Showing posts with label பர்சனல். Show all posts
Showing posts with label பர்சனல். Show all posts

Tuesday, November 01, 2011

நலம். நலமறிய ஆவல்.

தீபாவளி எப்படி கொண்டாடினேன்னு பதிவு போடறேன்னு சொல்லிட்டு
பதிவு பக்கமே வரலியேன்னு திட்டிகிட்டு இருந்திருப்பீங்க. ரொம்ப
சாரி. தம்பி வந்து போன சமயம், தீபாவளிக்கு ஊருக்குப்போன
வேலைக்காரம்மா தீபாவளிக்கு மறுநாள்தான் வந்தாங்க. ஆல் இன்
ஆல் அழகுராணியா நாம் வேலைப்பாத்தா கை சும்மா இருக்குமா?
செம வலி. க்ரேப் பேண்டேஜ் கட்டி ரெஸ்ட் கொடுத்தே ஆக
வேண்டிய கட்டாயம்.

தீபாவளிக்கு பலகாரம் செஞ்சதை எல்லாம் படம் பிடிச்சு
போடணும்னு நினைச்சிருந்தேன். இருந்த வேலைப்பளுவில
முடியவே இல்லை. படம் இல்லாட்டி என்ன செஞ்சதை
சொல்றேன். கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர், ஆந்திரா தட்டை,
அம்மா அனுப்பியிருந்த ரவாலாடு பொடியை வைத்து
ரவா உருண்டை, தீபாவளி லேகியமும் அம்மா பொடியா
அனுப்பியிருந்தாங்க. சரியான பதத்துல சூப்பரா லேகியம்,
மைக்ரோ அவன்ல மொறுமொறுன்னு, அப்புறம் சாஃப்டா
இரண்டு வகை மைசூர்பாக் செஞ்சேன். அயித்த்தான்
செம பாராட்டு. கோதுமை மாவில் லட்டு செஞ்சேன்.

தீபாவளிக்கு முதல் நாள் உக்காரை, வெங்காய,உருளை,
வாழைக்காய் பஜ்ஜி. அம்புட்டுதான்.

இனி தொடர்ந்து பதிவு எழுதுவேன்னு நினைக்கிறேன்.
ஆண்டவனருள் வேணும். இந்த சமயத்துல ஒரு சந்தோஷமான
செய்தியை பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுறேன்.

ஆஷிஷ் அண்ணா போன மாதம் 9ஆம் தேதி FIITJEE
நடத்திய NATIONAL SCIENCE TALENT SEARCH EXAMல
கலந்துகிட்டாரு. 5ஆம் தேதி ராத்திரிதான் குல்லுவிலிருந்து
அண்ணா வந்தாரு. இருந்த கொஞ்ச நேரத்துல பரிட்சைக்கு
ரெடியானாரு. இன்னைக்கு கொரியர் வந்திருக்கு. ஆஷிஷ்
அண்ணா தேசிய அளவில் 12092ஆவது ரேங்கில் பாஸ்
செய்திருக்காரு. FIITJEE ல் கோர்ஸ் சேர்ந்து படிக்கும்
வாய்ப்பு வந்திருக்கு. இறைவனுக்கு நன்றி.
ஆஷிஷ்ற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மீண்டும் சந்திக்கிறேன்.

Tuesday, October 12, 2010

அம்மம்மா வீடு (அடுத்த பதிவு)

