னிய பார்த்துகிறா?

எனக்கு முன்னாடி அவ சுமங்கலியா போய்
சேர்ந்துடணும்னு விரதம் இருக்கா, சாமி
கும்பிடறா! இவ போயிட்டா என்னிய
யாரு பாத்துக்குவா? புருஷன் செத்தாலும்
பெண்ணால் தைரியமா தனியா வாழ் முடியும்டா
மனோகர்! ஆண்களுக்கு தனியா வாழ்த் தெரியாது.
நானும் அந்த மாதிரி தான்.
அவ இல்லாட்டி எனக்கு
வாழ்க்கையே இல்லைடா! இதை உங்கம்மா
என்னிக்கு புரிஞ்ச்கப்போறாளோ” என்று
சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி
அழத்துவங்கினார்.

இத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த
அம்மா ஓடி வந்து அப்பாவை தாங்கி
சமாதானம் செய்யத் துவங்கியதை
மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

Friday, August 29, 2008

பெண்ணின் மனம்.

மதுவா அது? என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.
கீதா! என்று ஓடிவந்து கட்டிக்கொண்டவள் என் மதுதான்.
நானும் மதுவும் கல்லூரித்
தோழிகள். திருமணம் என்னையும் என் தோழியையும்
பிரித்திருந்தது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து
இன்றுதான் அவளை சந்தித்தேன்.



பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த என் தோழி
நான் சந்தோஷமாக இல்லை, என்று சொல்ல
புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

6 வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம்
நடந்தது. வரப்போகும் மனைவிக்காக அவள்
கணவன் ரேடியோ, டேப் ரிக்கார்டர்,
வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர் எல்லாம்
வாங்கி ரெடியாக வைத்திருந்தார்.

என்ன மது சொல்ற? உனக்காகத்தானே அவர்
எல்லாம் ரெடியா வெச்சிருந்தார். அப்புறம்
என்ன சந்தோஷமா இல்லைன்னு சொல்ற?


”என்னைப் பத்தி தெரிஞ்ச நீயுமா கீதா இப்படி
கேக்கற?! ”என்று கண்ணில் நீருடன் கேட்டாள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த
பெண்தான். பணத்தை பெரிதாக
மதிப்பவளல்ல மது.

”பணம், நகை என்ன கீதா? அதுவா பெரிது?
அன்பு இல்லாமல் பணம் நகையை வைத்துக்
கொண்டு என்ன செய்வது? என்று சொல்வாள்.
அனைவரிடமும் அன்பாக இருப்பாள்.
தன்னலமற்ற அன்பு அவளது. அப்படிப்
பட்டவளுக்காக முன்பே எல்லாம் வாங்கி
வைத்திருக்கும் கணவன் அமைந்ததில்
நான் மிக மகிழ்ந்தேன்.

இன்று அவள் தான் சந்தோஷமாக இல்லை என்று
சொல்வது வருத்தமாக இருந்தது.

”ஏன் மது? என்ன பிரச்சனை”.

கீதா! ”என்னை சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை?
இன்னை வரைக்கும் கேட்டதில்லை. வாஷிங்
மெஷினை வாங்கினவர் எனக்கு ஒரு முழம்
முல்லைப் பூ வாங்கிக் கொடுத்ததில்லை.


உண்டாகி இருந்த நேரத்தில் மசக்கையில்
அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாலும்
என்ன செய்யுதுன்னு கேட்டதில்லை.
“முடியலையா! டிபன் வெளியில பார்த்துக்கறேன்”!
அப்படின்னூ சொல்லிட்டு போயிடுவார்.
அவர் வெளியில சாப்பிடலாம். நான்
என்ன செய்வேன்னு நினைச்சு
பார்த்ததில்லை, இப்படி எத்தனையோ!
சின்னச் சின்ன சந்தோஷங்களை கூட
தொலைத்துவிட்டேன்” என்று சொல்லி கதறினாள்.


மதுவின் திருமணத்திற்கு 1 வருடம் முன்பு
அவளது மாமியார் இறந்துவிட்டார்.
மாமனாரோ அதற்கும் 7 வருடங்கள் முன்பே
காலமாகிவிட்டார். திருமணமானது முதல்
தனிக்குடித்தனம்.


தனிக்குடித்தன வாழ்க்கை சந்தோஷமானது
என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது
அதிர்ச்சியாக இருந்தது.


”இத்தனை நாட்களாக அவர் வாங்கி
வைத்திருக்கும் சாமன்களுடன்
நானும் ஒரு சாமானகத்தான் இருந்திருக்கிறேன்”
என்று சொல்லி அழுபவளை தேற்ற வார்த்தை'
இல்லாமல் மொளனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.


******************************************************

யக்கோவ், கட்டுரையையே கொஞ்சம் உரைநடை சேர்த்து
எழுதினா கதைன்னு” வலையுலக தம்பி ஒருவர் சொல்லிக்கொடுக்க
(பேரு வேண்டாம் :))

இது என் கன்னி முயற்சி. கதையா வந்திருக்கான்னு
நீங்கதான் சொல்லணும்.


அதைவிட முக்கியம் எல்லா பெண்களுமே
நகையையும், ஆடம்பரமான வாழ்வை
மட்டுமே எதிர் பார்க்கிறார்களா? உன்னதமான
அன்பை எதிர் பார்க்கிறார்களா? சொல்லிட்டுப் போங்க.

வலது பக்க மூலையில் ஓட்டு போட மறந்துடாதீங்க.