Wednesday, March 02, 2016

தென் தமிழ் நாட்டு கோவில் சுற்றுலா பயணம்.

ஒவ்வொரு வருஷ கடைசியில் பில்க்ரிமேஜ் ட்ரிப் ஒண்ணு மேற்கொள்வது எங்க பழக்கமாகிப்போச்சு. அதென்னவோ வருஷக்கடைசியில் இப்படி ஒரு ட்ரிப் போறதால பேட்டரி ரீஜார்ஜ் செஞ்சுகிட்டு அடுத்த வருஷத்துக்கு ரெடியாவது மாதிரி இருக்கும். ஒரு மாதிரி நன்றி சொல்லல்னு வெச்சுக்கலாம். சில குழந்தைகளை கோவிலுக்கு கூப்பிட்டா வரமாட்டாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆண்டவனருளால எங்க பசங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம வருவாங்க.

டிசம்பர் மாதக் கடைசியில் மதுரை, திருச்செந்தூர், புதுகை ட்ரிப் போனோம். திருச்செந்தூர் பயணமெல்லாம் எங்க லிஸ்டலேயே இல்லை.  ஆனா எப்படியோ அந்த பயணம் அமைஞ்சது.  ஆருத்ரா தரிசனத்தன்னைக்கு அதிகாலையிலேயே எழுந்து கடல்ல குளிச்சு, நாழிக்கிணறுலையும் குளிச்சு அப்பன் முருகனின் தரிசனம் முடிஞ்சு வெளிய வரம்போது மணி 6.45 தான்.  நம்ம ப்ளான்லயே இல்லாத ஒண்ணை நடத்தி ப்ளான்ல இருந்த திட்டத்தை மாத்த வெச்சிருந்தான். அதுவும் நன்மைக்கு தான். அதைப்பத்தி அப்புறம் சொல்றேன்.

திருச்செந்தூர் தரிசனம் முடித்து மதுரை வந்தோம். ஆருத்ரா தரிசனம் அப்பன் தான் பிசியா இருப்பான்னு நினைச்சா, அம்மாக்கு அன்னைக்கு செம கூட்டம். 300 ரூவா தரிசன டிக்கெட்டே தெப்ப குளத்தை சுத்தி நிக்குது.  இங்கே முதல்ல அம்மாவின் தரிசனம் அப்பன் தான் சொக்கப்பனை பாக்கணும்னு சொல்வாங்க. இருக்கற கூட்டத்துல அப்பன் ஃப்ரீயா இருந்தா அவரை மொதல்ல பாத்திடுவோம். ஆருத்ரா தரிசனம் வேறன்னு போனோம். ஓரளவுக்கு ஓகே ரக கூட்டம். முதலில் சொக்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வந்தா சொக்கனோட க்யூ நீண்டுகிட்டே போச்சு. நல்ல வேளைன்னு நினைச்சு அம்பாள்கிட்ட போனோம். எப்படியோ க்யூவில் நுழைஞ்சு அவளையும் தரிசனம் செஞ்சோம். கிட்டத்தட்ட 1 3/4 லட்சம் பேர் அன்னைக்கு தரிசனமாம்.

புதுகையில் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் தரிசனம் முடிந்து, பிள்ளையார் பட்டியார் தரிசனம். அது முடிந்து அன்று சாயந்திரம் எங்கள்  அம்மம்மா கனவில் வந்து சொன்ன காணிக்கையை திருவப்பூராளுக்கு சமர்ப்பிக்க போனோம்.  புடவை, வளையல்கள் மங்கல சாமான்களை கொண்டு போயிருந்தோம் திருவப்பூர் மாரியம்மனுக்கு. கோவில் அதிகாரி என்ன நினைத்தாரோ குருக்களிடம் புடவையை  கொடுத்து வெள்ளி காப்பு சாத்தும்படி சொல்லிவிட்டு எங்களையும் கர்ப்ப கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து விட்டார். வெள்ளி காப்பில் திருவப்பூர் மாரியம்மன் அழகை தரிசித்து வந்தோம்.
சமீபத்தில் தான் பூச்சொரிதல் நடந்தது மாரியம்மனுக்கு.