முந்தைய பதிவுக்கு

லீவு விட்டா அம்மம்மா வீட்டில்தான் இருப்பேன். அப்பா, அம்மா திட்டினாலும்
தஞ்சம் புகுவது அம்மம்மாவிடம் தான். ஒரு முறை ஏதோ பெரியவர்களுக்குள்
ஏதோ சண்டையாகி அந்தக் கோபத்தை என் மேல் காட்டி,அம்மா என்னை”வீட்டை
விட்டு வெளியே போ”!! என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான்
நாலு ட்ரெஸ் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு கோப கோபமாக
சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி அம்மம்மா வீட்டுக்குத்
தனியாக போய்விட்டேன். 12 வயது அப்போது. அம்மம்மாவிடம் அழுதுகொண்டே போய்
நின்றேன். என்னைத் தேடி யாரும் வரவில்லை. கழுதை கெட்டா
குட்டிசுவரு என்று பெத்தவங்களுக்குத் தெரியும். :)) என்னை கூப்பிடவும்
வரவில்லை. மாமா போய் நான் இங்கே இருப்பதாக தகவல் மட்டும்
சொல்லி வந்தார்.

5 நாள் வைத்திருந்து என் கோபத்தை தணித்து அம்மம்மாதான் சமாதானம்
செய்து அப்பா அம்மாவிடம் கொண்டு போய் விட்டார்.

அம்மம்மாவை எத்தனை பிடிக்குமோ அதில் பாதி அம்மம்மா வாழ்ந்த
அந்த வீட்டையும் பிடிக்கும். பெரிய வீடு கிடையாது. ஒரு வராண்டா,
சின்ன ஹால், சமையலறை, சாமி அறையில் பீரோ வைத்து
தடுத்த ஒரே ஒரு ரூம். இவ்வளவு சின்ன வீடுதான். உள்ளே நுழையும்
நிமிடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆனந்தம். அம்மம்மா வீட்டை
உள்ளேஅடக்கி கட்டிவிட்டு சுத்தி தோட்டம் வைத்திருந்தார்.

கொழக்கட்டை மந்தாரைபூ, குண்டு மல்லி, ரோஜா, அடுக்கு செம்பருத்தி,
ஒத்த செம்பருத்தி, மாதுளம்பழம், மாமரம், வாதாமரம்,நடக்கும் வழிக்கு
இருபக்கமும் கத்திரிக்காய், வெண்டைக்காய், ப.மிளகாய், பொன்னாங்கன்னி
போன்ற கீரை வகைகள் இருக்கும். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள்
அப்போது பறித்து சமைக்கும் வகையில் இருக்கும். பூஜைக்கு நிதமும்
பூ பறித்து வைப்பதுதான் காலை எழுந்ததும் முக்கியமான வேலை.
30 நிமிடத்துக்கும் மேலாகும் பறித்து முடிக்க. பாசமாக பார்த்து
பார்த்து அம்மம்மா பராமரித்ததற்கு வஞ்சனை இல்லாமல் எல்லா
மரமும் பூத்துக் குலுங்கும். தனக்கு போக தான தர்மமும் செய்வார்
அம்மம்மா.

வாசலுக்கு மதில் சுவர் கிடையாது. முள்கம்பி வேலிதான். கதவுக்கு
பதில் தட்டி கதவு. அதன் மேல் ஒரு வளைவு. அதில் வாசமிகு
சம்பங்கி பூ. கதவை திறந்து வருபவர்கள் அந்த வாசனையில்
சொக்காமல் இருக்க மாட்டார்கள். இரண்டு மருதாணி மரம் உண்டு
அம்மம்மா வீட்டில். எனக்கு மருதாணி வைக்க வேண்டும் என்று
சொன்னால் போதும் வீட்டில் வேலை செய்யும் செல்லாயி இடம்
சொல்லி அரைத்து கொடுக்கச் சொல்லி அம்மம்மா வைத்து விடுவார்.
மருதாணி பறித்துக்கொடுத்து விடுவேன். மருதாணி பூ வாசம்....
மறக்க முடியுமா??

