Saturday, March 02, 2019

நல்லூரை நோக்கி- பாகம் 2

2014ல் நாங்கள் கொழும்புவில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்கள் வீட்டு விஷேஷத்தில் கலந்து கொண்டுவிட்டு என்னுடன் திருப்பதி செல்ல வந்திருந்தார். மிக நல்ல மனுஷி. என்னை தன் மகளாக நினைப்பார். இன்றும் என் பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்து செய்தி வந்துவிடும். என் உள்ளகிடக்கையை அவரிடம் சொல்லியிருந்தேன். அதெற்கென்ன நான் இலங்கையில் இருக்கும்பொழுது வா. நாமிருவரும் போய்வருவோம் என்றார்.
கணவர் இறந்துவிட்ட நிலையில் கொஞ்ச நாள் அமெரிக்காவில் மகனிடமும், கொஞ்சநாள் லண்டனில் மகளிடமும் இருப்பார். நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை கொழும்பில் வாசம்.

2014லிருந்து அவர் அழைத்து கொண்டுதான் இருக்கிறார். ஆஷிஷை காலேஜில் சேர்த்தது, சென்னைக்கு குடி பெயர்ந்தது, அம்ருதம்மா பரிட்சைகள், என் உடல் நலக்குறைவு என ஏதோ ஒரு காரணம் மார்ச் மாதத்திற்குள் பயண ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்படியே தட்டிக்கொண்டு போனாலும் அங்கே இருக்கும் வலைப்பூ நண்பர்கள் மூலமாகவும் முயற்சி செய்து கொண்டுதானிருந்தேன். அதுவும் நடக்கவில்லை.

போன டிசம்பரில் நாங்கள் நால்வருமே போக திட்டங்கள் போட்டு கொழும்பு- யாழ்ப்பாணம் ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய நிலையில் பயணம் ரத்தாகியது. மனதுக்கு ரொம்பவே வருத்தம். எப்பொழுதுதான் உன் எல்லையை மிதிக்க போகிறேன் என அரற்றிக்கொண்டிருந்தேன். இந்த முறை ஆண்டி கொழும்பு வந்திருந்த பொழுது கணவர் சென்று சந்திக்க கலாவை அனுப்பிவை நாங்கள் நல்லூர் பயணம் செய்து வருகிறோம் என சொல்ல வந்ததும் டிக்கட் புக் செஞ்சு, அங்கே யாழ்ப்பாணத்திற்கும் ரயில் டிக்கட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் எல்லாம் கடகடவென முடிந்துவிட்டது.
இந்த முறை என் முதல் தனியாக விமான பயணம், அதுவும் இலங்கையை நோக்கி. நானே தானா யாரோ தானா!!! என பலமுறை கேட்டு கொண்டேன். யார் இருக்கிறார்கள் அங்கே உனக்கு? இமிகிரேஷனில் கேட்ட அதிகாரிக்கு என் உறவுகளும் நட்புக்களும் காத்துகொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி.
தொடரும்


No comments: