Monday, March 14, 2011

ரொம்ப நாளைக்கப்புறம் பின்னூட்டம் பதிவாக....

தில்லிவாழ் தமிழர்களின் ரிஷப்ஷன்னு- நம்ம சகோ வெங்கட் நாகராஜ்
பதிவு போட்டிருந்தார். அவர் சொல்லியிருப்பது அம்புட்டும் நிஜம்.

திருமண வைபவத்துல ஆடம்பரத்தை குறைச்சா நல்லது. வட நாட்டவங்க
எந்த ஊருல இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விடறதேயில்லை.
மெஹந்தி, டிரஸ், டான்ஸ், உணவு, மந்திரங்கள் என எதுவுமே
குறைவில்லை. நமக்கு அந்த பழக்க வழக்கம் பிடிச்சிருந்தா
அதை அளவோட செய்யலாம். உருண்டை உருண்டையா
மருதாணி வைக்காம டிசைன் மெஹந்தி வெச்சுக்கலாம்.
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முன்னாடி சின்னதா டான்சும்
ஆடலாம். ஆனா இந்த பாட்டுக்கச்சேரின்னு ஒண்ணு வெப்பாங்க
பாருங்க..... காது ஜவ்வு கிழிஞ்சிடுமோன்னு இருக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் கலக்கும் இந்த இடத்துல அவங்க
பேசி மகிழ வாய்ப்பு இல்லாம காதை கிழிக்கும் “மெல்லிசைக்
கச்சேரி”!!!! நடக்கும். வேற வழியே இல்லாம வந்தவங்க
கம்முனு உக்காந்திருக்கணும். அதுவும் மண்டபம் சின்னதா
இருந்துச்சுன்னு வைய்ங்க... அம்புட்டுதான்.

சாப்பாடு ரொம்ப ஆடம்பரமா இல்லாம வயிற்றுக்கு இதமா,
ருசியா இருக்கணும். அதைவிட்டு நிறைய்ய வெரைட்டி போட்டு
அதை வேஸ்டாக்கிட்டு எந்திரிச்சு போறவங்கதான் ஜாஸ்தி.
இந்த இடத்துல தன்னோட பதிவுல சகோ சொல்லியிருக்காப்ல
அனாதை விடுதிகளுக்கு கொடுப்பது பெஸ்ட்.

அதுவும் இந்த ”ஸ்டாக் பார்ட்டி” கண்டிப்பா இருந்தே
ஆகணும்னு ஒரு ட்ரண்ட் கொண்டு வந்திட்டாங்க. மாப்பிள்ளை
அழைப்பு அன்னைக்கு மணமகனோட நண்பர்கள், சில
நெருங்கிய உறவினர்களுக்கு இதற்கான வசதியை
மணமகளோட அப்பா செஞ்சு கொடுத்தே ஆகணும்ங்கற
அளவுக்கு இருக்கு நிலமை. ஒண்ணும் சொல்லமுடியாம
கண்டும் காணாம விடும் நிலமை அவர்களுக்கு. வேற
இடத்துல நடக்கும் பார்ட்டிக்கு தனியா சாப்பாட்டை அனுப்பி
வேற வெக்கணும்.

சமீபத்துல ஒரு புத்தகத்துல கல்யாணத்துக்கான செலவுகளில்
ஆடம்பரம் இல்லாம இருக்கணும்!! செலவு குறைக்கும்
விஷயங்களில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்துக்கணும்னு
ஒருத்தங்க சொல்லியிருந்தாங்க. சொன்னா யாருங்க கேக்கறாங்க??

எங்க வீட்டுலயே எடுத்துக்கோங்க. என் தம்பிக்கு பெண் பாக்க
ஆரம்பிச்சிருக்கோம். தெலுங்கு சம்பிரதாயத்தில் தாலிமுடியும்
பொழுது மணமகன், மணமகள் இருவரும் அணிவது
பருத்தி ஆடைகள்தான். மணமகள் அணியும் புடவை மஞ்சளில்
நனைக்கப்பட்டதாகவோ, மஞ்சள் கலரிலோ இல்லை
கேரளா புடவைப்போலவோ இருக்கும். முக்கியமான தருணத்திலேயே
பட்டுக்கு மதிப்பில்லாத பொழுது பூச்சியைக் கொன்று தயாரிக்கப்படும்
பட்டுப்புடவையை கட்டுவதை எங்கள் குடும்பத்தில் தவிர்க்கிறோம்.

