Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts
Showing posts with label செய்தி விமர்சனம். Show all posts

Saturday, September 14, 2013

எது தீர்வு??

”நிர்பயா” என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நேற்றுதான் அந்த பெண்ணின் நிஜப்பெயர் தாமினி என்று தெரிந்தது. அந்த பெண்ணை சூரையாடி, கொலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறது நீதிமன்றம். “அரிதிலும் அரிதான கேஸாம்.

இந்த தண்டனை தேவைதான் என மனசுக்கு தோன்றினாலும் டிஃபன்ஸ் தரப்பு வக்கீல் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த தீர்ப்புக்கு அப்புறம்  நாட்டில்  ஏதும் பாலியல் வன்கொடுமைகள் நிகழாது என்று என்ன நிச்சயம்?!!

தினசரிகளின் கண்டிப்பாக ஏதோ ஒரு ஊரில், பக்கத்து வீட்டுக்காரராலோ, தெரிந்தவர்களாலோ அல்லது வேறு யாரோ ஒருவராலோ கூட பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஒரு பச்சிளம் குழந்தையை கூட விட்டுவைப்பதில்லை. கேள்வி கேப்பாடு ஏதும் கிடையாது. கொடுமை நடந்ததாக தெரிந்தால் கண்டதும் சுட உத்தரவு என தீர்ப்பு கொடுத்து புது சட்டம் அமைத்தால் பெண்ணை காமப்பொருளாக பார்க்கும் எண்ணம் படிப்படியாக குறையும்.

அருத பழசான ஒரு கமெண்ட் “பெண்கள் உடுத்தும் உடை உணர்ச்சியை தூண்டுவதாக இருக்கிறது”. 5 வயது குழந்தை வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டிருக்கிறதே இங்கே ஆடையை பற்றி என்ன சொல்ல முடியும்??!!! போடும் உடையே வா என அழைக்கும் மாதிரி இருக்கு என்று சொல்பவர்கள் இந்த நடவடிக்கைக்கு என்ன சொல்வார்கள்.
 கண்ணோட்டம் அதுதான் பிரச்சனையே தவிர உடை அல்ல.

அப்போ ஆண்கள் மட்டும் பப்ளிக்காக யூரின் பாஸ் செய்வதை பெண்கள் பார்க்க நேராமலா இருக்கிறது. சட்டை பட்டனை திறந்துவிட்டுக்கொண்டு அலைவதில்லையா. தொடை தெரிய லுங்கியையோ வேட்டியையோ ஏத்தி கட்டி அலைவதை பார்த்து எந்த பெண்ணாவது உணர்ச்சி தூண்ட பட்டு ஏதும் தவறாக நடந்தாளா? அவளால் தன் மனதை கட்டு படுத்த இயலும்போது, ஆண்களுக்கு மட்டும் என்ன? (எல்லோரும் அப்படி இல்லை).   புடவையே கட்டியிருந்தாலும் அதையும் ஆபாச கண்கள் கொண்டு பார்ப்பவர்கள் மத்தியில் முழுக்க போர்த்திய உடையாக, சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ் என்று இருந்தாலும் நிலமை மாறப்போவதில்லை, மாறவேண்டியது எதிர் வர்க்கத்தினரின் கண்ணோட்டமே.

இதே கருத்தை முன் வைத்து சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் சில ஆண்கள் “நாங்களும் ஷார்ட்ஸ், ஸ்கர்ட்ஸ் போடுகிறோம்! எங்களுக்கு ஏதும் நடக்காத போதும், பெண்கள் ஏன் துன்புறுத்தபடுகிறார்கள்” என ஒன்று திரண்டு போராடியது வரவேற்கத்தக்கது.

சந்ததியை உருவாக்கும் கருப்பையை இறைவன் சக்தி சொருபமான பெண்ணிடம் கொடுததற்காக தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் எந்த உணர்ச்சிகளையும் அடக்கத் தெரியாத ஒரு ஜென்மமாகவா வாழ்வது......
அடிமட்ட தொழிலாளியாக இருந்தாலும் அவன் ஆண்மகன். இவள் எனக்கு அடிமை என வேரோடி போயிருக்கும் எண்ணத்தை மாற்றினாழொலிய மட்டுமல்ல தண்டனைகள் கடுமையாக்கினால் கண்டிப்பாக  மாறும். இந்த நாட்டின் ஒவ்வொரு ப்ரஜைக்கும் தான் சுதந்திரமாக நடமாடும் அதிகாரம் உண்டு எனும் பட்சத்தில் பெண்களுக்கு இந்த அதிகாரம் உண்டு. இதை பங்க படுத்துவதை எதிர்த்து, தக்க பாதுகாப்பை கடுமையான சட்டம்வழியாக செய்ய வேண்டியது அத்யாவசிய விடயம். அதே சமயம் தன் வீட்டில் வளரும், வளர்ந்த ஆண்கள் எந்த தவறும் செய்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் கடமையும் கூட.

வாட்ஸ்ப்பில் எனக்கு என் தோழி அனுப்பி வைத்த செய்தியை இங்கே தருகிறேன்.

Punishment of Rape:

UAE - Instant Death Penalty (within seven days hanging)
Iran - Instant stoned to death(Hanging within 24 hours)
Afghanistan - Instant death by bullet into head within four days
China - No trial, medically proved rape then death penalty.
Malaysia - Death penalty
Mangolia - Death as revenge by family
Irak- death by stone till last breadth.
Thaliban - limbs or legs or balls all cut off and then stones and then shot.
Poland - death throned to pigs

Look at all these countries and learn something now atleast in case of rape against child and rape with brutality.


நம்ம நாட்டுல காம்ப்ரமைஸ் , யோசிச்சு யோசிச்சு காலம் கழியும், ட்ரயல்கள், கோர்ட்டுன்னு அலைஞ்சாலும் பெரிய இடத்து புள்ளையாவோ, புள்ளியாவோ இருந்துட்டா அவ்ளோதான். கெடுத்தவனுக்கே பொண்ணை கட்டிகொடுத்திடுவாங்க. நல்ல வேளை இப்ப இதுக்கும் ஒரு தீர்ப்பு வந்திருக்கு.
எந்த விதமான ப்ரயோசனமான ஆக்‌ஷனும் நடக்காது.  கடுமையான தண்டனைகள் இல்லை என்பதால் குற்றங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இப்படி எத்தனையோ குற்றங்கள் தொடர்கின்றன என்றாலும், பாலியல் வன்கொடுமை நம் இந்திய பெண்கள் அனைவரையும் மட்டுமல்லாமல் நம் நாட்டுக்கு விருந்தினராக வந்து செல்லும் பெண்களும் பாதிக்கப்படுவதை பார்க்கும் போது, சார்ஸ் நோய் வந்த போது அந்த பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என மற்ற நாடுகள் தடையுத்தரவு போட்டதுபோல,” இந்தியாவிற்கு செல்லாதீர்கள்.... வன்கொடுமைக்கு ஆளாவீர்கள்” என சொல்லும் சூழல் ஏற்பட்டால், இதைவிட இந்திய நாட்டு பிரஜைகளுக்கு அவமானம் வேறெதும் இருக்காது என்பது என் பணிவான கருத்து.


காந்தியடிகள் “என்று ஒரு பெண் உடல் முழுதும் நகை அணிந்து நடுநிசியில் சென்றாலும் பத்திரமாக வீடு சேர்கிறாளோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என சந்தோஷப்படலாம்” என்றார். ஐயா. இன்று குந்து மணி தங்கம் கூட போட முடியாத சூழல் (தங்க விலை ஏற்றம் + திருட்டு பயம்)
இருந்தாலும் இன்னமும் தனியாக பகலில் கூட போய்வருவது கஷ்டமாக இருப்பதை பார்க்க நேர்ந்தால் என்ன செய்வாரோ!!!!!

பாவம் அந்த பெரியவர்.


Wednesday, June 19, 2013

தந்தி....

சேரனின் வெற்றிக்கொடி கட்டு சினிமா வரை அவசர தாக்கல்களுக்கு தந்திதான். நல்லதோ கெட்டதோ அதை உடனுக்குடன்(!!!) கொண்டு சேர்ப்பதில் தந்தி முந்தி. ஆனா பல சமயம் தந்தி அடிச்சு தகவல் சொன்னா அது ரொம்ப தாமதமா போய் சேர்ந்த கதைகள் உண்டு.


நான் மும்பையில் இருந்த பொழுது தனியா ரயிலில் சென்னை வரை வருவேன். சென்னையில் இருக்கும் உறவினர் வந்து அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. பல சமயம் நான் சென்று சேரும் அன்னைக்கு மதியம் தந்தி அவங்க கையில சேரும். நல்லவேளை ராத்திரி 8 மணிக்கு தான் என் ட்ரையின் வரும் என்பதால என்னை அழைச்சுக்கிட்டு போக கரெக்டா வந்திருவாங்க. சென்னை எக்ஸ்பிரஸ் என்பது பென்னை எக்ஸ்பிரஸ்னு பலதடவை ப்ரிண்ட் ஆகியிருக்கு. தந்தின்னாலே மக்கள்ஸுக்கு பயம் தான் வரும்.


 யாராவது காலமானா உடனடியா தாக்கல் தெரிஞ்சே ஆக வேண்டியவங்களுக்கு தந்தி அடிச்சு தான் தகவல் சொல்வாங்க. அப்புறமா தசாகம் கார்டு (பத்தாம் நாள்) எழுதி அனுப்புவாங்க.  வாழ்த்து செய்திகளை விட சோக செய்திகளைத் தான்   தந்தி நிறைய்ய சுமந்து போயிருப்பதலோ.... அக்கம்பக்கத்து காரர்களுக்கு தந்தியில் சோக செய்தி வந்தததாலோ தந்தின்னாலே மனசுக்குள்ள ஒரு பதைபதப்பு உண்டானது.

வக்கீல்கள் கோர்ட் ஆர்டர்களை அனுப்ப தந்தியை தான் நம்பகமான தகவல் தொடர்பு சாதனமா வெச்சிருந்தாங்களாம்!! நம்ம ராணுவம் கூட விடுமுறையை நீட்டிக்கணும்னா அதை தந்தி மூலமா சொன்னாத்தான் ஏத்துப்பாங்களாம். போனெல்லாம் செல்லாதாம். இனி இவங்க என்ன செய்வாங்களோ!! ஸ்மார்ட்போன்களின் ஆளுமைக்கு உட்பட்ட இந்த காலத்திலும் பிஎஸென்ல் தினத்துக்கு 5000 தந்திகளை கொண்டு சேர்த்துகிட்டுதான் இருந்தது. நஷ்டத்தில் இருப்பதால் இந்த சேவையை நிப்பாட்டிட்டாங்க.