வீட்டிற்கு பின்புறம் ஒரே ஒரு தென்னை மரம், எலுமிச்சை மரம்,
துளசி மாடம், நார்த்தங்காய் மரம். நார்த்தாங்காய்களை சுருள் சுருளாக
நறுக்கி உப்பு போட்டு ஊற வைத்து, வெயில் காயவைத்து
அம்மம்மா வைத்திருப்பார். ஜுர நேரத்தில் கஞ்சிக்கு சரியான
ஜோடி அந்த நார்த்தங்காய்தான். சும்மாவே கூட கேட்டு வாங்கி
சப்புகொட்டி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்.

வெயில் காலத்தில் தாத்தா சில சமயம் கயிற்று கட்டில் போட்டுக்
கொண்டு வெளியே படுத்திருப்பார். அது போல ஒரு சமயம்
படுத்திருந்த பொழுது எதேச்சையாக தண்ணீர் குடிக்க எழுந்தவர்
தலைமாட்டில் ஏதோ அசைவது தெரிய பார்த்தால்.... மிஸ்டர்
கருநாகம் படமெடுத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
நல்லவேளை..... அவர் ஏதும் செய்யாமல் தானகவே
சென்றுவிட்டார். மாமா வந்து சொன்ன பொழுது குலையே
நடுங்கிவிட்டது.

அம்மம்மா வீட்டை சுத்த படுத்துகிறார்கள் என்றால் எனக்கும்
என்ன சின்ன மாமா குமார் மாமாவுக்கும் ஜாலி. கரப்பான்
பூச்சிகளை அம்மம்மா வெளியேற்ற நானும் மாமாவும் அவற்றை
சம்ஹாரம் செய்து ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு யார்
அதிக எண்ணிக்கையில் அடித்தது என்று போட்டி போடுவோம்.
செத்த கரப்பான்களை மீசையைப் பிடித்து ஊஞ்சல் போல
ஆட்டிக்கொண்டு போய் குப்பையில் போடுவேன். பொறுத்து
பொறுத்து பார்த்து செல்லாயி அத்தனையையும் அள்ளி
கொண்டு போய் கொட்டுவார்.

என் நீண்ட தலைமுடிக்கு(முன்பு) அம்மம்மாவின் மெனக்கெடல்தான்
காரணம். நல்ல அடர்த்தியான, அதே சமயம் நீண்ட கரு கருவென
முடி. பஞ்சு போல் இருக்கும். அம்மம்மா ஷாம்பு போட்டு குளிக்க
விட்டதே இல்லை. செம்பருத்தி இலையை அரைத்து அதில்
சிகைகக்காய் போட்டு தானே தலைக்கு குளிப்பாட்டுவார். திருமண
நாள் அன்று எண்ணெய்க்குளிய்ல் கூட ஷாம்பு போடவிடாமல்
சிகைக்காய் பேஸ்ட் வாங்கி வரச் செய்து தானே குளிப்பாட்டினார்.
நான் முடியை வெட்டி விட்ட பொழுது அம்மம்மா வருத்தப்பட்டார்.
”கல்யாணம் செஞ்சு அனுப்பி விட்டுட்டீங்க.நானே எல்லாம் செஞ்சுக்கணும்.
இதுல முடியை கவனிக்க முடியலை அம்மா, கூட நீங்களும் வந்திருக்கலாம்!!”
என்று சொன்னாலும் அம்மம்மா சமாதானம் ஆகவில்லை. 78 வயதில்
இப்போதும் அம்மம்மாவுக்கு நீளள...மான முடி.

அம்மம்மாவுக்கு எங்க வீட்டு வைத்தியர் என்று பெயரே உண்டு.
துந்நூத்திப்பச்சிலை, துத்தி இலை, கருந்துளசி,ஓமவள்ளி
எல்லாம் வீட்டிலேயே வைத்திருப்பார். ஓமவாட்டர் தானே தயாரித்து வைத்திருப்பார்.
வயிறு உப்பசமா ஓமவாட்டர் கொடுத்திடுவார். துத்தி இலையை
எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்திருப்பார். அது சர்வரோக
நிவாரணி மாதிரி. வீக்கமா, அடி பட்டிருக்கா, காயமா எல்லாத்துக்கும்
அது போட்டால் சரியாகி விடும். எல்லாவற்றிற்கும் கை வைத்தியம் தான்.

