Sunday, October 19, 2008

தீபாவளி நினைவுகள்

பட்டாசின் வாசம், புத்தாடைகள், வகைவகையான
திண்பண்டங்கள் இவை தீபாவளியை நமக்கு
உணர்த்தும். ஒவ்வொரு முறையும் தீபாவளி
வரும்போது என் மனதில் ஒரு பெரிய கொசுவத்தி
சுத்தும். மிக இனிமையான அந்த நினைவுகள்....


எனக்கு 8 வருடங்கள் கழிந்துதான் தம்பி.
அப்பா என்னை ஒரு ஆண்மகனைப் போல்தான்
வளர்த்தார். பட்டாசு பயம் கிடையாது.
என் வயது பிள்ளைகள் காதைப் பொத்திக்கொண்டு
வீட்டில் அடங்கிக் கிடக்க நான் பட்டாசு வெடிப்பதை
பார்த்துக்கொண்டிருப்பேன்.


அப்போது நாங்கள் புதுகையில் கீழ 3 ஆம்வீதியில்
இருந்தோம். செட்டியார் கடைக்கு எதிர் வீடு நாங்கள்
குடியிருந்த வீடு. தீபாவளி என்றால் எனக்கு நினைவு
வருவது அந்த வீடுதான். பக்கத்து வீட்டில் பாபு அண்ணா,
பாய் கடைக்கு பக்கத்துவீட்டு காசி அண்ணா,
எதிர்வீட்டு பாத்திமா டீச்சரின் மகன் பாபு அண்ணா
இவர்கள் எல்லோரும் சேர்ந்து பட்டாசு வெடிப்பார்கள்.

சரக்கட்டு, லெட்சுமி வெடி, அணுகுண்டு எல்லாம்
வைத்துவிட்டு கம்பீரமாக பார்ப்பார்கள். அந்த
கம்பீரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும்
அவர்களைப் போல் வெடி வெடிக்க வேண்டும்
என்று மனதில் தோன்றியது. கம்பி மத்தாப்பெல்லாம்
வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டபோது
சரி என்று வெடிகள் வாங்கிக் கொடுத்தார்.

எனக்கும் என் சின்ன மாமாவிற்கும் 5 வயது
வித்தியாசம். எனக்கு ஒரு நல்ல அண்ணன் மாதிரிதான்
மாமா இருந்தார். அப்பா வெடி வாங்குவதில் 3 பாகமாக
பிரிக்கப்படும். 1 பாகம் எனக்கு, 1 பாகம் மாமாவுக்கு,
மற்றொரு பாகம் கார்த்திகைக்கு.

அம்மம்மா வீட்டிலும் இதே மாதிரி செய்வார்கள்.
ஆக எனக்கும் மாமாவுக்கு அதிகமாக பட்டாசு
கிடைக்கும்.

அப்பா வேலைபார்த்த வங்கியில் நண்பர்கள் எல்லோரும்
மொத்தமாக சிவகாசியிலிருந்து வரவழைத்து எடுத்துக்
கொள்வார்கள்.


அம்மம்மா வீட்டில் தீபாவளிக்கு முதல் நாள்
எல்லாவேலைகளும் முடித்து இரவு கடைவீதிக்கு
போவார்கள்.

தீபாவளி சேல்ஸில் கீழ ராஜவீதி களைகட்டி இருக்கும்.
கூட்டம் அதிகமாக இருக்கும். நாங்கள் மிக லேட்டாக
இரவு 11 மணி வாக்கில் ஒரு ரவுண்ட் அடிப்போம்.

அந்த நேரத்தில் கடையை மூடும் அவசரத்தில்
பட்டாசு சல்லீசாக நிறைய கிடைக்கும். பேரம்
பேசுவதை பார்த்துக்கொண்டிருப்பேன்.


தீபாவளி அன்று தூக்கமே இருக்காது. பட்டாசு
வெடிக்கப்போகும் அந்த நேரத்திற்காக காத்திருப்பேன்.
எங்கள் வீட்டில் கொஞ்சம் பட்டாசு வெடித்து முடித்துவிட்டு
அம்மம்மா வீட்டிற்கு மீதியை எடுத்துக்கொண்டு போவோம்.

