Showing posts with label முக்கியமான பயண அனுபவம்.. Show all posts
Showing posts with label முக்கியமான பயண அனுபவம்.. Show all posts

Saturday, April 07, 2012

பயண அனுபவம் - இறுதி பாகம்

கசப்பான அனுபவத்திற்கு பிறகு அந்த காரியத்தை செய்ய
கூடாது என்ற முடிவுக்கே வந்துவிட்டோம். தனியாகவே
செல்ல ஆரம்பித்தோம். தனியாக செல்வது ஒரு சுகம்

வெளிநாட்டில் இருக்கும் பொழுது நமக்குத் தெரிந்தவர்கள்தான்
உறவினர் போல. தாஜ் சமுத்ராவில் எக்ஸிகியூட்டிவ் ஹவுஸ்கீப்பிங்
மேடம் அப்படி உறவாகிப்போனவர். அவரை வீட்டுக்கு விருந்துக்கு
அழைத்திருந்த பொழுது கதிர்காமம் வரைச் சென்று தரிசனம்
செய்ய முடியாம திரும்ப வந்ததைச் சொன்னார். பாவமே
என்று இருந்தது. 7 மணிநேரப்பயணம் செய்து கதிர்காமம் அடைந்து
சாமி தரிசனம் செய்யமுடியவில்லை என்றால் எப்படி இருக்கும்!!!

எங்களின் ஆனந்தமான தரிசனம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தோம்.
அடுத்த முறை போவதானால் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று
சொன்னதும் ஆஹா என்று நினைத்தோம். நாங்கள் குடியிருந்த
வீட்டில் உரிமையாளர் ஆண்டியும் நானும் வருகிறேன் என்று
சொல்லிவிட்டார். என் உறவினர் மகன் அவனுடைய இரண்டு
நண்பர்களும் கதிர்காமம் பார்க்கவிரும்புவதாகவும் அவர்களையும்
அழைத்து செல்லலாம் என்று சொல்ல எனக்கும் அயித்தானுக்கு
பக் பக்கென்று ஆனது. சின்ன வண்டி பத்தாது. ஹயஸ் வேன் தான்
வேண்டும்.



தெரிந்தவர்களுடன் பேசி தமிழர் ஒருவர் கிடைத்தார்.( ஸ்ரீ என்று பெயர்.
அதன் பிறகு அவர்தான் எங்கள் ஆஸ்தான டிரைவர்.) காலை 7
மணிக்கு கொழும்புவிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று
சொல்லியிருந்தோம். உறவினர் மகனும் அவரது நட்புக்களும்
முதல் நாளே எங்கள்வீட்டில் வந்து தங்கி காலையில் ரெடியாகிவிட்டோம்.
டிரைவர் ஹோட்டலில் இருந்து அவர்களை கூட்டிக்கொண்டு
எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதற்கு முன் காலை டிபன், மதிய சாப்பாடு ரெடி செய்து
வைத்திருந்தேன். தாஜ் ஹோட்டலில் மிகவும் சுவையான
கேக் 2கிலோ, சாண்ட்விச் எல்லாம் கொண்டுவந்திருந்தார் மேடம்.
எங்க ஹவுஸ் ஓனரோ ஜூஸ், பிஸ்கட் எல்லாம் கொண்டு
வந்தார். ஆனந்தமாக பயணம் ஆரம்பமானது. பெந்தோடயில்
கடலலைகளின் ஆரவாரத்துடன் காலை உணவு சாப்பிட்டோம்.

