Wednesday, December 09, 2009

ஊருக்கு போனதும் கடுதாசி போடுவீகளா????

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த..

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளிலே...


என்ன அருமையான பாட்டுல்ல..

ஒரு காலத்துல கடுதாசி எழுதிப்போடறதுன்னா பெரிய விஷயம்.
கடுதாசியில மஞ்சள் தடவி வந்தச்சுன்னா சுபத்தை சொல்லுது.
ஓரத்துல கருப்பு மை தடவி வந்துச்சுன்னா சோகத்தை சொல்லுது
அப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.



ரொம்ப பெரிய விஷயம் சொல்லணும்னா இன்லெண்ட் லெட்டர்
அல்லாடி 15 பைசா கார்ட் போதும். ”15 கார்ட் பெற மாட்டேனா
நானு, ஒரு கடிதம் எழுதினாத்தான் என்னன்னு? சண்டை
போட்ட அக்கா, தங்கச்சிக எம்புட்டு பேரு”!!!


”வீட்டுல கலந்து பேசி, தாக்கல் சொல்றோம்னு” மாப்பிள்ளை
வீட்டுக்காரக சொல்லிட்டு போனதுலேர்ந்து தபால்காரருக்காக
காவல் கிடந்தவக எம்புட்டு பேரு!!



அடுத்து போன். இது எல்லார் வீட்டிலயும் இருக்காது.
பூத் தான்.

ட்ராங்கால் புக் செஞ்சு பேசி மாளாது. புதுகையிலிருந்து
திருச்சியே எஸ்.டீ.டீ. காசு ஜாஸ்தி. அவசரமான
தாக்கல்னா தான் யாருக்கும் போன் போடுவோம்.



”போன் பேசுற அளவுக்கு பெரிய ஆளா... லெட்டர்
போடு போதும். காசை வீணாக்காதேன்னு!” பெரியவங்க
அட்வைஸ் செய்வாங்க.

ராத்திர் 9 மணிலேர்ந்து காலேல 6 மணி வரை 1/4 ரேட்

6.30 லேர்ந்து 9 மணி 1/2 ரேட்
9 லிருந்து 9 வரை ஃபுல் ரேட்

இந்த பல்ஸ் ரேட்டில் சின்ன சின்னதா மாத்தம் வந்து
இப்ப இந்தியா முழுக்க எப்ப பேசினாலும்
காசு குறைவா ஆகுற மாதிரி மாறியிருக்கு.
கை வலிக்க டயல் செஞ்சது போக இப்ப
நாம வீடு முழுக்க தூக்கிகிட்டு போற மாதிரியெல்லாம்
போன் வந்திடுச்சு.


இந்த மொபைல் வருவதற்கு முன்னால பேஜர்னு ஒண்ணு
இருந்துச்சு. நாம் சொல்வதை அவங்களுக்கு மெசெஜ்ஜா
அனுப்பிடுவாங்க. எங்க இருந்தாலும் நாம சொல்ல வேண்டிய
தாக்கல் அவங்களுக்கு போயிடும். ரொம்ப வசதியா இருந்துச்சு.

அயித்தானுக்கும் பேஜர் இருந்துச்சு. எப்பவும் “கால் மீ பேக்”
மெசெஜ் கொடுத்து வெச்சிடுவேன். சும்மாவா லோக்கல் காலுக்கு
காசு அதிகமாச்சே. அதுவும் பூத்லேர்ந்து தான் செய்வேன்.

”உப்பு, புளி எல்லாம் மறக்காம வாங்கி வரச்சொல்லி
மெசெஜ் வருதுப்பா! இந்த பேஜரை கண்டுபிடிச்சவன்
எவனோன்னு!!” அயித்தானோட ஃப்ரெண்ட் ஒருத்தர்
அழுவாரு பாவம்.


பார்த்திபன் கனவு படத்துல சேல்ஸ் மெனா வர்ற
ஸ்ரீகாந்த் ஒரு டயலாக் சொல்வார்.”உங்க எம்ப்ளாயிஸுக்கு
பேஜர் கொடுக்கறதை விட மொபைல் கொடுக்கலாம்.
பேஜர் இருந்தா பேசாம இருக்க வாய்ப்பு இருக்கு.
மொபைலை எடுத்து பேசியே ஆகணும்.” ரொம்ப
சரியான விஷயம்.

இப்ப எல்லோர் கையிலயும் மொபைல் போன் தான்.
அது இல்லாதவங்க குறைவுதான்.


இப்ப மொபைலைத் தாண்டி இமெயில்,ஆர்குட்,ட்விட்டர்
ஃபேஸ்புக்னு போய்க்கினு இருக்கோம்.

ஆனா எனக்கு மனசு மட்டும் கொஞ்சம் கணமாத்தான் இருக்கு.
நம்ம நட்புக்களோட பேசுறோம், மெயில் அனுப்பிக்கிறோம்.
உறவுக்காரவுகளை சுத்தமா மறந்திடறோம்.
தூரத்து உறவு, ஒண்ணுவிட்ட உறவெல்லாம் வேண்டாம்.

சொந்த சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை இவுக கிட்டயாவுது
பேசுறோமா? மெயில் வசதி இல்லாதவகளுக்கு லெட்டராவது
எழுதி போடுவோமா?? ஒரு போனு???

முன்னாடியெல்லாம் அத்தை, சித்தி வீட்டுக்கு போயிட்டு
வந்த பிறகு, வந்து சேந்துட்டேன்! நான் அங்கன இருந்த போது
நல்லா கவனிச்சதுக்கு நன்னின்னு சொல்லி 4 வார்த்தை
கார்டாவது எழுதுவோம். இப்ப யாரும் யாரு வீட்டுக்கும்
போறதுமில்லை, வாரதுமில்லை. அப்புறம் எங்க கடிதம்??


உறவை பலப்படுத்த இந்த கடித போக்குவரத்தாவது முக்கியம்.
அதனால் நம்ம நட்பு, உறவுகிட்ட என்னோட விண்ணப்பம்
இன்னான்னா? இந்த புதுவருஷத்துலேர்ந்தாவது நம்ம
சொந்த பந்தங்கிட்டயும் உறவை புதுப்பிச்சு தொடர்புல இருப்போம்
என்பதுதான்.

எங்க சித்திக்கு நானும் தம்பியும் சேர்ந்து 3 வருஷம் முன்னாடி
மொபைல் வாங்கிக் கொடுத்தோம். எஸ்.எம்.எஸ் அடிக்கத்
தெரியாது. போன் செஞ்சா பேசுவாங்க. இப்ப எங்க சித்தி
சும்மா சூப்பரா மெசெஜ் அனுப்பறாங்க.

அப்படி சில எஸ்.எம்.எஸோட அடுத்த பதிவுல
சந்திக்கறேன்.


டிஸ்கி:நாலுவரி கடுதாசி போட நேரமில்லைன்னா ...
ஒரு மணியார்டர் அனுப்பிருங்க. நீங்க நல்லபடிப்
போய்ச் சேர்ந்த இருக்கும் விவரம் புரிஞ்சுக்குவேன்.

ஐடியா தந்த துளசி டீச்சருக்கு நன்றி):))

35 comments:

துளசி கோபால் said...

நாலுவரி கடுதாசி போட நேரமில்லைன்னா ...ஒரு மணியார்டர் அனுப்பிருங்க. நீங்க நல்லபடிப் போய்ச் சேர்ந்த இருக்கும் விவரம் புரிஞ்சுக்குவேன்.

pudugaithendral said...

:)) ஐடியா நல்லாயிருக்கே...
டிஸ்கில சேத்திடறேன்.

pudugaithendral said...

வரும்படிக்கு ஏற்பாடு செஞ்ச டீச்சருக்கு நன்றி

துளசி கோபால் said...

சேர்ந்துருக்கும் - சேர்த்துப்போட்டுருங்க

தராசு said...

என்ன இருந்தாலும் கடிதாசி மாதிரி சௌகரியம் எதுலயும் வராது. வாயால சொல்ல சங்கோஜப் படற நிறைய விஷயங்களை ஒற்றை வரியில் எழுதி விட்டறலாம்.

pudugaithendral said...

ஆமாண்ணேன்,

கோவத்தை காட்டுதோ, அன்பைக்காட்டுதோ லெட்டர்ல எப்பவும் எடுத்து வாசிக்கற ஒரு சுகம் இருக்கும்.

அப்படி மெயிலும் எனக்கு பொக்கிஷம் தான். பல மெயில்களை அழிக்காமலே வெச்சிருந்து படிச்சு பாத்துப்பேன்.

ஹுஸைனம்மா said...

//ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த..
சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளிலே...//

அக்கா, ஏன்க்கா பாட்டு போடலை? சூப்பர் பாட்டு, சரிதாவோட எக்ஸ்பிரஷன்ஸ் நல்லாருக்கும்.

அப்பா, கணவர் வெளிநாட்டுல இருந்ததால கடிதங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இப்ப VOIP!!

pudugaithendral said...

ஏன்க்கா பாட்டு போடலை? சூப்பர் பாட்டு, சரிதாவோட எக்ஸ்பிரஷன்ஸ் நல்லாருக்கும்.//

ஆமாம் சூப்பரா இருக்கும். எப்பவும் பாட்டு போடறதால இந்த தடவ வரிகள் மட்டும் எடுத்துகிட்டேன்.//

கணவர் வெளிநாட்டுல இருந்ததால கடிதங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. //

ஆஹா இதுலயும் சேம் ப்ளட்டா இருந்திருக்கீகளே.:))

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு பதிவு.

ம்ம்ம் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நேரம் ஒதுக்கனும் மாதம் ஓர் நாளாயினும் ...

தாரணி பிரியா said...

என் பெரியம்மா பொண்ணுதான் என் பெஸ்ட் ப்ரெண்ட். அவளுக்கு நான் எழுதின லெட்டர் எல்லாம் கலர் ஜெராக்ஸ் செஞ்சு போன வருசம் தந்தா. நான் 1வது படிக்கும்போது இருந்து நான் செல்போன் வாங்கற வரைக்கும் எழுதின எல்லாம். இப்ப எல்லாமே போன் தான் :(

அமுதா said...

/*கை வலிக்க டயல் செஞ்சது போக இப்ப
நாம வீடு முழுக்க தூக்கிகிட்டு போற மாதிரியெல்லாம்
போன் வந்திடுச்சு. */
:-). நல்ல பதிவு.

pudugaithendral said...

வாங்க தாரணிப்ரியா,

இங்கயும் போன்னு ஆகிடுச்சு. ஆனாலும் அதுலயும் மெசெஜ் அனுப்பறது ரொம்ப பிடிக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி அமுதா

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த..

சேந்துச்சோ சேரலியோ செவத்த மச்சான் கைகளிலே...//

சூப்பர் பாட்டுங்க அது.

கடிதம் - காலப்போக்குல மறந்தும் மறக்காது போன விஷயமாயிடுச்சு.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி அமித்து அம்மா,

என்ன செய்ய கடிதம் எழுதும் பழக்கம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லாமலேயே போயிடும் போல இருக்கு. :))

வல்லிசிம்ஹன் said...

இப்பத்தான் பழைய கடுதாசி எல்லாம் பிரிச்சு வச்சுக் கிட்டு ஒரே,சோகமாப் போச்சு . அடடா எப்பேர்ப்பட்ட வரிகள். பாசம், பாசம் பாசம் அதைத் தவிர வேற இல்லைன்னுட்டு பதிவுப் பக்கம் வந்தா தென்றல் கலக்கிட்டு இருக்காங்க.:)
ரொம்ப சுவையாக் கடிதம் எழுதிட்டீங்க.
திருமணத்துக்கப்புறம் கடிதம் எதுவும் எழுதிக்கலையோ நீங்க. அது இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்குமே:)

துளசி கோபால் said...

ஆமாம்....இங்க பின்னூட்டங்களைப் படிச்சதும்தான் கொசுவத்தி ஏத்திக்கிச்சு.

இப்பெல்லாம் பள்ளிக்கூடத்துப் பரிட்சைகளில் *** வார்த்தைகளுக்கு மிகாமல் ***** வுக்கு ஒரு கடிதம் எழுதவும் வர்றதில்லையா?

(பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் பதில் சொல்லுங்க. இப்பெல்லாம் புள்ளைங்க ஹோம் ஒர்க் முழுசும் இவுங்க தலையில்தானே?)


ஒரு சமயம் ஹிந்தி பரீட்சையில் 'அத்யந்த் கே பாரே மே, பிதாஜிக்கோ சிட்டி லிக்கோ'ன்னு வந்துச்சு.

அப்பெல்லாம் ஒழுங்காப் படிச்சுருந்தாதானே அத்யந்த்க்கு அர்த்தம் தெரிஞ்சுருக்கும்!

ஃப்ரம் அட்ரஸ், டு அட்ரஸ் எல்லாம் பக்காவா போட்டுட்டேன்(பார்ட் பார்ட்டா இதுக்குத் தனியா மார்க் கிடைக்கும்)

'ப்ரிய பிதாஜி,
மேரா அத்யந்த் கே பாரே மே(ய்)ன் முஜே குச் நஹி மாலும்
ஹை' ன்னு எழுதி, அதெல்லாம் பாஸ் மார்க் வாங்கித் தப்பிச்சுக்கிட்டேன்லெ:-))))

KarthigaVasudevan said...

லெட்டர் போடுறது எவ்ளோ அருமையான விஷயம் தென்றல்?!

பாப்புக்கு டைம் பாஸ் பண்ண அதையும் தான் ட்ரெயின் பண்ணிட்டு இருக்கேன். லீவு நாள்ல நிமிஷத்துக்கு ஒரு தடவை என்ன வேண்டாத வேலை பண்ணி வைக்கப் போறாங்களோனு குழந்தைங்களை வாட்ச் பண்றதுக்கு இப்படி எதாச்சும் உருப்படியா பழக்கி விடலாமேன்னு தோணுச்சு ,இப்பலாம் அவளுக்குத் தெரிஞ்ச அரைகுறை ஆங்கிலத்துல குட்டி குட்டி செண்டன்ஸ் போட்டு பாதி நேரம் லெட்டர் எழுதற வேலை தான்.இன்னின்னவங்களுக்கு தான்னு கணக்கேதுவும் கிடையாது,எனக்கு ,அவ அப்பாக்கு,தாத்தா பாட்டி...மாமா,சித்தி,அவங்க மிஸ்ஸுக்கு ,ஹெச்.எம் மிஸ்ஸுக்கு எல்லாருக்கும் லெட்டர் எழுதிட்டு இருக்கா பாப்பு.

:)))

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

.

திருமணத்துக்கப்புறம் கடிதம் எதுவும் எழுதிக்கலையோ நீங்க. அது இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்குமே//

திருமணத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்பவரைக்கும் அயித்தானுக்கு லெட்டர் எழுதறதுண்டு. மெயிலாவது அனுப்பிடுவேன். ரெண்டு பேருக்கும் கோவம், சண்டைக்கு சமாதானம் மெயில் விடு தூது தான். அன்பு அதிகமாகிட்டா வாழ்த்து அட்டை அனுபிச்சுக்கறதும் உண்டு.

:)))

pudugaithendral said...

'ப்ரிய பிதாஜி,
மேரா அத்யந்த் கே பாரே மே(ய்)ன் முஜே குச் நஹி மாலும்
ஹை' ன்னு எழுதி, அதெல்லாம் பாஸ் மார்க் வாங்கித் தப்பிச்சுக்கிட்டேன்லெ//

என்னத்த சொல்ல :)))

இப்ப பசங்களுகு காம்போஷிஷன் நோட்டே இல்லை. இதுல எங்க லெட்டர் எழுதறது :(

pudugaithendral said...

அப்பாக்கு,தாத்தா பாட்டி...மாமா,சித்தி,அவங்க மிஸ்ஸுக்கு ,ஹெச்.எம் மிஸ்ஸுக்கு எல்லாருக்கும் லெட்டர் எழுதிட்டு இருக்கா பாப்பு. //

good good so sweet

Ungalranga said...

உண்மைதான் மா..!!

பொக்கிஷம் படத்தில் வரது மாதிரி..எல்லாத்தையும் உடனே தெரியப்படுத்திவிடும் இப்போதைய டெக்னாலஜியால நமக்கு சிந்திக்கும் திறன் குறைஞ்சி டென்ஷன் அதிகமாகிடுச்சு..

லெட்டரில் அப்படி இல்லை..யோசிச்சு எழுத நேரம் இருக்கும்.. மனசின் உண்மை உணர்வுகள் வெளிவரும்..

ம்ம்..சிந்திக்க வெச்சிட்டீங்க..!
வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

பாஸ்,

டெம்ப்ளேட் புதுசா போட்டு பின்றீங்க, இதுக்கு நீங்க கண்டிப்பா பலகாரம் பண்ணி அனுப்பணும்.

butterfly Surya said...

super.. template kalakkal.

K K ..

ஆயில்யன் said...

மணியார்டர் ஐடியா நல்லா இருக்கு இந்த வாட்டி நான் ஊருக்கு போயிட்டு ரிடர்ன் வர்றப்ப நீங்க அனுப்புங்க பாஸ்!

டெம்ப்ளட் சூப்பரூ! ஆனாலும் தென்றலின் வரிகள் ஒதுங்கி நிக்கிது ஏன்????

pudugaithendral said...

பாஸ் இதுக்கெல்லாம் பலகாரம் செஞ்சு உங்க தேசத்துக்கு அனுப்பறதுக்கு பதிலா நீங்க இங்க புறப்பட்டு வந்திடுங்க

:))

pudugaithendral said...

நன்றி சூர்யா

pudugaithendral said...

இந்த வாட்டி நான் ஊருக்கு போயிட்டு ரிடர்ன் வர்றப்ப நீங்க அனுப்புங்க பாஸ்//

ஊருக்கு போய் சேந்த பின்னாடி நீங்க தான் பாஸ் அனுப்பனும்!!! நான் உங்க ஊருக்கு வந்து திரும்போது அனுப்பறேன்.

:))

pudugaithendral said...

லெட்டரில் அப்படி இல்லை..யோசிச்சு எழுத நேரம் இருக்கும்.. மனசின் உண்மை உணர்வுகள் வெளிவரும்..//

ஆமாம் ரங்கா.

வருகைக்கு நன்றி

Pandian R said...

இந்த மாற்றங்கள் எல்லாம் எவ்வளவு வருட காலமா நடந்திருக்கும் யோசிச்சுப் பாருங்க. 10 அல்லது 12??? அதுக்குள்ள தபால் மட்டுமில்லாம தொலைபேசி கூட நாஸ்டால்ஜியாவாகிப்போச்சு. அட அவ்வளவு ஏன், போன மாசம் இருந்த ஒயரு மோடம் போய், கட்டவிரல் தண்டி மோடம் வந்தாச்சி.. ஒரு டயலாக் நியாபகம் வருது.. பட்டணத்தில் பூதம் படத்தில!! அன்றே சாலமன் சொன்னான், தலைகீழாக தொங்கும் தீபங்கள் எதிர்காலத்தில் தோன்றும் என்று!!!

நன்றி!

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

மாற்றங்கள் நிகழ்ந்துகிட்டே இருக்கு. கணிணியே தேவையில்லாம எல்லாமே மொபைலில் செய்து கொள்ளும் நிலமை இருக்கு. இனி என்னவா மாறும் என்பது தான் யோசனையா இருக்கு!!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

நிஜம்தான் புதுகைத்தென்றல்


நிறைய உறவுகளை மிஸ் பண்றோம் புதுகைத் தென்றல்

நல்ல பதிவு

காற்றில் எந்தன் கீதம் said...

//திருமணத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்பவரைக்கும் அயித்தானுக்கு லெட்டர் எழுதறதுண்டு. மெயிலாவது அனுப்பிடுவேன். ரெண்டு பேருக்கும் கோவம், சண்டைக்கு சமாதானம் மெயில் விடு தூது தான். அன்பு அதிகமாகிட்டா வாழ்த்து அட்டை அனுபிச்சுக்கறதும் உண்டு.//
ரீபீடேய்.................

டெம்ப்ளேட் சூப்பர் அக்கா.

கோமதி அரசு said...

என் அப்பா,அம்மா,அக்கா,அண்ணன்
கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாக்கிறேன்.

திரும்ப,திரும்ப எடுத்துப் படிப்பது ஒரு சுகம்.

கணவரின் முக்கியமான கடிதங்கள்,குழந்தைகளின் கடிதங்கள்,உறவினர் கடிதம் என பட்டியல் நீளும்.

உறவுக்கு கை கொடுப்போம்.
உறவுகளுக்கு நீங்கள் சொன்னமாதிரி நேரம் ஒதுக்கினால் தான் உறவுகள்
பலப்படும்.

pudugaithendral said...

உறவுக்கு கை கொடுப்போம்.
உறவுகளுக்கு நீங்கள் சொன்னமாதிரி நேரம் ஒதுக்கினால் தான் உறவுகள்
பலப்படும்.//

வருகைக்கு நன்றி கோமதி அரசு