அம்மம்மா இருந்தது ஸ்ரீநீவாசா தியேட்டர் பின்புறம்.
அங்கே அப்போது அவ்வளவாக வீடுகளும் கிடையாது.
பொட்டல் தான். (தியேட்டர் கூட அப்புறம்தான் வந்தது. இப்போ
அந்த தியேட்டர்ம் இல்லை)

அங்கே போய் வெடி வெடிப்பேன். மாமாவிற்கு என்
தைரியத்தைக் காட்ட ஓலை வெடியை கையில் பிடித்து
போடுவேன், சரவெடியை பக்கத்தில் போடுவது,
என்னை பயமுறுத்துவது என்று மாமா செய்யும்
அத்தனையையும் மீறி ஜாலியாக பட்டாசு வெடிப்பேன்.

ஒவ்வொரு வருடமும் பெரிய பெரிய வெடிகள்
தான் வெடித்தேன். சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு,
சாட்டை எல்லாம் அப்பா வாங்கி இருக்கிறாரே என்று
வெடிப்பேன்.

மெர்குரி என்று ஒன்று இருக்கும். கம்பி மத்தாபை
பொருத்தி அதில் வைத்தால் சுர் என்ற சத்தத்துடன்
எரியும். வெங்காய வெடி ரொம்ப பிடிக்கும்.
கையில் வைத்துக்கொண்டு தூக்கிப்போட டமால் என்று
வெடிக்கும்.


(நினைவலைகள் தொடரும்)

15 comments:

ராமலக்ஷ்மி said...

அப்ப்ப்ப்பாடி! டப் டப டமால்னுல்ல இருக்கு தீபாவளி நினைவுகள்:)! நானெல்லாம் அப்ப முதல் இப்ப வரை மத்தாப்பு கேஸ்தான்!

ஆயில்யன் said...

அழகா இருக்கு அக்கா! உங்களோட தீபாவளி நினைவுகள் கொசுவர்த்தி!

ஆயில்யன் said...

//நானெல்லாம் அப்ப முதல் இப்ப வரை மத்தாப்பு கேஸ்தான்!
//

அது கூட எனக்கு புடிக்காது!

தேவையில்லாம மத்தவங்களை வெடிக வைக்கிறதுல்லன்னு ஒரு முடிவு! (இப்பத்தான் பாரின் வந்த பெறவு எடுத்துக்கிட்டேன்!)

சந்தனமுல்லை said...

ம்ம்..நல்லாருக்கு நினைவுகள்!!
தீபாவளி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடுவோம் சில சமயம், எங்க பாட்டி வீட்டுல! எங்க மாமா பசங்க, தம்பிக்கு ஈக்கவலா, நானும் ஆட்டம் பாம், ராக்கெட்-ல்லாம் விட்டிருக்கேன்!
துளிர்-ன்னு நினக்கறேன், அந்த புத்தகத்தில, சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பத்தி போட்டிருந்தாங்க..அதை ஒழிக்க நாமும் ஏதாவது செய்வோன்னு. சோ, வெடிகளை விட்டுட்டோம்..எட்டாம் வகுப்பு படிக்கும்போது!!

ராமலக்ஷ்மி said...

சந்தனமுல்லை said...
//துளிர்-ன்னு நினக்கறேன், அந்த புத்தகத்தில, சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பத்தி போட்டிருந்தாங்க..அதை ஒழிக்க நாமும் ஏதாவது செய்வோன்னு. சோ, வெடிகளை விட்டுட்டோம்..எட்டாம் வகுப்பு படிக்கும்போது!!//

முல்லை, 2003-ல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் குழந்தை தொளிலாளர் முறை முற்றிலும் ஒளிக்கப் பட்டு விட்டதாய் அப்போதைய மாவட்ட ஆட்சியாளர் கொடுத்திருந்த விரிவான பேட்டியொன்று Times of India-வில் வெளியாகியிருந்தது. அதைப் பாராட்டி நான் எழுதிய கவிதையும் 'திண்ணை' இணைய இதழில் வந்தது. அதை விரைவில் வலையேற்ற முயற்சிக்கிறேன்.