அதன்பிறகு ஸ்நாக்ஸ், தம்பிளி (இளநீ) என நடுநடுவே...
அந்த வேனில் டீவி இருந்தது.கையோடு நல்ல சினிமாக்கள்
கொண்டு சென்றிருந்தோம். சிங்களராக இருந்தாலும் எங்கள்
ஹவுஸ் ஓனர் மிகவும் கனிவானவர். எல்லாரும் சேர்ந்து
பேசி சிரித்திக்கொண்டு ஆனந்தமாக மதிய உணவு சாப்பிட
இடம் தேடி அருமையான இடம் கண்டுபிடித்தோம்.
கூடாரம் மாதிரி போட்டு வைத்திருந்த இடத்தில் எங்கள்
சாப்பாட்டுக்கடையை திறந்து உட்கார்ந்தோம். “கவிச்சி இல்ல
கஷ்டம் தான்” என்று சொல்லிக்கொண்டே டிரைவர் ஸ்ரீயும்
சாப்பிட்டார்.

மதியம் 4 மணிவாக்கில் திஸ்ஸமகராம எனும் இடத்தை
அடைந்தோம். அங்கே ஹோட்டல் ரூம் புக் செய்து வைத்திருந்தோம்.
அங்கேயிருந்து 30 நிமிட பயணம் தான் கதிர்காமம். ரூமிற்கு சென்று
ரெஃப்ரெஷ்ஷாகி ஹோட்டலில் இருந்து மேடம் கொண்டு வந்திருந்த
டீ/காபி கிட் வைத்து டீ காபி தயார் செய்து குடித்து கோவிலுக்கு
கிளம்பினோம்.

6 மணிக்கு கோவில் சந்நிதியில். அந்த நேரம் ஆராதனை நேரம்.
அந்த பூஜைக்கு முன்பு யானை மலர் வைத்து வணங்கிச் செல்லும்.
அதெல்லாம் பார்த்து சந்நிதி உள் நின்று கொண்டோம். பூஜை
நடக்கும் பொழுது பார்க்க பரவசமாக இருக்கும். ஆலயமணிகளின்
ஆரவாரத்தையும், கொட்டு முழக்கத்தையும் தவிர வேறு எந்த
சத்தமும் கேட்காது. தாஜ் மேடம் தன் மகள், மற்றும் மகனுடன்
வந்திருந்தார். அனைவரும் ஆனந்தமான தரிசனம் செய்தோம்.

இரவு உணவு என்ன என்று மற்றவர்கள் கேட்டபொழுது இங்கே
இடியாப்பம், ஆப்பம் நல்லா இருக்கும் என்றதும் அதையே
சாப்பிடுவோம் என்று கோரஸ் போட ரோட்டோர கையேந்தி
பவனில் சாப்பிட்டோம். ரூமுக்கு திரும்பி ரெஸ்ட் எடுத்து.
அடுத்த நாள் செல்லக்கதிர்காமம் (இங்கேதான் கஜமுகன்
யானையாக வந்து வள்ளியை பயமுறுத்தியது) தரிசனம்
செய்து கொழும்பு கிளம்பினோம். மதியச் சாப்பாடு வழியில்.
இரவு உணவுக்கு கொழும்பு அடைந்து கிடைத்த ஹோட்டலில்.

வண்டிச்சத்தம், உணவு, இருப்பிடம் எல்லாம் கணக்குப்போட்டு
தலைக்கு இத்தனை என வகுத்து சொன்னதும் பணம் கொடுத்து
விடுவார்கள். அதன் பிறகு எங்கள் இந்த குரூப் ஒவ்வொரு
வருடமும் டிசம்பர் மாதத்தில் கதிர்காமம் செல்ல தவறியதே
இல்லை. இதில் சில நபர்கள் கூடுவார்கள், குறைவார்கள்.
ஆனால் பயணம் அனைவருக்கும் மிக மிக இனிதாக இருந்தது.
இன்று வரை அனைவரும் நினைத்துப்பார்த்து மகிழும்
விதத்தில் அருமையாக இருந்தது பயணம்.



