Tuesday, October 12, 2010

அம்மம்மா வீடு (அடுத்த பதிவு)

முந்தைய பதிவுக்கு

லீவு விட்டா அம்மம்மா வீட்டில்தான் இருப்பேன். அப்பா, அம்மா திட்டினாலும்
தஞ்சம் புகுவது அம்மம்மாவிடம் தான். ஒரு முறை ஏதோ பெரியவர்களுக்குள்
ஏதோ சண்டையாகி அந்தக் கோபத்தை என் மேல் காட்டி,அம்மா என்னை”வீட்டை
விட்டு வெளியே போ”!! என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான்
நாலு ட்ரெஸ் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு கோப கோபமாக
சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி அம்மம்மா வீட்டுக்குத்
தனியாக போய்விட்டேன். 12 வயது அப்போது. அம்மம்மாவிடம் அழுதுகொண்டே போய்
நின்றேன். என்னைத் தேடி யாரும் வரவில்லை. கழுதை கெட்டா
குட்டிசுவரு என்று பெத்தவங்களுக்குத் தெரியும். :)) என்னை கூப்பிடவும்
வரவில்லை. மாமா போய் நான் இங்கே இருப்பதாக தகவல் மட்டும்
சொல்லி வந்தார்.

5 நாள் வைத்திருந்து என் கோபத்தை தணித்து அம்மம்மாதான் சமாதானம்
செய்து அப்பா அம்மாவிடம் கொண்டு போய் விட்டார்.

அம்மம்மாவை எத்தனை பிடிக்குமோ அதில் பாதி அம்மம்மா வாழ்ந்த
அந்த வீட்டையும் பிடிக்கும். பெரிய வீடு கிடையாது. ஒரு வராண்டா,
சின்ன ஹால், சமையலறை, சாமி அறையில் பீரோ வைத்து
தடுத்த ஒரே ஒரு ரூம். இவ்வளவு சின்ன வீடுதான். உள்ளே நுழையும்
நிமிடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆனந்தம். அம்மம்மா வீட்டை
உள்ளேஅடக்கி கட்டிவிட்டு சுத்தி தோட்டம் வைத்திருந்தார்.

கொழக்கட்டை மந்தாரைபூ, குண்டு மல்லி, ரோஜா, அடுக்கு செம்பருத்தி,
ஒத்த செம்பருத்தி, மாதுளம்பழம், மாமரம், வாதாமரம்,நடக்கும் வழிக்கு
இருபக்கமும் கத்திரிக்காய், வெண்டைக்காய், ப.மிளகாய், பொன்னாங்கன்னி
போன்ற கீரை வகைகள் இருக்கும். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள்
அப்போது பறித்து சமைக்கும் வகையில் இருக்கும். பூஜைக்கு நிதமும்
பூ பறித்து வைப்பதுதான் காலை எழுந்ததும் முக்கியமான வேலை.
30 நிமிடத்துக்கும் மேலாகும் பறித்து முடிக்க. பாசமாக பார்த்து
பார்த்து அம்மம்மா பராமரித்ததற்கு வஞ்சனை இல்லாமல் எல்லா
மரமும் பூத்துக் குலுங்கும். தனக்கு போக தான தர்மமும் செய்வார்
அம்மம்மா.

வாசலுக்கு மதில் சுவர் கிடையாது. முள்கம்பி வேலிதான். கதவுக்கு
பதில் தட்டி கதவு. அதன் மேல் ஒரு வளைவு. அதில் வாசமிகு
சம்பங்கி பூ. கதவை திறந்து வருபவர்கள் அந்த வாசனையில்
சொக்காமல் இருக்க மாட்டார்கள். இரண்டு மருதாணி மரம் உண்டு
அம்மம்மா வீட்டில். எனக்கு மருதாணி வைக்க வேண்டும் என்று
சொன்னால் போதும் வீட்டில் வேலை செய்யும் செல்லாயி இடம்
சொல்லி அரைத்து கொடுக்கச் சொல்லி அம்மம்மா வைத்து விடுவார்.
மருதாணி பறித்துக்கொடுத்து விடுவேன். மருதாணி பூ வாசம்....
மறக்க முடியுமா??

வீட்டிற்கு பின்புறம் ஒரே ஒரு தென்னை மரம், எலுமிச்சை மரம்,
துளசி மாடம், நார்த்தங்காய் மரம். நார்த்தாங்காய்களை சுருள் சுருளாக
நறுக்கி உப்பு போட்டு ஊற வைத்து, வெயில் காயவைத்து
அம்மம்மா வைத்திருப்பார். ஜுர நேரத்தில் கஞ்சிக்கு சரியான
ஜோடி அந்த நார்த்தங்காய்தான். சும்மாவே கூட கேட்டு வாங்கி
சப்புகொட்டி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்.

வெயில் காலத்தில் தாத்தா சில சமயம் கயிற்று கட்டில் போட்டுக்
கொண்டு வெளியே படுத்திருப்பார். அது போல ஒரு சமயம்
படுத்திருந்த பொழுது எதேச்சையாக தண்ணீர் குடிக்க எழுந்தவர்
தலைமாட்டில் ஏதோ அசைவது தெரிய பார்த்தால்.... மிஸ்டர்
கருநாகம் படமெடுத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
நல்லவேளை..... அவர் ஏதும் செய்யாமல் தானகவே
சென்றுவிட்டார். மாமா வந்து சொன்ன பொழுது குலையே
நடுங்கிவிட்டது.

அம்மம்மா வீட்டை சுத்த படுத்துகிறார்கள் என்றால் எனக்கும்
என்ன சின்ன மாமா குமார் மாமாவுக்கும் ஜாலி. கரப்பான்
பூச்சிகளை அம்மம்மா வெளியேற்ற நானும் மாமாவும் அவற்றை
சம்ஹாரம் செய்து ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு யார்
அதிக எண்ணிக்கையில் அடித்தது என்று போட்டி போடுவோம்.
செத்த கரப்பான்களை மீசையைப் பிடித்து ஊஞ்சல் போல
ஆட்டிக்கொண்டு போய் குப்பையில் போடுவேன். பொறுத்து
பொறுத்து பார்த்து செல்லாயி அத்தனையையும் அள்ளி
கொண்டு போய் கொட்டுவார்.

என் நீண்ட தலைமுடிக்கு(முன்பு) அம்மம்மாவின் மெனக்கெடல்தான்
காரணம். நல்ல அடர்த்தியான, அதே சமயம் நீண்ட கரு கருவென
முடி. பஞ்சு போல் இருக்கும். அம்மம்மா ஷாம்பு போட்டு குளிக்க
விட்டதே இல்லை. செம்பருத்தி இலையை அரைத்து அதில்
சிகைகக்காய் போட்டு தானே தலைக்கு குளிப்பாட்டுவார். திருமண
நாள் அன்று எண்ணெய்க்குளிய்ல் கூட ஷாம்பு போடவிடாமல்
சிகைக்காய் பேஸ்ட் வாங்கி வரச் செய்து தானே குளிப்பாட்டினார்.
நான் முடியை வெட்டி விட்ட பொழுது அம்மம்மா வருத்தப்பட்டார்.
”கல்யாணம் செஞ்சு அனுப்பி விட்டுட்டீங்க.நானே எல்லாம் செஞ்சுக்கணும்.
இதுல முடியை கவனிக்க முடியலை அம்மா, கூட நீங்களும் வந்திருக்கலாம்!!”
என்று சொன்னாலும் அம்மம்மா சமாதானம் ஆகவில்லை. 78 வயதில்
இப்போதும் அம்மம்மாவுக்கு நீளள...மான முடி.

அம்மம்மாவுக்கு எங்க வீட்டு வைத்தியர் என்று பெயரே உண்டு.
துந்நூத்திப்பச்சிலை, துத்தி இலை, கருந்துளசி,ஓமவள்ளி
எல்லாம் வீட்டிலேயே வைத்திருப்பார். ஓமவாட்டர் தானே தயாரித்து வைத்திருப்பார்.
வயிறு உப்பசமா ஓமவாட்டர் கொடுத்திடுவார். துத்தி இலையை
எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்திருப்பார். அது சர்வரோக
நிவாரணி மாதிரி. வீக்கமா, அடி பட்டிருக்கா, காயமா எல்லாத்துக்கும்
அது போட்டால் சரியாகி விடும். எல்லாவற்றிற்கும் கை வைத்தியம் தான்.

அம்மம்மா வீட்டில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை வேப்பிலையை
ஓமம் வைத்து அரைத்து கல் உப்பு வைத்து சாப்பி கொடுத்துவிடுவார்.
குமார் மாமா அலறி ஓடி திட்டு வாங்கி சாப்பிடுவார். வேப்பிலை
கசப்பு கூட எனக்குத் தெரியாது. அம்மம்மா கொடுத்தது என்று
சாப்பிட்டுவிடுவேன். வயிற்றில் பூச்சி வராமல் இருக்க அம்மம்மாவின்
மருந்து இது. கொழக்கட்டை மந்தாரை இலையை அரைத்து
தயிரில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

வீட்டில் இருக்கும் மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலி இவைகளை
அரைத்து அம்மம்மா தேங்காய் எண்ணெய் காய்ச்சுவார். தலைக்கு
இதைவிட சூப்பர் எண்ணெய் கிடைக்கவே கிடையாது. தமிழ்நாடு
அரசின் “டாம்ப்கால்”எண்ணெயை விட இந்த எண்ணெய் சூப்பர்.
பலரும் அம்மம்மாவிடம் வாங்கிச் செல்வார்கள். தேங்கா எண்ணெய்
மட்டும் அவர்கள் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