இந்தப் பட்டுப்புடவை நல்ல கிராண்டாக 25ஆயிரம் வரை
செலவு செய்து வாங்கப்படுவது அனாவசிய செலவு இல்லையா?
இந்தக் காலத்தில் புடவை கட்டுவதே அரிதாகப் போன நிலையில்
பட்டுப்புடவை எப்பொழுதோ ஒரு முறை கட்டப்போறாங்க.
என் தம்பிக்கு வரும் மனைவியும்(நான், அத்தைகள்,
அம்மம்மா,அம்மா,சித்தின்னு யாருமே கட்டுவதில்லை)
பட்டுப்புடவை கட்டுவதை தவிர்க்க வேண்டும்,
வரதட்சணை வேண்டாம்னு கொள்கையோட
இருக்கோம்ங்க. இது குத்தமா போச்சு!!!

ஒரு பொண்ணு வீட்டுல எங்க பொண்ணு எங்க வீட்டு ஃபங்க்‌ஷனுக்கு
வரும்போது கட்டிக்கட்டும். உங்க வீட்டுல வேணாம்! அப்படின்னு
சொன்னாங்க. ஆடம்பரம் வேணாம், உயிர்வதை வேணாம்னு
சொல்றோம். ஆனா அதை என்னவோ எங்களுக்கு வாங்கிக்
கொடுக்க வக்கில்லாதவங்கற ரேஞ்சுக்கு பேசினாங்க. அந்தப் பொண்ணு
ஒத்துக்கிட்டு, அவங்கம்மா இப்படி பேசினதுதான் மேட்டர்.

பத்திரிகையில் ஒரு அம்மா கேட்டிருந்தபடி நாம செலவைக் குறைச்சு
பொண்ணு வீட்டுக்காரங்களை கசக்கி பிழியாம கல்யாணத்தை
நல்லபடியா நடத்தலாம்னாலும் ஆடம்பரம், கவுரவம்னு மக்கள்
மனசு இருக்கும் வரைக்கும் ரொம்ப கஷ்டம்... நம்ம பாரம்பரியத்தை
விடக்கூடாது, நாம எந்த ஊருல, எந்த நாட்டுல இருந்தாலும்
நம் கலாச்சரம் நம் ரத்தத்தில் இருக்கணும்.

மனோபாவம் மாறி வீணான ஆடம்பரத்தை குறைச்சுக்காட்டி
கஷ்டம். என்ன மாதிரி விசேஷங்களுக்கு போகும்போது
சகோ சொன்ன மாதிரி மனசு ஒட்டாம, வேண்டா வெறுப்பாத்தான்
போக வேண்டி இருக்கு.

மாற்றம் வரவேண்டிய எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.



13 comments:

settaikkaran said...

அங்கேயும் பின்னூட்டத்தில் ஆமோதித்தேன். இங்கேயும் அதையே ரிப்பீட்டிக்கிறேன். :-)

எல் கே said...

இவ்ளோ பெரியப் பின்னூட்டம் அங்க போடறது கஷ்டம்

இப்ப மாப்பிள்ளை வீட்டில் சிலவிஷயத்தில் இறங்கி வந்தாலும், பெண் வீட்டில் ஒத்துக் கொள்வதில்லை .

இப்ப சமீபத்தில் நீயா நானா பார்த்தீங்களா இந்தக் கால பெண்களின் நிபந்தனைகளை? அப்புறம் ஒரு பதிவுப் போடறேன்

வெங்கட் நாகராஜ் said...

என்னுடைய பதிவுக்கு பின்னூட்ட பதிவு போட்டதற்கு நன்றி சகோ. நீங்கள் சொன்ன விஷயங்களும் மனதில் ஓடிக்கொண்டு தான் இருந்தது. நிறைய விஷயங்களை ஒரே பதிவில் இட வேண்டாமே என்றுதான் போடவில்லை. நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

உங்க ரிப்பீட்டுக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

கச்சேரி எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது.

pudugaithendral said...

இவ்ளோ பெரியப் பின்னூட்டம் அங்க போடறது கஷ்டம்
வாங்க எல்.கே,

இப்ப மாப்பிள்ளை வீட்டில் சிலவிஷயத்தில் இறங்கி வந்தாலும், பெண் வீட்டில் ஒத்துக் கொள்வதில்லை .//

இதுதாங்க நிதர்சனமான உண்மை.

இப்ப சமீபத்தில் நீயா நானா பார்த்தீங்களா இந்தக் கால பெண்களின் நிபந்தனைகளை? அப்புறம் ஒரு பதிவுப் போடறேன்//

போடுங்க போடுங்க. நண்பர் ஒருவர் லிங்க் ஒண்ணும் கொடுத்து பாத்து நொந்தேன். மாப்பிள்ளை என்னைவிட ஹைட்டா இருக்கணும், ஆனா அழகா இருக்கக்கூடாதுன்னு மணல்கயிறு கிட்டுமணிமாதிரி குழப்பமால்லாம் கண்டீஷன் போடறாங்க. நிஜமாவே இந்தக்காலத்து பேச்சிலர்ஸ் பாவம்!!:((

pudugaithendral said...

வாங்க சகோ,

உங்கப்பதிவை படிச்சதும் உடனே எழுதியாகணும்னு ஒரு எண்ணம் வந்தது நிஜம். உங்கப் பதிவோட தாக்கம் அப்படி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

அது ஒரு மகா தண்டனை!!!

வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

இந்த ஆடம்பரச் செலவுக்காசை அப்படியே பொண்ணு மாப்பிள்ளை பேருலே அநாதாலயம் ஒன்னுக்கு ஒரு கட்டிடம் கட்ட்டிக்கொடுக்கலாமேப்பா.

எங்க வீட்டுக் கல்யாணங்களிலும் நூல்புடவை, வேஷ்டியை கல்யாணத்துக்கு முதல்நாள் லேடீஸ் எல்லாம் சேர்ந்து இடிச்ச மஞ்சள்பொடி கலக்கிய நீரில் ஊறவச்சு இரவே காயவச்சு அதிகாலைக் கல்யாணத்துக்கு மடியாக் கட்டுவாங்க. இதையே ஒரு சடங்காச் செய்வாங்க. ஈவ்னிங் ஃபங்ஷன்.

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

இந்த ஆடம்பரச் செலவுக்காசை அப்படியே பொண்ணு மாப்பிள்ளை பேருலே அநாதாலயம் ஒன்னுக்கு ஒரு கட்டிடம் கட்ட்டிக்கொடுக்கலாமேப்பா.//

அப்படில்லாம் செய்ய மனசு வேணுமே

pudugaithendral said...

எங்க வீட்டுக் கல்யாணங்களிலும் நூல்புடவை, வேஷ்டியை கல்யாணத்துக்கு முதல்நாள் லேடீஸ் எல்லாம் சேர்ந்து இடிச்ச மஞ்சள்பொடி கலக்கிய நீரில் ஊறவச்சு இரவே காயவச்சு அதிகாலைக் கல்யாணத்துக்கு மடியாக் கட்டுவாங்க. இதையே ஒரு சடங்காச் செய்வாங்க. ஈவ்னிங் ஃபங்ஷன்.//

ஆமாம். மஞ்சள் கிருமிநாசினி. கல்யாணத்துக்கு வரும் கூட்டம், கசகசப்பு இதனால மணமக்களுக்கு கிருமி தொற்று ஏற்படக்கூடாதுன்னு செஞ்ச ஏற்பாடாம் இது. காலப்போக்குல அதையே மஞ்சள்கலர் புடவையாவே வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. சில வீடுகளில் மஞ்சள் பட்டுப்புடவை உடுத்துவதைக்கூட பார்த்து நொந்திருக்கிறேன். அட்சதையில் கூட மஞ்சள் கலப்பது கிருமி தொற்றுவராம இருக்கத்தான்.

வருகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

நல்ல இடுகை கலா....சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு கல்யாணம்...அதுவும் உறவுக்காரர்கள் கல்யாணம்...ஏதோ வடக்கத்திக் கல்யாணத்துக்கு வந்தது போல் இருந்தது...சாப்பாடு பஃபே முறைப்படி...எத்தனை விதமான உணவுகள்...இதை உங்களால் உண்ண முடியுமா பார் என்று சவால் விடுவது மாதிரி...ஆனால் அங்கே ஏதோ ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வந்த உணர்வேதான் வந்தது....நல்லாச் சாப்பிட்டீங்களா..வாங்க சாப்பிடுங்க என்று உபசரிக்க அவர்களுக்கு மனமில்லை....என்னவோ போங்க..எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்...

//நம்ம பாரம்பரியத்தை
விடக்கூடாது, நாம எந்த ஊருல, எந்த நாட்டுல இருந்தாலும்
நம் கலாச்சரம் நம் ரத்தத்தில் இருக்கணும்.//

இது எவ்வளவு முக்கியமான விஷயம்..இதை பெரியவர்களே புரிந்து கொள்ளாத போது குழந்தைகளுக்கு எப்படி நாம் புரிய வைக்க முடியும்...இந்தக் காலகட்டத்துக்கான மிக முக்கியமான கேள்வி...

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

//ஆனால் அங்கே ஏதோ ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வந்த உணர்வேதான் வந்தது....நல்லாச் சாப்பிட்டீங்களா..வாங்க சாப்பிடுங்க என்று உபசரிக்க அவர்களுக்கு மனமில்லை....என்னவோ போங்க..எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்...//

அதான் கொடுமை. இப்ப எல்லோரும் காண்ட்ராக்ட்லதான் கொடுக்கறாங. கொஞ்சம் அலைச்சல் கம்மியாகுது. ஆனாலும் வந்தவங்களை கவனிக்க மாட்டங்க. விருந்தோம்பல் என்பதே இல்லை.

ம்ம்ம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி