Friday, April 12, 2013

விஷ்ணுவா!!!???? புத்தரா??!!!!!

 யுகாதி கொண்டாட்ட வேலையில் பதிவு எழுத முடியவில்லை. போளி,வடை, சுகையல், மாங்காய்துவையல், மோர்க்குழம்பு என ஜமாய்சாச்சு :) இனி பதிவு பாப்போம்.


இந்தக்கேள்விக்கு இப்ப வரைக்கும் பதில் புரியலை. தாய்லாந்தில் மட்டுமல்ல இலங்கை அநுராதபுரத்திலும் ”விஷ்ணு ஆசனத்தில்” புத்தர் சிலை பாத்திருக்கேன். கொழும்புவுக்கு அருகில் இருக்கும் கெளனியாவிலும் விஷ்ணு ஆசனம் தான். புத்தர் பல அவதாரம் எடுத்தார் அதில் விஷ்ணுவும் ஒன்று என சொல்வதையும் கேட்டிருக்கேன். சிபிச்சக்கரவர்த்தியும் புத்தரின் அவதாரம் தான்னும் படிச்சிருக்கேன். ஒரே கன்ஃப்யூஷன் தான்!!!

கைட் அழைச்சுப்போனது வாட் போ (what pho) அல்லது reclining buddha கோவிலுக்கு. இது அரண்மனைக்கு பக்கத்துலேயே இருக்கு. அந்த அரண்மனையில் இப்ப யாரும் இல்லை. ராஜா தங்கியிருப்பது வேற இடத்தில். இது பொதுமக்கள் பார்வைக்கு, சில நிகழ்ச்சிகளுக்குன்னு ஒதுக்கியிருக்காங்க. ராஜாக்களுக்கு என்ன அரண்மனையை பெருசா கட்டி வெச்சிடுவாங்க. நடந்து நடந்து நம்ம கால் தான் தேயும்!! அதனால மாளிகையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டோம். நான் மரகத புத்தர் கோவிலுக்கு அழைச்சு போகச்சொல்லி சொல்லியிருந்தேன். ஆனா இவங்க இந்தக்கோவிலுக்கு மாத்திட்டாங்க. :(

அரசருக்கு முகஸ்துதி கனஜோரா நடக்குது. இராஜா ராணி போட்டோ எல்லா இடத்துலயும் பார்க்கலாம்.
 

 100 தாய்பட் ஒரு ஆளுக்கு. எங்க கைட் போய் டிக்கெட் வாங்கியாந்தாப்ல. கோவில்ல நுழைஞ்சா என்ன ஒரு கூட்டம்???!!!!!! தாங்க முடியாத வெயில் வேற. அந்த கோவிலை சுத்தி பாக்க 1 மணிநேரம் கொடுத்திருந்தார் கைட். புத்தரை பாக்க போகும் முன் செருப்புக்களை ஒரு பேக்கில் கட்டி நாமே கையில் எடுத்துக்கிட்டு கோவிலுக்கு போகலாம். பிக் பாக்கெட் ஜாக்கிரதைன்னு ஒரு போர்டு பார்த்து ஜெர்க்கானேன். இந்த மாதிரி நிறைய்ய இடங்களில் போர்ட் வெச்சிருக்காங்க!!

 புத்தருக்கு ஞானம் கிடைச்ச போதி மரத்திலிருந்து ஒரு கிளையை கொண்டு வந்து வெச்சு அது வளர்ந்து “போதி மரம்” இங்கேயும் இருக்கு. இந்த இடம் தாய்லாந்தின் ஷ்பெஷல் மருந்து பற்றி படிக்கும் இடம், தாய் மசாஜுக்கு ட்ரையிங் இங்க தான் கொடுக்கறாங்களாம். இங்கே புத்தர் விஷ்ணு அவதாரமா இல்லை, அவர் படுத்த நிலையில் இருப்பது விஷ்ணு ஆசனம் தான். யோகவாம்!!!!

ஓபாமா வந்திட்டு போனாருன்னு போட்டோ சொல்லுது!!!


 ஆனந்தமா போட்டோ எடுக்க ஆரம்பிக்கும் போது பேட்டரி தீந்து போச்சுன்னு சொல்லி லென்சை மூடிடிச்சி கேமரா!!!  இங்க போட்டோ எடுக்காட்டியும் போகுது!! அடுத்து போற இடத்துக்கு கேப்பே இல்லை, பாட்டரி சார்ஜ் செஞ்சு ரெடியாக்க. அதுல ”அங்க” போட்டோ எடுத்தா சூப்பரா இருக்குமே!! என்ன செய்ய. மொதோ நாள் அயித்தான் செக் செஞ்சப்ப கூட “ஃபுல்லாத்தான் இருக்கேன்னு!!””” காட்டினிச்சு!! சரின்னு அதை தூக்கி உள்ள போட்டு, மொபைல் கேமிராவில் போட்டோ எடுக்க ஆரம்பிச்சோம்.

இருக்கற இன்னொரு சின்ன கேமிராவும் பேட்டரி டவுன்னானா கஷ்டம்னு மொபைலில் போட்டோ எடுத்துகிட்டோம்.











பெங்காக்கில் இருக்கும் பெரிய்ய, புராதனமான கோவில் இதுதான். 160 அடி நீள சிலை இது.





இது புத்தரின் பாதம். இதில்  புத்தரின் 108 சின்னங்களை வடிவமைச்சிருக்காங்க.




இந்த மாதிரி 108 கலசங்கள் வெச்சிருக்காங்க. 108ம் புத்தரின் ஒவ்வொரு குணாதிசயத்தை குறிக்குதாம். வர்றவங்க இதுல சில்லறைகளை போடுவதால அவர்களுக்கு “ அதிர்ஷ்டம் அடிக்கும்!!” என்பது  நம்பிக்கை. அத்தோட இது அந்தக்கோவிலை பராமரிக்க உதவுது.

அந்த கோவில் நுழைவு டிக்கெட்டை காட்டினா 1/2 லிட்டர் மினரல் வாட்டர் தர்றாங்க. கோவிலை விட்டு வெளிய வரவேணாம்னு நினைக்க வைக்கும் வெயில்...... தண்ணியை வாங்கி குடிச்சிட்டு சுத்தி போட்டோ எடுத்தோம்.





ம்ம்முடியல. 3ஆவது கேட் வழியா வந்து நிக்கச் சொல்லியிருந்தாப்ல கைட்.
அவருக்கு போனப்போட்டு சாமி நீ சொன்ன நேரம் வரைக்குமெல்லாம் இங்க வெயிலில் காய முடியாதுன்னு சொல்ல, உடன் வந்தார் கிளம்பினோம். அங்கேயிருந்து ஜெம் கேலரின்னு அழைச்சுப்போனார். வேணாம்யான்னாலும் கேக்கலை.

ஜெம்கேலரியில் வெல்கம் ட்ரிங்கா பெப்சி, ஃபாண்டா கொடுத்தாங்க. வெயில்ல காய்ஞ்சு போய் வந்ததுக்கு இதமா இருந்தது. ஜெம் கேலரின்னதும் நான் ஏதோ இங்கே வேலைப்பாடு எப்படி நடக்குதுன்னு, காட்டுவாங்கன்னு நினைச்சா, அது ஒரு விற்பனைக்கூடம் தான். ஒரு வயசான அம்மா அங்க ஸ்டோர்ல வேலை செய்யறவங்க வந்தாங்க.  பெப்சி உள்ளே கொண்டு போகக்கூடாது, குடிச்சிட்டு வாங்க அழைச்சுக்கிட்டு போறேன்னு சொல்ல வந்தது வந்திட்டோம் ஒரு ரவுண்ட் அடிப்போம்னு நுழைஞ்சோம்.

எல்லாம் 18 கேரட் தங்கத்துல செஞ்சது.  ரூபி, எமரால்ட், அமெத்ஸ்டுன்னு ப்ரீஷியஸ் ஸ்டோன்ஸ். இந்த மாதிரி கற்கள் விவகாரத்துல நான் போறதே இல்லை. தப்பான கல்லா இருந்தா வாங்கி கையில வெச்சிருக்கற கொஞ்ச நேரத்துலயே கஷ்டத்தை பாத்திடலாம். வைரம் வாங்கி மாமா பட்ட அவஸ்தைக்கு அப்புறம்  நான் அந்த ஏரியாவுக்கே போகாம இருக்கேன். அதனால அந்தம்மா உனக்கு எந்த கல்லு சரிப்படும்னு கேட்க எனக்கு எதுவுமே செட்டாகாதுன்னு!! சொன்னேன். விலையைக்கேட்டா தலையை சுத்தினிச்சு!!!!

சண்டில செஞ்சது இருக்கு பாக்கறீங்களான்னு கேட்க?? நானே ஒரு சண்டி ராணி !! என்கிட்டயேவான்னு நினைச்சுக்கிட்டு “எதுல செஞ்சதுன்னு கேட்க?”
சண்டி, சில்வர்னு சொல்ல வெள்ளியை சொல்றாங்க அந்தம்மான்னு புரிஞ்சிக்கிட்டேன். நாம இந்தியான்னு தெரிஞ்சதும் அந்தம்மா ஹிந்தில பேசுறாங்களாம். எதுவேணா வாங்கிக்கன்னு அயித்தான் க்ரீன் சிக்னல் கொடுத்தாங்க. பாவம். நல்ல மனுஷன் அவரை அனாவசியமா கஷ்டபடுத்துவானேன்!!னு  வெள்ளியில் அமெரிக்கன் டைமண்ட் பதிச்ச சின்ன மோதிரம் ஒண்ணும், அம்ருதம்மாவுக்கு சின்னதா நீல அமெதிஸ்ட் தோடும் வாங்கினேன்.

இம்புட்டுதானா?? க்ரெடிகார்ட் அன்லிமிட்ட!!! இன்னும் வாங்கிக்கன்னு அந்தம்மா ரோதனை தாங்க முடியலை. ஆனா பொறுமையா எடுத்து காட்டினதுக்கு பாராட்டணும்.  இன்னொரு பொண்ணை ஒரு தோடு காட்ட சொல்ல ஒரு ரியாக்‌ஷனும் காட்டலை. உன் ஹஸ்பண்ட் ரொம்ப லக்கி!!! (கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு!!!) குறைவா செலவு வைக்கிறன்னு பாராட்டு மழை. இப்படித்தான் 10 வருஷம் முன்ன சென்னை ஜீஅர்டியில நகை வாங்கப்போய் அயித்தான் கையில 2000 மிச்சம் வெச்சு கூட்டியாந்தேன். கடையில ஒரு சிப்பந்தி, “நீங்க ஒரு ஆள் தாம்மா மிச்சம் காசு வீட்டுக்கு எடுத்து போறது!!”ன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 10 வருஷத்துல நாம இன்னமும் மாறவேயில்லைன்னு நினைச்சுகிட்டேன். :))

ஆனா ஜெம் கேலரி போகாம தவிர்க்கறது நல்லது என்பது என் அபிப்ராயம். ஒரிஜனல் கற்கள் வாங்கறதா இருந்தா என்னதான் ISO தர சான்றிதழ் பெற்ற இடம்னு சொல்லிக்கிட்டாலும், நெட்ல பலர் புலம்பியிருக்கது புரியுது. ஒரிஜினல் வெள்ளியும் கிடையாது. அது ஒரு மாதிரி ட்ரீட்டட் சில்வர்னு சொல்வாங்க. அது சிலருக்கு அலர்ஜியாகும். அங்கேயிருந்து எங்க ஹோட்டலுக்கு அழைச்சுக்கிட்டு போனார்.  தங்கப்போகும் ஹோட்டலுக்கு பக்கத்துலேயேதான் இந்திய உணவு சாப்பாட்டுக்கும் ஏற்பாடு ஆகியிருந்தது.


சாப்பாடு முடிஞ்சதும் அடுத்து போகும் இடத்துக்கு  அழைச்சுப்போவதா சொல்ல, பேட்டரி செத்து கிடக்கும் கேமிரா கண்ணுமுன்னாடி வந்தது. அவரு சாப்பாடு முடிச்சு 3 மணிக்கு ரெடியாகி வரச்சொல்ல, ஐயா! எங்களுக்கு இன்னொரு ரூம் இன்னும் தரலை, அதனால பொட்டிகளும் ரூமுக்கு போகாம லாபியில இருக்கு. அதனால சாப்பிட்டு அந்த வேலைகளை முடிக்க 3.30 ஆகும். 3.45க்கு போகலாம்னு சொல்ல சரின்னு சொன்னாப்ல.

சாப்பிட வந்தோம். ஏசியன் டிலைட் இதுதான் அந்த ஹோட்டல் பேரு.  பட்டர் பனீர் மசாலா, தால்மக்கனி, சாதம், காளிஃபளவர் ட்ரை கறி, வெள்ளரிக்காய் இதுதான் மெனு. வெள்ளரிக்காய் ரய்தா. இதே மெனுதான் நாங்க ஊர் திரும்பும் வரைக்கும்!!!!!! ட்ரை கறி மட்டும் மாறும். வெண்டக்காய், ஆலு.

சாப்பிட்டு ரூமுக்கு வந்தோம். கொஞ்ச நேரம் கேமிராவை சார்ஜ் போட்டு வெச்சிட்டு ஏசியில் கொஞ்ச் நேரம் ரெஸ்ட் எடுத்து, ஃப்ரெஷ்ஷாகி கீழே வந்தோம். கீழே  ஆதி காலத்து பென்ஸ் காரில் கைட் காத்திருந்தார்.

அடுத்து போன இடம்..... :)))




16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்கள்...

ISO தர சான்றிதழ் பொருட்களுக்கு அல்ல... (http://dindiguldhanabalan.blogspot.com/2012/10/Some-Details-ISO-Part-3.html-ஓஹோ... அப்படியா...! ISO - Part 3)

பயணத்தை தொடர்கிறேன்...

அமுதா கிருஷ்ணா said...

கற்கள் நல்லதான்னு தெரியாமல் ஏமாற நிறைய சான்ஸ் உள்ளது. எனவே வாங்கமல் இருப்பது தான் நல்லது.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

உங்க பதிவுல வந்து தெரிஞ்சிக்கறேன்.

வருகைக்கும் லிங்கிற்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

ஆனா அந்த பயம் இலங்கையில் இல்ல. ஜ்வல்க்வட்ஸின்னு ஒரு கடை அங்கே நல்ல காரட் கற்களை தரமானதா கொடுப்பாங்க. நமக்கு எது செட்டாகும்னு தெரிஞ்சிக்கணும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

ஆனா அந்த பயம் இலங்கையில் இல்ல. ஜ்வல்க்வட்ஸின்னு ஒரு கடை அங்கே நல்ல காரட் கற்களை தரமானதா கொடுப்பாங்க. நமக்கு எது செட்டாகும்னு தெரிஞ்சிக்கணும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

ஆனா அந்த பயம் இலங்கையில் இல்ல. ஜ்வல்க்வட்ஸின்னு ஒரு கடை அங்கே நல்ல காரட் கற்களை தரமானதா கொடுப்பாங்க. நமக்கு எது செட்டாகும்னு தெரிஞ்சிக்கணும்.

வருகைக்கு மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

மொபைலில் எடுத்த படங்கள் நன்றாக வந்துள்ளன.

இதுபோன்ற பயணங்களில் கைவசம் இன்னொரு பேட்டரி சார்ஜ் செய்து வைத்துக் கொள்வது அவசரநேரத்தில் உதவும். குறிப்பாக பாயின்ட் அன்ட் ஷூட் கேமராவில் எப்போ தீர்ந்து போகுமோ எனும் கவலையின்றி எடுக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

இந்த வெய்யில்ல போயிட்டு சங்கடமா.:(
எந்தக் கல் வாங்கினாலும் பால்ல ஊறவச்சு போட்டுக்கலாம். நான் சொல்றது இந்த செமிப்ரஷியஸ்னு சொல்ற பேத்தல் நகைகளுக்கு:)

அடுத்த பதிவு எங்க போறீங்க.
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Anonymous said...

ஆஜர்

காற்றில் எந்தன் கீதம் said...

ஜெம் கேலரி ஆட்கள் கைடுகளுக்கு ஏதும் கமிஷன் கொடுப்பன்களோ என்னவோ நாம வேணாம் சொன்னாலும் கட்டாயமா அங்க கூட்டி போவாங்க:(..... நல்லா சுத்தினது மட்டுமில்ல நல்லா வெயில்ல காஞ்சும் போனீங்க போல...:)
பயணத்தை தொடருங்க நானும் தொடர்கிறேன்....

துளசி கோபால் said...

இன்னிக்குத்தான் இந்தப்பதிவு கண்ணில்பட்டது!

பயணத் தொடரா? அபாரம். 13ன்னு சொல்லுது! இருங்க பழசெல்லாம் படிச்சுட்டு வர்றேன்!

பால கணேஷ் said...

ஹய்யோ...! அங்கயும் பிக்பாக்கெட் ஆசாமிங்கல்லாம் உண்டா? விஷ்ணு கோலத்துல படுத்திருக்கற புத்தர் ரசிக்க வெச்சாரு. ஜெம் கேலரில போய் விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு, நீங்க சொன்ன ஜ்வல் க்வட்ஸில வாங்கிட்டாப் போச்சு. எப்பூடி!

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

காஞ்சது உண்மை. :(( :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

நிறைய்ய பயணபதிவுகள் போடறதால(!!!)13ஆம் வருஷத்து ஊர் சுத்தற பதிவுகளுக்காக தனி லேபில் :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

எப்பவும் அயித்தான் அலர்ட்டா இருப்பாரு. ஆனா இந்த வாட்டி இந்த வெயில் எங்களை படுத்திய பாடு தாங்க முடியாம போச்சு. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாலகணேஷ்,

பிக்பாக்கெட் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய. அட்ரஸ் கேக்கறா மாதிரி கேட்டு கொள்ளை அடிப்பாங்கன்னு பப்ளிக்கா ஹோர்டிங்ஸ் வெச்சு உஷார் படுத்தும் நிலை.

உங்க ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :))

வருகைக்கு மிக்க நன்றி