Thursday, January 12, 2012

தந்தான தனத்”தானே”

தோழியின் வீட்டிலிருந்து கிளம்பி சென்றது நங்கநல்லூரில் இருக்கும்
அயித்தானின் பால்ய நண்பர் வீட்டுக்கு. அவர் அமெரிக்காவிலிருந்து
வந்திருந்தார். அங்கு சென்று சேர்வதற்குள் போதுமென்றாகிவிட்டது.
ரோடு சரியா இல்லை. மழை விடவில்லை. அயித்தானின் நண்பர்
வீட்டுக்கு போன் செய்தால் போன் டெட். இருப்பார் என்ற நம்பிக்கையில்
போனோம். காலிங் பெல் அடித்தால் அவரது அம்மா திறந்தார்.
“வா ஸ்ரீராம்!! இந்த மழையில் நீ எப்படி வரப்போறன்னு நினைச்சேன்.
கட்டாயம் வருவாம்மான்னு சீனு சொல்லிக்கிட்டு இருந்தான்” என
வரவேற்றார். மகனை அழைத்து நீ சொன்னாப்படியே ஸ்ரீராம்
வந்திட்டான் பாரு என குஷியில் அழைத்தார். நண்பர்கள்
இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரிய மனமில்லாமல்
இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினோம்.

போகும் வழியில் அசோக்நகர் சரவணபவனில் மதிய சாப்பாடு
முடித்து சென்னையில் என் முகவரியாக முன்பே நான் அறிமுகப்
படுத்தியிருந்த நோபல் அம்மாவீட்டுக்கு சென்றோம். 6 மாதம்
முன்பு அவரது பெரிய மகன் ஹானஸ்ட் ஒரு ஆக்சிடண்டில்
சிக்கி மூளையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது.
அவரது பிறந்தநாளுக்கு போன் செய்த பொழுது அவரது
கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து ஹாஸ்பிட்டலில்
இருப்பதாகச் சொன்னார். அடுத்தமாதம் பெரிய மகன்.
டாக்டர்கள் கைவிரித்துவிட்ட நிலையில் மெல்ல மெல்ல
உயிர்பிழைத்தான். ஆனால் பழையது கொஞ்சம் மறந்துவிட்டது.

அப்புறம் அதற்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து நார்மலாக பேச
ஆரம்பித்தான். நான் போனில் பேசினால் புரிந்துகொள்ளும்
நிலைக்கு வந்தான். எனக்கு ஹானஸ்ட் என்றால் ரொம்ப
பிடிக்கும். பக்கத்து வீட்டில் தானே இருந்தாம். அப்பா
திட்டினால் உடன் என்னிடம் வந்து உட்கார்ந்து கொள்ளும்
அந்த பதின்ம வயதுக்குழந்தை. இப்பொழுது 25 வயது
இந்த நிலையில் ஆக்சிடண்ட் ஆகி உயிர்பிழைத்து கொஞ்சம்
கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதால்
அப்பொழுது என்னால் போய் பார்க்க முடியவில்லை. இந்த
பயணத்தில் கண்டிப்பாய் பார்க்க வேண்டும் என்று சொல்லி
போன் செய்து வருவதாக சொல்லியிருந்தேன். நான்
தமிழகம் வரும் தேதிகள் எல்லாம் சொல்லியிருந்தேன்.
கரெக்டாக 26ஆம் தேதி போன் செய்து எப்ப வர்றீங்க?
என கேட்டான் ஹானஸ்ட்.

அங்கே போனோம். மழை நிற்கவேயில்லை. அன்று
வேலைக்கு போகாமல் எனக்காக காத்திருந்தது என்
குழந்தை. கொஞ்சம் பேசுவதையே திரும்ப பேசினாலும்
சொல்வதை மெல்ல புரிந்துக்கொள்கிறான். கிறிஸ்த்மஸ்
கேக் எடுத்து கொடுத்தான். நோபல் அம்மா (அவர்
உண்மையான பெயர் லீமா ஜான். இளையமகன்
நோபில்) மதியம் 2 மணியிலிருந்து அவர்களுடன் தான்
இருந்தோம். அம்ருதா வளர்ந்தது அவர்கள் வீட்டில்தான்.
எனக்கு நோபில் அம்மா ஒரு நல்ல தோழி.