லேண்ட் லைன் போனிலிருந்து  வாழ்த்து தந்தி அனுப்புறதே ஒரு சுவாரஸ்யமான விஷயம். போனோ க்ராம்னு பேரு. குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்யணும். அவங்க நம்ம நம்பரை வாங்கிகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடுவாங்க. நாம அதுக்குள்ள சொல்ல வேண்டிய வாக்கியத்தை ரெடியா வெச்சுக்கிட்டு அவங்களுக்கு சொல்லணும். (ஸ்டாண்டர் வாக்கியங்கள் அதனுடைய கோட் எண்ணுடன் இருக்கும்), அனுப்ப வேண்டிய முகவரி விவரங்களை சொன்னா தகவல் அனுப்பிடுவாங்க. இதற்கான சார்ஜை அடுத்த பில்லில் சேர்த்திடுவாங்க. இந்த மாதிரி பலமுறை மும்பையில் வேலை பார்த்த போது  மெசெஜ் அனுப்பியிருக்கேன். அதற்கான கோட் எல்லாம் கொடுப்பாங்க. அதை பத்திரமா ஒரு நோட்ல எழுதி வெச்சு எங்க ஆபிஸர் கிட்ட காட்டணும். அடுத்த மாச பில்லில் வந்திருச்சான்னு செக் செஞ்சு அவருக்கு சொல்லணும்.


TELEGRAM GREETING CODES

GREETING CODE NUMBER ARE GIVEN IN BRACKET
1. Kind Remembrances and all Good Wishes for the Independence Day (18)
2. Sincere Greetings for the Republic Day Long Live the Republic (19)
FESTIVAL
1. Heartiest Diwali Greetings (1)
2. Id Mubarak (2)
3. Heartiest Bijoya Greetings (3)
4. A Merry Christmas to you (9)
5. My Heartiest Holi Greetings to you (20)
6. Heartiest Pongal Greetings (26)
7. Heartiest Gur Purb Greetings (27)
8. Heartiest Onam Greetings (29)
9. Heartiest Ugadi Greetings (33)
10. Wish you a Happy Bihu (35)
11. A Happy Easter (36)
12. Heartiest Greetings on Buddha Jayanti (37)
13. Heartiest Guru Ravidas Purnima Greetings (39)
SPECIAL OCCASIONS
1. A Happy New Year To You (4)
2. Many Happy returns of the day (5)
3. Hearty Congratulations on the new Arrival (6)
4. Greetings on the occasion of Parvushan-a day of universal forgiveness (28)
5. Heartiest Congratulations on Greh Pravesh (38)
WEDDING
1. Best Wishes for a long and Happy married life (8)
2. May Heaven’s Choicest Blessings be showered on the young couple (16)
3. Wish you both a happy and prosperous wedded life (17)
4. Convey our blessings to the newly married couple (25)
5. Best Wishes on your wedding anniversary (30)
GENERAL
1. Congratulations on the Distinction conferred on you (7)
2. Hearty Congratulations on your success in the Examination (10)
3. Best Wishes for a safe and pleasant journey (11)
4. Many Thanks for your good wishes which i/we Reciprocate Most Heartily (13)
5. Congratulations (14)
6. Loving Greetings (15)
7. Wishing the function every success (21)
8. Many thanks for your kind message of Greetings (22)
9. Best Wishes for your successes in the examination (23)
10. Wish you a happy retired life (31)
11. Wish you a speedy recovery (32)
12. Congratulations on your victory (34)

தந்தியில எத்தனை வார்த்தைகள் அனுப்புறமோ அத்தனை வார்த்தைகளுக்கு காசு. பாண்டிச்சேரி தந்தி ஆன்லைன் வெப்சைட்டில் பாருங்களேன் எத்தனை சார்ஜ் எல்லாம் விவரமா கொடுத்திருக்காங்க.

டெலிக்ராம்ஸ்டாப் அப்படிங்கற வெப்சைட்ல தந்தியை திரும்ப கொண்டு வந்திருக்காங்க. ஆன்லைனில் நாம் மெசெஜ் டைப் செஞ்சு, பணம் கட்டினா அதை பிரிண்ட் எடுத்து டெலிகிராப் ஸ்டைல்ல டெலிவரி கொடுக்கறாங்களாம். இந்த வெப்சைட் ஏன் ஆரம்பிச்சாங்கன்னு சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேருக்கு என்னன்ன விதமாவோ தந்தியால நினைவுகள் இருக்கும். தந்தி இனி நம் நினைவுகளின் மட்டும்.

 

Tuesday, February 19, 2013

சகஜ ஆஹாரம்!!!!!

இப்ப நாம சாப்படுற சாப்பாட்டுல்ல சத்தே இருக்கறதில்லை. எல்லாமே விஷமா இருக்கு. காரணம் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதுதான்.
அமீர்கானுடைய  “சத்யமேவ ஜயதே” நிகழ்ச்சியில கூட இதுக்காக ஒரு நிகழ்ச்சி இருந்தது.  அதுவரைக்கும் இந்த ஆர்கானிக் பொருட்கள் ரொம்ப விலையா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அமீர்கான் சொன்னதக்கப்புறம் ஆமாம் நம்ம உடம்பு நல்லா இருக்கணும்னா கொஞ்சம் கூட பணம் கொடுத்தா தப்பில்லைல்லன்னு தோணிச்சு.

அந்த நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கிட்ட பேராசிரியர் ராமாஞ்ஜ்னேயலு ஆந்திராவில் செய்திருக்கிற மாற்றங்களைப்பத்தி தெரிஞ்சது. அந்த நிகழ்ச்சியில மற்ற விவரங்கள் கிடைக்கலை.  நம்ம கூகுள் ஆண்டவர்கிட்ட கேட்டா கிடைக்காதது உண்டா??!!!


அவரைப்பற்றின வெப்சைட் கிடைச்சது. அப்படி தேடிக்கிட்டு போனா சகஜ ஆஹாரம் அப்படிங்கற வெப்சைட் பாத்து அங்க போய் பார்த்தா , இயற்கை விவசாயத்துல தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பது பத்தி தெரிஞ்சது.
அந்த மார்க்கெட்  கொஞ்சம் கிட்டத்துலதான் இருந்தது.

போன் செஞ்சு எப்படி வரணும் எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு
 ஒரு வாட்டி நேர்ல போய் பார்த்திட்டு வருவோம்னு போனேன்.  மாச மளிகை சாமானை அங்கயே வாங்கிடறதுங்கற முடிவுல அங்க போனேன்.

கடுகு, ஜீரகம் மாதிரியான பொருட்கள் கிடைச்சது. அந்த வெல்லம் சும்மா பொருபொருன்னு கிரிஸ்பியா இருந்தது. ஒரு கிலோ வெல்லம் 95 ரூவா. அதுவே சாதாரண வெல்லம் 50ரூவா தான். ஒவ்வொரு பொருளோட விலையும் கணிசமா வித்தியாசம். கிட்டத்தட்ட இருமடங்குன்னு சொல்லலாம். செக்குல ஆட்டின கடலை எண்ணெய் செம வாசமா இருந்தது.

ஆனா வெப்சைட்ல இருக்கற எந்த சாமானும் அங்கே கிடைக்கலை. நான் கொண்டு போன லிஸ்ட்ல பலது இல்லை. எப்ப வரும்னு கேட்டா தெரியாதுன்னுதான்  பதில் வந்தது.  அரிசி வேணும்னாலும் அங்க சரியா பதில் இல்லை. என்னைப்போல வேற சிலரும் அங்கே வந்திருந்தாங்க, வந்தவங்களுக்கும் திருப்தியா இல்ல.

நம்ம தேவைக்கு சாமான் கிடைக்காது போல. எப்ப கிடைக்குமோ அப்ப நமக்கு சொல்லியா விடுவாங்க. உடனுக்குடன் காலியாகிடும்னு சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல எல்லா இடத்திலயும் இப்படி விளைச்சல் வருதுன்னு சொன்னா தடங்கல் இல்லாம கிடைக்கணும்ல என்பது தான் என் கேள்வி.

பெரிய்ய பெரிய்ய சூப்பர் மார்க்கெட்களில் ஆர்கானிக் பொருட்கள் கிடைக்குது.
அங்க போய் வாங்கிக்கலாம்ங்கற முடிவுக்கு வந்திட்டேன். தேவைக்கு கிடைக்கும் இடத்துலதானே நாம வாங்க முடியும்.

24 manthra  இவங்களுடைய ஆர்கானிக் பொருட்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைப்பது பலருக்கும் தெரிஞ்சிருக்கும். வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அதாவது நல்ல பொருட்களை வாங்கி சாப்பிட்டா மருத்துவருக்கு கொட்டி அழாம இருக்கலாம்னு அர்த்தம். அதுலயும் இந்த இயற்கை விவசாய பொருட்களுக்கு கொடுத்தா நம்ம உடம்பு கண்டிப்பா நல்லா இருக்கும்.

ஆனா பாருங்க இதைப்பத்தி எழுதணும்னு நினைச்சுக்கிட்டே வந்து தள்ளிக்கிட்டு போச்சு. சமீபத்துல படிச்சது அதிகமா இந்த ஆர்கானிக் பொருட்களை உபயோகிச்சா நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் இல்லாம போயிடும் என்பதுதான். அவங்க என்ன சொல்றாங்கன்னா இயற்கை விவசாய பொருட்களை மட்டுமே சாப்பிட பழகிட்டா மத்த பொருட்களை சாப்பிடும்போது உடல்நிலை சரியில்லாம போயிடுமாம்.

இப்ப என்ன செய்ய??? மண்டை குழம்புதுல்ல??!!! எனக்க்கும் அப்படித்தான்!!!!
உங்க கருத்தை சொல்லுங்க. என்னைப்போல பலருக்கும் உதவியா இருக்கும்.

Monday, January 21, 2013

மெட்ரோ......

மெட்ரோ ரெயில் பத்தின பதிவோன்னு நினைச்சீங்களா!!! இல்லீங்க. வால்மார்ட் வந்திருச்சு. சென்னையில் வேற பேர்ல இயங்கறாங்க. ஆள் பிடிக்கறா மாதிரி வளைச்சு வளைச்சு கார்ட் கொடுக்கறாங்கன்னு நிறைய்ய பத்திரிகைகளில் எழுதனது படிச்சப்பவே இந்தப் பதிவு எழுதணும்னு நினைச்சேன். ஆனா நேரம் இப்பத்தான் கூடி வந்தது. (எழுதத்தான் :)

 இது இங்கே ஹைதையில் இருக்கும்  METRO CASH & CARRY பத்திய பதிவு.
இதுக்கு தலைமையகம் பெங்களுரூ. இந்தியாவில் வேற சில இடங்களிலும் கடை இருக்கு. நான் இங்கே ஹைதைக்கு வந்து 2 வருஷம் கழிச்சு வேற அப்பார்ட்மெண்ட் போனோம். அங்கே ஒரு தோழி அடிக்கடி நான் மெட்ரோ போயிட்டு வந்தேன். அங்கதான் மாச சாமான்லாம் வாங்குவேன்னு சொல்வாங்க.