அம்மம்மா வீட்டில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை வேப்பிலையை
ஓமம் வைத்து அரைத்து கல் உப்பு வைத்து சாப்பி கொடுத்துவிடுவார்.
குமார் மாமா அலறி ஓடி திட்டு வாங்கி சாப்பிடுவார். வேப்பிலை
கசப்பு கூட எனக்குத் தெரியாது. அம்மம்மா கொடுத்தது என்று
சாப்பிட்டுவிடுவேன். வயிற்றில் பூச்சி வராமல் இருக்க அம்மம்மாவின்
மருந்து இது. கொழக்கட்டை மந்தாரை இலையை அரைத்து
தயிரில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

வீட்டில் இருக்கும் மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலி இவைகளை
அரைத்து அம்மம்மா தேங்காய் எண்ணெய் காய்ச்சுவார். தலைக்கு
இதைவிட சூப்பர் எண்ணெய் கிடைக்கவே கிடையாது. தமிழ்நாடு
அரசின் “டாம்ப்கால்”எண்ணெயை விட இந்த எண்ணெய் சூப்பர்.
பலரும் அம்மம்மாவிடம் வாங்கிச் செல்வார்கள். தேங்கா எண்ணெய்
மட்டும் அவர்கள் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

ஒரு முறை தீபாவளிக்கு சர்பரைஸாக குஜராத்தில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த சித்தி,அம்மாவின் பெரிய்யம்மா பையன்கள்
(என் ராமு மாமாவும் இன்னொரு மாமாவும்) மும்பையிலிருந்த சத்யா மாமா
தீபாவளி அன்று காலையில் வந்திறங்கி ஆச்சிரியப்படுத்தினார்கள்.
இரண்டு மருதாணி மரத்துக்கும் இடையே கயிறு கட்டி ட்ரெயின் விட்டது
அப்போதுதான். அந்தத் தீபாவளி படு ஜாலியாக இருந்தது.

நான் அக்காவாக ப்ரோமஷன் அடைந்த விஷயத்தை சித்தி எனக்குச்
சொல்லியது அந்த வீட்டில்தான். ஒவ்வொரு வருடமும் புது
வகுப்புக்கு போகும்பொழுது முதல் நாள் இரவே தாத்தா வாங்கி
வந்திருக்கும் புது புத்தகங்களுடன் என்னை எழுப்பி சித்தி கொடுப்பது
வழக்கம். ஒருமுறை பெரிய்ய்ய்ய பேனா ஒன்று அதற்கு மூடி
கை போல் இருக்கும். பார்த்து பார்த்து சித்தி செய்வார்.

ஸ்ரீநிவாஸ நகர் ஏரியாவில் அம்மம்மாவீடு இன்னொரு விஷயத்துக்கும்
பிரபலம். அது ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் நடை பெறும்
சத்யநாராயண விரதம். காலை முதல் விரதமிருந்து சாயந்திரம்
பூஜை நடக்கும். 2 மணி நேரம் பூஜை. பிரசாதம் எல்லோருக்காகவும்
செய்வார் அம்மம்மா. கிட்டத்தட்ட 30 பேராவது கலந்து கொள்வார்கள்.

அம்மம்மா தாத்தாவின் சஷ்டி அப்த பூர்த்தி நடந்தது இந்த வீட்டில்தான்.
தண்ணீருக்கு கஷ்டமாகும் என்று டேங்கர் வரவழைத்து ட்ரம்கள்
வாடகைக்கு வாங்கி நீர் நிரப்பி வைத்திருந்தோம். சஷ்டி அப்த பூர்த்தி
அன்று பெய்தது பாருங்கள் ஒரு மழை.... அதில் அம்மம்மாவீட்டுக்
கிணற்றில் தண்ணீரை கையாலே மொண்டு எடுத்துக்கொள்ளும்
அளவுக்கு நீர் நிறைந்தது!!! 1988ஆம் ஆண்டு பெய்த அந்த மழையைப்
போல புதுகையில் அவ்வளவு பெரிய மழை பெய்தது இல்லை.

வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டு மாடியில் சாப்பாடு .
நனைந்து கொண்டே சுடச்சுட உணவுகளை கொண்டு சென்றது ஒரு
அனுபவம். எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள் அந்த வீட்டுக்கும்
எனக்கும்.

சின்ன வயதில் செலக்டிவாகத்தான் சினிமா பார்ப்பேன். அப்பா,
அம்மா, தம்பி மட்டும் போனால் நான் டிக்கெட்டுக்கான
காசை வாங்கி என் உண்டியலில் போட்டுக்கொண்டு வீட்டில்
அவ்வாவுடன் இருந்துவிடுவேன். தொந்திரவு இல்லாமல்
ரேடியோ கேக்க முடியுமே!! :)) அம்மம்மா வீட்டுக்கு
பக்கத்தில் இருக்கு சரவணா தியேட்டருக்கு போனால் மட்டும்
கூடவே போய் அம்மம்மாவீட்டில் இருப்பேன். அப்பா அம்மா
வீடு திரும்பும் போது அவர்களுடன் திரும்ப வருவேன்.

தியேட்டர் உரிமையாளர் தாத்தாவுக்குத் தெரியும் என்பதால்
டிக்கெட்டுக்கு சொல்லி வைத்துவிட்டு 3ஆவது பெல் அடித்த
பிறகு தான் போவோம். நான் ,சித்தி, குமார் மாமா மூவர்
மட்டும் மூன்று முகம் ரஜினி படம் பார்த்தது என நிறைய்ய
கொசுவத்தி.

மாமரத்திலிருந்து விழும் பூக்களின் வாசம், வாதம்பழம்,
சம்பங்கி பூ, மருதாணி பூ என பூக்களின் வாசத்துடன்
அந்த வீட்டை என் ராஜலட்சுமி அம்மம்மா ராஜ்ஜியம்
நடத்தியதை இப்போதும் நினைத்து பார்த்துக்கொண்டு
இருக்கிறேன். அந்த வீட்டை விற்றுவிட்டு அம்மம்மா
மும்பைக்கு போனதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.
நினைத்தால் அம்மம்மாவிடம் போக முடியாது என்பதுடன்
அந்த வீடு நமது இல்லை என்பதும் தான்.


Monday, October 11, 2010

அம்மம்மா வீடு

அம்மம்மா... இந்த பெயரை உச்சரிக்காத நாளே இருக்காது
எனக்கு. ஒவ்வொன்றுக்கும் அம்மம்மாவுடன் ஏதோ லிங்க்
இருக்கும். என் அம்மாவுக்கு தாய்வீடும் உள்ளூரிலேயே
அமைந்துவிட நான் எப்போதும் இருந்தது அம்மம்மாவிடம் தான்.
அது ஏதோ ஒரு அதீத அன்பு அம்மம்மா மேல். ”அம்மம்மா வீடு”
என எனக்கு நினைவு இருப்பது எல்லாம் புதுகை தஞ்சாவூர் ரோடில் மச்சுவாடி
தாண்டி சென்றால் வரும் ஸ்ரீநிவாஸ நகர் வீடு. நான் சின்ன
பிள்ளையாய் இருந்த பொழுது அங்கே வீடு கட்டினார்கள்.
6 அல்லது 7 வயதிருக்கலாம்.

