Friday, January 06, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாகம் - 9


நாம அடுத்தவர் மீது குற்றம் சாற்ற கையை நீட்டும் போது மடக்கியிருக்கும் 3 விரல்கள் நம்மை நோக்கித்தான் இருக்குன்னு யோசிப்பதே இல்லை. நம்மை நோக்கி வரும் விமர்சனங்கள் உண்மையில் நம் மீது வைக்கப்படும் விமர்சனமே இல்லை. யார் பேசுகிறார்களோ அவர்களின் குணத்தை அல்லது அவர்களின் தன்மையைத்தான் குறிக்கிறது. இதை நாம மனசுல நல்லா பதிய வெச்சுக்கணும். கோபத்தில் வரும் வார்த்தைகள் கோபப்படும் மனிதரின் இயல்பையே குறிக்கும். அவங்க அளவுக்கு நாமளும் திருப்பி பேசி நம்ம தரத்தை குறைச்சுக்க வேணாம்.



இந்தப் படம் நல்லாயில்லை அப்படின்னு சொல்வது அந்த தனி மனிதரின் கருத்துதான். நாம போய் பார்த்தா ஏதோ ஒண்ணு நமக்கு பிடிச்சிருக்கலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அடுத்தவரின் கருத்துக்கு காது கொடுப்பதை நாம தவிர்க்கணும்.


ஒரு பயில்வானை வீழ்த்தணும்னு நினைச்ச சிலர் உடற்பயிற்சி முடிஞ்சு வரும் வழியில் நின்னுக்கிட்டு “ ஐயோ பாவம் பயில்வான், ரொம்ப சோர்வா இருக்காரு, உடம்பு சரியில்லை போல இருக்குன்னு” தினமும் சொல்வாங்க. அதை கேட்டு கேட்டு 5ஆவது நாள் பயில்வானால எந்திரிக்க கூட முடியாம தளர்ந்து போயிடுவாருன்னு ஒரு கதை கேள்வி பட்டிருப்போம்.

நாம எவ்வளவு திடத்தோட இருந்தாலும் அடுத்தவங்க சொல்லுக்கு அதிகமா மதிப்பு கொடுத்தா அந்த பயில்வான் மாதிரி நம்ம சந்தோஷத்தை தொலைச்சு இல்லாத வியாதிக்கு ஆட்படுவோம். நம்ம மன உறுதி தான் நம்மை காக்கும்.
நல்ல எண்ணத்துடன் முழு மனதுடன் என் கடமையை நான் தவறாமல் செய்கிறேன். அப்படி இருக்கும் போது அது நல்லவிதமாகத்தான் இருக்கும். சந்தேகமே வேண்டாம். அடுத்தவர் விமர்சனத்தை நாம் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது.

காது கேட்காத தவளை உச்சியை அடைந்த கதையை ஞாபகம் வெச்சுக்கணும். நம் முயற்சியில் நாம கண்ணும் கருத்துமா இருந்தா போதும்.  சரி அப்படியே விமர்சனங்களையும்

சரி அப்படியே அடுத்தவர் விமர்சனம் இல்லாமலேயே இருந்துவிட முடியுமா? அடுத்தவர் கருத்தும் சில சமயம் தேவைப்படும். புராண கதையில் குழந்தை துருவன் தன் தந்தையின் மடியில் உட்கார ஆசைப்பட சித்தி  சுருதி அவனை கீழே தள்ளி “கடவுள்  நினைத்தால் மட்டுமே உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்” அப்படின்னு சொல்ல, 5 வயது குழந்தை தவம் செய்ய காட்டுப்போய்விடுகிறது.
கடும் தவத்தின் பலனாக விஷ்ணுவை தரிசித்து பேரருள் பெற்று துருவ நட்சத்திரமாக திகழ்வதா சொல்லியிருக்கு.


அடிக்கடி நாம நம்மை சுய அலசல் செஞ்சு பார்க்க மாட்டோம். சரியாத்தான் செய்வோம், இருப்போம்னு ஒரு எண்ணத்துல தப்பு செய்யவும் வாய்ப்பு இருக்கு. அப்போ நம் மீது வைக்கப்படும் விமர்சனத்தால நாம கொஞ்சம் யோசிப்போம். நம்மை திறுத்திக்கவும் வழி இருக்கு. அதனால முழுதுமாவே அடுத்தவங்க பேச்சுக்கு நாம மதிப்புக் கொடுக்க கூடாதுன்னு இருந்து விட கூடாது. அது நமக்குள் ஒரு அகங்காரத்தை உருவாக்கிடும்.

அப்ப என்னதான் செய்வது. அடுத்தவங்க சொல்லுக்கு ஓவரா மதிப்பு கொடுக்கவும் கூடாது. நம் நலம் விரும்பிகள் சொல்லும் விமர்சனத்தை ஏற்க மறுக்கவும் கூடாது. தீர ஆலோசனை செய்யணும். இவங்க சொன்னது எந்த விதத்துல சரி/தவறுன்னு நம்ம ஈகோவை பக்கத்துல வெச்சிட்டு உண்மை மனசோட யோசிக்கணும். மாற்றிக்கொள்வது நல்லதுன்னு நினைச்சா செய்யணும். சில தேவை இல்லாத விமர்சனங்களை தவிர்த்து விடுவதுதான் நல்லது.

நான் கத்துக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம். நம் வாழ்வில் நாம சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ விதத்தில் பாடத்தை, அல்லது நல்லதை சொல்லிக்க் கொடுக்கத்தான். சிலர் நல்லவிதமா சொல்லி கொடுத்திருப்பாங்க. சிலர் அவங்களுடைய மோசமான நடத்தையால நமக்கு சொல்லி கொடுத்திருப்பாங்க. ரொம்ப அடிபட்டு ஒரு பாடத்தை நாம கத்துக்கிட்டு இருந்திருப்போம். ஆனா ஒரே மனிதரிடம் திரும்ப திரும்ப பிரச்சனை வருதுன்னா அவர்கிட்டேயிருந்து நாம கத்துக்க வேண்டியது இன்னும் முடியலைன்னு அர்த்தம் :). ஸ்மைலி போட்டேன் என்பதால இது காமெடி விஷயம் இல்லை. ஆழமா யோசிச்சா இது உண்மை.

நாம ஒருவர் மேல ரொம்ப அன்பு வெச்சிருப்போம். எதிராளிக்கு அந்த அன்பை புரிஞ்சுக்கும் தன்மை இல்லாம இருக்கும். கத்தி கோவப்படுவாரு. என்னை உன் அடிமைன்னு நினைச்சியா? அதுவா இதுவான்னு. நம்மை விட்டு விலகியிருப்பார். அப்படிபட்டவங்களை கெஞ்சி கூத்தாடி நம்ம கூட இருக்க வைப்பதை விட விலகிறதா இருந்தா சரின்னு விட்டுடணும். கெஞ்சக் கூடாது.

நம்ம வாழ்க்கையில் அந்த நபருக்கு முக்கியத்துவம் இருக்குன்னா கண்டிப்பா திரும்ப வருவார். இல்லை வராமலும் போகலாம். சில மனிதர்களை நம் வாழ்வில் வருவதும் போவதும் அடிக்கடி நடக்கலாம். எல்லாம் நம் நன்மைக்கே. நம்மால் அவர்களுக்கு ஒரு நல்லது/ படிப்பினை வர வேண்டி இருக்கலாம். அல்லது அவங்க கிட்டேயிருந்து நமக்கு படிப்பினை கத்துக்க வேண்டியது பாக்கி இருந்திருக்கலாம். முடிஞ்சதும் அவங்க விலக வேண்டியதுதான் நிஜம். இது படிக்க ஈசி. ஆனா நடைமுறையில் ரொம்ப கஷ்டம். மருந்து கசப்பா இருந்தா விழுங்க மாட்டேன்னு சொல்ல முடியாது. விழுங்கி ஜீரணம் ஆனாத்தான் குணமாகும்.





9 comments:

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு. நிறைய இடங்கள் அட ஆமாம்ல என்று நினைக்க வைக்கின்றன. அருமை.

pudugaithendral said...

வாங்க ஸ்ரீராம்.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

அபயாஅருணா said...

ஆழமான கருத்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல படிப்பினைகளின் தொகுப்பே வாழ்க்கை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

pudugaithendral said...

வாங்க அபயா அருணா,

இந்த தொடர் நான் மீண்ட கதை. பலருக்கும் உதவலாம்னு பகிர்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஐயா,

ஆமாம். ஆனா அந்த படிப்பினைக்கு விலையாக கொடுப்பது நம் ஆரோக்கியமா இருக்க கூடாது. ஆரோக்கியத்தை இழந்தால் மொத்தமும் வீணாச்சே.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க குமார் மிக்க நன்றி

வாங்க தனபாலன். மிக்க நன்றி