ஒரே மாதிரியாக நினைக்கும் கூட்டம் இருந்தால் போதும்.
ஒன்றாக பயணிக்கும் பொழுது ஒரு புரிதல் வேண்டும்.
எங்கள் குரூப் நண்பர்கள் சேர்ந்து நுவரேலியா, கண்டி
கூட போனோம். ஹோட்டல் புக்கிங், சுற்றி பார்க்க
செய்திருந்த ஏற்பாடு எல்லாம் அனைவருக்கும் மிகவும்
பிடித்திருந்தது. (அயித்தானுக்கு ஹோட்டல் இன்டஸ்ட்ரியில்
அனைவரும் பழக்கம்.) நல்ல டிரைவரும்
அமைந்தது ஆண்டவன் வரம். இலங்கையை விட்டுவிட்டு
வந்தபிறகு 3 வருடங்களுக்கு முன்பு மறுபடி இலங்கை
சென்றிருந்த பொழுதும் ஸ்ரீதான் எங்களுக்கு வண்டி
எடுத்து வந்தது. ஏதோ உறவினரை பார்ப்பது போல
ஒரே சந்தோஷம் அவருக்கு.

கசப்பான அனுபவத்தைத் தந்த இறைவன் அதன் பிறகு
நினைவலையில் வைத்து புரட்டி பார்த்து மகிழக்கூடிய
இனிய அனுபவத்தையும் தந்தான். இன்று வரை இந்த
நட்புக்களுடன் தொடர்பு இருக்கிறது. இதில் ஒரு நண்பர்
பல ஊர் மாறினாலும் மாறாமல் தொடர்பில் இருக்கிறார்.


கதிர்காமம் அழைத்துச் சென்று நல்ல தரிசனம் செய்து
வைத்தாயே என்று அந்த மேடம் இன்றளவும் சொல்லிக்
கொண்டு இருக்கிறார். ஒரு முறை எங்கள் ஹவுஸ் ஓனர்
எங்களுடன் இந்தியா வந்து திருப்பதி சென்று தரிசனம்
செய்ய முடியாமல் போய்விட்டதாம். எங்களுடன்
திருப்பதியில் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டார்.
அதன் பிறகுதான் அவருக்கு பேரப்பிள்ளையை பாக்கியம்
கிடைத்தது என்பதால் பாலாஜி மேல் அலாதிப் பிரியம்
ஆகிவிட்டது. விசாரித்து மடல் எழுதும் பொழுதெல்லாம்
”என்னை மறுபடி திருப்பதி அழைத்துப்போ, நன்றி
சொல்ல வேண்டும்!” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.



Friday, April 06, 2012

பயண அனுபவம்!!!!

எப்பொழுதும் அலுக்காத ஒரு விஷயம் பயணம். பிள்ளைகளுக்கு
விடுமுறை விட்ட உடன் ஏதாவது ஒரு ஊருக்கு பயணிக்கும்
அளவுக்கு நாங்கள் விடுமுறை ப்ரியர்கள். :)) ஆனால் எங்களுடைய
ஒரு விடுமுறை பயண அனுபவத்தைப் பற்றி இங்கே சொல்லியே
ஆகவேண்டும். பீடிகை பலமா இருக்கேனு கேக்கறீங்களா??!!!
வாங்க என்னன்னு பாக்கலாம்.

இது நடந்தது 2003. ஆமாம் களம் இலங்கை. அயித்தானின் நண்பர்
தன் குடும்பத்துடன் இலங்கைப்பயணம் செய்யனும்னு ஆசைப்பட்டு
மடல் அனுப்பியிருந்தார். பிள்ளைகளுக்கும் விடுமுறையாக இருக்கவே
திட்டம் போட்டு எல்லாம் ரெடி செஞ்சாச்சு.



அயித்தானின் நண்பர், அவரது மனைவி, 5 வயது மகன்,
9 மாத குட்டி பாப்பா இவர்களுடன் நாங்கள் நால்வரும் கிளம்பினோம்.
காலை 7 மணிக்கு கிளம்பவேண்டும் என்ற திட்டம் சொதப்பப்பட்டு
8 மணிக்குத்தான் கிளம்பினோம். காரணம் அயித்தானின் நண்பரின்
மகனுக்கு லேசா ஜுரம் இருந்தது. அவங்க கையில மருந்து ஏதும்
கொண்டு வரலை!! (ஊரிலிருந்து கிளம்பும் அன்று லைட்டா ஜுரம்
இருந்திருக்கு) என் கையில் இருந்த மருந்தைக்கொடுத்து கிளம்பினோம்.
(ஊருக்கு கிளம்பறோம்னா ட்ரெஸ் எடுத்துவைப்பதோடு இப்ப
வரைக்கும் அவசர தேவைக்கு மருந்து கிட்டையும் எடுத்து வைப்பது
என் பழக்கம்)

2 மணிநேரப் பயணத்தில் 4 தடவை நிப்பாட்டி ஒரு ஊரை அடைந்தோம்.
விடுமுறை சமயம் (தமிழ்-சிங்கள புத்தாண்டு சமயம்) என்பதால்
ஆஸ்பத்திரிகூட இயங்கவில்லை. ஏதோ ஒரு ஆஸ்பத்திரி திறந்திருக்க
அங்கே கூட்டிப்போய் காட்டினால் அவர்கள் மருந்து கொடுத்தார்கள்.
பயணத்தை நிறுத்தவும் முடியாது. அடுத்த நாட்களில் செல்ல இருந்த
ஹோட்டல்களில் புக்கிங், அட்வான்ஸ் என எல்லாம் கட்டியாகி
இருந்தது. தவிர நண்பரும் 15நாள் டிரிப்பில்தான் வந்திருந்தார்.

மருந்து கொடுத்ததில் குழந்தை உறங்க ஆரம்பித்திருக்க, மெல்ல
பயணம் செய்தோம். பொலன்னருவ எனும் ஊருக்கு போய்ச் சேர்ந்தோம்
ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
பொலன்னருவ முன்பு தலைநகரமாக இருந்த இடம். சிதிலமான
கோவில்கள் இருக்கின்றன என்றாலும் பார்க்க வேண்டிய முக்கியமான
இடம். நண்பரின் கமெண்ட்,” உடைஞ்சது, மிச்சம் மீதி இருக்கறதை
பார்க்கவா இவ்வளவு நேரம் பயணம் செஞ்சோம்!!!”

முன்பே எங்கே போகலாம் என அவரிடம் கேட்டு (நாங்க ஏற்கனவே
ஒரு சின்ன ரவுண்ட் அடிச்சிருந்தோம்) அவர்கள் சொன்ன இடங்களுக்குத்
தான் புக்கிங் செய்திருந்தோம்!!! அயித்தானுக்கும் எனக்கு ஷாக்.
அடுத்த நாள் பின்னவல் யானைகள் சரணாலயத்துக்கு போனோம்.
அங்கேயும் அவர்கள் திருப்தி படவில்லை!!!

கண்டியா, நுவரேலியாவா என நினைவில்லை.. இந்த இரண்டும்
இலங்கையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசம். இதைக்கூட
ஓகே!!! ரகத்தில் வைத்துவிட்டார்கள். அங்கேயிருந்து மழை
எங்களை துரத்திக்கொண்டே வர நாங்கள் கதிர்காமத்தை அடைந்தோம்!!

சிலை வழிபாடு இல்லை!! அதனால மனசுக்கு பெருசா ஒட்டவில்லை
என்று கமெண்ட் எங்களை ரொம்பவும் பாதித்தது. எங்கே, என்ன
பார்க்கலாம் என விவரமாக சொல்லி மடல் அனுப்பி எல்லாம் செய்து
அவர்கள் விருப்பப்படியே பயண ஏற்பாடு செய்திருந்தோம். செலவு
இருகுடும்பத்தினரும் பகிர்ந்து கொள்ள திட்டம்.

