Sunday, October 18, 2015

இதெல்லாம் தெரியாம இருக்கோமே!!!!

29.10.15 தேதியிட்ட குமுதம் சிநேகிதியில் ஒரு கட்டுரை படிச்சேன். அதோட பாதிப்பா தான் இந்த பதிவு. அதில் டாக்டர்.வி.ஜமுனாங்கறவங்க எழுதுற தொடர் வருது. இந்த கட்டுரை சாக்லேட் சிஸ்ட்டால் கரு கலையுமா? இதான் தலைப்பு.

ஒரு வாசகியின் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கறாப்ல இருக்கற இந்த கட்டுரையில் அவங்க சொல்லியிருக்கற ஒரு விஷயத்தை மட்டும் எடுத்து இங்க பதிய விரும்புறேன். அது அந்த காலத்துல எதுக்கு 22 வயசுல கல்யாணம் செய்யணும்னு சொன்னாங்கன்னு  சொல்லி இந்த காலத்துல பெண்களுக்கு படிப்பு, வேலைன்னு திருமணத்தை தள்ளி போடுவதால உண்டாகுற பிரச்சனைய சொல்லியிருந்தாங்க.

27 வயசுக்கு மேலே சினைமுட்டை சில மதாங்களுக்கு வரும் சில மாதங்களுக்கு வாராமல் நின்று விடும்.  30 வயதுல இது பாதியா குறைந்து போகும். 30 வயசுக்கு மேல கல்யாணம் செஞ்சுப்பது இப்ப சகஜமாகிட்டு வருது அதுக்கப்புறம் கூட சிலர் வேலை, பிசினஸ், அப்படின்னு குழந்தை பிறப்பை தள்ளிவைக்கிறாங்க.  அப்படின்னு சொல்லியிருக்காங்க.

25 வயசுக்கு கல்யாணமான்னு சில பெண்கள்  சண்டை போடுவாங்க. என் படிப்பு, கெரியர் என்னாவுறதுன்னு கேப்பாங்க, சிலரோ கல்யாணமாகிட்டா குழந்தை பெத்தே ஆவனுமான்னும் கேட்பதை பாத்திருக்கேன். எல்லோரும் அப்படி நினைப்பதில்லைன்னாலும் ஒரு சிலர் அந்த மனோபாவத்தோட இருக்காங்க.  குழந்தை பிறந்தா உடலை பழைய நிலைக்கு கொண்டு வருவது கஷ்டம்னு சொல்றாங்க. ( சனிக்கிழமை மதியங்களில் 12 முதல் 1 மணிவரை விஜய் டீவில வரும் டாக்டர் டாக்டர் நிகழ்ச்சில பல இளம் தாய்மார்கள் குழந்தை பிறந்தது மகிழ்ச்சின்னாலும், உடம்பு இப்படி ஆகிடிச்சேன்னு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குன்னு சொன்னதை பாத்தேன்). பருவத்தே பயிர் செய்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அது குழந்தை பேறுக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்.

தாமதமான திருமணம், தாமதமான பிள்ளை பேறு இவைகள் தர்ற பிரச்சனை உடலிலும் பாதிப்பாகுது.  வாழ்க்கையிலும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி செய்ய உடம்புல தெம்பு வேணுமே. பிள்ளையை வளர்ப்பது என்பது ஏனோதானோ விஷயமில்லை.  அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு.

சரி அப்படியே 25 வயசுலயாவது பெண்ணுக்கு கல்யாணம் செஞ்சிடுவோம்னு பாத்தா சூழ்நிலை அப்படியா இருக்கு. பையன் கிடைப்பதில் சிக்கல், பெண்ணுடைய படிப்பும் வேலைக்கும் தகுந்த பையன் கிடைக்கணும். சமீபகாலமா வேதனை தரக்கூடிய பகிர்வா நான் படிக்க நேர்ந்தது பெண்ணின் திருமணத்தை தானே தள்ளிப்போடும் பெற்றோர்.  பொண்ணு 4 காசு சம்பாதிக்குது அதுலயாவது கொஞ்ச நாள் சந்தோஷமா இருப்போமே!!! இதுவும் சிலர் தான். இப்படி இத்தனையோ காரணிகள் திருமணத்துக்கு தடையா இருக்கு.

தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செஞ்சு மாலையும் கழுத்துமா பார்த்து,  தன் காலத்துலயே பேரன் பேத்தியை கொஞ்சிடணும்னு ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும்.  ஆசை மட்டும் இருந்திட்டா போதுமா?  அதை நடைமுறை படுத்த வேண்டாமா? அதுக்கு பெத்தவங்க என்ன செஞ்சிட முடியும்னு கேக்கமா, பிள்ளைகள் கிட்ட பக்குவமா பேசணும். திருமண வயது வந்த உடனேயே பிள்ளைக கிட்ட சாதக பாதகங்களை எடுத்து பேசி புரிய வைப்பது நல்லதுன்னு தோணுது.  அப்புறம் பிள்ளை பிறக்கலைன்னு கோவில் கோவிலா சுத்துவது, டாக்டர்கள் கிட்ட ஏறி இறங்குவது இதெல்லாம் தேவையில்லாத டென்ஷன் தானே. உடம்பு, மனசு நோவுவதோட பொருள் செலவும் இருக்குமே!

அரசு திருமண வயதை நிர்ணயிச்சிருக்காங்க. ஆனா உச்சவயது எதுன்னு சொல்லலை. பால்ய விவாகம் செஞ்சா தப்பு, சட்ட சிக்கல், தண்டனை எல்லாம் உண்டுன்னு பயப்படறோம்.  ஆனா திருமணத்தை எப்ப வேணாம் செஞ்சுக்கலாம்னு இருக்கற நம்ம மனோபாவத்துக்குத்தான் இயற்கை கொடுத்திருக்கற தண்டனை இந்த மாதிரி கட்டிகள், மாதவிலக்கு சுழற்சியில் மாறுதல்கள் , ஹார்மோனல் இம்பேலன்ஸ்கள் எல்லாம் கொடுத்து பிள்ளை பேறு எணும் பாக்கியத்திற்கு ஏங்க வைக்குதுன்னு நினைக்கிறேன்.

இது என்னுடைய மனசுல பட்டது. சிலருக்கு இது தவறா தோணலாம். திருமணம், பந்தம், குழந்தைன்னு பெண்ணுங்க வாழ்க்கைய கட்டி போட நினைக்கறவங்க பேச்சு அப்படின்னு சண்டைக்கும் வரலாம். ஆனா என் மனசுல இருக்கற ஆதங்கத்தை பதிஞ்சிருக்கேன். திருமணமான உடனே ஒரு பெண் கரு தரிக்கணும்னு தான் எல்லோரும் நினைப்பாங்க. வாழ்க்கையில் அடுத்த ஸ்டேஜுக்கு போறது அதுதான். திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைக்கு ஆசை படுற பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் தான் என்னுடைய இந்த பதிவு. எதிலயும் திட்டமிடல் வேண்டும். அது ஆணோ, பெண்ணோ நம் பிள்ளைகளின் திருமணத்துலயும் இருக்கணும்,

திருமணம் பத்தி ஆரம்பிச்ச உடனேயே வந்த வரன் தலையில் கட்டி உடனடியா கல்யாணம் முடிக்கணும்னு இல்லை ஆனா  ரொம்ப தள்ளிப்போடாம சீக்கிரம் திருமணம் முடிச்சு ஆனந்தமான குடும்பத்தை அமைச்சுக்கணும் என்பதை பெண்களும் புரிஞ்சுக்கணும். அதை பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டியது கடமை.

7 comments:

ஹுஸைனம்மா said...

உரிய வயதில் திருமணம் செய்வதன் அவசியம் பிள்ளைகளுக்குத்தான் தெரியலைன்னா, பெற்றோர்களுக்கும் புரியாததுதான் ஆச்சரியம். எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதும் காரணம்தான்.

இதில் சில நாட்களுக்கு முன், பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்ய முடியலைன்னா சுய இன்பம் செய்றதில் தவறில்லைன்னு ஒரு பதிவு பார்த்தேன். என்னத்த சொல்றது? உலகம் எங்கே போகுது....

Abi Raja said...

உண்மையிலேயே நல்ல பதிவு மேடம்... இந்த காலகட்டத்தில் ரொம்பவே தேவையான பதிவும் கூட..

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நம்ம பெரியவங்க சில விஷயங்களை அழுத்தி சொன்னாங்களே தவிர அதுக்கான காரணத்தை அடுத்த தலைமுறைக்கு புரிய வைக்கணும்னு தோணலை அவங்களுக்கு. அதனாலயே அவங்களுடைய பல நல்ல கருத்துக்களை ஏத்துக்காத ஒண்ணு அல்லது ரெண்டு ஜென்ரேஷன் இருந்திருச்சு. படிச்சவங்க தலைமுறை உருவாகி, ஏன் எதுக்குன்னு காரணம் கேட்கும் போது பதில் கிடைக்காததால அதெல்லாம் மூட பழக்கம். அடிமைத்தனம்னு நினைக்க ஆரம்பிச்சதன் விளைவுதான்ன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அபினயா,

வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு அம்மா...

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரிவை.சே.குமார்

Swathi said...

வணக்கம்....சில தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேஎன்...நன்றி..என் வலைதளமும் வாருங்கள்...மகிழ்வேன் நன்றிhttp://swthiumkavithaium.blogspot.com/