புதுகை கோகர்னேஸ்வரர் & பிரகதாம்பாள் கோவிலும் அவ்வளவு அழகு. முதல் மாடி இருக்கும் ஒரே கோவில் பிரகதாம்பாள் கோவில். :)  புதுகையை ஆண்ட தொண்டைமான் மன்னர் பரம்பரையினருக்கு இஷ்ட தெய்வம் இந்த பிரகதாம்பாள். இங்கே அமைந்திருக்கும் ஜுரகண்டேஸ்வரருக்கு வேண்டி கொண்டால் தீராத ஜுரமும் தீரும். அதையும் தரிசித்து வந்தோம்.  அடுத்த நாள் காலை புதுகையிலிருந்து கிளம்பி திருச்சி வந்தோம்.




திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் சிறுவாச்சூர். இங்கே அம்பாளின் திருநாமம் மதுரகாளி. ஆக்ரோஷ காளியாக இல்லாமல் மதுரமாக இருப்பாள். சிறுவாச்சூர் மதுரகாளி என் அம்மம்மாவின் பிறந்த வீட்டு தெய்வம். அம்மம்மாவின் அப்பாவகிய மகாலிங்கம் தாத்தா வாயில் எப்போதும் காளி நாம ஜப தான். அம்மம்மா ரொம்ப சீரியஸாக இருந்த பொழுது வேண்ட்க்கொண்டதை நிறைவேற்ற முடியாமலேயே போனது. கோவில் திறந்திருப்பது திங்கள், வெள்ளி மற்றும் சில விசேஷ நாட்களில் தான்.  அதனால் நேரிலேயே போவது என முடிவு செய்திருந்தோம்.



நாங்கள் புறப்பட்டது திங்கள் கிழமை என்பதால் கோவிலும் திறந்திருக்கும். அருமையான தரிசனம்.  தம்பியின் கல்யாணத்தை அம்மம்மா கண்ணாற காண அருள் செய்து அவளை பிழைக்க வைத்து பிறகு தன்னிடம் அழைத்துக்கொண்ட அன்னைக்கு நன்றி சொல்லி நேர்த்தி முடித்து சென்னை புறப்பட்டோம்.

சென்னயில் என் தோழி அண்ணபூர்ணாவை சந்தித்து கோவில் பிரசாதங்களை கொடுத்து பேசிக்கொண்டிருந்த போது அடடா!!! சிறுவாச்சூர் போயிருந்தயா? தெரிஞ்சிருந்தா பக்கத்துல இருக்கும் இன்னொரு கோவிலுக்கும் போயிட்டு வந்திருக்கலாமே நீன்னு சொல்ல அடடா மிஸ் செய்து விட்டோமேன்னு இருந்தது.

தொடரும்......

படங்கள் உதவி: கூகுளாண்டவர்

4 comments:

Anuprem said...

மகிழ்வான பயணம் ..வாழ்த்துக்கள் ..

pudugaithendral said...

வாங்க அனுராதா,

உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

சுசி said...

நாங்களும் வருட கடைசியில் புனித யாத்திரை மேற்கொண்டோம். ஆருத்ரா தரிசனத்தன்று கிளம்பி மறுநாள் உத்திர கோசமங்கை (அங்கு ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் மரகத நடராசர் காட்சி தருவார்) ஆனால், நாங்கள் மறுநாள் தான் சென்றோம். அடுத்து நயினார் கோவில். இது எங்கள் குல தெய்வம். என் மாமியாரை அழைத்து சென்றோம். என்ன சொல்ல. பொங்கலுக்கு மறுநாள் என் மாமியார் கீழே விழுந்து கால் முறிந்துவிட்டது. இப்போது பரவாயில்லை ஆனால், அவர்களால் இனி டிராவல் பண்ண முடியாது. நல்ல வேளை குலதெய்வ தரிசனத்தை நல்லபடியாக முடித்துவிட்டார்கள்.

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும். இனி உடனுக்கு உடன் பதில் வந்திடும். வருகைக்கு மிக்க நன்றி