ஒரு முறை தீபாவளிக்கு சர்பரைஸாக குஜராத்தில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த சித்தி,அம்மாவின் பெரிய்யம்மா பையன்கள்
(என் ராமு மாமாவும் இன்னொரு மாமாவும்) மும்பையிலிருந்த சத்யா மாமா
தீபாவளி அன்று காலையில் வந்திறங்கி ஆச்சிரியப்படுத்தினார்கள்.
இரண்டு மருதாணி மரத்துக்கும் இடையே கயிறு கட்டி ட்ரெயின் விட்டது
அப்போதுதான். அந்தத் தீபாவளி படு ஜாலியாக இருந்தது.

நான் அக்காவாக ப்ரோமஷன் அடைந்த விஷயத்தை சித்தி எனக்குச்
சொல்லியது அந்த வீட்டில்தான். ஒவ்வொரு வருடமும் புது
வகுப்புக்கு போகும்பொழுது முதல் நாள் இரவே தாத்தா வாங்கி
வந்திருக்கும் புது புத்தகங்களுடன் என்னை எழுப்பி சித்தி கொடுப்பது
வழக்கம். ஒருமுறை பெரிய்ய்ய்ய பேனா ஒன்று அதற்கு மூடி
கை போல் இருக்கும். பார்த்து பார்த்து சித்தி செய்வார்.

ஸ்ரீநிவாஸ நகர் ஏரியாவில் அம்மம்மாவீடு இன்னொரு விஷயத்துக்கும்
பிரபலம். அது ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் நடை பெறும்
சத்யநாராயண விரதம். காலை முதல் விரதமிருந்து சாயந்திரம்
பூஜை நடக்கும். 2 மணி நேரம் பூஜை. பிரசாதம் எல்லோருக்காகவும்
செய்வார் அம்மம்மா. கிட்டத்தட்ட 30 பேராவது கலந்து கொள்வார்கள்.

அம்மம்மா தாத்தாவின் சஷ்டி அப்த பூர்த்தி நடந்தது இந்த வீட்டில்தான்.
தண்ணீருக்கு கஷ்டமாகும் என்று டேங்கர் வரவழைத்து ட்ரம்கள்
வாடகைக்கு வாங்கி நீர் நிரப்பி வைத்திருந்தோம். சஷ்டி அப்த பூர்த்தி
அன்று பெய்தது பாருங்கள் ஒரு மழை.... அதில் அம்மம்மாவீட்டுக்
கிணற்றில் தண்ணீரை கையாலே மொண்டு எடுத்துக்கொள்ளும்
அளவுக்கு நீர் நிறைந்தது!!! 1988ஆம் ஆண்டு பெய்த அந்த மழையைப்
போல புதுகையில் அவ்வளவு பெரிய மழை பெய்தது இல்லை.

வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டு மாடியில் சாப்பாடு .
நனைந்து கொண்டே சுடச்சுட உணவுகளை கொண்டு சென்றது ஒரு
அனுபவம். எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள் அந்த வீட்டுக்கும்
எனக்கும்.

சின்ன வயதில் செலக்டிவாகத்தான் சினிமா பார்ப்பேன். அப்பா,
அம்மா, தம்பி மட்டும் போனால் நான் டிக்கெட்டுக்கான
காசை வாங்கி என் உண்டியலில் போட்டுக்கொண்டு வீட்டில்
அவ்வாவுடன் இருந்துவிடுவேன். தொந்திரவு இல்லாமல்
ரேடியோ கேக்க முடியுமே!! :)) அம்மம்மா வீட்டுக்கு
பக்கத்தில் இருக்கு சரவணா தியேட்டருக்கு போனால் மட்டும்
கூடவே போய் அம்மம்மாவீட்டில் இருப்பேன். அப்பா அம்மா
வீடு திரும்பும் போது அவர்களுடன் திரும்ப வருவேன்.

தியேட்டர் உரிமையாளர் தாத்தாவுக்குத் தெரியும் என்பதால்
டிக்கெட்டுக்கு சொல்லி வைத்துவிட்டு 3ஆவது பெல் அடித்த
பிறகு தான் போவோம். நான் ,சித்தி, குமார் மாமா மூவர்
மட்டும் மூன்று முகம் ரஜினி படம் பார்த்தது என நிறைய்ய
கொசுவத்தி.

மாமரத்திலிருந்து விழும் பூக்களின் வாசம், வாதம்பழம்,
சம்பங்கி பூ, மருதாணி பூ என பூக்களின் வாசத்துடன்
அந்த வீட்டை என் ராஜலட்சுமி அம்மம்மா ராஜ்ஜியம்
நடத்தியதை இப்போதும் நினைத்து பார்த்துக்கொண்டு
இருக்கிறேன். அந்த வீட்டை விற்றுவிட்டு அம்மம்மா
மும்பைக்கு போனதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.
நினைத்தால் அம்மம்மாவிடம் போக முடியாது என்பதுடன்
அந்த வீடு நமது இல்லை என்பதும் தான்.


15 comments:

ஹுஸைனம்மா said...

தென்றல், கொடுத்து வைத்தவர் நீங்கள். அம்மம்மாவின் அன்புமழையில் நனைந்திருக்கிறீர்கள். எனக்கு அந்தப் பாக்கியம் இல்லை.

அதுவும் தோட்டத்தை விவரிக்கும்போது ரொம்பவே ஆச்சரியம்!!(பொறாமையும்)

அம்மாக்கள் எப்பவுமே கண்டிப்பானவர்கள்; ஆனால், அவர்களே பாட்டியாகும்போது பேரக்குழந்தைகளின் மீது காட்டும் பாசத்தில் பிள்ளைகளையே பொறாமைப்பட வைப்பவர்கள்.

சாந்தி மாரியப்பன் said...

தோட்டத்தின் நடுவில் வீடா!!.. ஆஹா, என் கனவுவீடாச்சே :-))))).

நிறைய குறிப்புகள் சொல்லியிருக்கீங்க, அப்படியே காதுல புகை வந்தா என்ன செய்யணும்ன்னும் சொல்லுங்க. ஏன்னா,இப்ப என் காதுலவருது :-)))))))))))

Thenammai Lakshmanan said...

என்னோட பதிவை பாருங்க..

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புகளை இன்றோ நாளையோ அனுப்புங்க..

நட்புடன் ஜமால் said...

கடைசி பத்தி

எங்களை வளர்த்த வீட்டை என் தந்தை விற்ற பொழுது இப்படித்தான் :(

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இப்படி ஒரு அம்மம்மா கிடைக்க ரொம்பவே புண்ணியம் செய்திருக்கிறேன். இதில் தமாஷ் என்னவென்றால் என்னை அவரின் பேத்தி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். காலம் கடந்து பிறந்த அவரின் சொந்த மகள் என்று சொல்பவர்களும் உண்டு.:))

pudugaithendral said...

அம்மாக்கள் எப்பவுமே கண்டிப்பானவர்கள்; ஆனால், அவர்களே பாட்டியாகும்போது பேரக்குழந்தைகளின் மீது காட்டும் பாசத்தில் பிள்ளைகளையே பொறாமைப்பட வைப்பவர்கள்//

அம்மம்மா என் அம்மா, சித்தி, மாமாக்களை திட்டியது கூட கிடையாது. அதிர்ந்தே பேச மாட்டார். கண்களாலேயே கதைகள் சொல்லி அடக்கி விடுவார். மத்தபடி அன்பு மட்டுமே காட்டுவார்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கும் இப்போதும் அப்படி ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது தான் ஆசை.

அப்படியே காதுல புகை வந்தா என்ன செய்யணும்ன்னும் சொல்லுங்க. ஏன்னா,இப்ப என் காதுலவருது :-)))))))))))//

ஸ்மைலியும் நீங்களே போட்டுட்டீங்க :)

pudugaithendral said...

கண்டிப்பா பாக்கறேன் தேனம்மை,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் ஜமால் சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டைப் பற்றி பலருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கக்கூடும்.

வருகைக்கு நன்றி

எஸ்.கே said...

என் பாட்டியின் ஞாபகம் வருகிறது! அருமை!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி எஸ் கே

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கு புதுகை, எனக்கு கரம்பக்குடி :)

சிங்கை நாதன்/SingaiNathan said...

//அம்மம்மாவீட்டுக்
கிணற்றில் தண்ணீரை கையாலே மொண்டு எடுத்துக்கொள்ளும்
அளவுக்கு நீர் நிறைந்தது!!! 1988ஆம் ஆண்டு பெய்த அந்த மழையைப்
போல புதுகையில் அவ்வளவு பெரிய மழை பெய்தது இல்லை.//

எனக்கு நினைவிருக்கிறது அம்மாவின் தோழி ஒருவர் வீட்டிற்கு சென்ற போது ஆச்சரியமாய் காண்பித்தார்.நாங்கள் முதலில் தண்ணீர் தொட்டி என நினைத்தோம் ;)

சரவணா தியேட்டர் திறந்த புதிதில் சென்றதும் நினைவிலிருக்கிறது

அன்புடன்
சிங்கை நாதன்

pudugaithendral said...

உங்களுக்கு புதுகை, எனக்கு கரம்பக்குடி ஓ அப்படியா?? சந்தோஷம் தம்பி.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிங்கைநாதன்