அம்மம்மா அங்கே இடம் வாங்கிய பொழுது சுத்தி பொட்டல்காடு.
செம்மண் சாலைதான் இருக்கும். வீடு கட்டும்பொழுதே
நரியை பார்த்திருப்பதாக சொல்வார்கள். அம்மம்மா வீடு
கட்டி முடித்த பொழுது  அதி தொலைவில் ஏதோ இரண்டு
அல்லது மூன்று வீடுகள் இருக்கும். அம்மம்மாவீட்டுக்குச்
சென்றால் நிஜமாகவே நரி முகத்தில் முழிக்கலாம்.

நல்ல தண்ணிக் குழாய் கிடையாது. கிணற்றில் கொஞ்சம்
உப்புத் தண்ணீர்தான். கொஞ்ச தூரம் சென்று அங்கே
இருக்கும் குளத்தில் குடிதண்ணீர் கொண்டு வந்து
அதிலும் படிகாரம் போட்டு வைக்க வேண்டும். கலங்கலாக
இருக்கும் தண்ணீரை தெளியவைத்து வடிகட்டி குடி
தண்ணீர் ரெடி செய்வார் அம்மம்மா. கடை ஏதும் கிடையாது.
பஸ்ஸுக்கு பிரச்சனையில்லை. டவுன் பஸ் இருக்கும்.

அப்புறம் சில வீடுகள் வந்தன. கிணற்றில் தண்ணீர் இறைக்கும்
பொழுது சித்தியின் காலின் மேலேறி பச்சைப்பாம்பு செல்லும்!
ஓலைப்பாம்பு நெளிந்து நெளிந்து போய்க்கொண்டிருப்பதை
பார்த்துக்கொண்டிருப்பேன். நானும் சின்ன மாமாவும்
எத்தனை பாம்புகள் பார்த்தோம் என கணக்கு வைத்துக்
கொள்வோம். ஒரு முறை பிரண்டை செடியில் பச்சைப்
பாம்பு சுத்திக்கொண்டு கிடந்தது. துவையலுக்கு பிரண்டை
பறிக்க போன அம்மம்மா சொன்னார்.

அம்மம்மா வீட்டு கிணற்றை வெட்டும்பொழுது, அதில்
உரை இறக்கியது என எல்லாமே அதிசயம் எனக்கு.
ஊற்றில் தண்ணீர் குபு குபுவென வந்து கிணறு
நிறைவதை பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனால்
ரொம்ப தண்ணீர் இருக்காது. தேவைக்கு இருக்கும்.

சமையலறையை ஒட்டியவாரே சாமி அறை.
அம்மம்மா ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல்
செய்யும் அழகே அழகு. எல்லா வேலைகளையும் முடித்து
விட்டு பின் கதவுபக்கம் பலகையை தலைக்கு வைத்துக்
கொண்டு அம்மம்மா கதை புத்தகங்கள் படிப்பார்,
ஸ்வெட்டர் பின்னுவார், அரிசியில் நெல் எடுப்பது
எல்லாம் அப்போதுதான். மதியத் தூக்கம் கிடையாது.


அம்மம்மாவீட்டுக்கு மிக அருகில் ஸ்ரீநிவாஸா தியேட்டர்
கட்டியபொழுது போட்ட ஆழ்குளாய் கிணறை வாய்பிளந்து
பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் பீய்ச்சி அடித்து
வந்ததை இப்போதும் மறக்க முடியாது.

அதன் பிறகுதான் பல வீடுகள் வந்தன. நிறைய்ய
நட்புக்கள். ஆனாலும் செம்மண் சாலைதான். கால்வாய்
கிடையாது. மழை பெய்தால் சாலை கொழ கொழவென
கால் வைக்க முடியாத படி ஆகிவிடும். ஆனால்
அம்மம்மாவீடு என்றால் இவைகளைத்தவிரவும்
வேறு சில ஞாபகங்கள் உண்டு. அம்மம்மா அந்த
வீட்டை விற்று 20 வருடங்கள் ஆன பிறகு என்
நினைவு விட்டு அகலாத அந்த வீட்டின் அழகு....
அவை அடுத்த பதிவில்