சுற்றி பார்த்த இடங்களுக்குத்தான் இப்படி கமெண்ட்ஸ் என்றால்,
ஹோட்டலில் தங்கியதும் கூட எங்களுக்கு மனது வருத்தமாகிவிட்டது.
சிங்கள புத்தாண்டு சமயத்தில் அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளுக்கு
ஏற்பதான் ஹோட்டல் கூட இயங்கும். நல்ல நேரத்தில்தான்
அடுப்பு பற்ற வைப்பார்கள். விடுமுறை சமயத்தில் பலரும் லீவில்
சென்றுவிட இருக்கும் பணியாளர்களை வைத்து ஒப்பேற்றுவது
எங்கும் பழக்கம். அதனால் சேவை கொஞ்சம் தாமதமாகத்தான்
இருக்கும். ஆனா நண்பருக்கோ சட்டு சட்டென்று கோவம்!!!

கொழும்புவிலிருந்து கிளம்பும்பொழுதே ஒரு பையில் என் கிச்சனை
கட்டி கொண்டு வந்திருந்தேன். அந்த பேக் நிறைய்ய அரிசி, பருப்பு
பொடி, நெய், இன்ஸ்டண்ட் ரச மிக்ஸ், கறிவேப்பிலைக்குழம்பு
இவற்றுடன் என்னுடைய சின்ன ரைஸ் குக்கர். தவிர குழந்தைகளுடன்
பயணம் என்பதால் சிறுதீனி என பக்காவாக திட்டம் போட்டு
கிளம்பியிருந்தேன். இரவும் ஹோட்டல் அறையில் சோறு
வைத்து சாப்பாடு!!!

ஒவ்வொரு ஹோட்டலில் காலை உணவு மட்டும் சாப்பிடுவோம்.
மதியத்துக்கு ஹோட்டல் அறையிலேயே அரிசி சோறு சமைத்து
எடுத்துக்கொண்டு டப்பாவில் போட்டு வழியில் பசி நேரத்தில்
சாப்பிடலாம் என்பது ப்ளான். நண்பரின் குடும்பத்தினர்
ஹோட்டலில் காலை உணவை சரியாக சாப்பிட மாட்டார்கள்.
வெஜ் ,நான் வெஜ் இரண்டும் பக்கத்தில் வைத்திருப்பதால்
அந்தக்கரண்டி இதில் பட்டிருக்குமோ என சந்தேகம் நண்பரின்
மனைவிக்கு!!! போகட்டும் ப்ரெட் இருக்கிறதே அதையாவது
சாப்பிடலமே என்றால்.. ப்ரெட் ஜுரம் வந்தால்தான் சாப்பிடுவேன்!!
என்றார்.

ப்ரெட்டை டோஸ்ட் செய்தோ செய்யாமலோ தேங்காய்ப்பால்
சேர்த்து செய்த பருப்புக்கறி, பொல்சம்பலுடன் வைத்து
சாப்பிட்டால் தெரியும் அந்த உணவின் அருமை.




இலங்கையில் பொதுவாக ஹோட்டல்கள் காலை உணவு
இடியாப்பம் அல்லது ஆப்பம், புட்டு, ப்ரெட், கார்ன்ஃபெள்க்ஸ்
என எல்லாமே இருக்கும்படிதான் அமைப்பார்கள். தினத்துக்கு
ஒரு வகை என்று சாப்பிட்டாலும் நல்லா சாப்பிடலாம். தவிர
தங்கும் ஹோட்டல்களும் மாறுவதால் உணவின் சுவையும்
மாறலாம்!!! அழகாக நறுக்கி வைக்கப்பட்ட பழங்கள்,
பழரசங்கள் என எல்லாமே வயிறு நிறைக்க இருந்தும்
அவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள். (பெட்&ப்ரெக்ஃபாஸ்)
முறையில் ஹோட்டல்கள் புக்கிங் செய்திருந்தோம்.

