Wednesday, June 22, 2011

அன்னை துர்கையே!! எங்கள் கனக துர்கையே!!!

சில இடங்களுக்கு நாம போகணும்னு நினைச்சாலும் அது நடக்க
அருள் இருக்கணும். ரொம்ப வருஷத்துக்கு முன்னால விஜயவாடா போனது.
அதாவது ஆஷிஷ் குட்டியா இருந்தப்ப. அதுகப்புறம் போகும் வாய்ப்பே
கிடைக்கல. போன வருஷம் போக ப்ளான் போட்டு ட்ரையினில் டிக்கெட்
எல்லாம் புக் செஞ்சாச்சு, அயித்தானுக்கு அவசரமா மிக முக்கியமான
அலுவல் வந்து கேன்சல் செஞ்சோம். உனக்கு மனசிருந்தா உன்னை
பாக்க அருள் புரின்னு விட்டுட்டேன்.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் திடும்னு அயித்தான் நான் வேலை விஷயமா
விஜயவாடா போறேன் வர்றியான்னு? கேட்டார். ட்ரையின் டிக்கெட்
புக் செய்யலியேன்னு யோசிச்சேன். ட்ரையின்ல போகலை, கார்ல
போறோம்னு சொன்னாரு. ”வருவேன். ஆனா இந்த வாட்டி கண்டிப்பா
மங்களகிரி நரசிம்மரை பாக்காம வரக்கூடாதுன்னு” அப்படின்னதும்
சரி ஒரு நாள் முன்னதாகவே கிளம்புவோம்னு சொன்னாரு. பசங்களுக்கும்
அப்பத்தான் ஸ்கூல் முடிஞ்சிருந்தது. மேமாதம் போனா அது விஜயவாடா
இல்ல ப்ளேஸ்வாடா. சும்மா தகிக்கும்.

வெள்ளிக்கிழமை கிளம்பி, சனிக்கிழமை இரவு வந்துவிடுவதாக திட்டம்.
டிரைவருக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. சீக்கிரமாவே கிளம்பலாம்னு நினைச்சு
5 மணிக்கே எந்திரிச்சு ரெடியாகி 6 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்ப
நினைச்சோம். வெள்ளிக்கிழமை கனகதுர்க்கையைப் பார்க்க கூட்டம்
ஜாஸ்தி. அதனால அன்னைக்கு மங்களகிரியில் தரிசனத்தை முடிக்கணும்.
அதுவும் பகல் ஒரு மணிக்குள்ள போனாத்தான் பானகம் ஊத்த முடியும்!!
அதனால சீக்கிரமா கிளம்பி மங்களகிரி தரிசனம் முடிச்சு விஜயவாடா
வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டு அடுத்த நாள் சனிக்கிழமை கனக துர்க்கை
தரிசனம் செய்யலாம் என்பது எங்கள் ப்ளான்.

6 மணிக்கு வரவேண்டிய டிரைவர் வரும் வழியைக்காணோம்! மணி
7.30 தாண்டியதும் நான் காலை டிபன் செய்யும் வேலையில் இறங்கிட்டேன்.
நாங்க சாப்பிட்டு முடிச்சு 8 மணிக்கு வந்தாரு டிரைவர். அவரும் டிபன்
சாப்பிட்டதும் கிளம்பினோம். எங்க வண்டியில கேஸ் ஃபிக்ஸ் செஞ்சிருக்கோம்.
போன தடவை எங்கயோ அயித்தான் போனபோது அது கொஞ்சம் ப்ராப்ளம்
கொடுத்திச்சு. அதனால அதை கொஞ்சம் சரி செஞ்சிட்டு போகனும்.
போறவழிலதான் என்பதால அங்க போய் வண்டியைக் கொடுத்தா
1/2 மணியில ரெடியாகிடும்னு சொன்னாரு அயித்தான். லேசா டென்ஷன்!!!
5 மணிநேரப்பயணம்னு சொல்வாங்க. அப்பிடி இப்படின்னு 6 மணிநேரம்
ஆனாலும் மங்களகிரி மிஸ்ஸாகிடும்! நாளைக்கு கனகதுர்க்கம்மா கோவிலில்
பூஜைக்கு பணம் கட்டியாச்சு. அதை மாத்தவும் முடியாதே! இந்த
வாட்டியும் பானக நரசிம்மரை பார்க்கமலேயே வரணுமேன்னு வருத்தம்.

வேற வழியில்லை. அவ்வளவு தூரம் பயணம் எனும்போது வண்டி
நல்ல நிலையில் இருக்கணும். அதுவும் இது திட்டமிடாம உடனடியா
போறதால முன்னாடியே வண்டியை கொடுத்து சரி செய்யவில்லை.
சரி நடப்பது நடக்கட்டும்னு விட்டுட்டேன். ஒரு வழியா 10 மணிக்கு
கிளம்பினோம்.

விஜயவாடா-ஹைதைக்கு நடுவில் புது ரோடு போடறாங்க. அந்த
வேலை முடிஞ்சதுன்னு சும்மா சல்லுன்னு 4 மணிநேரத்துல விஜயவாடா
போயிடலாம். ஆனா வேலை நடந்துக்கிட்டு இருக்கும் பொழுது......
ஒரு பக்கம் ரோடு அகலமா இருக்கும், இன்னொரு பக்கம் சிங்கிள் ரோடு
மாதிரி போகும். ஹைவே என்பதால லாரிகளின் போக்கு வரத்து
அதிகம். சில இடங்களில் மண்போட்டு சமன் செஞ்சுகிட்டு இருக்காங்க.
கரணம் தப்பினா மரணம் என்பது போல ஒரு பயணம்.

மதியம் 3.30 மணி வாக்கில் விஜயவாடா போய்ச்சேர்ந்தோம்.
மங்களகிரி மலை போக முடியாது. சாயந்திரம் அங்கே பூஜை கிடையாது.
கோவிலை மூடிடுவாங்க. கீழே இருக்கும் நாராயணன் தரிசனம் மட்டும்தான்.
அது எப்ப வேணாம் பாக்கலாம். வெள்ளிக்கிழமை முழுவதும் கனகதுர்க்கை
கோவில் திறந்திருக்குமாம்!! முடிஞ்சா இன்னைக்கும் ஒரு தடவை
தரிசனம் செய்யலாம்னு அயித்தான் சொன்னாரு. அவருக்குத் தெரிஞ்சவர்
அங்கே வேலை செய்யறாரு. அவருக்கு போன் போட்டு பாத்தா எடுக்கவேயில்லை.
கோவில் கொஞ்ச தூரம் தான் எனும் பொழுது போன் போட்டா எடுத்தாரு!
வாங்க சார்! தரிசனம் செய்யலாம்னு சொன்னார்.

போனா மதியம் 4 மணி என்பதால கூட்டம் குறைஞ்சு மிக அற்புதமான
தரிசனம். இந்த கோவிலில் அப்படி என்ன விசேஷம். அன்னை
இந்திரகேலாதரி மலையில் உட்கார்ந்து தன் பக்தர்களை அருள் பாலிக்கிறாள்.
கீழே கிருஷ்ணா நதி தீரம். மேலே அன்னையின் தரிசனம்.
மஹிஷாசுரனை அழித்துதே இங்கே தான். அன்னை சுயம்புவாக
எழுந்தருளி இருப்பதால் இன்னமும் சக்தி அதிகம்.

அர்ஜுனன் இந்த மலையில் நின்றுதான் சிவனை நினைத்து தவம் புரிந்து
பாசுபதாஸ்த்ரம் பெற்றான். அவன் விஜயம் பெற்றதால் இந்த ஊரும் விஜயவாடா என ஆயிற்று.


வெள்ளிக்கிழமை அவளை தரிசனம் செய்ய முடியாது என நினைத்தேன்.
ஆனால் ஆனந்தமான தரிசனம். எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாய்
அருள் பாலிக்கிறாள். அங்கேயிருந்து ஒரு எட்டு மங்களகிரி போய்ப் பார்க்கலாம்
என போனோம். 11 கிமீ என்கிறார்கள். போய்க்கொண்டேஏஏஏஏஏஏ
இருக்கிறது. இதுதான் பிரகாசம் பேரேஜ்.கிருஷ்ணா நதியில்
கட்டப்பட்டிருக்கும் 1223.5 மீட்டர் நீளமுள்ள இந்தப்
பாலம் தான் கிருஷ்ணா மாவட்டத்தை இணைக்கிறது.

மங்களகிரி போனோம். கீழே அனந்த சயனனை தரிசித்து கோவிலில்
விசாரித்தால் 3 மணிவரை மலைக்கோவிலுக்கு அனுமதி உண்டு என்றும்
அதுவரை பானகம் ஊற்ற அனுமதிப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
மங்களகிரி கோவிலின் வலைத்தளம் அப்டேட் செய்யப்படாமல் பழைய
தகவல்களைக்கொண்டு இருந்ததைப் படித்ததால் வந்த வினை. சரி
நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என விஜயவாடா வந்து நாங்கள்
ஹோட்டலில் செக்கின் செய்தோம்.

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அயித்தான் தன் ஆபீஸ் வேலையைப்
பார்க்க போய்விட்டார். இரவு அவர் வந்ததும் வெளியே சென்று
டிபன் சாப்பிட்டு வந்து கட்டையை சாய்த்ததுதான் தெரியும்.




7 comments:

வெங்கட் நாகராஜ் said...

கனகதுர்கா தேவி சரணம்....

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஒரு தோற்றம் கனகதுர்க்காதேவிக்கு.

கிருஷ்ணாவில் ஒரு முக்கு போட்டுவிட்டு அப்படியே பொடி நடையாய் மலையேறி அருள்பாலிக்கும் துர்க்கையை கண்டு மீண்டும் வீடு சென்ற இளமைக்கால விடுமுறைகள் நினைவுக்கு வந்தது.....

நல்ல பகிர்வு சகோ.

pudugaithendral said...

பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல ஒரு தோற்றம் கனகதுர்க்காதேவிக்கு. //

ஆமாம் சகோ, திருப்பதி மாதிரி இங்கயும் கொஞ்சம் ஜரகண்டி ஆரம்பிச்சிருக்காங்க. அதான் கஷ்டம். நமக்கு யாராவதையவது தெரிஞ்சிருந்தா நல்ல தரிசனம் கிடைக்கும் என்பது என் அனுபவம்

வருகைக்கு நன்றி

GEETHA ACHAL said...

நாங்கள் உங்களுடன் வந்தது போல எண்ணம் தோன்றுகின்றது....நல்ல பகிர்வு...

ADHI VENKAT said...

அம்மனின் முகம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அவ்வளவு அழகு. நவராத்திரியில் சென்றதால் ஜடை அலங்காரத்துடன் காட்சியளித்தாள் என்று நினைக்கிறேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விஜயவாடா செல்ல வேண்டும்.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கீதா

pudugaithendral said...

ஆமாம் கோவை2தில்லி,

கொள்ளை கொள்ளும் அழகு. சந்நிதியை விட்டு வர மனம் தான் இல்லை.

வருகைக்கு நன்றி

Geetha6 said...

நல்ல பகிர்வு