Tuesday, January 03, 2012

பிள்ளையார்பட்டி - பழனி

இந்த வருடமும் பிள்ளையார்ப்பட்டி போனோம். கற்பகவிநாயகருக்கு
அபிஷேகம் செய்ய பணம் கட்டியிருந்தோம். காலை 11.30மணிக்கு
அபிஷேகம். 1 மணி நேரம் முன்னதாகவே இருக்க வேண்டும் என்று
சொன்னார்கள். அதனால் புதுகையிலிருந்து 9 மணிக்கே கிளம்பினோம்.
அங்கே போய் காத்திருக்க வைத்துவிட்டார்கள். (சென்ற முறையும்
தாமதமாகத்தான் ஆரம்பித்தார்கள்.) நிர்வாகத்தினர் இந்த குறைபாட்டை
களைய ஏதாவது செய்தே ஆகவேண்டும். 11.30க்கு துவங்க வேண்டிய
அபிஷேகம் 12.30க்குத்தான் துவங்கியது. பணம் கட்டி வந்திருப்பவர்களை
சந்ந்திக்கு முன்பாக இருக்கும் இடத்தில் அமர்ந்து அபிஷேகம் பார்க்க
விடுவார்கள். கர்ப்பகிருகத்திற்கு முன்னால் இருக்கும் படிக்கட்டுகளில்
கணபதி ஹோமம் அல்லது 60 செய்து கொள்பவர்கள் அமர்வார்கள்.



அன்று கணபதி ஹோமம் செய்ய வந்தவர்களுடன் ஒரு 50 பேர்
வந்திருப்பார்கள். அத்தனை பேரும் எங்களுக்கு முன்னால் வந்து
அமர்ந்து கொள்ள எதிரே இருந்தாலும் அபிஷேகம் சரியாக
பார்க்க முடியாத சூழல். அபிஷேகத்திற்கு பணம் கட்டினால்
அந்த டிக்கெட்டில் 3 அல்லது 5 பேர்தான் என்று கண்டிப்பாக
இருக்கிறவர்கள், இந்த ஹோமம் அல்லது சாந்தி செய்து கொள்பவர்கள்
கூட்டம் பற்றியும் முறை வைத்துக்கொள்வது நல்லது என்று படுகிறது.
கொஞ்சம் கசப்பான அனுபவம் தான்.

சுயம்புவாக தோன்றி அருள்புரியும் கற்பக பிள்ளையாருக்கு
அபிஷேகம் ஆரம்பமானது. வீபுதி அலங்காரம் செய்த அழகே
அழகு. அபிஷேகம் முடிந்து தங்ககாப்பு சாற்றினார்கள்.
கற்பூர ஆரத்தியில் இன்னமும் ஜொலித்தார் திருவீசர்.
பூஜை முடிந்து, பிரசாதம் வாங்க நேரம் ஆகிவிட்டது.
அங்கேயிருந்து திருப்பத்தூர் போய் பேருக்கு ஏதோ
சாப்பிட்டு 2 மணி வாக்கில் பழனிக்கு பயணமானோம்.

அயித்தானுக்கு தெரிந்தவர் மூலமாக தரிசனத்திற்கு
ஏற்பாடு செய்திருந்தோம். ஹோட்டல் திருப்பூர் லாட்ஜில்
தான் தங்கினோம். காசுக்கேத்த தோசை. நல்லாவே
சுத்தமாக இருந்தது. பழனி அடிவாரம் சேர்ந்த பொழுது
மணி 5. ஆனால் 5 மணிக்குள் மேலே போய் பணம்
கட்டினால்தான் தங்கரதம் இழுக்க முடியும். முயன்று
பார்ப்போம் என்று அயித்தானும், அவரது நண்பரின்
உதவியாளரும் எங்களுக்கு முன்னால் கிளம்பி போனார்கள்.



பழனியாண்டவரை தரிசிக்க படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த
காலம் போய் விஞ்ச் வந்தது. இப்பொழுது அதை விட
சூப்பராக ரோப்கார். ரோப்காரில் அர்ஜண்ட் ஆர்டினரி
என இரண்டு இருக்கு. அதாவாது சாதரணமா 15 ரூபாய்
கட்டணம். விஐபி கட்டணம் 50 (ஒரு நபருக்கு). இந்த
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காலத்தில்
எல்லா கோவில்களும் நிரம்பி வழியும். காரணம்
ஐயப்ப பக்தர்கள். அத்துடன் மேல்மருவத்தூர்
பக்தர்களும் சேர்ந்து கொள்ள செம கூட்டம்.



அதானால் விஐபி ரோப்கார் கட்டணம் செலுத்தி
நான்,குழந்தைகள், அம்மா, அப்பா சென்றோம்.
கீழே அவ்வளவு கூட்டத்தை பார்த்தே பிரமித்து
போய்விட்டேன். இதில் பழனி மலையில் இருக்கும்
திரளான கூட்டத்தை பார்த்து ஷாக்தான். 100 ரூபாய்
சிறப்பு தரிசனத்திற்கு 4 மணிநேரம் வரிசையில்
நிற்கிறார்கள்!!!!!!!!!!!

தங்கரதம் டிக்கெட் கிடைத்தா? கந்தன் தரிசனம்
எப்படி இருந்தது? எல்லாம் அடுத்த பதிவில்



5 comments:

பால கணேஷ் said...

பிள்ளையார்பட்டி கோயிலை நகரத்தார் நன்றாகவே நிர்வாகம் செய்தார்கள். (நான் அழகப்பா கல்லூரியில் படித்த நாட்களில் அடிக்கடி எனக்குப் பிடித்த பிள்ளையாரைப் பார்க்கப் போவேன்.) உங்களுக்கு சற்று கசப்பான அனுபவம் ஏற்பட்டதில் வருத்தம்தான். பழனி தரிசனத்தை இப்படிப் பாதியில் சஸ்பென்சில் விட்டு விட்டீர்களே... ம்... காத்திருப்பதும் சுகம்தான். காத்திருக்கேன்...

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

இப்பவும் நகரத்தார் நிர்வாகம் தான். என்னவோ இந்த வாட்டி இப்படி ஒரு அனுபவம்.

நீங்க அழகப்பாவா வெரி குட். நான் படிச்சது பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி காலேஜில் :))
//பழனி தரிசனத்தை இப்படிப் பாதியில் சஸ்பென்சில் விட்டு விட்டீர்களே... //

பதிவு பெருசானா படிக்க கஷ்டம் அதான்.

வருகைக்கு நன்றி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஹலோ பள்ளத்தூர் சீதா லெட்சுமியா! எந்த வருடங்க! நானும் சீதாலெட்சுமி ப்ரொடக்ட் தான். எல்லாக் கோவிலிலும் ஏதாவது நிர்வாக சங்கடங்கள் இருக்கும். சுவாமி தரிசனத்திற்கு சென்றால் மணிக்கணக்கு பார்க்கக்கூடாது. திருப்பதியில் எம்பெருமான் எத்தனை சோதனை வைத்து தரிசனம் தருகிறார்.

pudugaithendral said...

வாங்க சாந்தி,

கூட்டம் ஜாஸ்தியா இருந்தா அப்படி நடப்பது சரி. ஆனா அன்றைக்கு அபிஷேகத்திற்கு பணம் கட்டியது 4 பேர். பிள்ளையார்பட்டியில் அபிஷேகத்திற்கு பங்கம் வராமல் தரிசனம் செய்ய முடியும்.

நான் 91-92ல் முதல் வருடம் மட்டும் முடிச்சு பள்ளத்தூரிலிருந்து வந்துவிட்டேன்.

இராஜராஜேஸ்வரி said...

வீபுதி அலங்காரம் செய்த அழகே
அழகு. அபிஷேகம் முடிந்து தங்ககாப்பு சாற்றினார்கள்.
கற்பூர ஆரத்தியில் இன்னமும் ஜொலித்தார் திருவீசர்./

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மனதில் தரிசனம் செய்யவைத்துவிட்டீர்கள்..

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..