குக்கட்பள்ளி, உப்பல் ரெண்டு இடத்துலயும் இந்தக் கடை இருக்கு. இது ஒரு ஹோல்சேல் மார்க்கெட். ஆனா பிசினஸ் செய்யறவங்க மட்டும்தான் மெம்பராக முடியும். அந்த தோழியோட அப்பா ஏதோ பிசினஸ் செய்யறவரு அதை வெச்சு ஒரு கார்ட் வாங்கி மகளுக்கு கொடுத்திருக்காறாம்.  சரி மேட்டருக்கு வருவோம்.  உங்களையும் மெட்ரோவுக்கு அழைச்சுக்கிட்டு போகலாம், விலை கம்மி ஆனா எல்லாம் பல்காதான் வாங்கணும். ஒரு சோப் , ஒரு பேஸ்ட் வாங்க முடியாதுன்னு சொன்னாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன்.

10 சோப் இருக்கற பேக் வாங்கினா சோப்  கறைய குறைஞ்சது 3 மாசம் ஆகும். நாம சீசனுக்கு தகுந்தா மாதிரி சோப் உபயோகிப்போம். இந்த மாதிரி எல்லாம் பல்கா வாங்கிகிட்டு வந்தா கட்டுப்படியாவாதுன்னு பேசாம இருந்தேன். ஒரு நாள்  அயித்தான் இந்த மெட்ரோ கடைக்கு போயிட்டு அவுக CEOவா இருந்தாலும் ஹெட் இங்க இவுகதான்னு அவுகளுக்கு ஒரு மெட்ரோ கார்ட் வாங்கியாந்தாங்க. (ஓரு கம்பெனிக்கு ரெண்டு கார்ட்தான் அனுமதி)

ஒரு கார்டுக்கு ரெண்டு பெரியவங்க மட்டும்தான் அனுமதி. சின்ன பசங்களை கூட்டிக்கிட்டு போக முடியாது. அதனால நானும் அயித்தானும் மட்டும் எப்படித்தான் இருக்குன்னு பாக்க போனோம்.

பெரிய்ய்ய்ய்ய இடத்தை வளைச்சு கட்டியிருக்காங்க. பார்க்கிங் வசதி சூப்பர்.
உள்ளே போறதுக்கு முன்னாடி அந்தக்கார்டை காட்டணும். அதை வாங்கி கம்ப்யூட்டருக்கு காட்டிட்டு நம்மளை உள்ளே அனுப்புவாங்க. அம்மாம் பெரிய்ய ட்ராலிகளை அன்னைக்குத்தான் நான் பாத்தேன்!!!! எல்லாம் ஹோல்சேல் விலைகள். எண்ணெய், நெய், எல்லாம் மார்க்கெட் விலையைவிட கணிசமான குறைவு. கடைகளூக்கு டோர் டெலிவரி உண்டுன்னு  போட்டிருந்தாங்க.  1/2 கிலோ பேக்கிங்கே கிடையாது. எல்லாம் ஒரு கிலோ தான். கத்திரிக்காய் வாங்கினா 1 கிலோ தான் வாங்கணும்.


எண்ணெய், நெய்யெலாம் பரவாயில்லை ஆனா துவரம்பருப்பு, பாசிப்பருப்பு என எல்லா வகையும் ஹோல்சேல் விலையில் வாங்கலாம். ஆனா குறைஞ்ச பட்சம் ஒரு கிலோ தான் தருவாங்க. அங்கேயே காய்கறிகள், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், ப்ளாஸ்டிக், மளிகை, அரிசி,  எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. மார்க்கெட்ல என்ன விலை? அதுவே மெட்ரோவில் என்ன விலைன்னு விவரமா எழுதியிருந்தாங்க.


முன்ன மாதிரி இல்லாம பிஸ்கட், சோப், ஷாம்பு எல்லாம் பல்கா வாங்கத்தேவையில்லாம 1 யூனிட் கூட வாங்கிக்கலாம்னு இருந்துச்சு. அந்த மாசம் அங்கே பர்ச்சேஸ் செஞ்சோம். வெளியில வாங்கறதுக்கும் மெட்ரோவுல வாங்கறதுக்கும் நல்ல வித்தியாசம். அதே தரமான பொருள்  ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும். ஆனா எல்லாம் யூனிட்ல வாங்க முடியலை. சிலது 6 அல்லது 10 வாங்கற மாதிரி தான் இருக்கு.

 
அடுத்த மாசம் அங்கே போகலாமான்னு பாத்தப்போ, அயித்தானுக்கு வேலை வந்திருச்சு. அவரு டூர் போயிட்டு வர்ற வரைக்கும் சாமான் வாங்காம முடியாது. சரி நாம மெட்ரோ  போகலாம்னா, ஆட்டோல போயி ஆட்டோல வந்தா பழுத்திடும். எங்க வீட்டுலேர்ந்து 10 கிமீ தூரத்துக்கும் மேல இருக்கும் உப்பல். எப்பவும் வாங்கற மளிகைக்கடையிலேயே வாங்கினோம். அதுவும் ஹோல்சேல் கடைதான். ஆனா மெட்ரோ அளவுக்கு விலை வித்தியாசம் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டுக்கும், மெட்ரோவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் இருக்கும்.

அப்பதான் அந்த மளிகைக்கடை அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன், நீங்க மெட்ரோவுலேர்ந்து வாங்கியாந்துதான் விக்கறீங்களான்னு?” அதுக்கு அவர் சொன்னார்,” மெட்ரோவா!!! அங்க வாங்கினா உங்களுக்கு லாபமா இருக்கும். கடை முதலாளிகளுக்கு இல்லை!! நாங்க டைரக்டா கம்பெனிகள் கிட்டேயிருந்து வாங்குவோம்னு சொன்னாரு. மெட்ரோவுல வாங்குறதே நமக்கு விலை ரொம்ப குறைச்சலா இருக்குன்னா, இவரு கம்பெனிகிட்டேயிருந்து வாங்கினார்னா இன்னும் எவ்வளவு லாபம் இருக்கும்னு யோசிச்சேன்.

””டேடி எனக்கொரு டவுட் ரேஞ்சுல!”” நான் புரிஞ்சுகிட்டது இதுதான். வியாபரிகளுக்கு லாபம் இல்லாம வியாபரம் செய்ய மாட்டாங்கதான்னாலும்,  400 கிமி கார்ன்ஃப்ளக்ஸ் டப்பாவிலையில் 7.50 குறைச்சு  மெட்ரோவுல விக்கறதுலயே அவங்களுக்கு லாபம் இருக்குதுன்னா, நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கும் எம்புட்டு லாபம் இருக்கும்.  இப்ப வால்மார்ட் வந்ததும் எல்லோரும் ஏன் கடுப்பாறாங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.

ப்யூட்டி பார்லர் வெச்சிருந்தா கூட கூப்பிட்டு அட்டை கொடுக்கறாங்க. அவங்க அங்க போய் வாங்க ஆரம்பிச்சிட்டா மளிகை கடைக்கு யாரும் வரமாட்டாங்க,
அப்படின்னு சொல்லி கட்டுரை எழுதறாங்க. அவங்க வயத்துல அடிக்குது வால்மார்ட்னு சொல்றாங்க. நான் வால்மார்ட் மாதிரி கம்பெனிகளுக்கு சப்போர்ட் செஞ்சு பேசலை. ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

வாடிக்கையாளர்கள் நலன் கருதி விலையில் தள்ளுபடி செஞ்சு கொடுக்கணுமா இல்லையா? அப்பத்தானே வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாம இருப்பாங்க. ஒரு சாமான் வாங்கும்போது 4 கடையில் விசாரிச்சு எங்கே விலை கம்மியா இருக்கோ அங்கே வாங்குவதுதானே இயல்பு.!!! இதை நான் சொன்னா சிலருக்கு கோவம் வரலாம்.


உதாரணம் சொல்றேன் பாருங்க. முன்னாடில்லாம் நாம மருந்துக்கடையில மருந்து வாங்கினா டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது.  டோர்டெலிவரில்லாம் கிடையாது.   இந்த மெட்ப்ளஸ், ஹீத்ரூ மாதிரி பார்மஸிகளில்  உறுப்பினருக்கு 10 சதவிகிதம் விலையில் தள்ளுபடி உண்டு.  அதை நீங்க விலையில் கழிச்சுக்கலாம், இல்லாட்டி உங்க அக்கவுண்டில் பாயிண்டா வரவு வைக்கப்பட்டு மொத்தமா சேர்ந்ததும் அதுக்கு தக்க கிஃப்ட் ஏதாவது வாங்கிக்கலாம்னு இருக்கு. இந்த மாதிரி மருந்துக்கடைகள் டிஸ்கவுண்ட்டோட, டோர் டெலிவரியும் செய்வாங்க. அவங்க கிட்ட மருந்து இல்லைன்னா, அவங்க கிளைகள்ல எங்க இருந்தாலும் வாங்கியாந்து நமக்கு கொடுத்திருவாங்க.

இதுக்கப்புறம் இங்கே ஹைதையில் மற்ற மருந்துக்கடைகளிலும் 10% டிஸ்கவுண்ட் + டோர் டெலிவரி தர ஆரம்பிச்சிருக்காங்க. போட்டி போட்டு சாதாரண கடைகளும் தன் விற்பனைக்காக மாற ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஏரியாவுல சூப்பர் மார்க்கெட்களும் இருக்கு. மளிகை கடைகளும் இருக்கு. சூப்பர் மார்க்கெட்ல வாங்கறதை விட கொஞ்சம் குறைஞ்ச விலையில் மளிகை கடையில் வாங்கிடலாம். டோர் டெலிவரியும் சில மளிகைக்கடை காரங்க இலவசமாவே தர்றாங்க. எந்த மளிகை கடைக்கும் மூடு விழா நடக்கலை.