இத்தனை இருந்தும் சாப்பிடாமல் இருக்க சொன்ன காரணம்
நான்வெஜ்ஜும் இருந்தது என்பதோடு அங்கேயே சுடச்சுட
ஆம்லெட் போடுவதால் எழும் வாசம்!!!! என் குழந்தைகள்
இதைப்பற்றில் எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கும்
வகையில் அவர்களை வளர்த்திருந்ததால் ஆனந்தமாக
அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். நானும் அயித்தானும்
கூட வயிற்றுக்குத் தேவையானதை சாப்பிட்டோம்.
ஆனால் அயித்தானின் நண்பர் குடும்பத்தினர் சரியாக
சாப்பிடாமல் 10 மணிக்கே தயாராக்கி வைத்திருக்கும்
மதியச்சாப்பட்டை சாப்பிட நேர்ந்தது. எங்களுக்கு
ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அதற்கு பிறகு வழியில்
ஏதும் கிடைக்காது. இப்படியாக கஷ்டப்பட்டு எங்கள்
பயணம் இனிதாக(!!!!) கொழும்புவை அடைந்ததும்
வண்டியை நேராக விட்டது mathura Hotel க்கு!!!



அங்கே இந்திய உணவு கிடைக்கும். வுட்லண்ட்ஸ் குழுவினரின்
ஹோட்டல் அது. (அங்கே ராமகிருஷ்ணா என்று ஒரு மேனெஜர்
இருந்தார். ரொம்ப இனிமையாக பேசுவார். ஒரு பிரபல
டைரக்டரின் ஒன்று விட்ட சகோதரர்)
அங்கே போய் இட்லி, தோசை ஆர்டர் செய்து அதை மிகவும்
விரும்பி சாப்பிட்டனர். “இப்படி கொடுத்தா எங்க பசங்க
சாப்பிடுவாங்க, அதை விட்டு ப்ரெட், ஜாம், கார்ன்ஃபேள்க்ஸுன்னா””!!
என்று நானும் அயித்தானும் ஏதோ தவறு செய்தது போல
குற்றம் சுமத்தினார்கள்!!!!!!

நம் வீட்டு சாப்பாடு வெளியே கிடைக்காது என்பதால் வெளியே
கிடைப்பதையும் சாப்பிட பழக வேண்டும் அல்லது எந்த
ஊருக்கு சுற்றுலா செல்லாமல் நம் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
அதே போல செல்லும் இடத்துக்கு, சூழலுக்கு தக்கவாறு
நடந்துகொள்வது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகவே
இருக்கிறது!!! குழந்தைகளுடன் செல்லும் பொழுது அவர்களுக்கு
வளமையாக கொடுக்கும் மருந்துகள் எடுத்துச் செல்வதும்
அவசியம் என்பது ஏனோ தெரிவதில்லை!!!

என்னடா இப்படி கமெண்ட் அடிக்கிறோமே!! கூட
இருப்பவர்கள் மனது பாதிக்குமே என்று வருத்தம் கொஞ்சம்
கூட இல்லை. இப்படியும் சிலர்.

இன்னொரு தடவை இன்னொரு தோழியுடன் ஒரேகாரில்
பயணம் போனோம். பெட்ரோலுக்கான பணத்தை சமமாக
பகிர்ந்துகொள்வது, உணவு, தங்கும் வசதியும் அப்படியே
என்று சொல்லித்தான் கிளம்பினோம். ஆனால் அவர்கள்
கணக்கை சரியாக புரிந்துகொள்ளாமல் நாங்கள் குறைத்து
கொடுத்துவிட்டதுபோல பேசிவிட்டார்கள். அப்புறமாக
புரிந்துக்கொண்டு பலதடவை மன்னிப்பு கேட்டது தனிக்கதை.

அன்றிலிருந்து கூட்டாக பயணம் செய்வது என்றால்
பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்படி
பயணம் வேண்டுமா? என யோசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
அட்ஜஸ்மெண்ட் என்பது அனைவரிடமும் இருக்க
வேண்டும்!!!

என்னதான் பட்டாலும் கூட்டாக பயணம் செய்வதை
விட்டோமா???!!! :))) அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!