4.30 மணிக்கு அயித்தானின் நண்பர் செண்ட்ரல்
செல்ல கார் அனுப்புவதாக சொல்லியிருந்தார்.
5 மணியாகியும் வரவில்லை. அயித்தான் போன்
போட்டு கேட்டு கொண்டே இருந்ததில் வடபழனி
பஸ்ஸ்டாண்ட் கிட்ட இருக்கேன் சார் என்று
மட்டும் ட்ரைவர் சொன்னார். வடபழனி பஸ்ஸ்டாண்டிலிருந்து
கோடம்பாக்கத்திற்கு 5.15 ஆகியும் வரவில்லை.!!
(உண்மையில் 4.30ற்கு அவர் கிளம்பவில்லை.)

6.10க்கு எங்கள் ட்ரையின். இனி பொறுத்தால்
ட்ரையினை விட்டுவிடுவோம் என்று இரண்டு ஆட்டோ
பிடித்து கிள்ம்பினோம். 5.45ற்கு செண்ட்ரலில்
நுழைந்தோம். தட தடவென பொட்டியை இழுத்துக்
கொண்டு ஓடினோம். சரியான மழை. ரயிலில்
ஏறி உட்கார்ந்த பின் தான் மூச்சு வந்தது. அயித்தானும்
ஆஷிஷும் சென்று இரவு சாப்பாடு பேக் செய்து
எடுத்து வந்தார்கள். இந்த மழைக்காற்று எல்லாம்
எனக்கு நல்ல ஜலதோஷத்தை கொடுத்திருந்தது.

ட்ரையின் சரியானநேரத்தில் கிளம்பிவிட
நட்புக்கள் எல்லோருக்கு போன்
போட்டு “எங்க ட்ரையின் கிளம்பியாச்சு” என தாக்கல்
சொன்னேன்.
நல்ல தலைவலி, உடல்வலி. இரவு சாப்பிட்டு
பாராசிடமால் போட்டு படுத்தேன். பாதி ராத்திரிக்கு
ஜுரம் விட்டு ஏசி கோச்சில் வியர்க்க எழுந்தேன்.
அதன் பிறகு எங்கே தூங்க!!!!!!!!!! ஊருக்கு
வந்து ஒரு வாரம் வைரல் ஜுரம். :)) ஆனாலும்
அன்பேக்கிங், கிளினிங், பிள்ளைகள் பள்ளி என
பிசியாக ஆகிவிட்டேன்.

அயித்தான் ஜனவரி ஒன்று அன்றே டாடா பை
போய்விட்டார்!!! தனி போஸ்ட் போட்டு அயித்தானுக்கு
வாழ்த்து சொல்லணும்னு நினைச்சிருந்தேன். ஆனால்
காலம் கடந்ததால இங்கேயே சொல்றேன். அயித்தான்
இப்ப பெங்களூர் IIM EGMP (EXECUTIVE GENERAL
MANAGEMENT PROGRAMME) COURSEசேர்ந்திருக்கிறார்.
அயித்தானில் அலுவலகத்தினர் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
அந்த கோர்ஸ் ஜனவரி 2லிருந்து ஆரம்பம். ஆன் கேம்பஸ்.
நவம்பர் வரை சில சமயம் சனிக்கிழமைகளில், சில சமயம்
6 நாட்கள் அங்கேயே இருந்து படிக்க வேண்டும். இதனால்
தான் என்ன மழை பெய்தாலும் அயித்தான் ஹைதை
வந்தே சேரவேண்டிய கட்டாயம்.

உண்மையில் நாங்கள் புதுகையிலிருந்து நேராக சென்னை
வராமல் வேளாங்கன்னி, நாகூர் தர்கா சென்று தரிசனம்
செய்து பாண்டிச்சேரி வழியாக சென்னை வரத்திட்டம்.
என்னவோ மனதில் பட்டது. இந்த சமயம் அங்கே
மழை அதிகமாக இருந்தால் காரில் பயணிப்பது
கஷ்டமென்று. அதனால் திட்டத்தை மாற்றி நேரடியாக
சென்னை வந்துவிட்டோம்.