நான் கடந்த 5 வருடமாக வெடிகள் வாங்குவதில்லை. காரணம்: மகனின் பள்ளியில் சுற்றுப் புற மாசினைப் பற்றிய விளிப்புணர்வுக்காக வருடா வருடம் வெடி வாங்காதீர்கள் என வலியுறுத்தி வந்தார்கள். வயதின் ஆர்வம் வெடியில் விருப்பம். நானும் தடுக்கவில்லை. உங்களைப் போலவே எட்டாவது வகுப்புக்கு வந்த பிறகுதான் அதைப் புரிந்து தானாகவே வேண்டாம்னுட்டான்:)!

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...
//தேவையில்லாம மத்தவங்களை வெடிக வைக்கிறதுல்லன்னு ஒரு முடிவு!//

கொஞ்சம் [எனக்கு:)]ப் புரியும்படியாதான் சொல்லுங்களேன் ஆயில்யன்!

புதுகை.அப்துல்லா said...

தீபாவளி சேல்ஸில் கீழ ராஜவீதி களைகட்டி இருக்கும்.
கூட்டம் அதிகமாக இருக்கும். நாங்கள் மிக லேட்டாக
இரவு 11 மணி வாக்கில் ஒரு ரவுண்ட் அடிப்போம்
//

நம்ப ஊர்ல வயசுக்கு வந்த புள்ளைகளை பெரும்பாலும் அந்த நேரத்திலதான் கூட்டிகிட்டு வருவாங்க.காரணம் அப்பதான் கூட்டம் கம்மியா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு. எங்க செட்டு பசங்க நாங்கள்லாம் கரெட்டா அந்த நேரத்துக்குதான் போவோம் ஹி..ஹி...ஹி...

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

நம்மது டமால் டூமீல் டைப்தான்.
:)

pudugaithendral said...

நன்றி ஆயில்யன். இலங்கையில் எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீடு மினிஸ்டரின் வீடு என்பதால் கெடுபிடி அதிகம்.

பட்டாசு கொஞ்சமாகத்தான் வாங்குவேன். நோ வெடி. ஒன்லி மத்தாப்புதான். அந்தப் புகைதாளாமல்
அவதியாக சிலவருடங்களாக நோ பட்டாசு என்று ஆகிவிட்டது.

pudugaithendral said...

எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தீபாவளி கொண்டாடறதே சந்தோஷம் தான் சந்தனமுல்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அந்த நேரத்தில் உங்களை மாதிரி பசங்க நிப்பாங்கன்னு தெரியாதா எங்களுக்கு? :)

pudugaithendral said...

ஸ்கொவுட் பசங்க ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் ஒருநாள்னு முறைவெச்சுகிட்டு நடுவில் ஒரு தடுப்பு மாதிரி நின்னு கூட்டத்தை கண்ட்ரோல் செய்வாங்க.

அப்ப மாணிக்கம் சார் (அம்மா ஸ்கூல் பீடி மாஸ்டர்) அந்தப் பக்கம் வந்தா போதும் மத்த ஸ்கூல் பசங்ககூட பயப்படுவாங்கள்ல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) வெடிச்சுக்கொளுத்தி இருக்கீங்க தீபாவளி.. ம்..

மங்களூர் சிவா said...

//
அப்பா வெடி வாங்குவதில் 3 பாகமாக
பிரிக்கப்படும். 1 பாகம் எனக்கு, 1 பாகம் மாமாவுக்கு,
மற்றொரு பாகம் கார்த்திகைக்கு.
//

அப்ப கார்த்தி-க்கு??????????????

மங்களூர் சிவா said...

//
மாமாவிற்கு என்
தைரியத்தைக் காட்ட ஓலை வெடியை கையில் பிடித்து
போடுவேன்,
//

அதானே
நாம்பல்லாம் யாரு!?!?

:))))))))))))))

இப்பவுமா????????????