இது மாதிரி மத்த இடங்களிலேயும் செஞ்சா நம்மளோட  பாசமா பாத்து, பேசுற அண்ணாச்சியை விட்டு (அப்படித்தான் கட்டுரைகளில் எழுதியிருக்காங்க) ஏன் மத்த இடத்துல ஏன் போய் வாங்கப்போறாங்க. இப்ப இருக்கற விலைவாசி ஏத்தத்துல கால் ரூவாயாவது மிச்சம் பிடிக்க முடியாதான்னு தான் மக்கள் யோசிப்பாங்க.  வால்மார்ட், மெட்ரோ மாதிரியான கடைகள் ஊருக்கு வெளியிலதான் கடை போட முடியும். ஏன்னா அவ்வள்வு பெரிய இடம் வேண்டும். ஒவ்வொரு வாட்டியும் அங்கே போகணும்னா ஆவுற காரியம் இல்லை. அதனால மளிகைக்கடையில் சாமான் வாங்கினாலும் காசு மிச்சம் பிடிக்க முடிஞ்சா, “சுண்டக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு” சொல்வாங்களே அதுமாதிரி அம்மாம் தூரம் போய் ஏன் சாமான் வாங்கப்போறோம் சொல்லுங்க?????!!!!



என் மனசுல பட்டதை, என் அனுபவத்தோட சொல்றேன். அம்புட்டுதான். உங்களுக்கு மாத்து கருத்து இருந்தா கண்டிப்பா சொல்லுங்க. தெரிஞ்சிக்கலாம். சண்டைல்லாம் வேணாம்!!

 

Tuesday, September 27, 2011

போராட்டங்களுடன் ஒரு போராட்டம்!!!!!!!!!

இன்றோடு பதினைந்தாவது நாளை அடைந்திருக்கிறது தெலங்கானா போராட்டம்.
தனித்தெலங்கானா கேட்டு தெலங்கானாவாதிகள் நடத்தும் இந்தப் போராட்டத்தால்
மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், சிங்கரேனி ஊழியர்கள் என
மெல்ல ஆரம்பித்த போராட்டம் மெல்ல மெல்ல மற்றவர்களையும் உள்ளே
இழுத்தது. கட்டாயமாக வேலை நிறுத்தம் செய்தே ஆகவேண்டும் என
நிர்ப்பந்தப்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் தெலங்கானா
ராஷ்ட்ரிய சமிதியும் ஜேயிஸி ஆட்களும்.

செப்டம்பர் 16 முதல் பள்ளிகளில் முதல் டர்ம் பரிட்சைகள். பள்ளிகளையும்
மூடவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு பள்ளிகள் அல்லது
ஸ்டேட் போர்ட் சிலபஸை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்தார்கள்.
அதுவும் தசரா விடுமுறை என கூறி. அக்டோபர் 9க்கு பிறகு பள்ளி
திறக்கப்படும் என அறிவிப்புடன் மூடப்பட்டது. ஆனால் செண்ட்ரல் போர்ட்
பள்ளிகள் அப்படி செய்யவும் முடியாது. பரிட்சை நடத்தியே ஆகவேண்டிய
கட்டாயம்! சில பள்ளிகள் மாணவர்களை யூனிபார்ம் இல்லாமல் சாதாரண
உடையில் பள்ளிக்கு வருமாறு சொல்லியிருந்தன. புத்தகப்பை இல்லாமல்
கேரி பேக் போன்ற சாதாரண பையை கொண்டு வரச்சொல்லி வகுப்புக்கள்
நடந்தன.

என் பிள்ளைகளின் பள்ளி ஒரு படி மேலே போய் விட்டது.
யூனிபார்ம் உண்டு, புத்தகப்பை உண்டு. ஆனால் பரிட்சை எழுதும் நேரம்
அதிகாலை 7.15 முதல் 10.15 வரை. அதாவது தெலங்கானா அண்ணாக்கள்
மெல்லத் துயிலெழுந்து 11 மணிக்கு மேல்தான் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்
என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் சில இடங்களில் ஸ்கூல் பஸ்ஸையும்
மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் நாமே கொண்டு போய் விட்டு அழைத்து
வரும் சூழல்.

20ஆம் தேதி பரிட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தால் மகள். முதல் நாள்
இரவு 9.30 மணிக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. நாளை நர்சரி முதல் 8ஆம்
வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை என்று.பரிட்சைக்கு
தயாராகி அதை எழுத முடியாத ஒரு டென்ஷன் பிள்ளைகளிடம்.
9 & 10 மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அந்தந்த தேதிகளில்
பரிட்சை வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் மேலே சொல்லியிருந்த
நேரப்படி பரிட்சை முடிந்தது. இந்த சூழலில் அயித்தான் வளமை போல்
டூர்!!! எப்படி இருந்திருக்கும் பாருங்கள். அயித்தான் ஏர்போர்ட்டிற்கு
கிளம்பும் முன் 6.30மணிக்கே மகனை அழைத்துச் சென்று பள்ளியில்
விட்டு வந்து பிறகு ரெடியாகி ஏர்ப்போர்ட்டுக்கு ஓடியிருக்கிறார்! 2 அல்லது
3 பிள்ளைகள் சேர்ந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள்
வீடு வந்து சேரும் வரை டென்ஷன் தான்.

மற்ற வகுப்புக்கள் எல்லாம் பரிட்சை அக்டோபர் 9க்கு மேல்!! ஆன்லைனில்
பாடங்களை டவுன்லோட் செய்து வீட்டிலேயே பிள்ளைகளைத் தயார்
செய்யும் நிலை பெற்றோர்களுக்கு. பல பள்ளிகள் ஆன்லைன் கோச்சிங்
அளித்து பாடத்தில் இருக்கும் டவுட்களை க்ளியர் செய்தது தனிக்கதை.
இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே பெட்ரோல் பங்க் பந்த், ஆட்டோ
ஸ்ட்ரைக், ஆர்டீசி பஸ்(மாநகரப்பேருந்து) ஸ்ட்ரைக் என ஓடியது.

சிங்க்ரேனி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தல் மின் தட்டுப்பாடு
அமோகமா இருக்கிறது. அதனால் இப்பொழுது எங்களுக்கு அறிவிக்கப்பட்டு
2 மணிநேரம் கட்டாயம் மின் வெட்டு. அது இல்லாமல் அவர்கள்
விரும்பும் நேரத்திலும் மின் வெட்டு. இருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக
உபயோகிக்க வேண்டிய சூழல். மாநகரப்பேருந்து ஸ்ட்ரைக், சிங்க்ரேனி
ஸ்ட்ரைக் என பல ஸ்ட்ரைக்குகளால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் பல
கோடிகள். இதெல்லாம் எங்கள் தலையில்தான் வந்து விடியும் என்ற
எண்ணம் இல்லாமல் நாட்டை கூறுபோட கூப்பாடுபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.



48 மணிநேர ரயில்ரோக்கோவை சக்ஸச்புல்லாக நடத்தி முடித்தார்கள்
தெலங்கானா அண்ணாக்கள். ரயில்வே ஷ்டேஷனில் தனித்தெலங்கானா
வேண்டி ஹோமம், ஸ்டேஷனில் கபடி ஆடுதல், ரயில் ட்ராக்கில்
ஆர்ப்பாட்டம் என ஆடியது போதாமல் தேசிய நெடுஞ்சாலையிலும்
மறியல் ஆர்ப்பாட்டம் என ஒரு மார்க்கமாக இருந்தது. ட்ரைவிங்
லைசன்ஸ் டெஸ்ட் என எதுவும் நடக்கவில்லை. ஊழியர்கள் இருந்தால்தானே!
இந்த மாதம் வேலை செய்த நாட்கள் மொத்தம் 12. அந்த நாட்களுக்கு
மட்டுமே சம்பளம் என அரசு அறிவித்திருக்கிறது. அதை கையெழுத்து
போட்டு சலான் பாஸ் செய்து எல்லாம் செய்யக்கூட அரசு அலுவலகத்தில்
ஆள் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் கிடையாது.

இலங்கையில் இருந்த பொழுது மங்களூர் சிவாதம்பி கலவர பூமியில்
எப்படிக்கா இருக்கீங்க? சீக்கிரம் வாங்க இந்தியாவுக்குன்னு சொல்வாரு!
நம்ம இந்தியா மட்டும் நலமான்னு கேப்பேன். இப்ப அது பக்காவா
ஆயிடிச்சு. பாக்யநகரம் இப்பொழுது பாக்யங்களை இழந்து விடும்
சூழல். ஐடி கம்பெனிகளால்தான் ஹைதை இவ்வளவு வளர்ச்சி
பெற்றது. அவர்கள் மூடிக்கொண்டு போய்விடும் சூழல் இருப்பதால்
புதிதாக எந்த ப்ராஜக்ட்டும் இல்லையாம்!!!

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட
புழிதியில் எறிவதுண்டோ!! சொல்லடி சிவசக்தி!!”

என அவளிடம் கேட்கலாம் என்றால் பாவம் அவள்.
பந்த் கோவில்களுக்கும் தான்.
கிட்டத்தட்ட 1500 கோவில்களுக்கு மேல் கடந்த 15 நாட்களாக
கோவில் திறந்த உடன் அபிஷேகம், நைவேத்யம் முடித்து உடன்
கோவிலை மூடிவிடவேண்டுமென கண்டீஷன் போட்டிருக்கிறார்கள்
தெலங்கானா வாதிகள். அதுவும் இன்று மஹாளய அமாவாசை.
இன்று முழு அடைப்பாம்!!!!!!!!! பூஜாரிகளையும் பந்தில்
ஈடுபடுத்தும் வேலை நடக்கிறது.

சாமியே நடந்து போகுதாம்! இதுல பூசாரிக்கு புல்லட் கேக்குதோன்னு!
சொல்வது போல இருக்கு நிலமை.

தெலங்கானா அமைப்பு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
நாளை ரஸ்தா ரோக்கோ, 29 ராஜினாமா செய்யாத அமைச்சர்கள், எம்பிக்கள்,
வீடுகளைத் தாக்குதல், 30 பந்த், 2 ஆம்தேதி டோல்கேட்டுகள் முற்றுகை,
அக்டோபர் 9,10,11 ரயில்ரோக்கோ. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில்
சட்டம் ஒழுங்கே இல்லை. இத்தனை கூத்துக்கள் நடந்தும் அதை
போலீஸ் கைகட்டி பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
144 தடை மட்டும் போட்டால் போதுமா? மக்களின் இன்னல்களுக்கு
தீர்வு இல்லையே!

மத்தியில் இருக்கும் அரசு ஏதேனும் விரைவான முடிவு எடுத்தால்தான்
உண்டு. மாநிலத்திற்கு பொருளாதாரா ரீதியாக ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துடன்
பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். வகுப்புக்கள் முறையாக
நடக்காவிடில் பரிட்சை எழுதி பாஸ் செய்வது எப்படி? எனும் கேள்வி
எல்லா பெற்றோர்கள் மனதிலும் இருக்கிறது.

தீர்வு என்ன? விஜயதசமி அன்று அன்னை அசுரனை அழித்து
நல்லது செய்தாள் என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை ஒழித்து
அன்னை தன்னையும் காத்து எங்களையும் காத்தருள வேண்டும்!!


Tuesday, September 13, 2011

வேகம் தந்திருக்கும் சோகம்

கடந்த ஞாயிறு அன்று நடந்திருக்கிறது இந்த விபத்து. முன்னாள்
கிரிக்கெட் வீரர் அஜாரூதின் அவர்களின் இளையமகனும்(அயாஜ்), அஜாருதினீன்
சகோதரி மகனும் அயாஜின் புதிய Suzuki GSX R1000 bike வண்டியை
ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டியிருக்கிறார்கள். 250கிமீ
வேகத்தை தொடமுயன்ற வண்டி கண்ட்ரோல் இழந்து விபத்துக்குள்ளாகி
அஜாருதினீன் சகோதரி மகன் அந்த இடத்திலேயே மரணத்தை தழுவ
அஜாருதினீன் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அஜாருதினீன் 19 வயது இளையமகன் ஓட்டிய பைக் இதுதான்.

அஜாருதீனின் முதல் மனைவி நொளருதீன் மகன் இந்த அயாஜ்.
(முதல் மனைவியைப் பிரிந்து நடிகை சங்கீதா பிஜ்லானியை
திருமணம் செய்து கொண்டார் அஜாருதீன்.


ஹைதையின் அவுட்டர் ரிங் ரோடில் சமீபத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
8 லேன் பயணம். வேகமாக போக வேண்டும் எனும் எண்ணம்
எவருக்கும் வரவைக்கும் சுமூகமான பாதை. சர்வ சாதாரணமாக
அனைவரும் 100க்கு மேலே சென்று கொண்டிருந்தனர். கார் ரேசில்
கொசு பறப்பது போன்ற சத்ததுடன் ஜூயுங் என வாகனங்கள் போகுமே
அப்படி பறக்கும். சில சமயம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
வாகனங்களே இருக்காது. டிராபிக் தொல்லை இல்லாமல்
பயணத்தை அனுபவிப்பதை விட்டு அந்தப் பாதையில் வேகமாக
சென்று தன் மரணத்துக்குத் தானே விண்ணப்பம் போடும் மனிதர்களை
என்ன வென்று சொல்வது. (இப்படி வேறு ஊர்களிலும் இருக்கலாம்!)


அஜாருதீனைப்போல மகனும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகிக்கொண்டிருந்தார்.
ஞாயிறு அன்று அதிகாலை 6.30 மணிக்கு வீட்டினருக்குத் தெரியாமல்
வண்டியை எடுத்துச் சென்று அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டும் பொழுது
இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. அயாஜின் தாயார் சவுதியில்
இருக்கிறார். தாத்தாவிடம் இருந்து வருகிறார் அயாஜ்.

அந்த வாகனத்தை இன்னும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லை. இருவரும்
சேர்ந்து டெஸ்ட் ட்ரைவ் செய்து கொண்டிருந்தார்கள். :((

கிட்னியிலிருந்து, நுரையிரலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததாம்.
அயாஜின் மூளைக்கு எவ்வளவு நேரம் ரத்தம் செல்லவில்லை
என்பதை மருத்துவர்களால் அறிய முடியவில்லை. இதனால்
மூளை எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல
முடியவில்லையாம். ஞாயிறன்று நடந்த விபத்து. இப்பொழுது
வரை நினைவு திரும்ப வில்லை. உடலில் எந்த அசைவும்
இல்லாத நிலை. 19 வயதில் அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு
அவஸ்தை!!

வேகம் தரும் த்ரில்லுக்காக இளைஞர்கள் தங்கள் உயிரைப் பற்றி
நினையாமல் இப்படி வண்டி ஓட்டி தங்கள் உயிரை இழக்கின்றனர்.
25 வயதுக்கு உட்பட்ட வாகன ஓட்டிகளால்தான் விபத்துக்கள் அதிகம்
நிகழ்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றவர்கள் சொன்னாலும்
பிள்ளைகள் கேட்பது இல்லை.

சென்ற வருட தந்தையர் தினத்தன்று தன் மகனுக்கு நடிகர்
கோட்டா ஸ்ரீநிவாஸராவ் (சாமி படத்தில் வில்லனாக வருவாரே!)
ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். மகன்
வண்டியை ஓட்டிக்கொண்டு முன் செல்ல மருமகள் மற்றும்
குடும்பத்தினருடன் பின்னாலேயே காரில் தொடர்ந்து கொண்டிருந்த
கோட்டா ஸ்ரீநீவாஸிற்கு கண் முன்னாலேயே மகனின் வண்டி
விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தது மகா சோகம். இந்த
விபத்து நெக்லஸ் ரோட் (ஹுசைன் சாகருக்கு இந்தப் பக்கம்)
நடந்தது. தன் ஒரே மகனை இழந்த சோகத்திலிருந்து இன்னமும்
அவர் மீளவில்லை. :((


கடவுளே! எப்பொழுது இந்த இளைஞர்களுக்கு பொறுப்பை தரப்போகிறாய்?
தன்னை காத்துக்கொள்ளும் தன்மையை எப்பொழுது தரப்போகிறாய்?
தெரிந்து சில தெரியாமல் பல என எத்தனையோ பெற்றோர்களின்
துயரத்தை நிறுத்த வழிதான் என்ன??

நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகள் அயாஜிற்காக.



Thursday, June 23, 2011

சாந்தி இல்லா பிரசாந்தி நிலையம்!!!!!!!!!!

பகவான் சத்ய சாயி பாபா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்து புட்டப்பர்த்திதான் நியூஸ்
சேனல்களுக்கு தீனி. இப்பொழுது அது மாபெரும் தீனியாகிவிட்டிருக்கிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொழுது என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?
அவரது உடம்புக்கு என்ன? என எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
தற்பொழுது சாயி பாபா அவர்களின் சகோதரி மகள் தந்த பேட்டியில்
“ராகு காலம் முடிவதற்காக வெயிட் செய்து பிறகு ஆப்ரேஷன் செய்தார்கள்.
அதனால்தான் அவருக்கு இப்படி ஆனது!!” என்று சொல்கிறார்.
குடும்ப உறவினர்களுக்கும் என்ன நிலமை என்று தெரியாதாம்!!
அப்படி என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள்? புட்டபர்த்தியில் இருக்கும்
சத்ய சாயி மல்டிஷ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தான் பாபாவுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மெடிக்கல் ரெக்கார்ட் ஏதுமில்லை!!
அதை வெளியிடவில்லை. அரசும் கேட்காது ஏன்?? புரியவில்லை.

யுகாதிக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்றும், சில நடவடிக்கைகள்
எடுக்க வேண்டி இருந்ததால் சிகிச்சை பெறுவதாக கூறி மருத்துவமனையில்
வைத்தார்கள் என்றும் மீடியா சொல்கிறது. அதை ஊர்ஜிதம் செய்வது போல
இருக்கிறது இன்னொரு செய்தி. ஏப்ரல் 28ஆம் தேதியே பெங்களூரில் இருக்கும்
கம்பெனி ஒன்றில் கண்ணாடி சவப்பெட்டி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே
சமயத்தில் தான் புட்டபர்த்தியிலிருந்து ஒரு ட்ரக்கில் நகைகள் சென்றதாக
சொல்கிறார்கள்.

இத்தனை நாள் கழித்து இப்பொழுதுதான் யஜுர் மந்திரம் எனும் பாபாவின்
அறை திறக்கப்பட்டுள்ளது. பணக்கட்டுக்கள், நகைகள், வைரங்கள் என
ஒரு கஜானாவைப்போல தெரிகிறது.மீடியாவோ, அரசுத்துறையைச்
சார்ந்தவர்களோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 15 மாணவர்கள்
இங்கே இருந்த பணங்களை எண்ணியதாகச் செய்தி.
இப்பொழுது மீடியா நம் நாட்டின் ஸ்விஸ் பேங்க் இந்த அறை
என்றும், பல பெரிய தலைகளின் கறுப்புப் பணம்
இங்கேதான் பதுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறது.

கடந்த ஞாயிறு அன்று அனந்தபுரத்தில் போலீஸ் அதிகாரிகளால்
கைப்பற்றப்பட்ட ட்ரஸ்டுக்கு சம்பந்தப்பட்ட வாகனத்தில் 35 லட்சம்
பணம் இருந்திருக்கிறது. முதலில் மார்பிள் வாங்க அனுப்பிய
பணம் என்று சொல்லி ட்ரஸ்ட், வேன் டிரைவர் ட்ரஸ்டைச் சேர்ந்த
ஒருவரின் பெயரைச் சொல்ல இப்பொழுது போலீச் ரத்னாகர் (இவர்
தான் இறுதிச் சடங்கு செய்தவர், பாபா அவர்களின் அண்ணன் மகன்)
மற்றும் இன்னொரு நிர்வாகியான ஸ்ரீநிவாஸ் என்பவரையும் விளக்கம்
கேட்டிருக்கிறது.

இத்தனை குற்றச் சாட்டுக்கள் வெளிவந்தாலும் அதை மறுக்கவோ,
எதிர்த்தோ ஒரு செய்தியும் ட்ரஸ்ட் வெளியிடாத மர்மம் என்ன?
வாய் மூடி மவுனமாக இருப்பதால் புட்டபர்த்தியின் மேல்
நல்ல மதிப்பைக் கொண்டவர்கள் எத்தனையோ பேரின் மனதில்
சங்கடத்தை உட்படுத்தி இருக்கிறது.

திருப்பதி மலையில் வெங்கடேசனுக்கு சேரும் காணிக்கைகள்
எவ்வளவோ அத்தனையும் தணிக்கை செய்யப்படுகிறது. எந்த ஒரு
கோவிலும் தணிக்கைக்கு உட்பட்டதே. அப்படியிருக்க புட்டப்பர்த்தி
மட்டும் தணிக்கைக்கு உட்படுத்த படவில்லை. விதிவிலக்கு
அளித்துள்ளதாம் அரசு!!! அது ஏன்??

சீரியஸாக செயலில் இறங்கி அரசு என்னதான் நடக்கிறது? அல்லது
நடந்தது என விசாரனையில் இறங்காததும் ஏன் என்பதும் இறைவனுக்கே
வெளிச்சம்.

புட்டப்பர்த்தியின் செக்யூரிட்டி அதிகாரியான ப்ரதான் என்பவரை
போலீஸ் விசாரித்திருக்கிறது. மீடியாவுக்கு இவர் தந்த பேட்டியில்
வெளிநாட்டு யுவதிகள் காணாமல் போனதும் உண்டு என்று
இன்னொரு அதிர்ச்சித் தகவலை சொல்கிறார்.

இத்தனை பூகம்பளுக்கு இடையே நேற்று வெளியான இன்னொரு செய்தி
வெளிநாட்டு பக்தரான ஐசக் தந்த அதிர்ச்சி. சாயி பாபா அவர்களின்
பிரியமான இந்த கோடீஸ்வரர் தான் புட்டபர்த்தியின் வளர்ச்சிக்காக
400 கோடி கொடுத்திருக்கிறார். இவர் தற்போது கொளித்திப்போட்டிருக்கும்
செய்தி,” பாபா உயில் ஏதும் எழுதவில்லை என ட்ரஸ்ட் நிர்வாகிகள்
சொல்வது பொய். தான் உயில் எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார்.
என்னிடம் சில ரகசியங்களையும் சொல்லியிருக்கிறார். 6 வாரத்தில்
ஆதாரங்களுடன் அவற்றை பக்தர்களுக்கு சொல்கிறேன்!!” என்று
சொல்லியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து
இருக்கிறது சி.பி.ஐ. ஆனால் அந்த 200 கோடி ரூபாய் என்ன ஆச்சு?
அந்தப் பணம் இப்படி அனாமத்தாக இருக்கும் பல பணங்களை
ஒருங்கே சேர்த்து நாட்டு நலத்திட்ட பணிகளுக்கு செலவழித்தால்
பொருளாதாரம் மேம்பட்டுவிடுமே. இதற்கெல்லாம் நம் அரசியல்
தலைவர்களுக்கு நேரமில்லை. ஒரு அன்னா ஹஜாரே போதாது.
வீதிக்கு ஒரு அன்னா ஹஜாரே வந்தால்தான் நம் நாடு உருப்படும்.

பின்குறிப்பு: நான் சாயி பாபா பக்தை என்றோ, அல்லது அவருக்கு
எதிராக இந்த பதிவை எழுதி அவருக்கு அவமரியாதை செய்து
விட்டோன் என்றோ யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவிட்டால் யாரும்
குழம்பத்தான் நேரிடும். புட்டப்பர்த்தியின் அபிவிருத்திக்கு மிகவும்
உழைத்த மனிதர், தண்ணீர் பிரச்சனையை தீர்த்தவர் என்ற
விதத்தில் அவரை நான் மதிக்கிறேன். தயவு செய்து யாரும்
தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். உலகமெங்கும் வியாபித்திருக்கும்
புட்டப்பர்த்தி ட்ரஸ்டின் முக்கிய இடமான புட்டபர்த்தியின் நிர்வாகிகள்
மீது இப்பொழுது எழுந்திருக்கும் சந்தேகங்களை முன் வைப்பதே
இந்தப் பதிவின் நோக்கம்.





Thursday, March 10, 2011

எங்கே செல்லும் இந்தப் பாதை???!!!!!!!!!

தெலங்கானா வழங்கக்கோரி இன்று மில்லியன் மார்ச் எனும்
நிகழ்ச்சி ஒன்றை தெலங்கான கூட்டு கட்டமைப்பு நடத்த
அழைப்பு விடுத்திருந்தது. எல்லோரும் ஒன்று கூடி
டாங்க் பண்ட் மீது வரவேண்டும் என அழைக்க அந்தப் பக்கம்
செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது
போலீஸ்.

ஆனால் அவர்களுக்கு சவால் விடும் வகையில் திரள் திரளாக
வந்து குவிந்தனர். நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்குன்னு
நினைக்கு நேரத்தில் சாயந்திரமாக வன்முறை ஆரம்பமாகிடிச்சு.
துளசி டீச்சர் தன் பதிவில் சிலாகித்து சொல்லியிருந்த
டாங்க்பண்ட் மீது அழகாக இருக்கும் சிலைகளை உடைத்து
பக்கத்தில் இருக்கும் ஹுசைன் சாகரில் போட்டதை
படம் பிடித்த மீடியாக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.

25 காமிராக்களை உடைத்தனர். சிலவற்றை ஹுசைன்சாகரில்
போட்டனர். அங்கேயிருந்த ஒளிபரப்பு வாகனத்தை அடித்து
துவம்சம் செய்தனர். ஒரு பெண் நிருபரை காயமடையச்
செய்தது பத்தாமல், போலீஸ் வாகனத்தை எரித்தனர்.
வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட சூழலில் அழகான டாங்க்பண்ட்,
இதுவரை விநாயகசதுர்த்திக்கும், பதுக்கம்மாவுக்கும் மட்டுமே
திரள்திரளாக மக்களை கண்டது போய் தனக்கு இப்படி ஒரு
நிலை ஏன் என அழுதிருக்கும்.


மில்லியன் மார்ச்சில் கலந்துகொள்ள புறப்பட்ட உஸ்மானியா
பல்கலைக்கழக மாணவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர்
போலீசார். கதவை உடைத்து வந்து அவர்கள் மீது கல் மழை
வீச போலீசார் கண்ணீர்புகை செலுத்த வேண்டி வந்து அந்த
இடம் அல்லோகல்ல பட்டது.


இன்று எத்தனையோ லட்சங்கள் நஷ்டம்!!! பத்தாம் வகுப்பு
பரிட்சை எழுதிய மாணாக்கர்கள் பரிட்சை ஹாலுக்கு செல்ல
தாமதமானது. ஐசிஎஸ்ஸி மதியம் 2 -5 பரிட்சை நடத்தியது.
நாடு முழுதும் ஒரே நேரத்தில் பரிட்சை நடப்பதால் தேதிகளை
ஒத்திவைக்கவும் முடியாமல் தெலங்கானா தலைவர்களிடம்
பெற்றோர்கள் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டில்தான் கேசிஆர்
சீனுக்கே வரவில்லை என்று தகவல். அவர் இன்று நடத்தாமல்
ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைக்க நினைத்தார். கேட்கும் ரகங்களா?
இவர்கள். நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று
சொல்லிக்கொண்டு இவர்கள் நடத்தும் அராஜாகங்கள், நாசாமாக்கும்
பொதுச்சொத்துக்களால் ஒன்றும் செய்யாத அப்பாவி சாமானியனுக்கும்
ஒரு பாரமாக இது அமைகிறது. இதை தன் தொண்டர்களுக்கு
புரிய வைக்காத கட்சிகளின் தலைவர்கள் தலைவர்களே அல்ல!!!

எந்த பாவமும் அறியாத எக்ஸ்போடெல் ஹோட்டல் லோயர் டாங்க்பண்டில்
கல்லடிபட்டு அழுதுக்கொண்டிருக்கிறது. ரணகள் பூமியாக
காட்சியளித்த டாங்க்பண்டை பார்க்கும் பொழுது மனது வலித்தது.

காணொளியில் பாருங்கள் கோரம் தெரியும்.


Friday, July 02, 2010

கோவிந்தனின் நகைகள் கோவிந்தா!!!

திருப்பதி வெங்கடாஜலபதி பத்தி நிறைய்ய மகிமைகள்
சொல்வாங்க. நேர்ந்துகிட்டதை கொடுக்காட்டிப்போனா
வட்டியும் முதலுமா வாங்கிடுவான்னு. ஆனா இப்ப
அந்த கோவிந்தனின் நகைகளே கோவிந்தா போட்டுட்டாங்க.
பாவம் அந்த பரந்தாமன்.

கோவிந்தனுக்கு பக்தர்கள் காணிக்கையாக முடி, காசு
மட்டும் கொடுப்பதில்லை. தங்கம், வைரமாகவும்
கொடுப்பது வழக்கம். அப்படி எத்தனையோ நகைகள்
அந்த பரந்தாமனின் திருமலை தேவஸ்தானத்திடம் இருக்கு.
ஆனா அதிமுக்கியமான சில நகைகள் மாயமாகிருக்கு.
அதுவும் கொடுத்ததற்கு சாட்சிகள் பலமா இருக்காம்.



கொடுத்தது யாரோ அல்ல ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணதேவராய மஹாராஜா.
தனது ஆட்சி காலத்தில் 7 தடவை ஆண்டவனை தரிசிக்க
தனது பட்டத்து ராணியுடன் போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும்
அவர் அந்த கோவிந்தனுக்கு நகைகளை சமர்பித்து ஆனந்தமடைந்திருக்கிறார்.

அந்த நகைகளைத்தான் இப்ப காணோமாம். கிருஷ்ண தேவராயரின்
500ஆவது பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு
செய்ய ஆந்திர அரசு ஏற்பாடு செய்ததுகொண்டிருக்கிறது. ஜனாதிபதி
பிரதிபா பாட்டில் அவர்களையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக்க
திட்டம். அந்த சமயத்தில் தான் ராயர் அவர்கள் இறைவனுக்கு
சமர்ப்பித்த நகைகளை படம் பிடிச்சு போட்டு அதை இறைவனுக்கு
ஒரு நாள் சார்த்தி அழகு பாக்கலாம்னு திட்டம் போட்டு திருப்பதி
தேவஸ்தானத்தை கேட்டிருக்காங்க. ஆனா அங்கே ,”அப்படி ஏதும்
நகைகள் இருப்பதா தெரியலைன்னு”!! சொல்றாங்க.


திருவாபரணங்களை பாதுகாக்கும் துறையில் அரசு காலத்தில்
எந்த ஆபரணங்களையும் தாங்கள் யார் கொடுத்ததுன்னு
குறிப்பில் வெச்சுக்கலை, அதனால ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயர்
கொடுத்தது எந்த நகைகள்னு தெரியாது!!!” அப்படின்னு
சொல்லிட்டாங்க. அரசன் கொடுத்தாலும் சாதாரண மானுடன்
கொடுத்தாலும் அப்ப அதை சமமாத்தான் பாத்தாங்க. அப்படின்னு
சொல்லும் தேவஸ்தானம் 1953ல் ஆனந்தநிலையத்தில் தங்ககூரை
வேய ராயரின் நகைகளை கருக்கிட்டோம்னு சொல்றாங்க.


ஆனா மீடியாவோ நகைகளை கருக்கவில்லை, அதை
திருடிட்டாங்க, மறைச்சிட்டாங்கன்னு
சொல்றாங்க.1521ல் கடைசியாக கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு
வந்தபோது கொடுத்த நகைகள் 1523ஆம் வருஷமே காணாம
போயிடுச்சாம்!!! இதற்கு சரித்திர ஆதாரம் இருப்பதா தேவஸ்தானத்
தலைவர் சொல்லியிருக்கிறார்.


திருப்பதி தேவஸ்தானம் சமீப காலமா
ரொம்பவே சர்ச்சைக்குள்ளாகுது. அங்கே வழங்கப்படும்
சேவா டிக்கெட்டுகளில் மோசடி, வீ.வீ.ஐ.பீக்களுக்கு
வழங்கப்படும் ஷ்பெஷல் தர்ஷன் என ஏகப்பட்ட விவகாரம்.
திருமலை அர்ச்சகர்கள் ஹைதைக்கு வந்து முதலைமைச்சர்
ரோசைய்யா அவர்களிடம் மனு கொடுக்கும் அளவுக்கு இரண்டு
தரப்பினருக்கும் இடையே சர்ச்சைகள். இப்ப இது வேற!!!!

தன் நகைகள் இருக்கும் இடத்தை அந்த கோவிந்தன் தான்
தெரியப்படுத்தணும். தான் வேண்டிகிட்டதை கொடுக்க மறந்தவனிடம்
வட்டியும் முதலுமாக வாங்கும் கலியுக தெய்வம் நகைகளை
களவாடியிருந்தா அவர்களுக்கும் தண்டனை வட்டியும்
முதலுமா கொடுக்கட்டும்.



Monday, May 17, 2010

30 நிமிட மழையும் 300 மரங்களும்

மதியம் 4.30 மணிக்கு ஆரம்பிச்சது தூறல். ஆகா
45 டிகிரில காஞ்சு போய்க்கிடக்கோமே அப்படின்னு
சந்தோஷப்பட்டுகிட்டு உக்காந்திருந்தோம். கரண்ட்
கட் ஆனது. இதுவும் சர்வ சாதாரணம். மழை
ஆரம்பிச்சிருக்கு கூலா இருக்கும்னு மழையை
அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம்.

சரி காத்தோட மழை. சின்னச் சின்ன ஐஸ்கட்டிகளுடன்
விழுந்த மழையை பசங்க ரசிச்சுகிட்டு இருந்தாங்க.
சூடான மசாலா டீயோடு மழையை ரசிச்சோம்.
30 நிமிடம் நல்ல மழை. ஒரு ரூமுக்குள் தண்ணி
வந்திடிச்சு.

5 மணிக்கு மழைவிட்டிடிச்சு. கரண்ட் வரலை
1 மணிநேரம் கழிச்சு வந்திடும்னு இருந்தோம்.
காலையில் ஒரு மணிநேரம், மதியம் 1 மணி
நேரம் இங்க பவர்கட் கடந்த ஒரு வருஷமா
நடக்குது. அதனாலதான் இந்த சம்மரில் வெறும்
2 மணிநேர பவர்கட்டோட போச்சு. இல்லாட்டி
4 மணிநேரம் பவர் கட் இருக்கும்.

6.30 ஆகியும் கரண்ட் வரலை. மொட்டைமாடிக்கு
போய் நானும் அயித்தானும் நடந்துகிட்டு இருந்தோம்.
கூலா இருந்துச்சு கிளைமேட்டு. இரவு 8 மணிஆகியும்
கரண்ட் வர்ற மாதிரி தெரியலை. இரவு சாப்பாடு
சமைக்க கரண்ட் இல்லாததால வெளியில் போய்ச்
சாப்பிடலாம்னு வீட்டுக்கு பக்கத்துல இருக்கற
பாவ்பாஜி கடைக்கு போனோம். போகும் வழியில
மரங்கள் சாஞ்சிருப்பதை பாத்தோம்.

எங்க மங்கிபள்ளியில்(எங்க ஏரியாவில்
குரங்குகள் அதிகம் என்பதால்
நாங்கள் வைத்திருக்கும் பெயர்) மரங்கள் அதிகம்.
சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடிக்கு வந்து
சுத்தமாக இருந்த மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு
நட்சத்திரங்களை பார்த்துகிட்டு இருந்தோம். மணி 9
ஆகியும் கரண்ட் வரலை. எலக்ட்ரிசிட்டி போர்டு
ஆபீஸுக்கு போயிட்டு வந்த இரண்டு பேர் கரண்ட்
வரது சந்தேகம். மொத்தம் 9 மரங்கள் விழுந்திருக்கு.
அப்படின்னு சொன்னாங்க.

தோமல்குடாவில் இருக்கும் சொந்தக்காரவுங்க
வீட்டுக்கு தூங்கப்போனோம். கொடுமை கொடுமைன்னு
கோவிலுக்கு போனா அங்க 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு
ஆடிச்சாம், அதுமாதிரி நாங்க அங்க போன நேரம்
பாராத்(திருமண அழைப்பு) ஒண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு.
10 நிமிஷத்துல கடக்கற தூரத்தை 1 மணிநேரமா
டான்ஸ் ஆடி, மேளம் அடிச்சு போய்க்கிட்டு இருந்தாங்க.
12 மணி வரைக்கும் ஆட்டம் நடந்துகிட்டு இருந்துச்சு. :((

காலையில் 5 மணிக்கு கிளம்பி எங்க வீட்டுக்கு வந்தோம்.
அப்ப வரைக்கும் கரெண்ட் வரலை. பேப்பரில் பாத்தா
விஷயம் புரிஞ்சிச்சு. நேத்து மணிக்கு 70 கிமீ வேகத்தில்
காற்றோட மழை பெஞ்சிருக்கு. இதனால ஹைதை
மொத்தத்திலும் 300 மரங்கள் விழுந்திருச்சு.

அதிக பட்ச வெயிலால் அவிஞ்சிகிட்டு இருந்தோம்.
இந்த மழை இதத்தை கொடுத்து கொஞ்சம் மெர்க்குரி
லெவலை குறைச்சிருக்குன்னாலும் கிட்டத்தட்ட 14 மணிநேரம்
எங்க ஏரியா மின்சாரம் இல்லாமல் தவிச்சு போயிட்டோம்.

பல இடங்களில் மின்சார அலுவலகத்தை மக்கள்ஸ் முற்றுகை
இட்டதா பேப்பரில் படிச்சோம். ஒரு ஈ.பி ஆபிஸ் மேலேயே
மரம் விழுந்து கிடந்துச்சு. பாவம் அவங்களும் என்ன செய்வாங்க.
ஹைதையில் எனக்கு பிடிச்சது மரங்கள்,பசுமை.
பிர்லா மந்திரிலிருந்து பாக்கும்பொழுது கட்டங்களுடன்,
பசுமையா மரங்களும் தெரியும். Anandnagar, Jubilee Hills,
Baghlingampally, Gandhinagar, S P Road,
Vijayanagar Colony, Lower Tank Bund, Abids,
Basheerbagh, Yakutpura, Padmaraonagar,
SBI Colony, Goshamahal, Langar Houz,
Barkatpura, Noorkhan Bazar and Secretariat. இங்கல்லாம்
மரங்கள் விழுந்திருக்கு.
மரங்கள் எலக்ட்ரிக் வயர்களில் விழுந்ததுதான் பிரச்சனையே.

மழை நீர் தேங்குவதனாலும் பிரச்சனை. ராணிகஞ்ச்
பிரிட்ஜுக்கு அடியில் மழை நீர் தேங்கி டிராபிக்
ஜாம் ஆகிடிச்சு.


மழை பெஞ்சதால பகல்நேர வெப்பம் குறைய
வாய்ப்பில்லை, மாலை நேரங்கள் குளுமையா
இருக்கும்னு வானிலை அறிக்கை சொல்லுது.
எப்படியோ மழைக்காலம் ஆரம்பமாகிடிச்சு.
வரும்போதே ஆக்ரோஷமா வர்றாரு வருணபகவான்.
பாப்போம். நல்லபடியா மழை பெஞ்சு, நல்ல விளைச்சலை
கொடுத்து தண்ணிக்கஷ்டம் இல்லாம இருக்கட்டும்.




Thursday, February 25, 2010

திடுக் திருப்பதி

”திருப்பதிக்கு போனா சாமி தரிசனம் முடிச்சு
உடனே கீழ இறங்கிடுவோம். மேல் திருப்பதியில
தங்க மாட்டோம்னு”!!! தோழி சொன்னாங்க.

ஏம்ப்பான்னு கேட்டேன்,”அங்க எம்புட்டு பேரு
தற்கொலை செஞ்சுக்கராங்க தெரியுமா?” அப்படிங்கவும்
அதிர்ச்சிதான். நாம எப்பவோ போறது. இரண்டுவருஷம்
முன்னாடி போயிட்டு அதுவும் எம்பி யோட லெட்டரோட
போயிக்கூட இடத்துக்கும், கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கும்
3 மணிநேரம் காத்திருந்த கொடுமைக்கு அப்புறம் கணவர்
“இனிமேல் திருப்பதிக்கே வரக்கூடாதுடா சாமின்னு”
கத்தினதுக்கப்புறம் எல்லா ஏற்பாடும் தடபுடலா நடந்துச்சு.

மிகப்பிரபலமான கோவில்களுக்கு போவதுன்னா எனக்கும்
கொஞ்சம் அலர்ஜி. அதனால வீட்டுலேர்ந்து கோவிந்தான்னு
கூப்பிட்டுக்குவேன். முடிஞ்சப்போ பிர்லாமந்திரி போய்
தரிசனம் செஞ்சுக்குவேன்.

ஆனா அங்க இம்புட்டு கோரம் நடக்குதுன்னு தெரியாது.

திருப்பதி புண்ணியஸ்தலம். ஏழுமலை வெங்கடேசன்
அருளாட்சி நடக்குமிடம்.



இங்கே உயிரை விட்டால் நேரே சொர்க்கம் தான் என யாரோ
கிளப்பிவிட குரூப் குருப்பா கிளம்பி வந்து தற்கொலை
செஞ்சுக்கராங்கலாம்.

புண்ணிய பூமியை மரண பூமியாக்குகிறார்கள். போனமாதம்
கர்நாடக மாநிலத்திலிருந்து தாயும், மகனும் காரில் புறப்பட்டு
வந்திருக்கிறார்கள். அடுத்த நாள் இருவரும் இறந்து கிடக்கிறார்கள்.
துண்டு காகிதத்தில்,”தன் கணவரின் மரணத்துக்குப் பிறகு
வாழ முடியவில்லை வயது வந்த மகனும் தந்தையின்
பிரிவால் வாடுகிறான், அதனால் தற்கொலை செய்துகொள்கிறோம்,
நாங்க வந்த கார் இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தம்” !!
என எழுதி வைத்து விட்டு இறந்திருக்கின்றனர்.

இப்படி எத்தனையோ தெரிந்தும் தெரியாமலும் நிறைய்ய
மரணங்கள் திருப்பதியில். சென்னையிலிருந்து வந்திருந்த
ஒரு குடும்பத்தினர் தற்கொலை பற்றி இங்கே.


நேற்று நடந்த இன்னொரு தற்கொலை பரிதாபம்.
நெல்லூரிலிருந்து வந்திருந்தனர் கணவன், மனைவி,
மற்றும் இரண்டு உறவினர், இரண்டு குழந்தைகள்.
(அதில் பையன் புட்டிபால் குடிக்கும் வயசு)
10 லட்சம் கடன் இருப்பதால் அதிலிருந்து
விடுபட வழித்தெரியாமல் பரலோகம்போக
திருப்பதிக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள்.

பெரியவர்கள் நால்வரும் விஷமருந்தி காட்டேஜில்
இறந்து கிடக்க பக்கத்திலேயே அந்த இரண்டு குழந்தைகளும்
விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.(அவர்களுக்கும்
விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது)

இப்போது அநாதைகளாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்கள். உறவினர்களும்
அதே நிலையில் இருப்பதால் வேறு யாரேனும்
அந்த பிள்ளைகளை பராமரிக்க முன் வந்தால் தான் உண்டு.

கோடி கோடியாக பணம் குவிகிறது அந்த கோவிந்தனுக்கு.
அவனைக் கண்ணாரக் கண்டால் போதும் என கூட்டம்
குவிகிறது. அவனது திருமலையில் இப்போது இரு
பச்சிளம் குழந்தைகள் அநாதைகளாகி நிற்கின்றனர்.


காரணம் யார்?? இது இனி தொடருமா? ஏழுமலையில்
வாசம் செய்வதாகக் கூறப்படும் அந்த
திருப்பதி ஏழுமலை வெங்கடேசனுக்கே வெளிச்சம்.


இறைவனின் மேல் சந்தேகம் வரவழைக்கும்
தருணங்கள் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள
வேண்டியதும் அவன் வேலைதான்.
:(((((


Friday, January 08, 2010

தேவை ஒரு சென்சார்போர்ட் அல்லது சட்டம்

வெள்ளையர்களிடமிருந்து கஷ்டபட்டு வாங்கிய
சுதந்திரம் இப்போது கட்டுப்பாடட்டு கிடக்கிறது.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது.
பேசும் உரிமை/சுதந்திரம் அனைவருக்கும் பொது.
அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’
கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலாம் என்று
ஏதும் இல்லை.

பா ஹிந்தி படத்தில் ஒரு காட்சி. சேனல்காரர்கள்
எப்படி எல்லாம் பேசி சூடேற்றி நிகழ்ச்சி வழங்கி
டீ ஆர் பீ ரேட்டிங் எகிற வைக்கிறார்கள் என்று.
அவர்களுக்கு பதிலடி கொடுப்பார் அபிஷேக் பச்சன்
தூர்தர்ஷன் மூலம். நாட்டின் நிலை இதுதான்.

இதோ தெலுங்கானாவிற்காக ஏற்கனவே கொழுந்து
விட்டு எரிந்து கொண்டிருக்கும் ஆந்திராவில் மற்றுமொரு
கலவரம். உபயம் இங்கே உள்ள ஒரு செய்தி சேனல்.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு
ரிலயன்ஸ் நிறுவனத்தினர் காரணம் என கொளூத்திப்போட
நேற்று ரிலயன்ஸ் கடைகள் அத்தனையையும் அடித்து
துவம்சமாக்கியிருக்கிறார்கள்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Mark Ames எனும் செய்தியாளர்
இணையதளத்தில் எங்கோ

‘Enemy of Larry Summers Ex-Boss Dies in Mysterious Helicopter Crash.’ Summers is currently director of the White House’s National Economic Council for President Barack Obama. According to Ames, Summers worked for Mukesh Ambani, head of Reliance Industries Limited, right until he took the White House job.
என எழுதியிருக்கிறார்.

இதை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டது அந்தச்
சேனல். அவ்வளவு தான் ஆத்திரம் கொண்டு காங்கிரஸ்
தொண்டர்கள் ரிலயன்ஸ் கடைகளைத் துவம்சம் செய்தனர்.

இப்போது அந்த சேனலின் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது
அரசு. அம்பானிகளும் சும்மா விடப்போவதில்லை என சொல்லி
இருக்கிறார்கள்.

சுதந்திரத்தை கட்டுப்பாடற்றதாக செய்கிறது தற்போதைய்ய
சேனல்கள். அதிலும் பல சேனல்கள் ஆளுங்கட்சி,எதிர்கட்சி
இல்லாவிட்டால் ஏதாவதொரு கட்சியின் சார்பு உள்ளது.
இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தங்களுக்குள் கட்டுப்பாடு இல்லாமல் எல்லாவற்றையும்
படம்பிடித்து போட்டு டீ ஆர் பீ ரேட்டிங் ஏத்தி காசாக்கப்
பாக்கிறது சேனல்கள்.

மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லை.
மக்களை உசுப்பேத்திவிட்டு கலவர பூமியாக்குவதில்
சேனல்களின் பங்கு அதிகம்.

முன்பு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையங்களில்
நிகழ்ச்சிகள், செய்திகள் வழங்க சென்சார் செய்துதான்
தருவார்கள். தெரிவிக்கும் வார்த்தையில் கூட
கவனமாக இருப்பார்கள். இதைப்பற்றி என்
முந்தைய பதிவு


அரசு உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வந்து
இந்தத் தனியார் சேனல்களுக்கு சென்சார் போர்டு அமைக்க
வேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது.

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் பொழுது நம் வலையுலகிலும்
அது கட்டவிழ்ந்துதான் இருக்கிறது. இனியாகிலும் யார்
மனதையும் புண்படுத்தாமல் நம் விமர்சனமோ, கருத்தோ
இருக்க வேண்டும்.

இல்லையென்றால் வலைப்பதிவர்களுக்கும் சென்சார்போர்ட்
வைக்கவேண்டுமென அரசு நினைக்கும் நிலை வந்துவிடும்.

Thursday, December 10, 2009

அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்

இப்படி எல்லாம் தேசபக்தி தளும்ப பாடிக்கிட்டு இருந்தோம்.
இனிமே “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது தேசக்
கொள்கை” அப்படின்னு சொன்னா யாரும்,”அப்படியா!!”ன்னு
கேப்பாங்கன்னு நினைக்கிறேன்.

வேற்றுமையை மட்டும் பார்ப்பதுதான் நமது கொள்கையாயிருச்சே.
தெலுங்கானா கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுதே,

தெலுங்கானா - பற்றிய விரிவான கதைக்கு இங்கே
கட்டாயம் பார்க்கவும்.



“தெலுங்கானா மட்டும் பிரிச்சா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்!
ராயலசீமா கேப்போம்னு” ஒரு கோஷ்டி,

”உத்தராந்த்ரா(வடக்கு ஆந்திரா) தந்தே ஆகணும்னு” ஒரு கோஷ்டி,

இதுல ரொட்டிக்கு சண்டை போட்டுகிட்ட பூனைகள் மாதிரி
ஹைதராபாத் எங்களுக்கேங்கறாங்க சிலர், சிலரோ ஹைதையை
யூனியன் டெரிடரி ஆக்கிடுங்கன்னு சொல்றாங்க. ஹைதை
எங்கே? யாருக்கு? என்னாவாக போகுதுன்னு பாக்கணும். :((

காங்கிரஸ், பிரஜாராஜ்யம், தெலுகு தேசத்தை
35 எம்பிக்கள் ராயலசீமாவுக்காக தனது பதிவியை ராஜினாமா
செஞ்சாங்கன்னு செய்தி இன்னைக்கு மதியம் டீவில் வந்துச்சு.

தெலுங்கானா கொடுத்தா கம்மம் மாவட்டத்தில் இருக்கும்
பத்ராசலம் கோவிலும், கோதாவரியும் தமக்கே சேரணும்னு
கரையோர ஆந்திரா கேட்டதாக டீவில காட்டினாங்க.


என்ன கொடுமைடா சாமி இதுன்னு பாத்துகிட்டு இருக்கும்போது
தமிழ் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து இன்னுமும்
நொந்துக்க வேண்டியதாச்சு. புதுச்சேரியிலிருந்து காரைக்காலை
பிரிச்சு தனி யூனியன் டெரிடரியாக கொடுக்கணும்னு
ஆரம்பிச்சிருக்காங்க. மஹாராஷ்ட்ரத்தில் விபர்தாவை
தனியா பிரிக்கணுமாம்!!!


இதே போக்குல போனா இந்தியா எனும் நாடு இருந்துச்சுன்னு
சொல்லிக்கறா மாதிரி ஆகிடும் போல இருக்கே. இப்ப
தனி மாநிலம் வேணும்னு கேக்கறவங்க, பின்னாளில்
மாநிலமா இருந்து போரடிச்சு போச்சு, எனக்கு பிரதம
மந்திரி ஆகணும்னு தனி நாடு கேட்டு போராடுவாங்க.


தெலுங்கானா வரும்னு கண்டிப்பான உத்திரவாதம்
ஏதும் காங்கிரஸ் கொடுக்கலை என்பது என் கருத்து.
சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால்
மாணவர்கள் இன்னமும் வன்முறையில் ஈடுபடுவாங்க.
அதை தடுத்து நிறுத்தவே தெலுங்கானா வரும்னு
சொல்லியிருக்காரு. வரும்,வராது என்பது போலன்னு
வெச்சுக்கலாம்.

தெலுங்கானா எனும் மாநிலம் அமைய எடுத்து வைத்திருக்கும்
முதல் அடி இதுன்னு காங்கிரஸ் சொல்லுது. மாநிலம்
உருவாக எத்தனை நாளாகும்னு சொல்ல முடியாதுன்னும்
சொல்லியிருக்காங்க. இந்த வெண்டைக்காய் கொழ கொழ
மாதிரி இருக்கறதை புரிஞ்சிக்காமலா TRS கட்சி தனது
போராட்டத்தை கைவிட்டுச்சு!!!!!! இன்றைக்கு நடந்த பேரணியை
“வெற்றிப் பேரணியா” நடத்தினாங்க.

இன்னைக்கு காலேல பேப்பர் படிச்சபவே புரிஞ்சிருச்சு
இது ஒரு கண் துடைப்புன்னு. டீவி 9 சேனலில்
ஒருவர் சொன்னது தான் கொடுமையா இருந்துச்சு.
“50 வருட போராட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்திருக்கு.
இதுவரை அரசியல்வாதிகள் மட்டுமே போராடி
எதுவும் செய்ய முடியலை. இந்த முறை மாணவர்கள்
அதை செஞ்சு காட்டியிருக்காங்க!!!””
இது தவறான செய்தியாக மாணவர்களுக்கு போய்ச்
சேருமேன்னு தான் கவலையா இருக்கு.

போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் பள்ளிகள்,
கல்லூரிகள் மூடப்படுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது.
இன்னும் எத்தனை உண்ணாவிரதமோ, எத்தனை
பந்த்களோ,போராட்டங்கள் இதற்கு விலையாகும்
மாணவர்களின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி??????