ஹைதை வந்தபின் பாண்டியிலும், கடலூரிலும் தானே
ஆடியிருக்கும் கோரதாண்டவத்தை பார்த்த பொழுது
பக்கென்று ஆகிவிட்டது. அந்த இறைவன் தான்
எங்கள் திட்டத்தை மாற்ற வைத்திருக்கிறான்.
எப்படியும் ஒரு முறை கண்டிப்பாய் வேளாங்கன்னி,
நாகூர் தர்கா தரிசனம் செய்வேன். அவனருள்
புரிவான்.

தானே தந்தானத்தானே என ஆடினாலும் எப்படியோ
நல்லபடியாக எங்கள் பயணம் முடிந்து பத்திரமாக
வீடு வந்து சேர்ந்தோம். ஹைதை குளிர் காற்று
இதமாக வீசி எங்களை வரவேற்றது.

8 comments:

கோமதி அரசு said...

ஹைதை வந்தபின் பாண்டியிலும், கடலூரிலும் தானே
ஆடியிருக்கும் கோரதாண்டவத்தை பார்த்த பொழுது
பக்கென்று ஆகிவிட்டது. அந்த இறைவன் தான்
எங்கள் திட்டத்தை மாற்ற வைத்திருக்கிறான்.
எப்படியும் ஒரு முறை கண்டிப்பாய் வேளாங்கன்னி,
நாகூர் தர்கா தரிசனம் செய்வேன். அவனருள்
புரிவான்.//

நிச்சியம் அருள்புரிவான்.
நட்புகளைப் பார்த்து மகிழ்ந்து, ஹைதை போய் இயல்பு வாழ்க்கை ஆரம்பித்து விட்டது.

நினைவுகள் நீங்காமல் சுத்தி வந்து கொண்டு இருக்கும்.

pudugaithendral said...

வாங்கம்மா,

நலமா? நினைவுகள் தரும் சுகமே சுகமாச்சே. :))

வருகைக்கு நன்றி

பால கணேஷ் said...

பயண அனுபவத்தை சுவைபடச் சொல்வது எல்லோராலும் முடியாது. உங்களால் அழகாகச் செய்ய முடிந்திருக்கிறது. கடைசியில் முடித்திருப்பது நெகிழ்ச்சி. வேளாங்கண்ணி, நாகூர் தரிசனம் செய்ய இப்போதே என் நல்வாழ்த்துக்கள்.

காற்றில் எந்தன் கீதம் said...

கலா அக்கா எப்பிடி இப்பிடி????????
நானெல்லாம் ஒரு பதிவு போடுறதுகுள்ள போதும் போதும்னு ஆகிடுது நீங்க என்னடான்ன ஒரு நாளுக்கு ஒரு பதிவு போட்டு கலக்குறீங்க... ம்ம்ம் கண்ணு பட போகுது.
உங்களோடு பயணித்த சுகம் தருகிறது உங்கள் பதிவுகள்...
அடுத்தது என்ன சீக்கிரம் போடுங்க.. நான் வந்து படிக்கிறேன்.

ADHI VENKAT said...

நல்லபடியாக ஹைத்தை வந்து சேர்ந்தது இறைவன் அருள் தான்.

விரைவில் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் அமைய வாழ்த்துகள்.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கணேஷ்

pudugaithendral said...

நானெல்லாம் ஒரு பதிவு போடுறதுகுள்ள போதும் போதும்னு ஆகிடுது நீங்க என்னடான்ன ஒரு நாளுக்கு ஒரு பதிவு போட்டு கலக்குறீங்க... //

வாங்க சுதர்ஷிணி,

நலமா? பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால கொஞ்சம் நேரம் கிடைக்குதுல்ல. அதில் கொஞ்சம் பதிவு போடன்னு ஒதுக்கறேன். அம்புட்டுதான் ரகசியம். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி